அன்னா மரியா ஷ்வா ‘‘குறுங்கதைகளின் அரசி’’ என்று அழைக்கப்படுகிறார். இவர் அர்ஜென்டினாவின் பின் – போர்ஹேசிய புனைவெழுத்தாளர்களுள் மிக முக்கியமானவர். நாவல்கள், குறுநாவல்கள், கட்டுரைத் தொகுதிகள் பலவற்றை வெளியிட்டிருந்தாலும் குறுங்கதை வடிவத்தில் இவர் புரிந்த பரிசோதனைகள் இளம் தலைமுறை எழுத்தாளர்களுக்கு மிகவும் நெருக்கமானவை.
இவரது குறுங்கதைகளில் நாம் அன்றாடத்திலிருந்து அசாதாரணத்தை நோக்கிய பயணங்களை உணரலாம். மானுடம் தாண்டிய பிரபஞ்ச வெளிப் பார்வைகளுடன் ஷ்வாவின் குறுங்கதைகள் ‘’மற்றமைகளின் பல்வேறு பரிமாணங்களை நோக்கி நகருகின்றன. வாசகர்களுக்கு ‘’தான்’’ எனும் குறுகிய புள்ளிருந்து விடுபட்டு வேறு பல அக உணவுர்களைத் தருகின்றன.
தனது முதல் குறுங்கதைத் தொகுதியான la sulnera வை 1984ம் ஆண்டு வெளியிட்ட ஷ்வா 2011ம் ஆண்டு வரை இவ்வடிவத்தில் தொடர்ந்து இயங்கி வந்தார். குறுங்கதைத் தளத்திற்குப் புதிய சொல்முறைகளையும் கருப்பொருள்களையும் அறிமுகம் செய்து கொண்டே போகிறார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அன்னா மரியா ஷ்வாவைப் பற்றிய அறிமுகத்தை எனது குறுங்கதை எழுத்தாளருக்கான தேடலில் கிடைக்கப் பெற்றேன். கவிஞர் பச்சோந்தியின் தடாரிக்கான எனது குறுங்கதைப் பயணத்தில் இம்மொழிபெயர்ப்பு இப்போது சாத்தியமாகி உள்ளது.
அவருக்கு என் அன்பையும் நன்றியையும் உரித்தாக்குகிறேன்.
1.
அவள் உன் கண்களை மூடுகிறாள்
அவள் உன் கண்களை மூடுகிறாள். பிறகு “தான் யார்” என்று கேட்கிறாள். உன் இளைய மகளின் கைகளையும் குரலையும் கொண்டிருக்கிறாள். இப்பொழுது உன் கண்களைக் கேட்கிறாள்.
2.
மிகைப் புகழ்ச்சி
“இது ஒரு மனிதன் செய்திருக்கக் கூடிய காரியம் அல்ல” என்று அந்த நீண்ட மேற்சட்டை அணிந்த கனவான் பிணத்தில் ஆங்காங்கே காணப்பட்ட கீறல்களையும் ஆழமான இரத்தக் காயங்களையும் நோட்டம் விட்டுக் கொண்டே விவரித்தார்.
“அட , ஏன் இப்படிப் புகழ்ந்து மிகைப்படுத்துகிறீர்கள்?” என்றவாறு போலிப் பணிவுடன் என் கைகளின் கூர் நகங்களைக் காற்சட்டைப் பைக்குள் மறைத்துக் கொண்டு அவரிடம் பேசினேன்.
3.
ஒரு வேளை…
அவை வீட்டின் மூலைகளில் இருக்கும் சிறு துளைகளிலிருந்து முளைத்து எழுகின்றன. காண்பதற்கு மிகவும் சோர்வுற்று அருவருக்கத்தக்க வகையில் எண்ணற்றவைகளாகப் பெருகிக்கொண்டே போகின்றன. நீண்ட கொம்புகளைக் கொண்டிருக்கின்றன. அவை என் உணவைக் கபளீகரம் செய்து உண்டு விடுகின்றன. அவை ஒருவேளை கரப்பான் பூச்சிகளாக மட்டும் இருந்திருக்கலாம்.
4.
வறுத்த முட்டைகள்
வறுத்த முட்டைகளின் மேல் எனக்கு எத்தகைய வெறுப்பும் இல்லை. ஆனால் அவைதான் விசித்திரமாக, அகன்று விரிந்த கண்களுடன் பீதியுற்று, என்னை வெறித்துப் பார்க்கின்றன.
5.
பொம்மைகள்
நான் மிகக் கவனமாக எனது படுக்கை அறையின் கதவுகளை மெல்லத் திறந்து உரையாடிக் கொண்டிருக்கும் இரு பொம்மைகளைக் கையும் களவுமாகப் பிடிக்க நினைக்கிறேன். ஆனால் அவை நிர்வாணமாக நிச்சலனத்துடன் நின்று கொண்டிருகின்றன. அவற்றின் அசைவின்மை எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. மாறாக எனக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஏனென்றால் இன்றோடு அவை இறந்து இரண்டு நாட்களாகின்றன.
6.
கைரேகை ஜோசியன்
தன்னைக் கொலை செய்ய காத்திருப்பவனின் கைரேகைக் கோடுகளில் தன் விதியை ஜோசியன் வாசிக்கிறான். எனது கையிலோ அவன் ஆஸ்கார் வைல்டின் ஒட்டுமொத்தப் படைப்புகளையும் வாசித்து விடுகிறான். ஒருங்கிணைவின் மகத்தான தருணம் என்று அவன் சிலாகிக்கிறான். மேலும் இலக்கியத்தினூடே விதி என்னை வழிநடத்தும் என்று கணித்திட்டான்.
7.
முயலாக இருத்தல்
நாள் முழுவதும் நான் ஒரு முயலாக இருக்கிறேன். இரவில் மட்டுமே மனித உருவை மீண்டும் அடைகிறேன். ஏன் இந்த பைஜாமாக்களை உனக்கு நான் தைக்கிறேன் என்று புகார்த் தொனியில் என் பாட்டி கோடுகளாய் நீண்ட உபயோகமற்ற செவிமடல்களைத் தடவிய படியே கேட்கிறாள்.
8.
ஓநாய் மனிதன்
கொடூரமான முகத்துடன் இரத்தமும் எச்சிலும் குபுக்கென்று பொங்கி எழும் தன் தாடையை விரித்து அதனுள்ளிருக்கும் மஞ்சள் நிற நச்சுப் பற்களை ஓநாய் மனிதன் வெளிக்காட்டினான். ஒரு விசித்திரமான இரைச்சலொலி காற்றைத் துளைத்துச் சீறியது. ஓநாய் மனிதன் பீதியடைந்தான். பல் மருத்துவரும் கூடத்தான்.
9.
பேயுருக்கள்
பேய்கள் மிரண்டு போர்வைக்குள் நுழைந்து உன்னிடமிருந்து மறைந்து கொள்ளும் போதோ, எலும்புக்கூடுகள் தாவிக் குதித்துத் தம் கல்லறைக்குள் புகுந்து கொள்ளும் போதோ வீண் பெருமை கொள்ளாதே, தோழனே! பயமுறுத்தும் பேயுருக்களைப் பற்றித் தம்பட்டம் அடிக்காதே.
மிரட்சியடைந்து அவை உன் வழியிலிருந்து பதுங்குவது இன்னும் நீ உயிரோடுதான் இருக்கிறாய் என்று உன்னை நம்ப வைப்பதற்காகச் சூழ்ச்சிதான் என்று அறிந்து கொள்.
10.
நோராவும் பாட்டியும்
என் சகோதரி நோரா கருவுற்றிருக்கிறாள். மிகவும் நல்ல செய்தி. இதற்காக என் குடும்பம் பொறுமை இழந்து காத்துக் கொண்டிருந்தது. என் பாட்டியிடம் ‘‘மிகவும் சந்தோஷம் தானே’’ என்று வினவினேன். அவள் தூரத்துப் புகைமூட்டத்திலிருந்து மிக மெல்லிய புன்முறுவல் பூத்தாள்.
ஆகையால் இது உண்மைதான் என்று அவள் மகிழ்வுடன் சொன்னாள். அது ஒரு வெறும் கனவு அல்ல.
ஆனால் புகைமூட்டமோ எங்கும் வியாபித்திருந்தது. மிகவும் அடர்த்தியாகப் பரவியது மேலும். என் பாட்டியின் கண்களோ என்னைப் பயமுறுத்தின.
11.
கணவாய் மீன்கள்
கணவாய் மீன்களிடம் எனக்குப் பயமில்லை. ஒரு நட்பின் நிமித்தமாக நான் அவற்றின் உணர் இழைகளைச் செல்லமாக ஒன்றிணைத்தும் பிரித்தும் விளையாடுவேன். நானும் அவற்றுள் ஒன்று தானே!
பேனா மையின் மேகக் கூட்டங்களினூடே எவ்வாறு மறைந்து கொள்ள வேண்டும் என்பதும் எனக்குத் தெரியும்.
12.
முகமூடிகள்
மிகக் கடுமையான பழமரபுகளின் விதிகளின்படி நள்ளிரவு பன்னிரண்டு மணி முகமூடிகளைக் கழற்றுவதற்கான உகந்த காலம். ஆனால் இப்போது அதிகாலைப் பொழுது புலர்கிறது. நடன நிகழ்ச்சி முடிவடைந்து விட்டது. நான் இன்னும் இங்கேயே இருக்கிறேன். இந்தக் கண்ணாடிகளற்ற அறையினுள் நான் முகமூடிகளைத் தொடர்ந்து மீண்டும் மீண்டும் கழற்றிக்கொண்டே இருக்கிறேன்.
13.
தலை
தன் கையில் மனிதத் தலையை ஏந்தியவாறு ஒருவன் வருகிறான். அத்தலையின் கண்கள் அசைகின்றன; அதன் வாய் திறக்கிறது. சோர்வுடன் புலம்புகிறது. ஒரு பரிதாபகரமான நிலை நிலவுகிறது. குழந்தைகள் பயந்து அலறுகின்றனர். பெரியவர்களோ அது வெறும் செயற்கைத் தலை, ஒரு பொம்மைதான் என்று விளக்கமளிக்கத் தொடங்கினர். இந்தத் தலையின் அசைவுகள் நின்றால் நீங்கள் அதன் பேட்டரிகளைக் கழற்றிப் புதியவைகளைப் பொருத்தினால் அது மீண்டும் இயங்கத் துவங்கும்.
ஒருவேளை இந்த மனிதன் தன் இயக்கங்களை நிறுத்தினால், (அங்கே பார்!) அவனை அப்புறப்படுத்தி விட்டு வேறொருவனை அவனுக்குப் பதிலாகக் கிடத்த வேண்டும். அத்தருணத்தில் சில பேர் உள்ளே நுழைகின்றனர். அவர்கள் அத்தலையையும் பிணத்தையும் அப்புறப்படுத்தினர்.
14.
தடயங்கள்
அது புலப்படாதது, ஆனால் தடயங்களை விட்டுச் செல்கிறது. நீ அதன் தடயங்களினூடாகப் பின் தொடரலாம். நாற்சந்தியில் தடயங்கள் கிளை பிரிகின்றன. அவை புலப்படாதவை. ஆனால் தடயங்களை விட்டுச் செல்பவை. நீ அவற்றின் தடயங்களினூடே பின் தொடரலாம். ஆனால் ஒவ்வொரு நாற்சந்தியிலும் தடயங்கள் மீண்டும் மீண்டும் கிளை பிரிகின்றன.
16.
பெற்றோர் சந்திப்பு
பெற்றோர் சந்திப்பில் அவர்கள் அனைவரும் ஆசிரியரை எவ்வாறு கொல்வது என்பதைப் பற்றிப் பல்வேறு விதிமுறைகளை விவாதித்தனர். ரொமினாவின் அம்மா காஃபியைத் தன் விரலால் கலக்கினாள். அவளது விரல் கோப்பைக்குள் மெதுவாகக் கரைந்து போயிற்று.
என்னுடைய காலங்களில் நடந்தவற்றை நான் சோகத்துடன் நினைவுகூர்கிறேன். அவர்கள் கல்லால் அடித்துக் கொல்வதையே விரும்பினர். மேலும் மாணவர்கள்தான் கற்களை விட்டெறிந்தனர். எப்போதும் போலவே முற்றத்தில் அலறல்களைக் கேட்கலாம்.
17
நிமித்தங்கள்
ஒரு கரடியைக் கனவு கண்டால், நீ அவமானப்படுவாய்
முள்ளங்கிகளைக் கனவு கண்டால், நீ செல்வந்தனாவாய்
அதிசயக் கற்களைக் கனவு கண்டால் கருமுடியுடைய பெண்களிடம் ஏமாறுவாய்
மண்புழுக்களைக் கனவு கண்டால் எவர் விரிக்கும் வலையிலும் வீழ்ந்திடுவாய்
நீ என்னைக் கனவு கண்டால், மன்னிக்கவும், நான் ஒரு நிஜமான துர்கனவு.
18
குளிர்ந்த நீர்
முகத்தில் தெளிக்கும் குளிர்ந்த நீர் உறக்கத்தின் தடங்களை அழிக்கும், துர்க்கனவுகளின் மிச்சங்களைக் கரைக்கும். இப்போது சமமாகவும் உருவமற்றதாகவும் மாறிய முகத்தினை அழிக்கும்.
19
நதிகள்
ஒரு பாலத்தின் மீது நடந்து ஒரு நதியைக் கடந்தேன். மற்றொரு நதியை நீந்திக் கடந்தேன். வெகு தூரத்தில் இன்னொரு நதி, இது ஒரு விசித்திரமான தேசம் என்று என் துணைவனிடம் கூறினேன். இன்னும் அநேக நதிகள் ஓடுகின்றனவா? உறக்கத்திலிருந்து விழிக்காமல், நீ எத்தனை நதிகளை வேண்டுமானாலும் கடக்கலாம் என்று அவன் வாயின்றிப் பேசினான்.
20.
போர்வைக்குள்ளே
நம்மிருவரின் தலைகள் ஒளிந்திருக்கும் போர்வைக்குள்ளே எனக்குப் பீதியூட்டுகிற உணர்வு ஏற்படுகிறது. நிறைய கால்கள் வெளிவருகின்றன, நிச்சயமாக!
விரும்பத்தகாத வகையில் நான்கிற்கும்மேற்பட்ட கால்கள் நீண்டு நெளிந்து வெளி வருகின்றன.
கே.கணேஷ்ராம் ஆங்கிலப் பேராசிரியர். சுழலும் சக்கரங்கள், பத்து இரவுகளின் கனவுகள், மூன்று ரத்தத் துளிகள் ஆகிய சிறுகதை நூல்களையும் நடமாடும் நிழல், K3 ஆகிய குறுங்கதை நூல்களையும் மொழிபெயர்த்துள்ளார்.








Leave a Reply