நான்கு வருணங்களுக்கு அப்பால் ‘அவர்ணர்கள்’ என்ற பெயரில் வருணம் அற்றவர்களாக ஒரு பிரிவினர் உருவாக்கப்பட்டனர். தீண்டாமைக் கொடுமைக்கு ஆட்படுத்தப்பட்ட இம்மக்கள் பிரிவை ‘சண்டாளர்’ என்ற பெயரில் மனு அழைத்தார்.
மனுவுக்கு முன்பாகவே வருணங்களும் ஜாதிகளும் உருப்பெற்று விட்டதைக் குறிப்பிடும் புரட்சியாளர் அம்பேத்கர் தீண்டாமை என்பது மனுவின் பங்களிப்பு என்பதை வெளிப்படுத்தினார். இதன்காரணமாகவே மனுதர்ம சாஸ்திரத்தை 1927 டிசம்பரில் நெருப்பிட்டுக் கொளுத்தினார். மனுதர்மத்தின் மீது இத்தகைய எதிர்ப்புணர்வை அவர் வெளிப்படுத்தியதற்கான காரணம் என்ன என்பது குறித்தும்,
“சதுர்வருணமாக சமுதாயத்தை நான்கு வகுப்புகளாகப் பிரிப்பது மனுவுக்குப் பிரதானமாக இருக்கவில்லை. ஓர் அர்த்தத்தில் அது அவருக்கு இரண்டாம் பட்சமானதாகவே இருந்தது. சதுர்வருணத்திற்குள் இருப்போரிடையான ஓர் ஏற்பாடாகவே இதனை அவர் கருதினார்.
முதலாவது வகையினர் வேதங்களையும் உபநிஷத்துகளையும் ஸ்மிருதிகளையும் பெரும்பாலும் ஆதாரமாகக் கொண்டு தம் ஜாதியின் தோற்றம் மிகப் பழமையானது என்று குறிப்பிடுகின்றனர். புராண இதிகாச நாயகர்கள், ரிஷிகள் ஆகியோரின் மரபில் வந்ததாகத் தம் ஜாதியின் புகழ் பாடினர்.
தமிழ்நாட்டு ஜாதி வரலாறுகள், சங்க நூல்கள், பக்தி இலக்கியங்கள், காப்பியங்கள், கல்வெட்டுகள் ஆகியவற்றின் துணையுடன் இப்பணியைச் செய்துள்ளன. இதன் பொருட்டு பல ஜாதிகளின் தோற்றம் குறித்துப் புராணங்கள் உருவாகியுள்ளன. தேவைப்பட்டால் பிற ஜாதிகளில் உள்ள புலவர்களுக்குப் பணம் கொடுத்துப் புராணங்கள் எழுதச் செய்துள்ளனர்.
இரண்டாவது வகையான ஆய்வுகள் தொடக்கத்தில் வெளிவந்துள்ளன. தற்போதும் வெளிவருகின்றன. ஆனால் காய்தல் உவத்தல் இன்றி இத்தகைய ஆய்வுகளைச் செய்வது கடினமாக ஒன்றாக மாறி வருகிறது. வாக்கு வங்கி அரசியலில் ஜாதிகளின் பங்களிப்பு இறுக்கமான ஒன்றாக மாறிவிட்டதும், ஜாதிகளின் பெயரால் தம் அரசியல் செல்வாக்கையும், பொருளாதார நிலையையும் வளர்த்துக் கொள்ள விழைவோர் குறிப்பிட்ட ஜாதியின் பாதுகாவலராகத் தம்மை வெளிப்படுத்திக் கொள்வதும் இதற்கான முக்கியக் காரணங்களாகும்.
இத்தகைய சமூகச் சூழலில்தான் `இந்தியாவில் ஜாதிகளின் தோற்றம் குறித்து புரட்சியாளர் அம்பேத்கரின் கருத்துக்களைத் தொகுத்துக் கூற வேண்டியுள்ளது. இந்திய ஜாதிகளைக் குறித்து அறிய விரும்பும் எவரும் அதன் முன்வடிவமாக இருந்த ‘வருணம்’ என்பதைப் புறக்கணித்து விட முடியாது. வருணம் என்பது குறித்து இந்தியாவின் முக்கியச் சமூக மானிடவியல் அறிஞரான சியாமா சரண் தூபே பின்வருமாறு வரையறை செய்துள்ளார்.
இந்துச் சமுதாய அமைப்பில் வருணம் என்பது மக்களை அடையாளம் காட்டுகின்ற பிரிவுகளின் தொகுப்பு மாத்திரமே. அது சமுதாய அமைப்பின் அன்றாடம் இயங்குகின்ற பகுதி அல்லது அலகு அல்ல. அது பல வகையான ஜாதிகளுக்கு உரியதான அளிக்கப்பட்ட படிநிலையைப் பொதுவாக மட்டும் குறிப்பிடுகிறது. அதை ஜாதிகளை வகைப்படுத்தும் சாதனமெனக் கூறலாம்.
வருணம் என்பது ஜாதிகளை வகைப்படுத்தும் சாதனமாக மாறுவதற்கு முன்பு அது மாற்றிக் கொள்ளக் கூடிய ஒன்றாகவே இருந்துள்ளது. மேலும் ஒரே குடும்பத்தில் வேறு வருணத்தவரும் இருந்துள்ளனர். சுருக்கமாகக் கூறினால் வருணம் என்பது வேலைப் பிரிவினையைப் போன்றே இருந்துள்ளது.
அம்பேத்கர் நோக்கில் வருணம்
நான்கு வருணங்களின் தோற்றம் குறித்து புருஷசூக்தம் குறிப்பிடுகிறது. இது தெய்வீகத் தோற்றுவாய்க் கோட்பாட்டுடன் தொடர்புடையது. புருஷசூக்தத்தின் பதின்மூன்றாவது மந்திரம் பிரம்மனால் நான்கு வருணங்கள் படைக்கப்பட்டதை ‘‘பிராமணன் இவருடைய முகமானான், கைகள் சத்திரியனாகச் செய்யப்பட்டன. அப்பொழுது தொடைகள் வைசியனாக ஆயின. திருவடிகளிலிருந்து சூத்திரன் உண்டானான்” என்று குறிப்பிடுகிறது. இதன் அடுத்த பகுதியாக நான்கு வர்ணங்களுக்கு இடையேயான வேலைப்பிரிவினை பின்வருமாறு வகுக்கப்பட்டுள்ளது.
பிராமணர் – வேதம் ஒதுதல்
சத்திரியர் – நாட்டை ஆளுதல்
வைசியர் – செல்வம் ஈட்டுதல்
சூத்திரர் – ஏவல் புரிதல்
ஆனால் புருஷசூக்தம் ரிக்வேதத்தின் பிந்திய காலத்தில் சேர்க்கப்பட்ட பகுதி என்றும் அதில் நான்கு வருணங்களின் தோற்றத்தைக் குறிக்கும் சுலோகங்கள், புருஷசூக்தம் சேர்க்கப்பட்ட பிறகு, புகுத்தப்பட்டவை என்றும் புரட்சியாளர் அம்பேத்கர் கருதுகிறார். அத்துடன் பிராமணர்கள் தம் உயர்நிலையை நிலைநிறுத்திக் கொள்ள கள்ளத்தனமாக ரிக் வேதத்தில் இதைப் புகுத்தியுள்ளனர் என்று சில விமர்சகர்கள் கூறியுள்ளதையும், புருஷசூக்தத்தின் மொழி நடை ரிக்வேதத்தின் மொழிநடையில் இருந்து மாறுபடுவதை அவ்விமர்சகர்கள் சுட்டிக் காட்டி உள்ளதையும் அவர் பின்வருமாறு குறிப்பிடுகிறார் :
புருஷசூக்தாவை எவரேனும் படிப்பார்களேயானால் 11வது மற்றும் 12வது பாடல்களை விடுத்து ஏனைய பகுதிகள் பூராவுமே எடுத்துவைப்பதுபோல அமைந்துள்ளன. ஆனால் நான்கு வருணங்களின் தோற்றங்களை விளக்கும் பாடல்களான அவை இரண்டும் கேள்வி பதில் வடிவங்களில் அமைந்துள்ளன. இங்கே குறித்துக் கொள்ள வேண்டிய விஷயம் என்னவெனில் ஏன் இந்த இரு பாடல்கள் மட்டும் எடுத்துரைப்பது போன்ற வடிவங்களை மாற்றிக் கேள்வி பதில் வடிவங்களில் அமைக்கப்பட்டுள்ளன? ஆசிரியர் அவர்கள் ஒரு புது விஷயத்தை நுழைக்கவும் அதுவும் அழுத்தமாக அதைத் தெரிவிக்கும் விதத்தில் அமைக்கவும் விரும்பியதால்தான் இப்படி அதன் மரபு மாற்றப்பட்டுள்ளது என்பதுதான் அதற்குச் சரியான காரணமாக இருக்க முடியும். புருஷ சூக்த ரிக் வேதத்தின் பிந்திய காலத்தில் சேர்க்கப்பட்ட பகுதிகள் என்பது மட்டுமல்லாது இந்தக் குறிப்பிட்ட பாடல்கள் மிகப் பிந்தியன; அதுவும் புருஷ சூக்தாவிற்குப் பிறகே புகுத்தப்பட்டுள்ளன எனவும் கூறலாம்.
பிராமணர்கள் வேதமே சதுர்வருண முறைக்கு இசைவாணை வழங்கியுள்ளது என்பதை நிலைநிறுத்துவதற்காக இந்நான்கு வருணமுறை நடைமுறைக்கு வந்து நீண்ட காலமானதற்குப் பிறகு புருஷ சூக்தாவை முழுவதுமாக இல்லாவிட்டாலும் பாடல்கள் 11 மற்றும் 12 – களை ரிக் வேதத்தில் கள்ளத்தனமாகப் புகுத்தியுள்ளார்கள் என்று சொன்னால் இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமேயில்லை.
வருண முறையானது நான்கு அடுக்குகளைக் கொண்டிருந்தது. இதில் மேல் அடுக்கில் முதன்மையானவனாக பிராமணனும் அதையடுத்து சத்திரியனும் வைசியனும் இடம் பெற்றனர். இவர்கள் மார்பில் முப்புரிநூல் தரிக்கும் உரிமையுடையவர்கள். நான்காவதான சூத்திரர்களுக்கு மார்பில் பூணூல் அணியும் உரிமை கிடையாது.
வருணம் ஜாதியாக மாறுதல்
நான்கு வருண அமைப்பு இறுக்கமான ஒன்றாக இல்லாதிருந்து பின்னர் இறுக்கமான ஜாதியாக மாற்றம் அடைந்ததை புரட்சியாளர் அம்பேத்கர் விரிவாக ஆராய்ந்துள்ளார். இம்முயற்சியில் முதல்கட்டமாக வருணம் ஜாதியாக மாறியதன் வரலாற்றுப் பின்புலத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
விளிம்பு நிலை மக்கள் மீதான ‘‘இந்து வகுப்புவாதப் பெரும்பான்மையினரின் கொடுங்கோன்மையைத் தடுப்பதற்கு வேறு ஏதேனும் பாதுகாப்பு இருக்குமா? என்று கேள்வியை எழுப்பும் புரட்சியாளர் அம்பேத்கர் இதற்கான பதில் எதிர்மறையாகவே வருகிறது என்று குறிப்பிட்டு விட்டு இந்து வகுப்புவாதம் தீண்டாமைக்கு ஆதரவான ஒன்று என்பதையும் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்,
‘‘இந்தப் படிநிலை ஏற்றத்தாழ்வு தற்செயலானதோ, இடை நிகழ்வோ அல்ல. அது இந்துக்களின் சமயக் கோட்பாடு. அது இந்து சமயத்தின் அதிகாரபூர்வமான சித்தாந்தம். அது புனிதமானது; எந்த இந்துவும் அதனை ஒழித்துக் கட்டுவது பற்றி நினைக்க முடியாது. ஆதலால் படிநிலை ஏற்றத் தாழ்வைத் தனது சமயக் கோட்பாடாகக் கொண்ட இந்து வகுப்புவாதப் பெரும்பான்மை என்பது ஒரு தற்காலிகமான கட்டமல்ல. அது ஒரு நிரந்தரமான உண்மை. என்றென்றைக்கும் அபாயகரமானது. இந்தியாவுக்கு ஓர் அரசியல் அமைப்புச் சட்டத்தை வகுக்கும்போது ஒரு நிலையான வகுப்புவாதப் பெரும்பான்மை இருந்து வருவதை உதாசீனம் செய்துவிட முடியாது. அதனை அரசியல் ஜனநாயகத்துடன் இணக்குவிப்பதற்குப் பாதுகாப்புகளை உருவாக்கும் பிரச்சினையை எதிர்ப்பட வேண்டியிருக்கும்.”
தமிழ்நாட்டுப் பண்பாட்டு அடையாளமாகக் குலத்தொழில் என்னும் முறையில் நவீனக் கொத்தடிமையாக நடத்தப்பட்டு வரும் வண்ணார் மற்றும் மருத்துவர் ஜாதியினரைப் பல்வேறு திரைப்படங்கள், பழமொழிகள் என்னும் பெயரிலும் கருத்துரிமை என்னும் கண்ணோட்டத்திலும் கொச்சைப்படுத்தி, இழிவுபடுத்திச் சித்தரிக்கும் போக்கை வண்ணார் மற்றும் மருத்துவர் வகுப்பினர் கண்டித்தனர்.
தமிழ்நாடு அளவில் இவ்வகுப்பினருக்கான அமைப்புகள் ஒத்தக் குரலில் போராட்டங்கள் மற்றும் சுவரொட்டி பிரச்சாரம், ஆர்ப்பாட்டம் போன்றவற்றின் மூலம் எதிர்ப்புத் தெரிவித்திருந்தன. இதன் எதிரொலியாக கே.வி.ஆனந்த் இயக்கி நடிகர் தனுஷ் நடித்து வெளியான அநேகன் படத்தில் தமிழ்நாட்டு வண்ணார் வகுப்புப் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் அமைந்த வசனங்களை, படத்தில் குறிப்பிட்ட காட்சிகளைச் சம்பந்தப்பட்ட படக் குழுவினர் நீக்கினர். சட்டப் போராட்டத்தின் எதிரொலியாக பாண்டிராஜ் இயக்கி விஷால் நடித்த கதகளி படத்தில் வசனங்கள், காட்சிகள் நீக்கம் செய்தனர். உலகமயமாக்கலுக்குப் பின்னர் வண்ணார் வகுப்பினர் மிக மோசமான அழிவை எதிர்கொண்டுள்ளனர். குறிப்பாக, பாலிஸ்டர் துணிவந்த பிறகு வெள்ளாவி வைத்து வெளுக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது. இந்நிலை கிராமப்புறங்களில் வண்ணார் வகுப்பினர் இருப்பத் துடைத்து அழித்துள்ளது. சடங்கு நிலைத் தேவை மட்டுமே இன்னும் இருப்பிற்கான சிறிய வெளியை வழங்கியுள்ளது. அது இன்னும் சில அழிவுகளைச் சுமத்துவதற்கான, சுமப்பதற்கான வெளியாகவும் உள்ளது.
கல்வி வாய்ப்புகளிலும் அரசு வேலை வாய்ப்புகளிலும் நகர வெளிகளிலும் வண்ணார் வகுப்பினர் மிக பின்தள்ளப்பட்டுள்ளதை எழுத்தாளர் ஆ.சிவசுப்பிரமணியன் எழுதியுள்ள ‘தமிழக வண்ணார் வரலாறும் வழக்காறுகளும்’ என்ற நூலில் பின் இணைப்பாகத் தந்துள்ள புள்ளி விவரங்களும் 1970 இல் தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட சட்டநாதன் ஆணைய அறிக்கையும் சுட்டிக் காட்டுகின்றன். இன்று சலவைத் தொழல் அயர்னிங்காக மட்டும் சுருங்கி விட்டது. மற்றொரு புறம் “லாண்டரி” தொழில் வலைப் பின்னலாக மாறியுள்ளது. பெரு மூலதனம் இடப்படும் லாண்டரித் தொழிலில் வண்ணார் வகுப்பினர் தொழிலாளர்களாக மாற்றப்பட்டு வருகின்றனர். இதனை “பாட்டாளி வர்க்க மயமாதல்” என்று அழைக்க முடியுமா?
வாழ்க்கை வட்டச் சடங்குகளும் வண்ணாரும் என்ற கட்டுரையில் மாராயம் சொல்லுதல், பூப்புச் சடங்கு, இறப்புச் சடங்கு ஆகியவற்றில் வண்ணார் வாழ்க்கை வட்டச் சடங்குகளில் இடம் பெறும் விதத்தை ஆ.சிவசுப்பிரமணியன் விளக்குகிறார். பல்வேறு மங்கலச் சடங்குகளிலும் வண்ணார், மருத்துவர் ஜாதியினர் சடங்கு நடத்துவோராக இருந்த நிலை பார்ப்பனியத்தை நோக்கிய மிக அண்மைக்கால நகர்வினால் மாறிவிட்டது. பார்ப்பனர்கள் சடங்கு நடத்துவோராக மாறிவிட்டனர். ஆனால் அமங்கலச் சடங்குகளில் மட்டும் வண்ணார், மருத்துவர் இருக்க வேண்டும் எனச் சூத்திர ஜாதியினர் விரும்புகின்றனர். இந்நிலை வண்ணார் மருத்துவர்கள் மீது செலுத்தும் ஒடுக்குமுறைகளில் ஒன்று ஆகிவிடுகிறது.
பூப்பு, இறப்புச் சடங்குகளில் மூட்டுத் துணி எடுத்தல், மாத்துத் துணி விரித்தல் என்பன போன்ற தீட்டு என் ஒதுக்கும் அல்லது இழிநிலைக்கு ஆளாக்கும் வேலைகளைச் செய்ய வண்ணார்கள் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர் என்று ஆ.சிவசுப்பிரமணியன் காட்டுகின்றார். இது சடங்குகளின் மூலம் ஜாதிகளிடையே உள்ள உறவு கட்டமைக்கப்படுகிறது எனக் காட்டுகிறது. திருமணம் போன்ற மங்கல நிகழ்வுகளில் வண்ணார் பெற்றிருந்த சடங்குநிலை ஏன் அந்நிலையை இழந்தனர். கொங்கு வட்டாரத்தின் எழுதிங்கள் போன்ற வட்டாரச் சடங்குகளில் வண்ணார் பெற்றிருக்கும் முதன்மை நிலை ஆகியவற்றை ஆராய வேண்டும். அதற்கான தூண்டுதலை இக்கட்டுரை விதைக்கின்றது.
18 ஆம் நூற்றாண்டின் இறுதியில், தமிழ்நிலப்பகுதியில் காலனிய ஆட்சி வேரூன்றி நிலைத்தது. அப்போது, காலனிய அரசு சமூகக் குழுக்களை வகை தொகைப்படுத்த முயன்றது. அதன் வகைதொகைப்படுத்தலில் ஜாதிகளின் வருணைநிலை, படிநிலைத் தர வரிசை முக்கியமான இடம் பெற்றது. இச்செயல்பாடு, ஜாதிக்குழுக்கள் வரலாறு பற்றிய உணர்வு கொள்ளலை, அதாவது வருணநிலையில் உயர்ந்த அந்தஸ்தைக் கோரும் உணர்வு, ஜாதிப் படிநிலைத் தரவரிசையில் உயர்ந்த இடத்தைக் கோரும் உணர்வு என்ற எதிர்விளைவைத் தோற்றுவித்தது. அவ்வுணர்வின் செயல் வடிவமாக ஜாதிப்புராணங்கள், ஜாதி வரலாறுகள் தோன்றின. அப்படிப்பட்ட ஜாதி வரலாறுகள், பொதுவாகப் புராண மூலங்களில் தோற்றுவாய்களைத் தேடிக் கொண்டன. கிடைக்கும் கல்வெட்டு, இலக்கியத் தரவுகளைக் கொண்டு, புகழ் பூத்த கடந்த காலத்தைக் கட்டமைத்துக் கொண்டன. இந்தவகையிலான ஜாதி வரலாறை வண்ணார் வகுப்பு படைத்துக் கொண்டு உள்ளதா என்று தெரியவில்லை. எவ்வாறாயினும், இந்தநூலில் ஆ.சிவசுப்பிரமணியன், வண்ணார் சமூக வரலாற்றை சமூக அறிவியல் நோக்கில் எழுத முயன்றுள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த 75 ஆண்டு காலமாக ஒவ்வொரு ஆண்டும் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. அந்த நிதிநிலை அறிக்கையில் சலவைத் தொழிலாளர்கள், சவரத் தொழிலாளர்கள் கோரிக்கையைக் கவனத்தில் கொண்டு திட்டமிட்டுத் தனியாக நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்பதன் மூலம் பாஜக, காங்கிரசு, அஇஅதிமுக, திமுக போன்றவை எந்த அளவிற்கு இவ்வகுப்புகளின் சமூக விடுதலை மீது அக்கறை வைத்துள்ளனர் என்பது அம்பலமாகிறது.
தமிழ்நாட்டின் நிலவுடைமைச் சமூகமானது தன் குடி ஊழியக்காரர்களாக ஊர் ஏகாலி, ஊர் நாவிதன், ஊர் வெட்டியான் என்ற பெயர்களில் தனக்குப் பணிபுரிய சில சமூகங்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. நவீனத்துவம் அறிமுகமான பின்பும் கூட இன்னும் சில கிராமப்புறங்களில் இது தொடர்கிறது. இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் ஜாதிப் பிரிவினைகள் தோன்றிய வரலாற்றுப் பின்புலத்தையும் சில குறிப்பிட்ட ஜாதிகள் மட்டும் எப்படி காலங்காலமாக அடிமைப்படுத்தப்பட்டு வருகின்றன அன்பதை இந்திய அரசோ, தமிழ்நாடு அரசோ ஆராய்வதில் அக்கறை காட்டுவதில்லை.
நாடு விடுதலை அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாக உருண்டோடி விட்ட நிலையில் ராக்கெட் வேகத்தில் சமூக மாற்றங்கள் விநாடிக்கு விநாடி மாறிக் கொண்டே உள்ள நிலையில் 3,000 ஆண்டுகளுக்கும் ஜாதிப் படிநிலையில் சமூகத்தின் கொத்தடிமைகளாக வைத்து வஞ்சிக்கப்பட்டு வரும் சலவைத் தொழிலாளர் என்னும் வண்ணார் சமூகத்தின் நிலையும் சவரத் தொழிலாளர் என்னும் மருத்துவர் சமூகத்தின் நிலையும் மாறாமல் ஜாதிப்படிநிலையில் குலத் தொழில் எனும் பெயரில் வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் 55 ஆயிரம் கிராமங்களிலும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய, பெரிய நகரங்களிலும் குலத்தொழில் என்னும் பெயரில் இன்றுவரை தொழில் செய்து வருகின்றனர். இவர்களில் வண்ணார் தொழில் செய்து வந்த நீர்நிலைகள் அனைத்தும் விடுதலைக்குப் பின் அரசியல் செல்வாக்கு பெற்றவர்களால் கபளீகரம் செய்யப்பட்டன. நீர்நிலைகளில் உள்ள சுற்றுப்புறத்தில் நிலங்கள் அனைத்தும் பாழடித்ததுடன் ஆக்கிரமித்துக் கொண்டு சலவைத் தொழிலாளர்களை அங்கிருந்து விரட்டியடித்தனர். இதன் காரணமாக உள்ளூரில் பகுதி மக்களுக்கு வேலை செய்யும் நிலையில் மக்கள் உடுத்தும் அழுக்காடைகளைப் பலமைல் தொலைவு தலைச் சுமையாகச் சுமந்து கொண்டு கால்கடுக்கப் பயணித்து நீர்நிலைகளைத் தேடி அலைந்து தூய்மையாக, சுகாதாரமாக அடித்துத் துவைத்து உலர்த்தி மீண்டும் ஊர்திரும்ப ஒவ்வொரு நாளும் படும் இன்னல்கள் சொல்லி மாளாது.
இதுபோன்ற துயரமான பணிகளைச் செய்து வரும் வண்ணார் வகுப்பினர்க்கான சங்கங்கள் தங்கள் வகுப்பினர் பட்டியல் வகுப்பினராக மதிக்கப்பட வேண்டுமென 1954 ஆண்டு முதல் அரசுகளிடம் கோரிக்கை வைத்து வருகின்றன. அன்றைய சென்னை மாநிலத்தை 18 ஆண்டு காலம் காங்கிரசு ஆண்ட போதிலும் 1967 ஆண்டு முதல் திராவிட அரசியல் கட்சிகள் ஆண்டபோதிலும்/ ஆளுகின்ற போதிலும் வண்ணார் வகுப்பினரின் பட்டியல் சேர்க்கைக் கோரிக்கையை முழுமையாக அலட்சியப்படுத்தியதுடன், அவர்களின் வாழ்வாதாரத்தையும் மீட்டெடுக்க முடியாத அளவிற்குத் துயரத்தில் தள்ளின.
இதே தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் முழுமையாகவும், தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும் வண்ணார் ஜாதியினரைப் பட்டியல் வகுப்புப் பட்டியலில் சேர்த்துள்ளனர். ஆனால் மற்ற மாவட்டங்களில் வண்ணார் ஜாதியினரைப் பட்டியல் வகுப்புப் பட்டியலில் சேர்ப்பதற்கு அது தடையாக உள்ளது என்பதைச் சரியாக காங்கிரசு, திமுக, பிஜேபி, அஇஅதிமுக ஆகிய கட்சிகள் இன்றுவரை தெளிவுபடுத்தாமல் வஞ்சித்து வருகின்றன.
எங்களுடைய சுற்றுப் பயணத்தின்போது வண்ணார் ஜாதியினர் தாங்கள் பட்டியல் வகுப்பினராக மதிக்கப்பட வேண்டும் என்று எல்லா ஊர்களிலும் வண்ணார் ஜாதியினர் கோரினர். இந்த ஆணையம் இதுகுறித்து மாநிலங்களின் அரசுகளுக்கு மடல்கள் எழுதியது. ஆணையத்துக்கு வரப்பெற்ற அம்மடல்கள் அசாம், உத்திரப்பிரதேசம், பீகார், மேற்குவங்கம், ஒரிசா, கேரளா ஆகிய மாநிலங்களில் வண்ணார் ஜாதியினர் பட்டியல் வகுப்பினராக நடத்தப்படுவதாகக் கூறுகின்றன என்று சட்டநாதன் ஆணைய அறிக்கையில் குறித்துரைக்கப்படுள்ளது.
‘‘கத்தியெ தீட்டித்தீட்டி கையும் ஓஞ்சுபோச்சு
கத்தரியெ புடிச்சுப் புடிச்சு கைவிரலும் மடிஞ்சு போச்சு
சவத்துக்கும் சவரம் செஞ்சு – வெற்றுச்
சவமாய் மண்ணில் அலையறமே…’’
Art : Paul Gauguin
பெருமாள் குமாரசாமி – காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் வாழும் சமூகநீதிச் சமூகச் செயற்பாட்டாளர். அவரது கட்டுரைகள் குலத்தொழில் வகுப்பினரான வண்ணார், காவாரா மற்றும் மருத்துவர் வகுப்பு மக்கள் வாழ்க்கையை நம் கண் முன்னே படம் பிடிப்பதன் முக்கியத்துவத்தை நாம் உணரலாம். ஜாதிய வாதிகள் உருவகித்து வைத்திருக்கிற குலத்தொழில் வகுப்பினர் தம்மை விடக் கீழானவர்கள் என்ற கற்பிதத்தின் வழியே தக்கவைத்து வைக்கப்பட்டுள்ளது என்றும் குலத்தொழில் வகுப்பினர் தமக்கு ஒதுக்கப்பட்ட பாத்திரத்தை மறுத்து வெளியேறிவிட்டால் தம்மை மேல்ஜாதி என்று கருதிக்கொள்வதற்கான அடிப்படையே தகர்ந்து விடுமே என்றும் ஜாதியவாதிகள் அஞ்சுகிறார்கள் என்றும் குறித்து உரைக்கிறார் பெருமாள் குமாரசாமி. அவரது நூலான சமூகநீதியின் குரல்கள் சுரண்டப்பட்ட மக்களின் விடுதலை என்ற நோக்கில் அமைந்துள்ளன. விவாதத்திற்கும் உட்படுத்த வேண்டியவை. அவரது கருத்துகள் மிக நுட்பமானவை. தரம் கொண்டவை.








Leave a Reply