சுயம்
நாமே தொலைத்துக்
கடந்து, மறந்து
வெகுதூரம்
விட்டகன்றுவிட்ட
சுய அடையாளத்தை,
நகர்வலம் முடிந்து
சொந்த ஊர் செல்லும்
பேருந்திற்காகக் காத்திருக்கும்
நிமிடங்களிலான உரையாடலில்
யாரோ ஒருவர்
நினைவூட்டும் பொழுதில்
தற்கணத்தின் கீழ்மைகள் யாவும்
சிரசிலிருந்து கழன்று விழுந்து
தூய்மையின் எஞ்சிய உடலத்திலிருந்து
கலங்கி வழியும் உணர்தலில்
வாழ்வின் பொய்க்காத சூத்திரம்
வென்று விடுகிறது.
மனநிலை
முதன்முதலாக
சொந்த ஊர்
அசூயையாகத்
தோன்றுபவனின்
தொப்புள்கொடி
சன்னமாகப்
பழுதடையத் தொடங்குகிறது.
கடமை
மட்கல் வாடை மிகுந்த
பழையதின் வன்மம்
வரிசைக்கிரமமாக
மனக்கண்ணில் வந்து
நிற்கிறபோதும்
தலைக்குச் சிறுத்த
வளையத்திற்குள்
முகத்தை நுழைத்து விட்டு
பாதையைத் தேடும்
ஒரு நான்குகால்
பிராணியைப் போல
நீங்கள் என்னை
மன்னித்து
அணைத்துக் கொள்ள வேண்டும்.
உண்மை
‘பாசாங்கிற்கு’
அழைத்தபோதுதான்
சடாரெனக்
கைகளை உதறியது
என் கண்ணீர்.
நேசம்
என்னை
முழு முற்றாக
வெறுப்பதற்கான
சாத்தியக்கூறுகள்
மிகுந்திருக்கிறபோதும்
ஒரு அசுத்தத்தை
அப்புறப்படுத்துகிற
குறைந்தபட்ச தர்மத்தின்
ரீதியிலாவது
நீங்கள் என்னை
நேசிக்க வேண்டும்.
ஆறுதல்
“தைரியமாக இரு“
சொல்ல யாரும்
இல்லாவிடினும்
நமது
சுயநலத்திற்காகவேனும்
இருக்கத்தான்
வேண்டியிருக்கிறது
’தைரியமாக?’
பலி
ஆறுதலை
அடுத்தவரிடத்தில்
தேடத் தோன்றாத அல்லது
கிடைக்காத
விரக்தியின் மனம்
ஒரு பெரும் எரிதலுக்குத்
தயாராகும்
ஈர அடுப்பைப் போல
புகையத் தொடங்குகிறது.
பாலாஜி மில் ஸ்டாப்
கழியில் முடியப்பட்டு
நீளும் கயிற்றில்
நான் நடை பயில்வதாகத்
தோன்றுகிறது
தாளம் தட்டுகிற தகப்பன்
கழைக்கூத்தாடிகளைப் போல
கீழே இல்லை,
என் தலைக்கு மேலமர்ந்து
தடுமாற்றம் ரசிப்பவன்
என்னைக் கைவிட மாட்டானென்று
நம்புகிறேன்.
நம்பிக்கை
கையாலாகாத வன்மம்தான்
உயிரைத் தக்க வைத்திருக்கிறது
சுயத்தின் பிடியில்
நடை இல்லையெனினும்
வரையறுக்கப்படாத
எதிர்காலத்தின் பாதையை நம்பிக்
கால்கள் நீள்கின்றன
துடைப்பாரற்றுத் தரையில் வீழ்ந்து
உலர்ந்து போன கண்ணீர்த் துளிகளின் காரணம் கேட்டு ஆறுதல் பகிர
வறண்ட நதியின் செந்நீர் வெள்ளம் போல
என்றேனும் ஒரு நாள்
செகசோதியாக நான் வருவேன்.
நீ
கொஞ்சம் வறுத்த ஈசலோடும்
நான்கு முறிந்த காளான்களோடும்
ஓதமேறிய என் குடிசைக்குத் திரும்பும்
மழைக்காலம் போல ‘நீ ’
என்னிடம் மீண்டும் வருவாயென
நான் ஒரு எளிய சம்சாரியைப் போல்
நம்புகிறேன்!
Art : MONTAUK
போன்ற பல்வேறு அச்சு மற்றும் இணைய இதழ்களில் கவிதைகள் மற்றும் கட்டுரை எழுதியிருக்கிறார்.
மனித உறவுகளுக்கிடையே ஊடாடும் கீழ்மைகள், தனிமை, அன்பிற்கான ஏக்கம் மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகளைப் பாடுபொருளாகக் கொண்டுள்ள இவரது கவிதைகள் விரைவில் தொகுப்பு வடிவம் காண்பதற்கான கனவைச் சுமந்து நிற்கின்றன.








Leave a Reply