தெலு(ங்)கு மூலம் – பி.சுஷ்மா
காலத்தின் விளிம்பில்
எழுதச் சொல்லி அவர்கள் என்னை மீண்டும் மீண்டும்
கட்டாயப்படுத்துகிறார்கள்.
இந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கான வெறுமையைக்
காலம் தரவில்லை என்று
அவர்களிடமிருந்து தப்பிப்பதற்குச் சுற்றிக்கொண்டே இருக்கிறேன்.
நாளிறுதியில், ஒருவன் மட்டும் என்னைப்
பிடித்து நிறுத்திவிடுகிறான்.
விழுந்துபோன செஞ்சிவப்பான கடந்தகாலம்
எறிந்துபோன பச்சைப் பசுங்காடு
இறக்கைகள் முறிந்துபோன வெண்ணிறப் பறவை
இருந்தாற்போல பூமண்டலம் முழுவதும் எனதாகிப்போகும்
மீண்டும் மீண்டும் உடைந்துபோகிற பொருளொன்று
என்னிடம் உள்ளதென்று உணர்ந்ததும் கவனம் கொள்வேன்
அப்போதும்
என் தலையீடு இன்றியே அன்றிரவு யுத்தம் ஆரம்பமாகும்
நிராயுதபாணியாகிய என் மீது தாக்குதல் நடக்கும்
காயமின்றியே இதயம் நொறுங்கும்
அன்றிரவு முழுவதும் துக்கக்கடலில் ஆழ்ந்துபோவேன்
ஆதாரமில்லாதவை இல்லையென நிரூபித்த பிறகு
இரக்கமில்லாக் காலம் உதயமாகி
என்னைக் குற்றவாளி ஆக்குகிறது
ஆயிரக்கணக்கான கேள்விகளுக்குப் பதில் தேடியே
திண்டாடித் தவிக்கிறேன்
விட்டுக்கொடுத்தல் எல்லாம் மனமோதலாக மாறுகின்றன
வேதனைகள் எல்லாம் மௌனமாகின்றன
சகிக்கமுடியாத நிசப்தத்திற்குள் நான் சென்றதும்
எழுதுவதற்கு எந்த வாக்கியமும் மிச்சம் இல்லையென்று
அவர்களுக்கு எவ்வாறு சொல்வது.
♠
சகித்துப்போகும் அடிமை கிடையாது
தசாப்தக் காலத்தின் முன்பே
பாடிய கற்பனைக் காதலிகளின் ஆத்மாக்களைச்
சேகரித்துக்கொண்டு,
சின்ன சின்னதாய்க் கட்டமைந்த வாஞ்சைகளின்
நேசத்திலிருந்து பொங்கிவரும்
ரம்மியத்தை வேரோடு சாய்த்துவிட்டு
மனிதசார பெமினிஷத்தை நிரப்பி –
அகம சத்தியகர்ப்பத்தில் மீண்டும் மீண்டும்
உடனுக்குடன் பிறந்து ஆயிரமாயிர சக்தி வடிவமாகி
புதிய அத்தியாயங்களைப் படைத்தளிப்பேன்
நானென்றால் –
நீங்கள் நினைக்கிற சிருங்காரத் தசைப்
பிண்டம் கிடையாது
தீப்பறக்க எரிகிற செஞ்சிவப்பு அக்கினிகோலச் சாயல்!
பிரபந்தக் கவிகளின் மயானத்தின் அருகில்
என் அஜெண்டாவைப் பரப்புரைச் செய்து
அவளுள் அவனது நீட்சியை எடுத்தெறிந்துவிட்டு
எதிர்காலத்தில் வரலாறே இல்லாது செய்வேன்
யாருக்காகவோ,
யாராலோ அடங்கி,
சகித்துக்கொள்ளும் அடிமை அல்ல நான்.
மீண்டும் –
இராமாயணம், மாகாபாரத்தைத் தொடங்கவேண்டி வந்தால்
இப்போது நான் –
புராதனச் சீதையும் கிடையாது,
பிரபந்தக் கன்னியும் கிடையாது!
எதிரொலிக்கும் நவீனப் பாஞ்சாலி!!
♠
சமுத்திரத்தை எப்போதாவது காதலித்திருக்கிறாயா
சமுத்திரத்தை எப்போதாவது காதலித்திருக்கிறாயா
உப்பா இருக்குதுனு பிடிக்காது இல்லை!?
விடு
அலைகளை எப்போதாவது அணைத்திருக்கிறாயா?
ஓஹோ
உருகிப்போய்விடுவாயென்று தவிர்த்திருப்பாய்!
அப்புறம்
அவர்கள் எல்லோரும் கரையில் எதற்குச் சுற்றித்திரிகிறார்கள்?
உதயமாகிற இரவிற்கு அவர்கள் ஏதோ சொல்ல நினைக்கிறார்கள்.
கனவுகளைக் கண்ணீரிலிருந்து பிரிக்கிற சக்தி
சமுத்திரத்திற்குண்டு.
அதனாலயே நீர் உப்பாக இருக்கிறதோ என்னமோ!
ஆண்டாண்டு கால நாகரிகத்தைக்
காற்று உனக்கு அறிமுகம் செய்யும்
கரையிலுள்ள படகுகள்
நிறைவேறாத காதல் கதைகளைச் சொல்லும்
நிசப்த நினைவுகளோடு
அலைகளின் அழைப்பை ஏற்று,
இந்த முறை செல்லும்போது
உன் இருப்பின் நினைவாக
ஒரு கைப்பிடி மணலை
எனக்காகக் கொண்டு வருவாய் தானே!?
♠
ஒளிர்கிற யாகக்குச்சிகள் ஆவோமென்று
இருட்டென்றால்
திகிலெதற்கு?
கண்ணிமைகளில் மறைந்திருக்கும்
கடந்தகாலம்
காதலனின் தோல்வியுற்ற மனம்
வாழ்வின் இறுதிக்கட்ட முதுமை
முயற்சியில் தோற்றுபோன தவம்
சிலமுறை வேதனையாக
எத்தனையோ முறை பாரமாக
கடத்திய வாழ்க்கை முழுவதும் இருள் தானே இல்லையா!
அங்கு பாரு
யாருடைய இதயமோ பற்றி எரிகிறது
போய்க் கொஞ்சம் தைரியம் கேள்
என்றோ ஒருநாள்
மண்ணோடு மண்ணாகிப்போகும் முன்பே
இருட்டிடம் உரக்கச் சொல்வோம்
நிரந்தரமாக அதனை உறங்கச் செய்வதற்கு
நிலையாக ஒளிர்கிற யாகக்குச்சிகள் ஆவோமென்று.
♠
படைப்பு
நேற்றிரவு
தூக்கக் கலக்கத்தில்
கனவு உலகத்தில்
படைப்பாணையின் கவித்துவ நினைவில்
எனை ஆட்படுத்தி நோக்கிய
வடிவத்தில் ஸ்வரத்தில்
உயிர்நாடி இயற்கையின் மாதுர்யக் கற்பனையில்
நிலவில் பொதிந்துவைத்த பறவையின் முட்டைகள்
என் ஆழ்மனம்
சரிபாக நிலையில்லா அகச்சார வாஸ்தவத்தின்
பிரதிப் பிம்பம்
எனது பறவை படைத்தெழுந்த கவிதை.
♠
நயவஞ்சனை
கடவுளே காப்பாற்று என் தேசத்தை
துர்பாக்கிய ஆளுநர்களிடமிருந்து பாவிகளிடமிருந்து
கபடக் கலைகளில் உய்ந்தேறிய சுயநலவாதிகளிடமிருந்து
வஞ்சகர்களிடமிருந்து
மனிதக் கொலைவெறியர்களிடமிருந்து
பொங்கிவரும் புளித்த கொழுத்த அதிகாரத்
திருடர்களிடமிருந்து
அரியணையில் சாய்ந்திருக்கும் கழுகுகளிடமிருந்து
நம்பியவர்களை நட்டாத்தில் கவிழ்க்கிற
நயவஞ்சகர்களிடமிருந்து
இழிந்த, இழிந்த மனநிலை கொண்டவர்களிடமிருந்து
கடவுள் காலையே வாரும் ஜகசால கில்லாடிகளிடமிருந்து
புதுப்புது வஞ்சனைகளின் பக்கம் சேருகிற வெறிபிடித்த
மனித மிருகங்களிடமிருந்து
பொய்ப் பணிவு நாடக விஷச் சிரிப்புகள் சிந்துகிற
நடமிடும் நரிகளிடமிருந்து.
♠
நிதர்சன உண்மை
தினம் பொழிகின்ற
கார்காலத்து மழைபோல
நான் பயணிக்கின்ற வாழ்க்கை இரயில்
நல்ல நீரைத் தவிர
உப்பின் சுவடே இல்லாத நன்னீரைப் போல
என் தேகத்தில் பொங்கி எழாத இரத்தம்
என் உள் இரத்தம் பொங்கி எழுந்து
கடலாக மாற உதவும்
சீற்றத்தின் முதல்வனைக்
கட்டுக்குள் வைத்தவன் நான்
கறியில் போதுமான அளவுக்கு மட்டுமே
போடுகிற உப்புபோல்
தகுந்த அளவைத் தாண்டி
தேகக் குடோனில்
கள்ளச் சக்கரை மூட்டைகளைப் பதுக்கி
நிலுவையில் வைக்காதவன்
எனக்கே தெரியாத
நான் இறங்க வேண்டிய
இறுதிநிலையம் எப்போது வருமோ
அறியாமலே
கடந்த எழுபத்தைந்து ஆண்டுகளாக இடையறாத
இரயில் பயணம் செய்து வருபவன் நான்
எனது தேக இரயிலின் கடைசிப் பயணம்
நான் இறங்க வேண்டிய நிலையத்திலேயே
என்பது மட்டும்
கடல்நீரில் உப்பு இருப்பது போன்ற
நிதர்சனமான உண்மை.
♠
எதிர்பார்ப்புகள்
கனவுகளைத் தரிசிக்கும் என் மதியில்
உன் வடிவலை மிதக்கிறது
காதல் தளிர்விடும் இதயம் புத்தம்புதிய
இராகங்களை எடுக்கிறது.
பல்லவி கிடைத்த பாட்டாக உன்
ஞாபகங்கள்
என் மனத்தோட்டத்தை வசந்தமாகத் தொட்டபோது
கண்களில் தூக்கம் அணிவகுக்க மறந்துபோனது.
உன் கண் இமைகளின் கையொப்பத்தோடு
காலம் நொடியில் உருகிப்போக
உன் கற்பனை மூச்சில் நசிந்துபோகிறது.
உன் குரல்
என் நெஞ்சில் இனிய அணைப்பாகியபோது
மனவாசற் தோரணங்களாய் மீந்துபோயின
என் எதிர்பார்ப்புகள்.
♠
நிலத்தில் நடை
நிலம் முழுவதும் பரந்திருக்கும் ஆகாயத்தில்
இல்லாத கீதத்தைக் கற்பனை செய்துகொண்டு..!
எதற்காக எதை இழக்கிறோமோ இழக்கும் வரை
புரிதல் வராது..!
அத்தனைமுறை திருத்தப்படும் கோலம்
செல்லுபடியாகாது
பயணத்திற்கு உயிர் வேகம். காரியம் முடிந்ததும்
வேகம் சிக்கலைக் கட்டிக்கொள்ளும்
ஒருபக்கம் காயங்கள் விரிந்துகொண்டே இருக்க
மறுபக்கம் முடக்கம்
நாணயத்தின் இருபக்கச் சூன்யம் வண்ணமயமாக
அர்த்தமாகிறது
திக்மண்டலம் ஒரு அற்புதக் கதிர்களின் மாயை
கால்களைப் பறித்துத் தயாரித்த ரெக்கைக்
கைகளோடு போராடுகின்றன
எதற்காக எதை இழக்கிறோமோ இழக்கும் வரை
புரிதல் வராது..!
தீட்டிய காயங்களை மறைத்து வண்ணமயச் சிரிப்பில்
மலரும் சுவர்களை விட
அழுக்குப் படிந்த சுவர்களுக்கே ஈர்ப்ப்புண்டு.
♠
இதய தீப அறை
இருளாழத்தின் கடும் இருளுக்குள் தலைகீழாக
வழுவிப்போகிற கனா
மென் மிருதங்க நாதங்களோடு எழுப்பிவிடும்
குயிலோசைக்கு
மனம் வாசலைத் திறப்பது கனவிலேயே
மட்டுமல்ல நினைவிலும்…
எந்தக் கடும் இருளும் உன்னைத்
தாக்கும் முன்பே
ஞானத் தீபங்களை ஏற்றிவை
அன்புநிறை ஒளிக் கதிர்கள் உனைச் சுற்றி
மூடிக்கொள்ளும்
ஓ தீபவரிசை திருவிழாபோல் வந்து உன்னை
ஒளிப் பிரவாளத்தில் மூழ்கடித்துத் தழுவிக்கொள்ளும்
இதயம் ஓ அற்புதத் தீப அறை!
Art : Aivory Studios
மு.இராமர் மாசானம் என்ற இயற்பெயருடைய இவரது சொந்த ஊர் திருநெல்வேலி. தற்போது ஆந்திர மாநிலம் குப்பத்தில் இருக்கிற ‘திராவிடன் பல்கலைக் கழகம்’ இல் முனைவர்பட்ட ஆய்வாளராக உள்ளார். தமிழ் தெலு(ங்)கு மொழிக் கீர்த்தனைகளில் ஒப்பிலக்கிய ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மைசூரில் இருக்கிற இந்திய மொழிகள் நடுவண் நிறுவனத்தில் (CIIL) தெலு(ங்)கு மொழியில் பத்து மாதகால பட்டய வகுப்பு முடித்திருக்கிறார். அதன் வெளிப்பாடாகத் தெலு(ங்)கில் டாக்டர். எம். ஹரிகிஷன் அவர்கள் எழுதிய தெலு(ங்)கு நாட்டுப்புறக் கதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து வருகிறார். இவர் தன்னைக் கவிதைகள், ஆய்வு, மொழிபெயர்ப்புகள் என்று படைப்புலகிலும் ஆய்வுலகிலும் ஈடுபடுத்தி வருகிறார்.







Leave a Reply