முதல் ஓவியம்
ஆதிச்சமூகமான வேட்டைச் சமூகத்தில் மொழி தோன்றுவதற்கும் உரையாடல் இல்லாமல் உடலால் உணர்த்திய காலத்திலேயே கலை துவங்கி விட்டது. சூரியனின் ஒளி ஒரு மனித உடலில் மேவி அது பாறை மீது படிந்து நிழலாகத் தென்படுவதே மனிதன் உணர்கிறான். அதுவே ஓவியக் கலையின் முதல் வெளிப்பாடு.
இதன் தொடர்பாக வேட்டையாடச் செல்லும்போது அவன் பார்த்த பறவைகள், விலங்குகள், நிலஅமைப்புகள், தாவரங்கள் போன்றவற்றைத் தன் உழைப்பைச் சார்ந்து நினைவுப்படுத்திக் கொள்ள பாறைகளில் அவன் ஒரு விலங்கை விரட்டிச் சென்று வேட்டையாடியதைப் பற்றியும், வில் அம்பு தொடுத்துப் பறவைகளை வீழ்த்தியதைப் பற்றியும், நினைவுகூரும் விதமாகப் பாறைகளில் செதுக்கி, ஓவியமாக்கிக் கொள்கிறான். இதுவே முதல் ஓவியக் கலையாகும். இந்த ஓவியக்கலை மெல்ல மெல்ல வளர்ந்து, உச்சபட்சமாக, உலக ஓவியக் கவிஞன் “டாவின்ஸி” மோனோலிஸா என்ற ஓவியத்தை வரைந்தார். அந்த ஓவியத்தில் அப்பெண்ணின் பார்வை நயம், காதல் வசீகரம், பெண்ணின் நளினம் அப்பெண்ணின் தாய்மை கோபம், சட்டெனப் பற்றியெறியும் பெண்ணின் புத்தி என அனைத்து மேனரிஸம் பற்றி மிக நேர்த்தியாகப் பதிவுருத்திருப்பார்.
டாவின்ஸி இதனால் இந்த ஓவியம் உலகப் பிரசித்திபெற்ற ஓவியமாக இன்றளவும் பேசும் பொருளாகிப்போனது. இந்த ஓவியத்தைத் தீட்டிய டாவின்ஸி எந்த ஒரு பெண் தொடர்போ அல்லது காதல் வயப்பட்டோ அல்லது திருமணம் முடித்து, அதன்பின் பெண்ணின் பரிசத்தை உணர்ந்தோ அந்த ஓவியத்தைத் தீட்டவில்லை. மாறாக அவர் ஒரு கட்ட பிரம்மச்சாரி திருமணமே தன் வாழ்வில் செய்யவில்லை. பின்பு எப்படி இப்படி ஒரு ஓவியத்தை தீட்டமுடியும் என உலகம் வியந்து பார்க்கையில் அவர் வெறும் பார்வை மூலமே பெண்ணின் உடல்மொழியையும், மனமொழியையும் உணரும்திறன் கொண்டு மோனோலிஸா என்ற ஓவியத்தைத் தீட்டியுள்ளார். இதன்படி மனிதனுக்கு உணரும் திறன் இருந்தாலே எல்லாவற்றையும் கலையாக மாற்றமுடியும் என்பதற்கு உதாரணம் டாவின்ஸி. இதுதான் முதல் ஓவிய கலையின் வெளிப்பாடு. இந்த வெளிப்பாடு மனிதர்களின் உணர்வு மூலமே கலையாகிறது.
வாத்ஸாயனரின் அறுபத்திநான்கு கலைகள் உலகப் பிரசித்தி பெற்றவை. அக்கலைகள் பலகோயில்களில் இன்று சிலைகளாகவும், பாறை ஓவியங்களாகவும், சிற்பங்களாகவும் உள்ளன. இக்கலைகளை வெளிப்படுத்திய வாத்ஸாயனர் திருமணமாகாதவர் எனப் பல ஆய்வுகள் சொல்கின்றன. ஆனால் அவர் தனது கலைகளில் ஆண், பெண் உடல் உறவு கோணங்கள் பற்றித் தீர்க்கமாக தியான முறையாகச் சித்தரிக்கிறார். இவையனைத்தும் ஆண்டு அனுபவித்துச் சொல்வில்லை. அனைத்தும் அவரின் கற்பனையில் இருந்தும், உணர்வுகளின் மூலமே சொல்லி இருக்கிறார்.
ஓவியத்திற்கு பின்பு தோன்றியது இசைக்கலை. இசைக்கலையின் முன்னோடி பறை இசை, இந்த இசையை உருவாக்கத்தான் வேட்டையாடி விலங்குகளின் தோலிலிருந்து இசைக்கருவியை உருவாக்கி, அதை இசைப்பார்கள். இந்தப் பறையோசை கேட்டு மலைக்குகைளிலும், பள்ளத்தாக்குகளிலும், அடர்ந்த வானத்திலிருந்தும் பதுங்கி இருக்கும், விலங்குகளையும், பறவைகளையும், விரட்டி வெளியே கொண்டு வர இசைப்பார்கள். இதைக்கேட்ட விலங்குகள், பறவைகள் மிரண்டு சிதறி ஓடும். அப்போது வில் அம்பு தொடுத்து வேட்டையாடுவார்கள். அதன் தொடர்ச்சி குரங்கிலிருந்து மனிதன் தோன்றியதாக அறிவியல் கூறுவதால் மனிதர்களுக்கும் அக்குணம் அவ்வப்போது தலைக்காட்டும், குறிப்பாக இவ்வளவு வளர்ச்சியடைந்த மனிதர்களுக்குத் தொலைதூரத்திலையோ அல்லது மிக அருகாமையிலையோ, பறை இசை கேட்டால், ஆடத்தோன்றும். ஆனால் சபை நாகரீகம் கருதி நம்மை நாமே அடக்கிக் கொள்வோம். ஆனால் மறைமுகமாக இசைகேட்டு கால்களையாவது ஆட்டிக் கொள்வோம். ஆனால் பெண்கள் ஆடிவிடுவார்கள் எப்படியெனில் கோயில்களில் அடிக்கும் இசைக்குப் பெண்கள் தன்னையும் மீறி ஆடிவிடுவார்கள்.
கோயில்களில் ஆடும்போது சாமி வருவதாகச் சொல்வதும், வீடுகளில் ஆடும்போது பேய் பிசாசு பிடித்துவிட்டதாகச் சொல்வதும் பாரம்பரியமாகிப் போனது. ஆனால் உண்மை அதுவல்ல, பெண்கள் தன்னையும் மீறி ஆடுவதற்குக் காரணம் வேட்டைச் சமூகத்தில் பெண்கள்தான் வேட்டைக்குச் செல்வார்கள். அப்போது ஆண்கள் குகைகளிலும் பாறை இடுக்குகளிலும், பெண்கள் வேட்டையாடிக் கொண்டுவரும் இரைகளைக் குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் பிரித்துக் கொடுத்துவிட்டு, மீதியைப் பாதுகாத்துக் கொண்டு இருப்பார்கள். இப்படி பெண்கள் வேட்டைக்குச் செல்லும்போது பறையை அடித்துக் கொண்டே செல்வார்கள். அப்படிப் பறையின் இசையைப் பெண் தான் முதலில் இசைத்ததின் விளைவுதான் இந்நொடிவரை பெண்கள் ஆடிக்கொண்டே இருக்கிறார்கள். இதற்கு அடிப்படை ஆதித்தாயின் தொன்மத்தின் எச்சம் இன்று வரை தொடருவதால் அந்த இசைப் படிமம் முதலில் பெண்களுக்கு ரத்தத்தில் கலந்து அதுமூளையில் படிந்துவிடும். இதன் மூலமே பெண்களுக்கு இசை செவிவழியாகக் கேட்டவுடன் உடல் துள்ள ஆரம்பித்துவிடும். ஆண்களுக்கு அப்புறம்தான் துள்ளல் வரும். ஆக இசை வடிவம் ஆதியில் பெண்கள் மூலமாகவே உருவானது இப்படியே முதல் இசை பறையின் இசை என நிரூபணமானது.
ஓவியம், இசை இரண்டுக்கும் பின் சிலைகள். இச்சிலைகளுக்கு அடிப்படை நடுகல். நடுகல் என்றால் இறந்தவர்களைப் புதைத்த இடத்தில் கல்களை ஊன்றி அந்தக் கல்லை, வணங்கத் துவங்கினார்கள். ஏனெனில் தன்னோடு வாழ்ந்தவர்கள். இறந்த பின்பு தன்னை எதுவும் செய்து விடக் கூடாதென்று பயந்து கொண்டு ஒருகல்லை ஊன்றி அக்கல்லிற்குக் காட்டுப் பூக்களையும், தான் வேட்டையாடிய மிருகம், பறவைகள் இறைச்சிகளைப் படையல்களாக வைத்து வணங்கினார்கள். இதன் தொடர்ச்சிதான் குகைகளிலும், பாறைகளிலும், தன்னோடு வாழ்ந்தவர்களை நினைவுகூர்ந்து அவர்களைச் சிலைகளாக வடித்து வணங்கினார்கள்.
மனிதகுலம் முதலில், இயற்கையின் சீற்றங்களுக்குப் பயந்து இடியையும், மின்னலையும், மழையையும், பயந்து வணங்கிய மனிதகுலம்; பின்பு தன்னொடு இறந்தவர்களைச் சிலைகளாக்கி வணங்கினார்கள். இதுதான் முதல் வழிபாட்டுமுறை, இதுதான் மத வழிபாட்டுக்கான முதல் அடிப்படை. இதுவே பின்பு நாட்டுப்பறத் தெய்வமாக, குலதெய்வமாக உருவெடுப்புக்கு அடித்தளம். நாளாக நாளாக மனித நாகரீகம் வளர்ந்து வளர்ந்து கலாச்சாரமும் பண்பாடும் உருமாறி, சிலைகளின் வெளிப்பாடு, மிதமாக உருமாறி அச்சிலைகளுக்குப் புராணமும். இதிகாசமும் உருவாக்கப்பட்டு, இன்று பல மதங்கள் தோன்றி உள்ளன. முதலில் சிலை வடிவத்தை மனித குல வாழ்வியலை சிலைகளாக உருவாக்கிய குழு பௌத்தக் குழு. இவர்கள் செதுக்கிய சிலைகள்தான் இன்று நாம் காணும் விஷ்ணு சிலைகள்.
புத்தர் இறந்த பின்பு புத்தரின் சீடர்கள் பள்ளிகளில் தங்கி வணங்குவதற்காக, புத்தரைச் செதுக்கிச் சிலையாக்கி வணங்கினார்கள். இந்தச் சிலைகள் ஆரியர்களின் வருகைக்குப் பின்பு புத்த பிட்சுகளை விரட்டி அடித்துவிட்டு, அவர்களைக் கழுவேற்றிவிட்டு புத்தர் சிலைகளை, விஷ்ணுவாக மாற்றி ஆரியமதத்தை உருவாக்கினார்கள். இப்படித்தான் சிலையின் வடிவம் கலைவடிவமாக மாறி மாறி இன்று இறந்த தலைவர்களின் சிலைகள் நாடெங்கிலும் பரவிக் கிடக்கின்றன. இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் உள்ள நம் நாட்டில் சிலைத் தொகையும் அதிகமாக உள்ளன. சிலையின் வெளிப்பாடு கலையின் வெளிப்பாடு.
உடல்மொழி மூலமே மனித உணர்வுகள் மனிதப் பாடுகள் மாறி உரைகள் உருவாகி அந்த உரைகள், மனிதனின் பாடுகளை, வேட்டையாடிதைப் பற்றியும் மீன்பிடித்தல் பற்றியும் விவசாயம் பற்றியும் அதன் உற்பத்தி சார்ந்த துயரங்களை உரையாடி ஒருவருக்கொருவர் கடத்தியவர்கள் அதைச் சுருதியோடு பாடினார்கள். அப்பாடல் மனித உழைப்பைப் பற்றித் துவங்கியது. பண்பாடு சார்தம், கலாச்சாரம் பற்றியும் பாடத் துவங்கினார்கள். சிலைகளை உருவாக்கியவர்கள் அச்சிலைகள் மீது மதத்தை உருவாக்கி அந்த மதத்திற்குத் தலைவர்களாக உருவானவர்கள் கடவுளாக, ஆண்டவர்களாக தேவ தூதர்களாக உருவாக்கி அவர்களைப் பற்றிய தன்மைகளைப் பாடல்களாகப் பாடத் துவங்கினார்கள்.
முதலில் பக்திப் பாடல்கள் கடவுளைப் பற்றியும், பின்பு கடவுளுக்கு இணையாக அரசர்களைப் பற்றியும் பாடினார்கள். அரசனையும், அரசைப் பற்றியும் அந்தப்புரம் பற்றியும், போர்க்களம் பற்றியும், அரசனின் அரசாட்சி பற்றியும் பாடியவர்கள். மெல்ல மெல்ல படைத்தலைவர்களின் உழைப்பைப் பற்றியும் அந்தத் தளபதிகள் தன் மனையை விட்டுப் போர்க்களம் சென்று திரும்பும் வரை அவர்களின் மனப்போக்கைப் பற்றிப் பாடினார்கள். குறிப்பாக, போர்க்களத்திற்குப் போன தலைவர் வீடு திரும்பாத போது தலைவி தன் தனிமைத் துயரத்தைப் பற்றிப் பாடியதுதான், இலக்கியங்களில் பாடல்களாகப் பதிவுருத்தப்பட்டுள்ளது. கடவுளுக்கான பக்திப் பாடல்கள், அரசாட்சியைப் பற்றிய துதிப் பாடல்கள், பின்பு தலைவன், தலைவிக்கான பாடல்கள் என்று பாடி களைத்தவர்கள் மெல்ல மெல்ல வெகுசன மக்களைப் பற்றிய பாடல்களாக உருமாற்றி மக்களின் பாடுகளைப் பற்றியும் வாழ்வியல் பற்றியும் பாடல்களாகப் பாடி உள்ளார்கள். பிறந்த குழந்தைக்குத் தாலாட்டுப் பாடலாகவும், பூப்பெய்த பெண்ணிற்குச் சடங்குப் பாடல்களாகவும், இளைஞன், யுவதிகளின் காதல் பாடல்களாகவும், இறந்தவர்களுக்கு ஒப்பாரிப் பாடல்களாகவும், உருவாகி உருவாகி இன்று தெம்மாங்குப் பாடல் நாட்டுப்புறப் பாடல், ராப் பாடல், பாப்பாடல் என உலகம் முழுவதும் மனித நகர்வுகள் அனைத்திற்கும் பாடல் ஒரு திறவுகோலாக மனித மனங்களை நிறைப்பதற்குப் பாடல் உருவாக்கப்பட்டு மனிதனின் உணர்வுகளுக்கேற்ப மனிதப் பாடுகளையும், வெற்றிகளையும், தோல்விகளையம் கோபத்தையும், சந்தோஷத்தையும், உணர்ச்சிவசப்படும் மின்னல் கீற்று போன்று மனித உணர்வுகளைப் பாடல்களாகப் பாடும் கலையின் வெளிப்பாடு உருவாகி உள்ளது.
காரணம்…
1872-ஆம் ஆண்டில் ஸ்டான் போர்ட், குதிரைப் பந்தய ஆர்வலர். அவர் குதிரைப் பந்தயத்தில் அதி வேகமாகச் செல்லும் குதிரை நான்கு குளம்புகளையும் தரையில் இருந்து தூக்குகிறது என உறுதியாக நம்பினார். இதை அவரின் நண்பர்களிடம் சொல்லியபோது, கேலி செய்தார்கள். இதை உறுதிப்படுத்த ஒரு புகைப்படக் கலைஞருக்கு 2,500, வழங்கி குதிரையின் வேகத்தையும் அதன் குளம்புகள் பற்றிய படம் எடுக்க வைத்தார். ஆனால் அது சரிவர குதிரையின் வேகத்துக்கு ஈடு கொடுத்துத் துள்ளியமான படங்களைத் தரவில்லை.
ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு புகைப்படக் கலைஞர் முய்பிரிட்ஜ், 12 கேமிராக்களை இயக்கிக் குதிரையின் இயக்கத்தை முழுமையாகப் படமாக்கினார். இது குதிரையின் நான்கு குளம்புகளும் முழு வேகத்தில் தரையைவிட்டு வெளியேறியதைத் தெளிவாகக் காட்டியது. இதன்பின் தொடர்புகைப்படக் கலைஞராகப் பிரபலமானார் முய்பிரிட்ஜ்.
உலகின் முதல் சினிமா
1888-ல் லூயிஸ்லு பிரின்ஸ் என்பவரால் எடுக்கப்பட்ட உலகின் முதல் மோஷன் பிக்சர் திரைப்படம். பிரஞ்சு கண்டுபிடிப்பாளர் லூயிஸ் லு பிரின்ஸ் இயக்கிய ஒரு குறும்படம் இது 2.11.விநாடிகள் மட்டுமே. நீளமாக இருந்தாலும். தொழில்நுட்ப ரீதியாக இது ஒரு திரைப்படமாகும். இது ஒற்றை-லென்ஸ் கேமிராவைப் பயன்படுத்தி ஈஸ்ட்மேன் கோடாக் காகித அடிப்படையிலான புகைப்படத் திரைப்படத்தில் பதிவு செய்யப்பட்டது.
நவம்பர்-16-ல் 1888 அன்று ஐக்கிய நாட்டின் காப்புரிமை பெற்றது. லூயிஸ் லு பிரின்ஸ் 1888ஆம் ஆண்டிலேயே, தாமஸ் ஆல்வா எடிசன் அல்லது லூமியர் சகோதரர்களுக்கு? பல ஆண்டுகளுக்கு முன்பே திரைப்படத்தில் பரிசோதனையைத் தொடங்கினார்.
1886-ம் ஆண்டில் தனது முதல் திரைப்பட கேமிராவை உருவாக்கி 1888-ம் ஆண்டு இங்கிலாந்தில் ஸீட்ஸின் ரவுண்ட் ஹேயில் உள்ள ஒரு தோட்டத்தில் குடும்பக் காட்சியைப் படம் பிடித்தார். அந்தத் தோட்டத்தில்தான் சினிமா பிறந்தது.
ஒரு ஒற்றை லென்ஸ் கேமரா மற்றும் ஈஸ்ட்மேனின் காகிதத்தைப் பயன்படுத்தி விநாடிக்கு 12 பிரேம்கள் 2.11 விநாடிகள் ஓடக்கூடிய படத்தை உருவாக்கினார். நகரும் சினிமாவை உருவாக்கிய மாபெரும் பங்கு லூமியர் சகோதர்களுக்கு உண்டு. அகஸ்டே மற்றும் லூயிஸ் திரைபட வரலாற்றில் முன்னோடிகளாகக் கருதப்படுகிறார்கள். 1895 டிசம்பர் 28 அன்று பாரிஸிஸ் முதன்முதலாகப் பொது மக்களுக்குத் திரையிட்டார்கள். மேலும் சினிமேட்டோகிராபி என்ற புரட்சிகரமான கேமிரா மற்றும் புரொஜெக்டரைக் கண்டு பிடித்தனர். மேலும், ஒளிப்பதிவு மற்றும் ஆட்டோக்ரோம் கண்டுபிடித்ததிலும் இவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.
லூமியர் சகோதரர்கள் தயாரித்த குறும்படங்களின் காட்சியமைப்பு பிரெஞ்சு வாழ்க்கையைப் பதிவு செய்திருந்தது.
திரைஉலகின் புகழ்பெற்ற பன்முகக் கலைஞர் சார்லி சாப்ளின் உலக சினிமா பங்களிப்பு சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் 1899 ஏப்ரல் 16 டிசம்பரில் பிறப்பு. ஹாலிவுட் திரையுலகின் பெரும்புகழ் பெற்ற கலைஞர், நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதையாசிரியர், தொகுப்பாளர், தயாரிப்பாளர் எனப் பன்முகக் கலைஞர்.
சாப்ளின் இலண்டனில் உள்ள வால் வோர்த்தில் சார்லசுக்கும் ஹன்னா ஹாரியட் ஹில்லுக்கும் மகனாகப் பிறந்தார். சாப்ளின் தாய் தந்தையர் மியூசிக் ஹால் கலைஞர்கள். சாப்ளின் தந்தை குடிப்பழக்கத்தால் சார்லியின் 12-வது வயதிலேயே இறந்துவிட்டார். இதனால் இவர் தாய் மனம் நலம் பாதிக்கப்பட்டு, கிராய்டனில் உள்ள கேன்ஹில் அசைலம் என்ற மனநலக் காப்பகத்தில சேர்க்கப்பட்டார். சார்லியும் அவரது சகோதரரும் ஹான்வெல் பள்ளி என்றும் ஆதரவற்றோருக்கான பள்ளியில் சேர்ந்து வளர்ந்தனர். சாப்ளின் தாயார் 1928-ல் உடல்நலம் குன்றி இறந்து போனார்.
சார்லின் பல நாட்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருக்கும்போது இவரது தாய், ஜன்னலோரம் அமர்ந்து வெளி உலகைப் பற்றி நடித்துக் காட்டுவார். அதன் தொடர்பாக சார்லின் பின் காலத்தில் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். முதன் முதலாக ஒரு பூனையாக நடிக்கத் துவங்கினார்.
உலக சினிமாவை தொடர்ந்து…..
இந்திய சினிமா 1913-ல் தாதா சாகேப் பால்கேவின் “ராஜா ஹரிச்சந்திரா” முதல் முழு நீளத்திரைப்படமாகும். இதற்கு முன்னோடியாக, பம்பாய் திறந்த வெளியில் லூமியர் சகோதர்கள், கண்டறிந்த புரோஜக்டர் மூலம் குறும்படம் திரையிடப்பட்டது. இதன்பின்பே தாதா சாகேப் பால்கே முழுநீளப் படம் தயாரித்து வெளியிட்டார்.
தமிழ்த் திரைப்பட வரலாற்றில் முதல் மௌனப் படம் “கீச்சக வதம்” இதன்பின்பு 1931-ல் முதல்பேசும் படமாக காளிதாஸ், 1944-ல் முதல் வண்ணப்படமாக ஹரிதாஸ் வந்தது. இப்படி சினிமாவின் வளர்ச்சி புராண இதிகாசக் கதைகளைக் கொண்டு ஒரு காட்சிக்கும் மற்றொரு காட்சிக்கும் இடையில், பாடல்கள் நிறைந்து இருக்கும். பேசும்படம் வருவதற்கு முன் மௌனப்படத்தின் காட்சி அமைப்பிற்கு ஏற்ப பாத்திரங்கள் பேச வேண்டியதைத் திரையரங்க மேடையின், இரண்டு பக்கவாட்டுகளில், இசைக் கலைஞர்கள், இசை மீட்டுவார்கள். பாத்திரங்களின் உடல்மொழிக்கேற்ப மேடையின் பக்கவாட்டில் இருந்த படி வசனம் பேசுவார்கள்.
ஒளி மட்டுமே பயன்பாட்டிலிருந்து காலம்மாறி ஒலியும், சேர்ந்து ஒளியும் ஒலியும் சேர்ந்து படம் காட்டப்பட்டபோது வசனம் குறைக்கப்பட்டு காதலனும், காதலியும் பேசவேண்டிய இடத்தில் பாடல், கதாநாயகனும் வில்லனும் பேச வேண்டிய இடத்தில் பாடல் இப்படி ஒவ்வொரு காட்சிக்கும் ஒவ்வொரு ப்ரேம்க்கும், ஒவ்வொரு ஷாட்டுக்கும், பாடல், பாடல், பாடல் என ஆறுமணிநேரம் எட்டு மணி நேரம் ஓடக்கூடிய படத்திற்கு மூன்று மணிநேரம் நான்கு மணிநேரம் பாடல்களாகப் படத்தின் பாதி இடத்தை தாக்கம் வைத்திருக்கும். ஆனால் காலச் சூழல்மாறும் போது படத்தின் நீளமும் குறைந்து பாடல்கள் குறைந்து எட்டுமணி நேரம் ஆறுமணி நேரம் படங்கள், மூன்று மணிநேரம், இரண்டுரை மணிநேரமாக மாறி ஆறு பாடல்கள், நான்கு பாடல்கள் எனக் குறைந்து, மீதிப் படத்திற்குக் கதையின் போக்கை முன்கூட்டிய அறிவிக்க காதல் வசப்படும் வசனங்கள், குடும்பப் பாங்கான வசனங்கள் காத்திரமான வசனங்கள் என்றும் சினிமா மாற, மக்கள் வசனத்திற்காகப் படம் பார்க்கத் துவங்கினார்கள். அப்படி வசனத்தை வசீகரமாக புரட்சிகரமாக முற்போக்குச் சிந்தனையாகத் தந்தவர்கள் அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர். இந்த இருவரின் வசனம், சினிமாவின் போக்கை மாற்றியது.
இந்த வசனத்தால், இருவரும் மறக்க முடியாத அல்லது தவிர்க்க முடியாத இடத்தில் இருந்தார்கள். படத்தின் கதாநாயகன், நாயகி பெயர்தான், வெண்திரையில் எழுத்துப்போடும் போது வரும். ஆனால் அண்ணாவின் வேலைக்காரி கலைஞரின் மகாதேவி என மாறியது. இவர்கள் வசனத்தை நயமாகவும் வீராவேசமாகவும், பேசி நடித்த ஜெமினி கணேசன், சிவாஜி கணேசன், எம்.ஜி.இராமச்சந்திரன், எஸ்.எஸ்.ஆர் எனத் தமிழ் மொழியின் உச்சரிப்பை மிகச் சரியாகச் செய்தமையால், தமிழகத்திற்கு நான்கு முதலமைச்சர்களைத் தந்தது சினிமா. அறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி, புரட்சித் தலைவி ஜெயலலிதா இந்த நான்கு பேரும் தமிழக மக்களின் உணர்ச்சிப் பிழம்பாக, நம்பிக்கை நட்சத்திரமாக எதிர்காலத்தில் நம்மைத் தலைமை தாங்கி வழி நடத்துவார்கள் என மக்களை சினிமா என்ற சாதனம் நம்ப வைத்தது. இதற்கு அடிப்படை சினிமா வசனமும் தீமைக்கெதிராய்ச் சண்டையிட்டு பாதிக்கப்பட்டோரைக் காப்பாற்று அவர்களுக்கு நல்வாழ்வு தழுவது போன்று பிம்பம் கட்டமைக்கப்படும் போது அதை மனிதர்கள் அதில் வரும் காட்சிகளைப் பார்க்க உணர்ச்சிவசப்பட்டு அதுவே வாழ்க்கையாக எண்ணத் துவங்கியதன் விளைவு தமிழகத்திற்கு நான்கு முதல்வர்களை தந்தது.கலையின் வெளிப்பாடு என்பது மனித உணர்வுகள்தான். மனிதன் சிந்திக்கவும் அதன்படி செயலாற்றவும் முதலில் தோன்றுவது கருத்து முதல்வாதம்தான் கனவு காண்பது பின்பு அதை நிறைவேற்ற பாடுபடுவதுதான். மனித பரிணாமம் மனிதனின் ஒவ்வொரு இயக்கத்திற்கும், கலைமுன்னத்தி ஏர். இப்படிப்பட்ட கலை காலப்போக்கில் பல்வேறு பாரிணாமங்கள் அடைந்து இன்று, கணினி, கட்செவி, முகநூல் என வந்து நிற்கிறது. இதனால் உலகின் இயக்கங்கள் உடனுக்குடன் அறிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டதின் விளைவு யாரும் யாரையும் அவ்வளவு எளிதாக ஆட்கொள்ள முடியாது. அது அரசியல் ஆனாலும் சரி ஆன்மீகம் ஆனாலும் சரி, இயக்கங்கள், சங்கங்கள் எனப் பொதுத் தளம் மூலம் மக்களை ஏமாற்ற முடியாது. இதற்கு அடிப்படை கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு இருந்த போதிலும் புதிய புதிய மனித வாழ்வியலுக்கேற்றாற்போல் கலையும் இலக்கியமும் புதுப் புது அறிவாக்கமாகக் காலந்தோறும் மனித உணர்வுகளைப் பதிவுருத்திக் கொண்டே இருக்கிறது.
Art : Nermin Yokus Ipekciler
ஆர்.பி.கண்ணன் என்னும் இயற்பெயர் கோண்ட R.பாண்டியக்கண்ணன் விருதுநகர் மாவட்டம் கட்ராம்பட்டியைச் சேர்ந்தவர். தமிழ்நாடு அரசு சுகாதாரப் போக்குவரத்துறத் துறையில் பணி செய்கிறார். 2008 ஆம் ஆண்டு சலவான், மழைப்பாறை, நுகத்தடி, மேடை, துயர் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.








Leave a Reply