ஒருக்களித்தலும், ஒரு பக்கமாய்ச் சார்தலும் தீயிற்கு இல்லை. தீயின் கடுஞ்சினத்திற்குச் சில நேரங்களில் வானம் தன்னைத் தாழ்த்திக் கொள்கின்றது.
அ.
ஊரே வரப்போகும் திருவிழாவிற்காகக்
களைக்கட்டுகின்றது
விமர்சனம், குற்றம், விரோதமெனக்
காணுமிடமெல்லாம் கச்சடாக்களின் ஒலியில்
தலைத்தூக்கிப் பார்த்த
“தீ”
வயலில் விளைந்த வளங்கள்
யாவர்க்குமானது
என மறந்தது
கேட்டு சுட்டெரித்தது
ஆ.
நம்பிக்கையை நிறைவேற்றும் போது
யாரும் அந்நியராவதில்லை.
முதற்கட்டம், இரண்டாம் கட்டம், மூன்றாம் கட்டங்களில்
கைவிரித்து எல்லைகளைத் தாண்டலாமென
‘தீ’
கனி தரும் கொடி போல இனித்தது.
இ.
முடிவுகள் அறிவிக்கப்போகிறார்கள்.
இப்பொழுது
பள்ளம் நோக்கி மேடுகள்
பயணிக்கத் தொடங்கும்…
ஆழமான குழைந்த மண்ணிலிருந்து தான்
துளிர்கள் முகம் காட்டுமென
கணித்திருத்தலின் தேவையைத்
‘தீ’ நூதனமாக அறிவித்தது.
ஈ.
தனிப்பெரும் வெற்றி…
தனிப்பெரும் வெற்றி…
எனக் கூக்குரல் கேட்க
அனைத்தையும் சலிக்காமல்
பழுது பார்த்திருக்க வேண்டும்.
புசிக்கத் தரும் வயலின் செழுமைப்
பவுசினால் வருவதில்லை…
எனத் ‘தீ’ வாய்மொழிந்தது.
உ.
பயணத்தில் இடைப்பட்ட பிரச்சாரங்கள்
களப்பேச்சில் விசாரணையைக் கோருகின்றன.
சலுகைகளைக் கைக்கொண்டு வழங்குதலில்
அடைக்கலம் கேள்விக்குறியாயிற்று
குழைந்த நிலத்தின் தானியங்கள் மட்டுமே
உண்பதற்கு ஏதுவானவை
எனக் கூறிய “தீ”
குரல்வளையை இறுகப்பிடித்தது.
ஊ.
நான்கு சாலை சந்திப்பொன்றில்
கூட்டமாகக் கூடினர்.
கட்சி இணைப்பு ஏகபோகமாக
மையமிட்டுக் கொண்டது.
தலைமை, பதவி, பொறுப்பு, புகலிடம்…
எல்லாமே பங்கிடப்பட்டது.
சட்டென்று புகுந்த ‘தீ’
விரிந்து கிடக்கும் நிலமே
இளைப்பாறுமிடம், ஒதுக்கிடம், உறைவிடமெனச்
சாதுரியமாகச் சொன்னது
எ.
தற்போது நிலவி வரும் நிலவரங்கள்
அங்கம் வகிக்கும் பிரச்சினைகள்
விரிவாக அலசப்படுகின்றன.
சரி.
உடன்படிக்கையில் முன்னேற்றமில்லை
ஏற்ற காலத்தில்
வயிற்றை நிறைத்தலே
நிலத்தின் நலமெனத்
“தீ” சகாயமாகச் சொன்னது.
ஏ.
தீங்குகளைக் குவித்தலாய்
பயங்கரமான செய்கைகள் துரத்தும் போது
அலங்கார அணிவகுப்புகள் தேவையில்லை.
ஒருங்கிணைந்த இலக்கு மட்டுமே பிரதானம்.
நீர் நிறைந்த நிலத்தில்தான்
பசுந்தளிர்கள் தலையசைத்துக் கிடக்குமெனத்
“தீ” தலைச்சிலுப்பிக் கத்தியது.
ஐ.
சதா கணக்கெடுப்புகள், வாக்கு வங்கிகள்
பரிசீலிக்கப்படுகின்றன
ஆழத்தை ஆழம் கணக்கிட முடியுமா?
நீர்சூழ்ந்துள்ள நிலத்தின்
பச்சையங்கள்தான் விருந்தளிக்கின்றன.
எனத் “தீ ” இனிமையாகக் கூறியது.
ஒ.
நாட்களை எண்ணத் தொடங்கிவிட்டார்கள்
ஆதரவும், எதிர்ப்பும் வலுப்பதில்
எவ்வளவு கூப்பாடுகள்…
இதெல்லாம் எம்மாத்திரம்?
எங்கினும் விரிந்த நிலத்தின் நீர்
மண்ணுடன் புரளும் போது
சத்தம் கேட்பதில்லையெனத் ‘தீ’
அடக்க முடியாமல் சிரித்தது.
ஓ.
இங்கு பாதிப்பு, தீர்வென்பது யாவருக்குமானது.
பிரகாசமென்பது முகத்தில் தெரிய வேண்டும்.
நீரோடிய நிலம் யாரையும் தள்ளிவிடுவதில்லை
என்ற ‘தீ’ யின் செஞ்சாந்தில்
அனைத்தும் ஒளிர்ந்தது.
Art : Alex








Leave a Reply