1.
இறுக்கிச் சாத்தப்பட்ட
இருவேறு அறையில்
இருள் வெளியேற
முனைகிறது.
நம் பிடிவாதத்தால்
தளர்த்தாமல்
இருக்கிறோம்
அவரவர்
சன்னல்களை.
இப்போது அறைகள்
பாவிகளைச் சுமப்பதாய்
நம்மையே
சுமக்கிறது.
அதன் பொருட்டு
அக்கறையின்றி
ஒருவருக்கொருவர்
உதிராத நெருஞ்சிமுட்களென
வைத்திருக்கிறோம்
அவரவர் பிடிவாதங்களை.
2.
கோவில் மதிற்சுவரொன்றில் யானைச் சிற்பங்கள் வரிசையாய்ச்
செதுக்கப்பட்டிருந்ததைக் கண்டு உவகையோடு
ஒவ்வொரு யானையாய்
மெல்லத்
தடவிப் பார்க்கும் ஆசை
இன்றுதான் வாய்த்தது.
ஸ்பரிசத்தோடு தடவத் தடவ
ஒவ்வொரு யானையாய்
உயிர் கொண்டு
அதனதன்
வலி நிறைந்த கதைகளைக் கண்ணில் வடித்துப்
பிளிர்வதைக் காண்கிறேன்
சங்கிலியின் பிணைப்பில்
நீளும்
சோகத்தின் வேர்மூடிச்சு
அன்பால் முடியிட்டதே
என்னும் அக்கணத்தில் .
இப்போது
நானும் அக்கூட்டத்தில்
ஒரு யானையென
நிற்கிறேன்.
3.
அடர்வனக் காட்டிற்குள்
பயணிக்கும்
வழிப்போக்கனுக்கு
அவன் அகச்சுடரே துணை.
எண் திசையின் முகமும்
வண்ணக்கோலம் பூசிய
அரிதாரப் புனைவு என்பதை
உள் நுழைய நுழைய
அவன் நுண்மாண் நுழைபுலமே சாட்சி.
இங்கு இருள் விழுங்கி
இருளானவருமில்லை,
ஒளி விழுங்கி
ஒளியானவருமில்லை.
இருளும் ஒளியும்
ஒற்றைப் பாதையில்
இரு கிளை ஓடையின் கூடுதுறை.
அந்தகாரம் திறக்கும் சாவியென இருக்குமெனில்
பல சொரூப தரிசனத்தைப் பெறும்
முழு தீட்சண்யத்தைத்
தந்துவிடுகிறது
ஆரண்யத்தின் காருண்யம்.
நம்பிக்கைப் பாதையில்
நகர்தலே வாழ்வின் அத்தாட்சி.
4.
எல்லை
தொட்ட பின்னும்
உனக்குள்ளும்
எனக்குள்ளும்
தட்டையாகாமல்
உருண்டபடி
சுழல்கிறது
ஒரு பசி
அதன் கண்களில்
பசிய தளிர்
வளர
ஈரம் குழைந்த நிலத்தைத்
தயார்ப்படுத்தும்
சித்திரத்தைக்
காணமுடிந்தது
இதோ
விண்ணும், மண்ணும்
இட்டுக் கொள்ளும்
செந்தழல்
முத்தத்திலிருந்து
புறப்படுகிறது
ஒரு நறுமணம்
அது
மழை வருவதற்கான
அறிகுறியாய்ச்
செப்புகிறது
நம் அகவலோசை
5.
எப்போதோ கண்ட கனவு.
எதற்கு வந்தது?
ஏன் வந்தது என்று தெரியவில்லை?
நிழலைப்போல்
பின்தொடர்ந்து வருகிறது
நிஜத்தைக்
கைப்பற்றி விட்டால்
நிழல்
விலகிவிடுமா என்றும் தெரியவில்லை?
பல வினாக்கள்
விடைகளற்றுப்
பல்லிளித்தபடியே
நிற்கின்றன
கனவுகளைக்
காவு கொடுக்க முடியாதவர்கள்
என்ன செய்வார்கள்?
அவர்கள் கடக்கும்
திசையெங்கும்
அந்தக் கனவு
நீண்டு உயர்ந்து
தெருக்களையும்
சாலையையும்
சொந்தம்
கொண்டாடிக் கொண்டிருக்கிறது
கறிக்கடையில் தொங்கும்
குருதிச் சொட்டும்
ஆட்டின் உடலைக்
கண்டபடியே
தவித்து நிற்கிறது
அந்தச் செல்லப்பிராணி
6.
ரயில் பூச்சியைப் போல்
நகர்ந்து கொண்டிருக்கும்
இந்த வாழ்வுக்கு
எத்தனை கால்கள் இருக்குமென
அறிய முற்பட்டேன்.
அருகில் சென்றபோது
அவற்றிடம்
ரயில் பூச்சியைப் போல்
அத்தனை கால்களில்லாமல்
இன்ப துன்பங்களென
இரண்டு கால்களைப் போல்தான் தெரிந்தன.
உருப்பெருக்கியின் கண்கொண்டு
சற்று உற்றுக் கவனித்ததில்தான்
தெரிந்தது
ஞானத்தின் அசைவில் அது நெளிந்துபோவது.
வாழ்வு என்பது
கால்களற்ற பிராணி.
7.
தடாரி
அவமானங்கள் பல தாங்கி
மனம் வெம்பிய நாளில்
என் தோலை உரித்துத்
தடாரி செய்து
சன்னதமாடுகிறேன்.
என் முன்னோர்கள்
ஒவ்வொருவராய் இறங்கி வருகின்றனர்,
செந்தழலென
அவர்களின் வடுக்கள் காணக் காண
ருத்ர தாண்டவமும்
கொற்றவை ஆட்டமும்
எனக்குள் எழுகிறது.
ஆடல் கலை
வேறு எங்கோ பிறந்ததென
இதுவரை நானும் நம்பினேன்.
அவமானப்பட்டவர்களின்
தோளில் முளைத்த
ஜதியென
உணர்ந்த பின்னே,
உணர்ச்சி பொங்கியது.
வான் அதிர
இசைக்கத் தொடங்குகிறேன்
ஆதி இசையென
என் தடாரியை.
அவ்விசையின் தாளலயத்தின்
ஈர்ப்பில்
கட்டுப்படுத்த முடியாது
உங்கள் கால்களை.
மெய் கூசாமல்
உங்கள் வாய்
சொல்லும்
‘சாவுக் கூத்தென்று.
அச்சொல்லையே பிடுங்கி
ஊதி அதன்மேல்
நடப்பதற்கெனப் போடுகிறேன்.
இசைப் பாலம்
அதிர அதிர,
திசையெட்டும் ஒலிக்கிறது
எங்கள் தடாரி.
Art : AZRA NYC
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கவிஞர் செ.புனிதஜோதி தற்போது சென்னையில் வசித்து வருகிறார். சுப்புவின் கனாமகள், நிழல்களின் இதயம், மௌனக்கூத்து ஆகிய கவிதை நூல்களும் வைகை கண்ட நயாகரா என்கிற பயணக் கட்டுரையும் எழுதியுள்ளார்.
கணையாழி, தாமரை, காலச்சுவடு, ஆனந்தவிகடன், இனிய உதயம், தமிழ்வெளி, கொக்கரக்கோ ஆகிய இதழ்களில் இவரின் கவிதைகள் பிரசுரமாகி உள்ளன. அசோகமித்திரன் நினைவு படைப்பூக்கம், சௌமா ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார். பொதிகை, மக்கள், வேந்தர், தமிழன் ஆகிய தொலைக்காட்சிகளில் கவியரங்கம் மற்றும் பட்டிமன்றங்களில் பங்குகொண்டுள்ளார்.








Leave a Reply