அந்திக் கருக்கலிலும் அடர் யாமத்திலும்
சிந்தைக்களி தந்து சிரித்தழைப்பாய் நற்சிவையே
ஆண்மை எனக்களித்த பெண்மைப் பெருங்கொடையின்
மேன்மை உணர்ந்தேன் பொற்பாவையே நற்சிவையே
இன்னல் இடரெதுவும் கன்னல் நறவெனவே
மின்னற்பொழுதினிலே மாற்றுவையே நற்சிவையே
ஈகை என்பதெல்லாம் ஓகைப் பெருக்கெடுத்து
ஈயும் உன்னினிய காமமன்றோ நற்சிவையே
உவகை உனக்களித்து உன்னுறவில் நான் மகிழும்
தவப் பயனல்லோ இற்காமம் நற்சிவையே
ஊனுடலை நிலையென வியந்ததுண்டு விழைந்ததுண்டு
நானைக் கரைசேர்க்க நின்னருள் போதும் நற்சிவையே
எயிற்றின் அமுதிருக்க ஏந்துமுலை வனப்பிருக்க
கயிற்றில் எறும்பாக வாழ்வேனோ நற்சிவையே
ஏகன் என்பவனும் அநேகன் என்பவனும் போகன்
ஆக என்னனைய பேருவகை பெற்றவரோ நற்சிவையே
♦
ஐந்திரம் பயிலவில்லை அவ்வைக்குறள் இறங்கவில்லை
நைந்த என்நெஞ்சணைய நீபோதும் நற்சிவையே
ஒன்றில் ஒன்றை வைத்து அவ்வொன்றில்
நன்றை வைத்து நின்னடி ஏந்த வைத்தாய் நற்சிவையே
ஓர்மை அருள் ஆற்றல் பேரறிவும் வேண்டேன்
கூர்தல் நினைவு என்பது நின் முகமே நற்சிவையே
ஒளவிய நெஞ்சத்தான் ஒளடதத்தை நாடவில்லை
கௌவ உன்இதழைத் தேடி வந்தேன் நற்சிவையே
அங்கை தினவெடுக்க அகங்காரம் வளர்த்தெடுக்கக்
கொங்கையருட்சுனையில் குளித்தெழுந்தேன் நற்சிவையே
பஞ்சைப் பராரி என்னைப் பரதேகன் ஆக்குமன்றோ
நஞ்சின் அமுதாம் நின் நனிதேகம் நற்சிவையே
கறையிருந்த உள்ளமதில் சிறையிருந்த கோலமதை
நிறையுணர்த்தி மீட்பதுன் நனியுடலே நற்சிவையே
மனம் வாக்கு தனைக் கடந்த மாநிலையில் எனை இருத்தி
உனதாக்கிப் போற்றச் செய் பொற்பரமே நற்சிவையே
மௌனமணிப் பெட்டகத்து மந்திரத்தை யானறியேன்
யானறிந்து ஓத நீ உதவு என்னவளே நற்சிவையே
காசுபணம் கொண்டவனும் கக்கடைசி ஆனவனும்
தேசுபெற ஏகு நிலை மெய்கலப்பே நற்சிவையே
திருமேனி நிரை எதற்கு திவ்யப்பாடல் சுவை எதற்கு
உருவாகி நடமிடும் சுடர் நீயிருக்க நற்சிவையே
நாதாந்த போதாந்த யோகாந்த கலாந்த
வேதாந்த சித்தாந்தம் நாறும் நினதுடல் நற்சிவையே
சுத்த உடலாய்ச் சுவை உணரவில்லையெனில்
பித்தம் தெளியாதே பெண்ணமுதே நற்சிவையே
பிறன்இல் விழையாத பேராண்மை கொண்டதெல்லாம்
நறவான நின்காமக் கொடையாலே நற்சிவையே
♦
உற்றறிய என்னவுண்டு கற்றறிய என்னவுண்டு
பொற்புடைய பெண்ணழகே பெருஞானம் நற்சிவையே
வற்றா வல்லல்குல் தரும் அமுதத்தேறலன்றி
எற்றால் இனிமையுண்டு இவ்வுலகில் நற்சிவையே
கற்றதனால் பயன் என்கொல் பெற்ற பேறிழப்பின்
உற்றவளின் விடாய் மறப்பின் நற்சிவையே
வீடு விற்றுப் பேறும் அற்று வாழ்ந்து கெட்ட என்றனுக்கு
ஓடுபெற்ற சோறல்லோ உன்னுறவு நற்சிவையே
நீயென்னை நானாக உணர்த்தும் இடம் உன்னுடலம்
தீயாலுருக்கி நெய்யாக்கி எனைஅருந்துக நற்சிவையே
இக்கணத்தில் வாழ எதையெதையோ உளறிவைத்தார்
மக்குமடஞானியர்தாம் மாமகளே நற்சிவையே
மெய்நிலை அதையே மீளமீள எய்தினும் சலிக்குமோ
மெய்யிணைவே உய்நிலையாம் நற்சிவையே
உற்றறியின் ஒவ்வொன்றும் ஒருதுயரம்
பெற்ற போறலாம் நின்நகையே நற்சிவையே
கொல்லா விரதிகளும் சொல்லறு நோன்பிகளும்
கல்லா அருங்கலையே நின்னடி கற்பகமே நற்சிவையே
உள்ளெழுந்த சினம் எங்கே உட்பொதிந்த காழ்ப்பெங்கே
உன்னடி நினைந்திருத்தால் அருந்தவமே நற்சிவையே
ஊரிடத்தில் ஊமனாகி உன்னிடத்தில் மௌனியாகி
பாரிடத்தில் யான் இருக்கப் பழக்குவையே நற்சிவையே
அந்தக் கரணம் அறிந்து ஆன்றவிந்த பின்
எந்தத் துறவை நான் நாட நற்சிவையே
பற்றை அறிவதற்கே பாழும்ஆயுள் பற்றவில்லை
பற்றைவிடச் சொல்லல் பாவமடி நற்சிவையே
பரியங்க யோகமதில் அரியன அறியும் இணையர்க்குச்
செரிக்காத சுவையுமுண்டோ சொல்லாழி நற்சிவையே
♦
உண்டென்று கண்டவரும் இல்லையென்று விண்டவரும்
பண்டுதொட்டுக் காமக் கடப்பட்டவரே நற்சிவையே
நாலாதிசை அறிந்தும் நானாவிதந் தெரிந்தும்
நாயாய் உன்வாசல் வந்து நிற்பேன் நற்சிவையே
வெறுங்காமம் இதுவென விடலையிலே பிதற்றியவன்
பெருஞானம் என்றுணர்ந்து பணிகிறேன் நற்சிவையே
நான் நான் நான் என்ற பேரிருப்பை நான் உணர
காண் காண் காணென்று காட்டிவிட்ட நற்சிவையே
மாத்திரையில் பிடித்துவைக்க முடியாத பெருந்தீ
சாத்திரங்கள் விளக்காத காமகுணம் நற்சிவையே
நிலையாமையே நிலையாம் அஃதுணரத் தவமாம்
கலையாக உணர்த்துவது காமமன்றோ நற்சிவையே
உடல் தளர்வுற்றும் உறவுகளில் விலக்குற்றும்
கடல் ஆழக் காமமதை வெறுப்பதிலையே நற்சிவையே
அரும்புமலர் காய்கனி போல் அழகழகாய் வளருவதே
அருங்காமக் குணமென்று அறிந்தேன் நற்சிவையே
என்றென்றும் இக்காமம் எனைப் பிடித்து ஆட்டுவது
அன்றெந்தன் அம்மையப்பன் அருளியது நற்சிவையே
அறிவின்றித் திறனின்றி வாழ்ந்திருக்க வழியின்றியும்
செறிவாக இயக்குவது இக்காமமே நற்சிவையே
புருடன் பிரகிருதி என்றெலாம் புலம்பிப் பயனிலை
திருடன் கைச் சாவியாம் திருக்காமம் நற்சிவையே
சாத்விகம் ராசசம் தாமசம் அண்ட குணமனைத்தும்
காமகுணம் என்றறிந்தேனே நற்சிவையே
சினமழிக்க வழிகண்டேன் சித்திகளின் நுனிகண்டேன்
மனம் உழற்றும் காமமதைக் கடந்தேனிலை நற்சிவையே
மெய்யென்று மாமுனிகள் தீர்த்த ஓர்நிலையை
மெய்வழியே தேடுகிறேன் குறையென்ன நற்சிவையே
♦
சத்திய மார்க்கமென்று சத்திரத்தில் போய்க்கிடக்க
சித்தப்ரமை எனக்கில்லை சிற்பரமே நற்சிவையே
உள்ளிளமை உள்ளவர்க்கு நற்போதம் உற்றவர்க்கு
முள்முதுமை வருத்துவதில்லை நற்சிவையே
பல்விழுந்து சொல்லறுந்து நல்விருந்து கெட்டாலும்
புல்மயக்கம் போக்காது பசுக்கணங்கள் நற்சிவையே
தாடை கட்டிப் பாடையேறிப் பூத்தூவிப் போகையிலும்
பீடழிய மாரடித்தழுவது காமத்துணையே நற்சிவையே
ஞானத்தை மெய்யென்று உள்ளிஉள்ளி உயிர்ஒன்றிய
காமத்தைக் கொன்றுவந்த பாவியடி நான் நற்சிவையே
வளமைச்சடங்கு பேணும் பண்பாடு காலச்சரடில்
இளமையை இணை சேர்க்கவே நற்சிவையே
தூமைக்குடிக்கி என்று தெருவிலென்னை ஏசிடுவார்
யாமத்தில் பிறழ்வார் பிறமனை ஏகுவார் நற்சிவையே
இறந்தாலும் உயிர்தான் பிரியும் காமம் உடலோடு எஞ்சும்
இருந்தாலும் காமம் தீப்பொறியாய்ப் பற்றும் நற்சிவையே
காமமே பெருங்கருணை கலவியே பெருஞ்செயல்
நாமமே கெடுகவென்று அருள்புரிவாய் நற்சிவையே
புணர்ந்தபின் பெறும் மௌனம் அரும்மௌனம்
உணர்ந்தபின் உரை வேண்டா சிற்றகலே நற்சிவையே
பேசாத மோனநிலை பெறவன்றோ பெண்ணழகே
பேசி பேசி உன்னழகைத் தொழுகின்றேன் நற்சிவையே
கொலைகளவு கட்கோபம் அழுக்காறு காழ்ப்பெலாம்
முலைக்கருணை கிட்டாத மூடர்செயல் நற்சிவையே
அத்துவித நிலையென்றும் ஐக்கிய மாக்கணமென்றும்
சித்தந்தெளி கொண்டதடி தேனமுதே நற்சிவையே
உடலைப் பொய்யென்று உபதேசம் செய்யும் மார்க்கத்தான்
உடனுறை மனையாளை இற்செறிப்பதேனோ நற்சிவையே
♦
தன்மனையாள் மனவுடலறிந்து ஓம்புவோர்க்குப்
பின்னும் பிறர்நாடும் பிழை இலையே நற்சிவையே
காமத்தைக் கண்டஞ்சி யோகமும் தியானமும் உழப்பி
ஞானம் தேடின் மெய்மை அறிவரோ நற்சிவையே
உற்றதுணை உடனிருக்கப் பேரின்பம் காணாதார்
கற்றகல்வியாற் பயனிலை காண் நற்சிவையே
ஓரொருகால் சலிப்பு உற்றவர்மேல் வெறுப்பு
யாரே காரணமே அறியத்தருக நற்சிவையே
முன்முடிவும் ஆணவமும் காமத்திற் கெடுதியடி
தானழிந்த பேரகத்திற்கு அருள்புரிக நற்சிவையே
ஒன்றைவிட்டு ஒன்றுஎன்று ஓடுகின்ற நாகங்கள்
ஒன்றையுமே அறியாத மூடமடி நற்சிவையே
தன்காமம் தானறிந்த தானழிந்த ஆணொருவன்
பெண்காமம் உறுவான் பிறர்விழையான் நற்சிவையே
காமம் ஓர் அருளென்று கண்டுணர்ந்தவர்க்கு
ஓருடலே பிறவிவரை உவகை தரும் நற்சிவையே
குறை தெளிய மாட்டாமல் பலவுடலை நாடப்புகின்
கறை நிறையும் பகை நிறையும் நற்சிவையே
உறங்காத பேருணர்வின் உண்மை உணர்ந்தார்க்குப்
பிறர்வாடப் பலரில் விழைவில்லை நற்சிவையே
அருமையினும் அருமை காதலியின் திருவடி நாடல்
சிறுமையினும் சிறுமை பெருந்திணையே நற்சிவையே
உலகியலின் நுட்பங்களை உன்போலே அறிந்தவர் யார்
களவியலின் அருட்பொருளே கண்ணழகே நற்சிவையே
ஐயம் கொண்டவர்க்கும் ஆணவத்தில் நின்றவர்க்கும்
ஐயை சுகமில்லை அந்தர வாழ்வே நற்சிவையே
நையப் புடைபட்டவர்க்கும் ஞாலம் ஆள்பவர்க்கும்
வையத்துறு இனிமை காமமல்லோ நற்சிவையே
♦
சான்றோனாய் மனையாட்டி மதிக்கவேண்டின்
ஆன்றவியாக் காமநெறி ஒழுகத்தகும் நற்சிவையே
எத்தனையோ ஏதேதோ பெற்று ஏரார்ந்து இருந்தாலும்
அத்தனுக்குப் பெருமையெலாம் ஐயைநகை நற்சிவையே
எய்யாப் பருவம் எய்திய பருவம் எம்தமிழர் இயம்பினார்
எது எய்யா எதை எய்திய இயம்பிடுவாய் நற்சிவையே
மனச்சான்று இல்லாமல் மலக்கூடு என்றவர்க்கு
மனப்பிறழ்வு மிகவுண்டு மருந்திடுக நற்சிவையே
சொல்பதிந்த சுவடெல்லாம் சில நொடியில் மறந்துவிட
பல்பதிந்த நினைவே படிந்ததென்ன நற்சிவையே
நரைகூடிக் கிழப்பருவம் எய்திவிட்ட போதுமென்ன
நுரைஈரக் காமம் சாகுவரை வரும் நற்சிவையே
ஞானத்தை எய்தியோர் கண்டுணர்ந்த சூனியத்தைக்
காமத்தில் கண்டடைந்தேன் குறையென்ன நற்சிவையே
பிறையென்ன பிறையென்று பெண்ணணங்கே
குறையிலா நுதலிலே முத்தாடுவேன் நற்சிவையே
வண்டென்ன வண்டென்று வல்லணங்கே உன்வதனக்
கண்ணிரண்டின் தாகமற உடல்வளர்ப்பேன் நற்சிவையே
மலரென்ன மலரென்று மல்லிகையே உன்னகத்தின்
உலகறியா நாசிமணம் முகர்ந்திருப்பேன் நற்சிவையே
அழகென்ன அழகென்று அமுதினியே மேலுதட்டின்
பழவிருளாம் மென்னரும்பை வியப்பேன் நற்சிவையே
வடிவென்ன வடிவென்று அருமலரே ஈரிதழின்
வடியும் நறவச் சுவையறிவேன் நற்சிவையே
இருளென்ன இருளென்று பூநாரியே நின்கூந்தல்
அருள்மணத்தை முகர்ந்திருப்பேன் நற்சிவையே
மடலென்ன மடலென்று நல்மடந்தையே நின்செவி
மடல் சுளை சுவைத்திருப்பேன் நற்சிவையே
♦
சங்கென்ன சங்கென்று ஐயை வாழைக் கழுத்தினிலே
ஏங்கியென் முகம் புதைய அருள்புரிக நற்சிவையே
மிருதென்ன மிருதென்று கைபழகாக் கொங்கையளே
பருத்தெழுந்த நகிலிணையைப் பணிவேன் நற்சிவையே
நிறமென்ன நிறமென்று நிறைமதியே நின்இடையின்
புறவடிவிழைந்து தழுவிப் புல்கிடுவேன் நற்சிவையே
ஒழுங்கென்ன ஒழுங்கென்று உந்தி மயிரொழுங்கில்
ஒழுகும் எச்சில் முத்தாடுவேன் கற்பாவையே நற்சிவையே
சுடரென்ன சுடரென்று நின்றெரியும் நடுஉதட்டில்
நடம்புரிவேன் நாவால் நீராட்டுவேன் நற்சிவையே
நிறையென்ன நிறையென்று நகிலவளே பின்னெழிலின்
குறையிலாப் பணைப்பில் பற்குறியிடுவேன் நற்சிவையே
கலையென்ன கலையென்று கண்ணழகே நின்நோக்கில்
நிலைநின்ற அருளில் மூழ்கிடுவேன் நற்சிவையே
பொழுதென்ன பொழுதென்று கலைமகளே எக்கணமும்
வழுவிலாக் கணவனாக வாழ்ந்திருப்பேன் நற்சிவையே
Art : Shilpika








Leave a Reply