Home

About Us

Contact Us

  • Facebook
  • X
  • Instagram
  • WhatsApp
  • RSS Feed
தடாரி
  • முகப்பு
  • கவிதை
  • கதை
    • சிறுகதை
    • நுண்கதை
    • குறுங்கதை
  • கட்டுரை
    • இலக்கியம்
    • கலை
    • அரசியல்
    • சூழலியல்
    • சினிமா
    • ஆய்வு
  • அறிவியல்
  • மொழிபெயர்ப்பு
    • கவிதை
    • கதை
    • கட்டுரை
  • தொடர்
  • வாழ்வியல்
Search

கடவுள் விட்ட வழி

கீதா கார்த்திக் நேத்தா
கீதா கார்த்திக் நேத்தா
October 1, 2025
கடவுள் விட்ட வழி

கல்வியியல் கல்லூரி படித்துக்கொண்டிருந்த நாட்கள் அவை. வீட்டில் இருந்து பேருந்து நிலையத்திற்கும், பேருந்து நிலையத்திலிருந்து கல்லூரிக்கும் என இரண்டு பேருந்துகள் மாறிப் பின் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து கல்லூரி செல்ல வேண்டும்.

பள்ளிக் காலத்திற்குப் பின்னர் படிப்பின் பொருட்டு சொந்த ஊரைப் பிரிந்திருந்தபடியாலும் ஐந்து ஆண்டுகள் சென்னை நகர வாசம் அளித்திருந்த வாழ்க்கை மாற்றத்தாலும் சுமார் ஐந்து ஆண்டுகளில் சொந்த ஊரின் தொடர்புகள் அனைத்தும் என் நினைவுகளில் துண்டிக்கப்பட்டு விட்டிருந்தன. சிறுவயதில் பழகிய மனிதர்கள், ஓடியாடிய இடங்கள் எனப் பகுதி பகுதியாகவே அவை நினைவில் தங்கியிருந்தன‌.

ஒரு நாள் வீட்டிலிருந்து கல்லூரி செல்வதற்காக ஆத்தூர் பேருந்து நிலையம் செல்லும் பேருந்தில் ஏறினேன். சுமார் அறுபது வயது மதிக்கத்தக்கப் பெரியவர் பேருந்தின் படிக்கு அருகில் இருந்த முதல் இருக்கையில் அமர்ந்திருந்தார். அவர் அருகில் யாரும் அமராததால் நான் சென்று அமர்ந்துகொண்டேன். அப்போது அப்பெரியவர் என்னைப்  பார்த்தார். நான் அவரைப் பார்த்துப் புன்னகைத்தேன். அவரும் தலையை அசைத்தார். பிறகு எதையோ சிந்தித்தவர் “நீ ஆராயி பேத்தி தான?” என்றார்.

மீண்டும் புன்முறுவல் செய்த நான் தலையாட்டிக்கொண்டே ஆமாம் என்றேன்.

நீ இங்க இல்லன்னாங்க.. இங்கதான் இருக்கியா? என்றார்.

ஆமாம். இங்கதான் இருக்கேன்.

நான் கூறுவது அவர் காதை எட்டவில்லை போலும். அவர் வலது காதோடு தன் வலது கையை வைத்து எனது முகத்துக்கு அருகில் அவர் முகத்தைக்கொண்டு வந்தார். அம்முகத்தில் கேள்வியின் தொனி.

நான் என் இயல்பைவிடச் சற்றுக் கூடுதலாகக் குரலை உயர்த்தி “இங்கதான் இருக்கேன்” என்றேன்.

கூறியது புரிந்ததுபோல் ஓ… என்று இழுத்து முகத்தை ஒரு நிலையில் நிறுத்தினார்.

என் பையைப் பார்த்தவர் படிக்கிறியா? என்றார்.

நான் முன்பு கூறியதுபோலச் சத்தமாக ஆமாம் என்றேன்.

ஓ.. சரி சரி. என்று சற்று அமைதியானவர் மீண்டும் “என்ன வேலைக்குப் படிக்கிற” என்றார்.

அதே சத்தம் சிறிதும் குறையாமல் “டீச்சருக்கு” என்றேன்.

மறுபடி காதை என் பக்கமாக நீட்டினார். ‘என்ன?’

அவர் காதருகே சற்று நெருங்கிச் சென்று “டீச்சரு டீச்சரு”.. என்றேன்.

ஆ… சரி சரி. நல்லாப் படிச்சிக்க. ஏனா அதான் எல்லாராலையும் சம்பாரிக்க முடியாத சொத்து.

நான் அமைதியாகத் தலையசைத்தேன்.

காலேசு போறியா?

இம்முறை ஆமாம் என்று தலையசைத்தேன்.

காலேசு எங்க?

சற்றுச் சத்தமாக நரசிங்கபுரம் என்றேன்.

எங்க? என்று மீண்டும் அவரது காதை என் முகமருகே கொண்டு வந்தார்.

நரசிங்கபுரம் என்று இன்னும் சற்று அவர் காதருகே சென்று கூறினேன்.

இதற்குள். நாங்கள் வந்த பேருந்து ஆத்தூர் பேருந்து நிலையத்தை அடைந்திருந்தது.

தலையசைத்து அவரிடம் இருந்து விடைபெற்றேன். நான் இறங்கிய இடத்திலேயே கல்லூரி வழியாகச் செல்லும் சேலம் பேருந்து ஒன்று நின்றிருந்ததால் அதில் ஏறி ஒரு சாளர இருக்கையில் அமர்ந்தேன்.

இருக்கை சன்னலில் என்னோடு பேசிக்கொண்டு வந்த அந்தப் பெரியவர் பேருந்து நிலையத்தின் நடுவில் இருந்த பழக்கடைகள் வழியாக நடந்து செல்வது தெரிந்தது.

அந்த மனிதருக்கு நன்றாகப் பழகிய ஒரு முகம். எப்போது எங்கு சந்தித்திருப்பேன் என்ற சிந்தனை மனம் முழுதும் பரவியது. அப்பாயி பெயர் வரை தெரிந்திருக்கிறது என்றால் பழகிய மனிதராகத்தான் இருக்க வேண்டும். மனதில் பல சிந்தனைகள் தோன்றின.

சேலம் பேருந்தில் இருந்து இறங்கி கல்லூரியை நோக்கி நடந்தேன். மீண்டும் பெரியவரின் முகம் நினைவில் ஆடியது. அந்த முகமும் அதன் குரலும் சொல்லொண்ணாச் சுவையை நினைவூட்டியது!

கல்லூரிப் பேருந்து நிலையத்திலிருந்து கல்லூரிக்கு மூன்று பாக்குத் தோப்பு இரண்டு தெருவோர வளைவுப் பாதைகள் கடந்து செல்ல வேண்டும். சரியாக இரண்டாவது வளைவில் ஒரு மிதிவண்டி என்னைக் கடந்து சென்றது. நடுத்தர வயது மனிதர் ஒருவர் அதை மிதித்து ஓட்டிச் சென்றார். கடந்து சென்ற மனிதர் காதில் ஒரு கடுக்கன் அணிந்திருந்ததாகத் தோன்றியது.

நினைவில் இருந்து பிடித்துவிட்டேன். என்னோடு பேருந்தில் வந்த அந்தப் பெரியவர் டீக்கார செவிடன் மாமா.

ஆறேழு பேரப்பிள்ளைகள் ஒன்றாக ஒரே வீட்டில்தான் வளர்ந்தோம். எங்களை வளர்த்தது அப்பாயி. எங்களுக்குச் சமைத்து வைத்துச் சாப்பிட வைத்து எங்களோடு ஆடி ஓடி மன்றாடி நேரம் ஆக ஆக ஓய்ந்து போவாள் அப்பாயி. மாலை நெருங்க நெருங்க அப்பாயி களைப்பிற்குச் செவிடன் மாமா விக்கிற டீதான் ஒரே ஆறுதல்.

டீக்காரச் செவிடன் மாமா ஐம்பதில் இருந்த ஒரு மனிதர். தினமும் மாலை ஐந்து முப்பது மணிபோல் ஒரு சைக்கிளில் டீ நிரம்பிய டின் ஒன்றை வைத்துக் கட்டிக்கொண்டு அந்த சைக்கிளைத் தள்ளிக்கொண்டே தெருவிற்குள் வருவார்.

அப்பாயி வயதில் இருந்த அத்தனை முதியவர்களுக்கும் செவிடன் மாமா டீ தான் ஊக்கபானம்.

நான்கடி உயரம், கரிய நிறம், ஒரு காதில் சிவப்புக்கல் பதித்த கடுக்கன் அணிந்திருந்த செவிடன் மாமா காதுக்கு மேல் ஒரு காகிதப் பென்சிலை வைத்துக்கொண்டு சுற்றுவார். தன் வாடிக்கையாளர்கள் டீக்கணக்கை அவர்கள் வீட்டின் சுவரில் கோடுகளாக வரைந்து வைக்கத்தான் அந்தப் பென்சில்.

முதியவர்கள் அனைவரும் மாலை டீ குடிக்கும் பழக்கத்திற்குப் பழகிப் போயினர். முக்கியமாகப் பாலும் சுவையும் ஐந்தில் ஒரு பங்குகூட இல்லாத செவிடன் மாமா டீக்கு மிகவும் பழகியிருந்தனர். இப்படித்தான் செவிடன் மாமாவின் வியாபாரம் சூடு பிடித்தது.

ஒரு சில மாதங்கள் சென்றிருக்கும். முதலில் செவிடன் மாமாவின் உடைகள் மாறின. பிறகு செவிடன் மாமாவின் பேச்சு நடவடிக்கைகள் எல்லாம் மாறின. டீ விலையை ஏற்றினார். முதியவர்கள் கொடுக்கும் காசிற்குக் கணக்கை அழிக்காமல் தோன்றியதை எல்லாம் கணக்காகக் காட்டினார். இதனால் முதியவர்களோடு செவிடன் மாமாவிற்குப் பெரும்பாலும் வாக்குவாதங்கள் நிகழ்ந்த வண்ணம் இருந்தன. இதனால் அப்பாயி கணக்கிற்கும் சுவரில் உள்ள கோட்டிற்கும் நான்காம் வகுப்புப் படிக்கும் நான் பொறுப்பேற்றேன். டீக்கான பணம் கொடுக்கப்படும் போதெல்லாம் ரப்பர் வைத்து மாமா போட்ட கோட்டை அழைப்பதுதான் எனக்கான வேலை.

திடுமென ஒருநாள் செவிடன் மாமா டீ கொண்டு வரவில்லை. ஆனால் டீக்குப் பழகியிருந்த அப்பாயி ‌ஒவ்வொரு நாள் மாலையும் செவிடன் மாமாவிற்காக டீ செம்போடு காத்திருந்தாள். கிட்டத்தட்ட ஒருவாரம் கழித்துதான் மீண்டும் அவரை ஊருக்குள் பார்க்க முடிந்தது. அந்த விடுப்புக்குப் பின் வந்தவர் முகத்தில் ஏதோ ஒருவிதக் கவலையும் விரக்தியும் அப்பியிருந்தன. யாரோடும் சரியாகப் பேசவில்லை. அப்பாயிக்கு டீ கொடுத்தவர் என்னிடம் இன்னொரு பாத்திரம் கேட்டு வாங்கி அதிலும் டீயை நிரப்பிப் புள்ளைங்களுக்குக் கொடு என்று அப்பாயிடம் நீட்டினார்.

கொடுத்த காசுக்குக் கணக்கை அளிக்காமல் வாதாடுற மனுசனா சும்மா ஒரு கிண்ணம் டீ தராரு என்று நான் வியப்பில் ஆழ்ந்தேன்.

என்னய்யா? என்னாச்சி. ஏன் மூஞ்சி இம்பூட்டு நீளம் தொங்குது என்று விசாரித்தாள் அப்பாயி.

செவிடன் மாமாவிற்கு அது கேட்கவில்லை. காதில் கைவைத்து என்ன என்று பாவனை செய்தார். அவரது தோளில் கை வைத்து என்னாச்சு என்று இன்னொரு கையால் சைகை செய்தாள் அப்பாயி.

சைக்கிளின் மேலிருந்த துண்டை எடுத்து வாயில் வைத்துப் பொத்திக்கொண்டு விசும்பத் தொடங்கினார் செவிடன் மாமா.

என்னய்யா? ஏன் விசும்புற. அந்தளவுக்கு என்னாச்சி? என்றாள் அப்பாயி சத்தமாக.

என் பொண்டாட்டி எங்கயோ போய்ட்டா ஆராயி? நான் என்னனு சொல்லுவேன் என்று அழத் தொடங்கினார்.

சிறிது நேரம் செவிடன் மாமாவை அழ விட்டாள் அப்பாயி. பிறகு பேசத் தொடங்கினாள்.

விடுய்யா. உன்ன புரிஞ்சவ போவாளா என்றாள்.

புள்ளக்குட்டி எல்லாம் வளந்துருச்சிதான். நான் ஊட்டுக்குப் போகும்போது‌ அவ முன்னாடி நிப்பா. இப்போ யாரும் இல்லாத அந்த ஊட்ட என்னால பாக்கவே முடில ஆராயி என்று தேம்பித் தேம்பி அழுதார் செவிடன் மாமா.

எண்ணையைப் பூசிக்கிட்டு மண்ணுல உருண்டாலும் ஒட்டுறதுதான ஒட்டும். அவ போய்ட்டுப் போறா. உனக்குப் புள்ளைங்க இருக்குள்ள‌ நீ அதுங்களப் பாரு. அழுதா போனவ வந்துருவாளா? அவ போனா நீ துடிப்பன்னு தெரிஞ்சி தான போயிருக்கா? அவளுக்கு ஏன் நீ அழுவுற. போயி பொழப்பப் பாரு. நாலு காசு சம்பாரி. உனக்கு இன்னும் வாழ்க்கை இருக்குய்யா வருத்தப்படாத என்று ஆறுதல் கூறினாள் அப்பாயி. அதன்பின் சில நாட்கள் செவிடன் மாமாவின் முகம் ஒருவித வெறுமையைக் காட்டியபடியே இருந்தது.

ஒன்றிரண்டு மாதங்கள் சென்றிருக்கும். செவிடன் மாமா இயல்பு நிலைக்கு மாறியிருந்தார். மீண்டும் அதே கடுகடுப்பும் முரண்பாடுகளும் சூழச் சென்றன.

திடுமென இரண்டு நாட்கள் விடுமுறை எடுக்கப் போகிறேன்‌ என முன்கூட்டியே ஒருநாள் கூறினார் செவிடன் மாமா. கூறியது போல இரண்டு நாட்கள் விடுப்பும் எடுத்துக் கொண்டார். பின் மீண்டும் வந்தவர் முகத்தில் அப்படி ஒரு புத்துணர்ச்சி. கழுத்தில் தங்கச்சங்கிலி அணிந்திருந்தார். கையில் மோதிரமும் காணமுடிந்தது. வாங்கிய டீ போக கேட்காமலேயே கொசுறாகக் கொஞ்சம் சேர்த்து ஊற்றினார். சைக்கிளின் அருகில் நின்றிருந்த என் கன்னத்தைக் கிள்ளிச் சிரித்தார்.

இந்த மனிதர்களின் மனப்போக்கைக் கொஞ்சமும் புரிந்துகொள்ள முடியாதவளாய்க் குழப்பத்தில் ஆழ்ந்தேன். பின் அந்தக் கொசுறு டீ யைச் சுவை பார்த்தேன். உண்மையாகவே டீயின் சுவை அதுதான் போலும். ஒரு வினோத வண்ணத்தில் வினோதச் சுவையோடு இஞ்சி வாசனை மட்டும் வீசும் ஒரு திரவம் என்று நம்பினேன். இப்படித்தான் அந்த முதியவர்கள் அத்தனை பேரும் நம்பியிருக்க வேண்டும்.

என்னய்யா ஒரே சந்தோசமா இருக்க என்றாள் அப்பாயி.

என்ன என்று காதை நீட்டினார் செவிடன் மாமா.

என்ன? என்று கையால் சைகை செய்தாள் அப்பாயி.

எனக்குக் கல்யாணம் ஆயிடுச்சு ஆராயி என்று வெட்கப்பட்டார் செவிடன் மாமா.

அப்படியா. புள்ள எந்த ஊரு. நல்ல புள்ளையா? என்று ஆர்வமானாள் அப்பாயி.

நல்ல புள்ளதான்.

சந்தோசம் சந்தோசம். எப்போ முடிஞ்சது? என்றாள் சற்று சத்தமாக. அதே சமயம் மிகுந்த மகிழ்ச்சியோடு.

முந்தானாளு.

நல்லா பாத்துக்கய்யா? உன்ன நம்பி வந்துருக்கா என்றாள் சத்தம் குறையாமல்.

பாத்துக்குறேன். பாத்துக்குறேன்.

கூட்டிட்டு வந்து காமிய்யா எங்ககிட்டயும் என்றாள் அப்பாயி.

கூட்டியாறேன் ஆராயி என்று அதே புத்துணர்ச்சியோடு அங்கிருந்து நகர்ந்தார் செவிடன் மாமா.

மிக இயல்பான ஒருநாளாக அது கடந்தது.

மறுநாள் தன் புதிய மனைவியை அழைத்துக்கொண்டு வந்து அப்பாயிடம் காட்டினார் செவிடன் மாமா.

புதுப்பெண்ணுக்குரிய நாணம் அப்படியே இருந்தது அப்பெண்ணிடம். மிகுந்த பணிவோடு காணப்பட்டாள். அதோடு செவிடன் மாமா வயதிற்கு மிகுந்த இளையவளாகத் தென்பட்டாள்.

எல்லாம் நன்றாகத்தான் சென்றுகொண்டிருந்தது.

நாட்கள் சென்றன.

ஒருநாள் வழக்கத்தைவிடச் சற்று முன்னதாக வந்திருந்த செவிடன் மாமா சைக்கிளில் டீ கேன் இல்லை. அவர் முகத்தில் அதே பழைய கலவரத்தை என்னால் உணர முடிந்தது. வாசலில் விளையாடிக் கொண்டிருந்த என்னை அழைத்த செவிடன் மாமா அப்பாயியை அழைக்கச் சொன்னார். நான் வீட்டிற்குள் சென்று செவிடன் மாமா அழைப்பதாகக் கூறினேன்.

வாசலை அப்பாயி அடைவதற்குள் செவிடன் மாமா கண்கள் சிவந்தன. போனவ திரும்ப வந்துட்டா ஆராயி என்று மீண்டும் விசும்பினார். அப்பாயி சற்று அதிர்ந்ததாக எனக்குத் தோன்றியது. காலுல விழுந்து அழுவறா. இத்தனை வருசமா ஒன்னா வாழ்ந்துருக்கோம். அவளை மாதிரி தள்ளி வைக்க எனக்கு மனசு வரல என்று கண்களைத் துடைத்தார். அது சரி பா. ரெண்டாவது புள்ளைய என்ன பண்ணுவ? என்றாள். என்ன என்று காதை அப்பாயி முகத்துக்கு அருகில் நீட்டினார் செவிடன் மாமா. இரண்டு விரல்களைக் காட்டி என்ன பண்ணப் போற என்று சைகை செய்தாள்.

அவள அவங்கூட்டுக்கே போவச் சொல்லிட்டேன். அவளும் போவமாட்டேனு நிக்கிறா என்று மீண்டும் கண்களைத் துடைத்தார். சட்டென்று அப்பாயி முகம் மாறி அவள் கண்கள் கலங்கின. என்ன பண்ணப் போற என்று கண்களைத் துடைத்துக்கொண்டு கேட்டாள். ரெண்டு பொண்ணுங்க வாழ்க்கை என் பக்கம் திரும்பி நிக்கிது. அந்தக் கடவுள் என்ன பண்ணப் போறானோ. தெரியல ஆராயி.. அவன் விட்ட வழி என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சைக்கிளைத் தள்ளிக்கொண்டு நகர்ந்தார் செவிடன் மாமா.

நான் கல்லூரியை அடைந்திருந்தேன். ஆசிரியப் பயிற்சிக்காகப் பள்ளிகளுக்குச் செல்ல வேண்டிய முதல் நாள் அது. மாணவர்களான நாங்கள் எங்கள் பயிற்சிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளுக்குச் செல்வதற்கான கல்லூரி ஆணைப் படிவத்தை எங்கள் கையில் கொடுத்தனர். நானும் தோழியும் பக்கத்து ஊரில் இருந்த ஒரு பள்ளியை எங்கள் பயிற்சிக்காகத் தேர்வு செய்திருந்தோம். ஒருவழியாக அலைந்து திரிந்து அன்று நண்பகல் பயிற்சிக்கான பள்ளியை அடைந்தோம். கையிலிருந்த படிவத்தைப் பள்ளித் தலைமையாசிரியரிடம் கொடுத்துவிட்டு எங்கள் பயிற்சியைத் தொடங்கினோம்.

அன்று மாலை பள்ளி முடிந்து பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காகக் காத்திருந்தபோது காலையில் பார்த்த செவிடன் மாமா அந்த வழியாக நடந்து செல்வதைப் பாத்தேன். பேருந்து நிறுத்தத்திற்கு எதிரில் இருந்த பாவேந்தர் தெருவிற்குள் நடந்துசென்ற அவர் கதவு எண் 33 என எழுதியிருந்த ஒரு வீட்டின் முன்பு நிற்பதைப் பார்க்க முடிந்தது. அந்த வீட்டிலிருந்து இரண்டு பெண்கள் வெளியே வந்தனர். ஒருவர் வயது முதிர்ந்து காணப்பட்டார். இன்னொரு பெண் நடுத்தர வயதில் இருந்தார்.

அந்தக் கடவுள் விட்ட வழியை அப்போது நான் உணர்ந்தேன். ‌


Art : nancyrourke

கீதா கார்த்திக் நேத்தா
கீதா கார்த்திக் நேத்தா

ஆசிரியர் குறிப்பு.

சேலத்தை அடுத்த ஆத்தூரில் பிறந்த கீதா பட்டதாரிப் பெண். கவிதைகளில் தொடங்கிய இவரது கலைப் பயணம்
பாடல்கள், கட்டுரைகள், பத்திகள், கதைகள் எனப் பரிணமித்து வருகிறது.
பட்டறிந்தவற்றிலிருந்து தனது ஆக்கங்களை வெளிக்கொணரும் கீதாவிற்கு கதை எழுதுவதில் பெரும் மயக்கம். கதை வடிவமே தனக்கான வெளிப்பாட்டு வடிவம் என்று கண்டடைந்த இவர் வருங்காலத்தில்
தேர்ந்த கதைசொல்லியாகவும், சிறுகதை ஆசிரியராகவும் இலக்கிய உலகில் தடம் பதிக்கும் தகவமைந்தவர். கவிஞர், பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா இவரது கணவர். இவரது கவிதைகள் இணைய இதழ்களில் முகிழ்நிலா என்ற பெயரிலும் கீதா என்ற பெயரில் நீலம் இதழிலும் வெளி வந்துள்ளன.

Share :

2 responses to “கடவுள் விட்ட வழி”

  1. Dr.K.Vigneshwaran
    October 2, 2025

    நம்ம நாட்டுல நிறைய கடவுளுக்கு 2 மனைவி… மனைவி கிடைப்பது எல்லாம் இறைவன் கொடுத்த வரம்… 2 மனைவி அமைவது எல்லாம் இறைவனுக்கு மட்டுமே கிடைக்கும் வரம்… 😄😁😄

    Reply
    1. கீதா கார்த்திக் நேத்தா
      கீதா கார்த்திக் நேத்தா
      October 10, 2025

      😊😊

      Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Featured Articles

  • ‘‘ஜாதி அமைப்பை அறிந்து கொள்ளாமல் தலித் இலக்கியத்தைப் புரிந்து கொள்ள முடியாது – சரண்குமார் லிம்பாலே

    ‘‘ஜாதி அமைப்பை அறிந்து கொள்ளாமல் தலித் இலக்கியத்தைப் புரிந்து கொள்ள முடியாது – சரண்குமார் லிம்பாலே

    December 2, 2025
  • பொப்பி என்பது புனைபெயர்

    பொப்பி என்பது புனைபெயர்

    December 2, 2025
  • அறிவியற்புனை கவிதைகள் – தமிழில் : பிரவிண் பஃறுளி

    அறிவியற்புனை கவிதைகள் – தமிழில் : பிரவிண் பஃறுளி

    December 2, 2025
  • வண்ணார் : வரலாறும் வலிகளும்

    வண்ணார் : வரலாறும் வலிகளும்

    December 2, 2025
  • பொலி எருமை

    பொலி எருமை

    December 2, 2025

Search

About thadari

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

ஆசிரியர் : பச்சோந்தி

  • X
  • Instagram
  • TikTok
  • Facebook

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (8)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (9)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 1 (20)
  • இதழ் 2 (24)
  • இதழ் 3 (31)
  • இதழ் 4 (41)
  • இதழ் 5 (34)
  • இதழ் 6 (33)
  • இதழ் 7 (42)
  • இலக்கியம் (12)
  • உரையாடல் (8)
  • ஓவியர் அறிமுகம் (11)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (67)
  • கட்டுரை (1)
  • கதை (3)
  • கதை (2)
  • கவிதை (49)
  • கவிதை (11)
  • குறுங்கதை (5)
  • சிறார் (4)
  • சிறார் கதை (10)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (1)
  • சிறுகதை (30)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (3)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (8)
  • நாட்குறிப்பு (8)
  • நாவலின் ஒரு பகுதி (7)
  • நினைவேடு (1)
  • நுண்கதை (1)
  • நூல் அறிமுகம் (11)
  • நேர்காணல் (5)
  • மொழிபெயர்ப்பு (24)
  • வாழ்வியல் (2)

Archives

  • December 2025 (42)
  • November 2025 (33)
  • October 2025 (34)
  • September 2025 (42)
  • August 2025 (35)
  • July 2025 (24)
  • June 2025 (20)

Tags

2003-ல் அரசு ஊழியர் anamikaa-poems embodiment knowledge empirical observation epistemology-of-thinai ezhil-chinnathambi Issac Basil Emarald Literature meeluru Modern Tamil Poem murugabhoopathy pamayan selvasankaran-poems அனாமிகா ஆர்.பாண்டியக் கண்ணன் இலக்கியம் எலிப்பூனை ஐசக் பேசில் எமரால்ட் கவிஞர் அன்னா அக்மதோவா கவிஞர் சபரிநாதன் கவிஞர் சமயவேல் கவிஞர் முஹம்மத் தர்வீஷ் கவிதைகள் கீதா கார்த்திக் நேத்தா சின்னக் குளம் சிறார் கதைகள் சிறுகதை சூலிசைக்கடுங்கூத்து செல்வசங்கரன் செல்வசங்கரன் கவிதைகள் தி.ப.சித்தலிங்கையா திணை அறிவின் அறிவியல் ந நாவல் நீதிமணி பாமயன் மகிமையின் நிலவிளக்கு மணல் மகுடி மணல் மகுடி நாடகக் குழு மண்ணும் மனிதரும் மத்திய சிறை மரளி மண்ணிகே மோனோகாக் ராமச்சந்திர குஹா றியாஸ் குரானா

About Us

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

Latest Articles

  • ‘‘ஜாதி அமைப்பை அறிந்து கொள்ளாமல் தலித் இலக்கியத்தைப் புரிந்து கொள்ள முடியாது – சரண்குமார் லிம்பாலே

    ‘‘ஜாதி அமைப்பை அறிந்து கொள்ளாமல் தலித் இலக்கியத்தைப் புரிந்து கொள்ள முடியாது – சரண்குமார் லிம்பாலே

    December 2, 2025
  • பொப்பி என்பது புனைபெயர்

    பொப்பி என்பது புனைபெயர்

    December 2, 2025
  • அறிவியற்புனை கவிதைகள் – தமிழில் : பிரவிண் பஃறுளி

    அறிவியற்புனை கவிதைகள் – தமிழில் : பிரவிண் பஃறுளி

    December 2, 2025

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (8)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (9)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 1 (20)
  • இதழ் 2 (24)
  • இதழ் 3 (31)
  • இதழ் 4 (41)
  • இதழ் 5 (34)
  • இதழ் 6 (33)
  • இதழ் 7 (42)
  • இலக்கியம் (12)
  • உரையாடல் (8)
  • ஓவியர் அறிமுகம் (11)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (67)
  • கட்டுரை (1)
  • கதை (3)
  • கதை (2)
  • கவிதை (49)
  • கவிதை (11)
  • குறுங்கதை (5)
  • சிறார் (4)
  • சிறார் கதை (10)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (1)
  • சிறுகதை (30)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (3)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (8)
  • நாட்குறிப்பு (8)
  • நாவலின் ஒரு பகுதி (7)
  • நினைவேடு (1)
  • நுண்கதை (1)
  • நூல் அறிமுகம் (11)
  • நேர்காணல் (5)
  • மொழிபெயர்ப்பு (24)
  • வாழ்வியல் (2)
  • Instagram
  • Facebook
  • LinkedIn
  • X
  • VK
  • TikTok

Thadari.com

Scroll to Top