“குப்பை அள்ளும் தொழிலை நிரந்தரப்படுத்தி அதையே காலம் முழுவதும் செய்யச் சொல்வது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல.”
– தொல்.திருமாவளவன்
நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. ஆனால், இப்போது இந்தக் கருத்தைக் கூறுவது அதிர்ச்சியளிக்கிறது, வியப்பாகவும் இருக்கிறது. உள்நோக்கம் கொண்டது. தூய்மைப் பணி செய்பவர்களைக் குறைத்து மதிப்பிடும் போக்கு இயல்பாக இந்த வார்த்தைகளில் தெரிகிறது. அவர்களை ஒன்றும் அறியாதவர்களாக, அறிவற்றவர்களாக, அரசியல் தெரியாதவர்களாகச் சித்தரிக்கும் போக்கு முற்போக்கு சமூகவலைத்தளம் என்று சொல்லித் திரிகிற திமுக வெளிப்படை ஆதரவு பதிவர்கள்/யூடியுப் சேனல்கள், திமுக நேரடி மற்றும் மறைமுக ஆதரவு பதிவர்கள்/யூடியுப் சேனல்களில் நிகழ்கிறது.
அரசியல் தெளிவு, சாதியப் பிரச்சனை, வர்க்கப் பார்வை, மத்திய/மாநிலத் தொழிலாளர் நலச் சட்டங்கள், உழைப்பாளர் சங்கம் என எதையும் அறியாமல்தான் தொடர்ந்து 14 நாட்கள் உணவின்றி, வெயில், மழை, கொசுக்கடி இவை அனைத்தையும் மீறிக் கொடூரமான அரசு அதிகாரத்தை எதிர்த்துத் தொடர்ந்து போராடினார்களா?
கட்சி சாராத/சார்ந்த, இயக்கம் சாராத/சார்ந்த, தனிநபர்கள், பிரபலங்கள் என அனைத்துத் தரப்பு ஆதரவையும் ஏற்றுக்கொண்டு போராட்டத்தை வலுவாக ஆக்கிக் கொண்டார்கள். போராட்டம் நடந்த அத்துணை நாட்களிலும் பொதுமக்களுக்கோ, சட்ட ஒழுங்கிற்கோ, போக்குவரத்துக்கு இடையூறாகவோ எந்தப் பாதகமுமின்றிப் போராடியவர்கள். வெகுசன ஊடகங்கள், திமுக’வின் வெளிப்படை ஆதரவு யூடியுப் சேனல்கள், பெரியாரிஸ்ட்கள் என்ற பெயரில் திமுக’விற்கு வேலை செய்யும் யூடியுப் சேனல்கள் இம்மக்களைப் புறந்தள்ளியும், கண்டுக்காமல் விட்டதையும் கடந்து களத்தில் நின்றவர்கள். நல்வாய்ப்பாக, நீலம் சோசியல் சேனல் அம்மக்களுக்காக 24/7 நேரமும் களத்தில் நின்று அவர்களுடன் போராடியதோடு அரசு மற்றும் காவல்துறையின் கோரமுகத்தை வெளிக்கொண்டு வந்தது.
ஆகவே, இவ்வளவு தீர்க்கமான உறுதித்தன்மை வாய்ந்த தூய்மைப் பணியாளர்களுக்குப் பணி நிரந்தரம் என்றால் என்ன என்பதும், குறைந்தபட்சம் அரசு வேலை உத்திரவாதம் என்றால் என்ன என்பதும், இழி தொழிலிலிருந்து எப்படித் தங்களை விடுவித்துக் கொள்ள வேண்டும் என்பதும் அவர்களுக்கு நன்றாகவே தெரியும். தத்துவார்த்த வகுப்பு எடுத்து அவர்களின் போராட்ட நோக்கத்தைத் திசைதிருப்ப வேண்டாம்.
போராட்டத்தின் ஆரம்பம் :
போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் பலர் நீலம் சோசியல் சேனலில் கொடுத்த நேர்காணல்களின் அடிப்படையில் பார்த்தோமானால், கடந்த ஜூலை மாதம் NULM கீழே வரும் தூய்மைப் பணியாளர்களை வேலையில் இருந்து நீக்கி விட்டு, ‘இனிமேல் நீங்கள் ராம்கி எனும் நிறுவனத்தில்தான் வேலை செய்யவேண்டும். நாங்கள் திடக்கழிவு மேலாண்மை கான்ட்ராக்டை Raamky இடம் கொடுத்து விட்டோம். நீங்கள் ஆகஸ்ட் 1-இல் இருந்து ராம்கி பணியாளர்கள்” என சென்னை மாநகராட்சி கூறியிருக்கிறது.
ராம்கி நிறுவனம் தங்களிடம் மூன்றாயிரத்துக்கும் மேல் ஊழியர்கள் இருப்பதாகக் கணக்குக் காட்டிதான், சென்னை மாநகராட்சியிடமிருந்து ஒப்பந்தத்தை வாங்கியிருக்கிறது. அவர்கள் அப்படிக் கணக்கில் காட்டியது NULM திட்டத்தில் சென்னை மாநகராட்சியில் வேலை செய்தவர்களைத்தான்.
ஆகவே, சென்னை மாநகராட்சியிடம் ஒப்பந்தத் தொழிலாளர்களாக இருந்த தங்களை ஏன் ராம்கி நிறுவனத்திற்கு மாற்றினீர்கள் என்பதைக் கேட்டும், அதைக் கண்டித்தும், அதைத் தொடர்ந்து தங்களை மாநகராட்சியில் நிரந்தரப் பணியாளர்களாக மாற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளுடன்தான் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தைத் தொடங்கினார்கள்.
இவையெல்லாம் தெரியாதவர்தான் திருமாவா? தூக்கத்தில் இருப்பவர்களை எழுப்பலாம், தூங்கிக் கொண்டிருப்பவர்கள் போல தோரணை செய்பவர்களை எப்படி எழுப்ப முடியும்?
போராட்டத்தின் அத்துணை நீள அகலங்கள் தெரிந்த தாங்கள், இப்படியான சூழலில் தத்துவார்த்த அரசியல் பேசி (திமுகவைக் காப்பாற்றுவதாக நினைத்துக் கொண்டு) போராடிய மக்களின் கோரிக்கைகளைப் புறந்தள்ளுவது எந்த வகையில் நியாயம்? அல்லது தத்துவார்த்தக் குறுக்கீடு செய்து போராட்டத்தின் தன்மையையும், உழைக்கும் பணியாளர்களின் உணர்வுகளையும் கேள்விக்குறியாக்குவது சரியா?
அங்கு நடந்த பிரச்சனை என்ன?, என்னென்ன கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன?, சரி தனியாருக்கு மண்டலங்களாகப் பிரித்துக் கொடுப்பது அரசின் கொள்கை முடிவு என்ற போதிலும், நிறைவேற்ற முடியாத கோரிக்கைகளை ஏன் திமுக கொடுத்தது?, சரி, இது எதுவும் கூட வேண்டாம். ஜனநாயகத்தின் மேல் நம்பிக்கை கொண்ட நீங்கள் சொல்லுங்கள். தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தை அராஜக முறையில் களைத்த திமுக அரசு பற்றிய உங்களின் நிலைப்பாடு என்ன? திமுக அல்லாத மற்ற அரசு இதைக் கையாண்டிருந்தால் தங்களின் நிலைப்பாடு என்னவாக இருந்திருக்கும்?.
தனியாருக்குத் தருவதுதான் அரசின் நிலைப்பாடு என்றால், அந்தத் தனியாரின் கீழும் இனி இந்தத் தூய்மைப் பணியாளர்கள் இதே பணியைத்தான் செய்யப் போகிறார்களே தவிர, நாளையே புரட்சி நடந்து அவர்கள் வேறு பணிகளுக்குச் செல்லப் போவதில்லை. அவர்களுக்கு இவையல்லாத மாற்றுப் பணிகளோ, மாற்று வேலைவாய்ப்புத் திட்டங்களோ எதுவும் உத்தரவாதப்படுத்தாத அரசை எப்படி நம்புவது?
அப்படி இருக்கையில், வேறு பணிகளுக்குச் செல்லும் தகுதியும், கல்வியும், சூழலும் அவர்களுக்குக் கிடைக்கும் வரை குறைந்தபட்சப் பாதுகாப்பாக அரசின் கீழ் இயங்குவதையே கோரிக்கையாக தூய்மைப் பணியாளர்கள் வைக்கின்றார்கள். இந்த அடிப்படைக் கோரிக்கை தங்களுக்கோ, அரசுக்கோ தெரியாமலிருக்க வாய்ப்பில்லை.
தனியாரின் கீழ் இயங்கும் தொழிலாளர்களுக்கு எல்லா வசதிகளையும் அரசு செய்து தரும் எனச் சொல்கிறார்கள். அந்தத் தனியார் நிறுவனத்திற்காக அரசு எதற்காக இவ்வளவு கடமைப்பட்டுள்ளது என்ற கேள்வி எழுகிறது. அந்தக் கேள்வி தங்களுக்கு எழவில்லையா? எழுந்தாலும் அரசிற்கு எதிராகக் கேட்க மாட்டீர்கள்.
இப்படியான கடமைகளை அரசு செய்வது தனியார் நிறுவனத்திற்கு அல்ல, அங்கு பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்குத்தான் என்றால், அவ்வளவு அக்கறையும் பொறுப்பும் அரசுக்கு இருக்குமானால், அவர்களை அரசின் கீழ் அரசு ஊழியராகவே அமர்த்துவதில் என்ன சிக்கல்? அரசுப் பணியால் பயனடைந்து தங்களின் அடுத்த தலைமுறையைச் சிறந்த கல்வி, பொருளாதார மேம்பாட்டால் மேலேறி வரட்டுமே. ‘அர்ச்சகர்’ அரசுப் பணி செய்து தன் சந்ததிகளைக் கல்வி பொருளாதார ரீதியில் மேம்படுத்துவதைப் போல, தூய்மைப் பணியாளர்களின் சந்ததிகளும் மேம்படட்டுமே.
இதை எழுதி முடிக்கும் தறுவாயில் தோழர் ஒருவர், சமூக வலைத்தளத்தில் கா.சு.வேலாயுதம் என்பவர் இப்போராட்டம் குறித்து எழுதிய பதிவை அனுப்பி வைத்தார். அதையும் அப்படியே இங்கு இணைக்கிறேன்.
//கடந்த அ.தி.மு.க ஆட்சியில் மாநகராட்சிகளில் பல்லாயிரக்கணக்கில் B.C கேட்டகிரியில் உள்ள குறிப்பிட்ட ஆதிக்கச் சாதியினரைப் பெயரளவில் தூய்மைப் பணியாளர்களாகப் பணியமர்த்தி 11 மாதங்கள் கழிந்ததும் பணி நிரந்தரமும் செய்தார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் அவர்கள் யாரும் தூய்மைப் பணியை ஒரு நாள் ஒரு மணி நேரம் கூடச் செய்யவில்லை. மாறாக தூய்மைப் பணி செய்யும் பட்டியலின மக்களை விரட்டி விரட்டி வேலை வாங்கும் மேஸ்திரிகளாக விட்டார்கள். அதன் பின்னர் அவர்களுக்கு health inspector – Supevisor என ஏதோ பதவி உயர்வு கொடுத்துப் பணி நிரந்தரமும் செய்தார்கள். இதை எதிர்த்து அப்போதே ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட அமைப்பினர் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் எல்லாம் நடத்தினார்கள். அதைப் பற்றி எல்லாம் இப்போது யாரும் பேசுவது காணோமே ஏன்? பட்டியலின மக்கள் மட்டும் எப்போதும் நிரந்தரத் தூய்மைப் பணியாளர்களாக இருக்க வேண்டும் – அவர்கள் அன்றாடம் காய்ச்சக் கூட வக்கற்ற பொருளாதார நிலையில் ஒப்பந்தக் கூலி அடிமைகளாக இருக்க வேண்டும் என்பது இங்கே எழுதப்படாத சட்டமா என்ன?
-கா.சு.வேலாயுதம்//
அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் சட்டத்தின் மூலம் அர்ச்சகர் பணி அரசுப் பணியாக வார்க்கப்பட்டுள்ளது. அப்போது, திருமா சொல்லும் இதே தத்துவார்த்தக் கருதுகோள் இங்கும் பொருந்துமல்லவா? அர்ச்சகர் பணியைத் தொடர்ந்து அவர்களே செய்வதன் மூலம் மட்டும் சாதியப் படிநிலை நிலைபெறதா? அல்லது சூத்திரச் சாதியைச் சேர்ந்த அர்ச்சகர் தொடர்ந்து அதே வேலையைச் செய்வதன் மூலம் ஓர் புது சாதிக் குழுவை உருவாக்க மாட்டாரா?
அனைத்துப் போராட்டங்களையும், அரசியல் பிரச்சனைகளையும் தத்துவார்த்தப் பின்புலத்தைக் கொண்டு தான் தாங்கள் மதிப்பிடுகிறீர்களா? போராட்டத்தை ஆதரிக்காமல் திமுக அரசு செய்த அநீதிக்குத் துணைநிற்பது என்று முடிவாகிவிட்டது. அதற்கு ஏன் தத்துவார்த்த விளக்கம்…? தங்களின் இந்த நேரக் கருத்து ஏற்புடையதல்ல, சரியானதுமல்ல.
தூய்மைப் பணியாளர்கள் தற்போது முன்னெடுத்த போராட்டம் குறித்துச் சுருங்கச் சொல்வதற்கு ஓர் குறள் இருக்கிறது.
“எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல். (குறள் – 489)”
கிடைத்தற்கரிய காலம் வந்து வாய்க்குமானால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செய்தற்கரியச் செயல்களைச் செய்ய வேண்டும்.
இந்தக் குறளின் பொருளைப் போல தான், தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தை முன்னெடுத்தார்கள். கடந்த தேர்தலில் நீங்களே வாக்குறுதி கொடுத்துவிட்டு, ஏன் கடந்த ஐந்தாண்டுகளாகச் செய்யவில்லை என ஆட்சி முடியும் ஆண்டில் கேட்கிறார்கள். அறத்தின் போராட்டத்திற்கு வேறுவேறு தத்துவார்த்த விளக்கங்களைக் கொடுத்து மேலும் அவர்களை வஞ்சிக்க வேண்டாம்.
அன்பு சாக்கியன் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். பெரியார் பல்கலையில் இளங்கலை காட்சித் தொடர்பியலும், முதுகலை இதழியல் மக்கள் தொடர்பியல்த் துறையையும் பயின்றவர். ஈரோடு எஸ்.எஸ்.எம் கலை அறிவியல் கல்லூரியின் முன்னாள் உதவிப் பேராசிரியராகவும், நீலம் பதிப்பகத்தின் முன்னாள் உதவி ஆசிரியராகவும் இருந்தவர். பின், இயக்குநர் பா.இரஞ்சித்தின் இணை இயக்குநராகப் பணியாற்றியவர், தற்போது திரைத்துறையில் இயக்குநராக முயற்சி செய்து கொண்டிருக்கிறார். ‘வெற்றிடம்’ என்கிற யூடியுப் சேனலையும், வலைத்தளப் பக்கத்தையும் நடத்தி வருகிறார்.








Leave a Reply