கடலுக்குள் சூரிய ஒளி சிறிய கண்ணாடித் துண்டுகள்போல் ஒளிர்ந்துகொண்டிருந்தது. அலை அசைவுகள் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தன. அங்கே நான்கு மீன்கள் மெதுவாக நீந்திக் கொண்டிருந்தன. அம்மா மீன், அப்பா மீன், அவர்களின் இரு குட்டிகள் – சிட்லு மீனும் கேட்லு மீனும்.
சிட்லு மீன் மிகவும் சுறுசுறுப்பான மீன். சிறிய கற்களுக்குள் புகுந்து மறைவதும், சிறிய பவளக்கற்களில் விளையாடுவதும் அதற்கு மிகவும் பிடிக்கும். கேட்லு மீன் சோம்பேறி. ஆனால் ஒரு விஷயத்தில் பிடிவாதம் பிடித்துவிட்டால், யாராலும் சமாதானப்படுத்த முடியாது.
ஒரு நாள் சிட்லு தண்ணீரில் சுழன்று விளையாடிக்கொண்டிருந்தது. “என்னைப் பிடி! என்னைப் பிடி!” என்று சிரித்துக்கொண்டே ஓடியது.
கேட்லு பின் தொடர்ந்து ஓடியது. சிட்லு வேகமாகச் சுழன்று ஓடியது. கேட்லுவால் பிடிக்க முடியவில்லை.
கேட்லு மிகவும் கோபப்பட்டது. “எப்போதும் நீதான் ஜெயிக்கறே! ஒருநாள் நான் உன்னைப் பிடித்துக் காட்டுவேன்!.ஒரு நாள் என்ன இப்போதே பிடிக்கிறேன் பார்” என்று கூறிவிட்டு சிட்லூவைப் பிடிக்க வேகமாக நீந்திச் சென்றது.
சிட்லு சிரித்தது. “அதற்குள் நான் மறைந்திருப்பேன்!” என்று கூறிவிட்டுப் பவளக்கல்லின் பின்னால் ஒளிந்துகொண்டது.
அம்மா மீனும் அப்பா மீனும் தொலைவில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தன.
“இரண்டு குட்டிகளும் தினமும் சண்டை போட்டுக்கொண்டே இருக்கிறாங்க. ஆனாலும் கொஞ்ச நேரத்தில் சேர்ந்து விளையாட ஆரம்பித்து விடறாங்க,” என்று கூறி அம்மா மீன் சிரித்தது.
“அதுதான் குழந்தைகள். நம்மள மாதிரி அவங்களுக்கு மனசுக்குள்ள வச்சுக்கத் தெரியாது” என்று கூறியது அப்பா மீன்.
அப்படிச் சண்டையிட்டு விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென்று கடலுக்குள் ஒரு பெரிய நிழல் மிதந்தது.
“அம்மா! அப்பா! பெரிய மீன்!” என்று சிட்லு பயந்து கத்தியது.
“பயப்படாதே! அது வெறும் கடல் சுறா. அது நம்ம பக்கம் வராது. ஆனாலும் நம்ம பாதுகாப்பா இருக்கணும்.” என்று அப்பா மீன் அமைதியாகச் சொன்னது.
ஆனால் கேட்லு கண்ணில் ஒரு வேறு ஒளி. “வாவ்! அந்தப் பெரிய மீனை நான் பிடிக்கப் போறேன். பிடிச்சு சிட்லூவை விட எனக்கு வலிமை இருக்குன்னு நிரூபிக்கப் போறேன்” என்று கூறிவிட்டுத் திடீரென்று சுறாவைப் பின்தொடர்ந்து ஓடியது.
“அடடா, நீ எங்க போறே? அவசரப்படாதே! நாம இன்னும் வளரணும். அது நம்மால பிடிக்க முடியாது!” என்றது சிட்லு.
ஆனால் கேட்லு கேட்கவே இல்லை.
சுறாவைத் துரத்திக் கொண்டே ஓடியது. ஆனால் அதைக் கேட்லுவால் பிடிக்க முடியவில்லை. அது தப்பித்துவிட்டது. கேட்லுவின் சிறிய வால் வலிக்க ஆரம்பித்தது. பசி ஒருபுறம் வாலின் வலி ஒருபுறம். மிகவும் தளர்ந்து போய்த் திரும்பி வந்தது.
ஆனால் அதே நேரத்தில் சிட்லு என்ன செய்தது தெரியுமா?
அருகில் இருந்த சின்னச் சின்ன மீன்களைத் தன்னால் முடிந்த அளவுக்குப் பிடித்துச் சாப்பிட்டது. அதற்கு வயிறு நிறைந்துவிட்டது.
மிகவும் மகிழ்ச்சியாக அங்கிருந்த மற்ற மீன்களோடு துள்ளிக் குதித்து விளையாடிக் கொண்டிருந்தது.
கேட்லு அம்மா அருகே வந்தது. “அம்மா… எனக்கு ரொம்பப் பசி. என்னால் பெரிய மீனைப் பிடிக்க முடியவில்லை. இங்க இருந்த சின்னச் சின்ன மீன்களையாவது சாப்பிடலாம் என்று திரும்பி வந்தேன். ஆனால் நான் வருவதற்குள் சிட்லு இங்கிருந்த மீன்களை எல்லாம் சாப்பிட்டுவிட்டது” என்று கூறிவிட்டு சிட்லு மீனை அடிக்கத் துரத்திக் கொண்டு ஓடியது.
“கேட்லு, நீ இன்னும் குட்டி. பெரிய மீனைப் பிடிக்க வேண்டிய நாள் வரும். அந்த நாளுக்குத் தயாராக இருக்க, முதலில் சின்னச் சின்ன மீன்களைப் பிடிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். பெரிய இலக்கு இருக்கலாம். ஆனால் சிறிய முயற்சிகளிலிருந்து தான் பயிற்சி ஆரம்பிக்க வேண்டும்.”
என்று கூறி சிட்லுவைத் துரத்திக் கொண்டிருந்த கோட்லுவின் பின்னால் நீந்திக் கொண்டே சொல்லிக் கொண்டிருந்தது அப்பா மீன்.
“அது மட்டும் இல்ல, இன்னும் நீ வளரணும். வால் வலிமை பெருகணும். நீண்ட தூரம் நீந்தக் கற்றுக்கொள்ளணும். அதற்கெல்லாம் சின்னச் சின்ன முயற்சிகள் உதவியாக இருக்கும்.” என்றது அம்மா மீன்.
“ஆனால் அம்மா, உங்களை எல்லாம் புரிந்து கொள்ளவே எனக்குச் சிரமமாக இருக்கிறது. நீங்கள்தான் எப்போதுமே ‘பெரிய கனவு காணுங்கள், பெரியதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்’ என்று சொல்லுவீர்கள். இப்போ சின்னச் சின்னதைப் பற்றியே சொல்கிறீர்களே?”
அம்மா மீன் மெதுவாகச் சிரித்தது.
“பெரிதினும் பெரிது இலக்கு வைத்திருக்கிறதே நல்லது. ஆனால் அதற்கான காலம் வரும். அதுவரைப் பயிற்சியே உனக்குச் சிறந்த நண்பன்.”
சிட்லு சிரித்துக்கொண்டே கேட்லுவைக் கிண்டல் செய்தது.
“ஹா ஹா! பாரு, உன் பெரிய மீன் ஓடிப்போச்சு. நான் நிறைய மீன்களைச் சாப்பிட்டுட்டேன். என் வயிறு நிறைஞ்சு இருக்கு.” என்று கூறிவிட்டு கேட்டுவைத் தனது வாலால் இடித்து விட்டு மீண்டும் ஓட ஆரம்பித்தது.
கேட்லுவுக்குக் கோபம் வந்தது. “அடடா! நீ எப்போதுமே சிரிச்சிக்கிட்டு கிண்டல் செய்யறே. என்னால உன்னைப் பிடிக்க முடியாது என்று தானே நினைக்கிறே. நான் பெரியவனாகிவிட்டால் உன்னைவிட வேகமாக நீந்துவேன்!” என்று கூறி சிட்லுவை அடிக்க வேகமாக நீந்தியது கேட்லு.
இருவரும் சண்டை போட்டார்கள். சிட்லு அங்கிருந்த கல்லுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டது. கேட்லு அதைத் தேடியது. அந்த நேரத்தில் அங்கு சிறிது சிறிதாக ஏராளமான மீன்கள் நீந்திக் கொண்டிருந்தன. “கேட்லு உனக்குப் பசிக்குது தானே. வேகமாக இங்கே வா. மீன்கள் இருக்கின்றன” என்று கூறியது சிட்லு. சிட்லு கூறியதைக் கேட்டு கேட்லு அங்கே சென்றது. அங்கு இருந்த மீன்களைச் சாப்பிட்டது. வயிறு நிறைந்ததும் சிட்லு மீது இருந்த கோபம் தணிந்தது. இரண்டும் ஓடிப் பிடித்து விளையாட ஆரம்பித்தன. இரண்டும் விளையாடுவதைப் பார்த்த அப்பா மீனும் அம்மா மீனும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து அவர்களோடு சேர்ந்து இவைகளும் விளையாட ஆரம்பித்தன.
நாட்கள் நகர்ந்தன, மீன்கள் சற்றே வளர்ந்தன. ஒரு நாள் அந்த வழியாக வந்த ஒரு பெரிய மீனைப் பிடிக்க முயற்சி செய்தது கேட்லு.
“கேட்லு இன்னும் உனக்குப் பயிற்சி போதாது. தயவுசெய்து திரும்பி வந்துவிடு” என்று கேட்லுவின் பின்னாலேயே நீந்திச்சென்றது கேட்லுவின் அம்மா.
ஆனால் கேட்லு அம்மா சொல்வதைக் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. அந்த மீனைப் பின்தொடர்ந்து நீண்ட தூரம் நீந்திச் சென்று விட்டது. ஆனால் திரும்பி வருவதற்கு அதற்கு வழி தெரியவில்லை.
கேட்லு மீன் எங்கோ தொலைந்து விட்டது. தினமும் கேட்லுமீனைத் தேடித் தேடி அலைந்தன மூன்று மீன்களும்.
அப்படித் தேடிக் கொண்டிருந்த காலகட்டத்தில் ஓரிடத்தில் ஒரு பாறைக்கு அடியில் ஒரு மீன் மிகவும் மெலிந்து போய்ப் பசியோடு முனகியபடி கிடந்தது. முனகல் சத்தம் கேட்ட சிட்லு பாறைக்குப் பின்னால் சென்று பார்த்தது. அங்கு கேட்லுதான் முனங்கிய படி இருந்தது.
“அம்மா அப்பா இங்க வந்து பாருங்க. கேட்லு கேட்லு” என்று கத்தியது சிட்லு.
“கேட்லு தங்கமே! உனக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி இருக்கே? உன்னை எங்கெல்லாமோ தேடினோம். என் தங்கமே என்று கூறியபடி தன் வாலால் அணைத்துக் கொண்டது அம்மா மீன்.
அது பேசக்கூடத் திறனற்று இருந்தது. “முதலில் கேட்லுவுக்கு உணவைக் கொடுப்போம்” என்றது அப்பா மீன். மூன்றும் அங்கும் இங்கும் அலைந்து திரிந்து சில மீன்களைப் பிடித்து வந்து கேட்லுவுக்குக் கொடுத்தன. சாப்பிட்டு முடித்ததும் சற்றே தெம்பாகியது கேட்லு.
“உன்னை எங்கெல்லாம் தேடினோம் தெரியுமா? நீ ஏன் இப்படிச் செய்தாய்? நீ ஏன் சொல்வதைக் கேட்பதே இல்லை? பெரிய மீன்களைப் பிடிக்க இன்னும் காலம் இருக்கிறது என்று எத்தனை முறை கூறி இருக்கிறேன்” என்று வாலால் கேட்லுவின் முதுகைத் தடவியபடி கேட்டது அப்பா மீன்.
“அப்பா நீங்கள் சொல்லும் போது எனக்குப் புரியவில்லை. என் அனுபவம்தான் எனக்கு நிறையக் கற்றுக் கொடுத்து விட்டது. இனிமேல் நீங்கள் சொல்வதைக் கேட்பேன். சிட்லுவைப் போல் சரியான பயிற்சி எடுப்பேன்” என்று கூறி மூவரையும் தன் வாலால் சுருட்டி அணைத்துக் கொண்டது கேட்லு.
“பெரிய கனவு. சிறிய முயற்சிகள். பயிற்சி. வெற்றி.”என்றது அம்மா மீன்
அடுத்த சில நாட்களில் சில நேரம் பவளக்கற்கள் இடையே விளையாடின. சில நேரம் சின்னச் சின்ன கடல்குதிரையோடு நீந்திப் போட்டி போட்டன. சில நேரம் சுறுசுறுப்பான குட்டி நண்டுகளோடு விளையாடின. ஒவ்வொரு விளையாட்டிலும் ஒரு பாடம் இருந்தது.
வேகமாகச் சிந்திக்கக் கற்றுக்கொண்டன. ஒன்றுக்கொன்று உதவி செய்து கொண்டன. சிறிய முயற்சிகள் சேர்ந்து பெரிய வெற்றியாக மாறும் என்பதை உணர்ந்து கொண்டது கேட்லு. காலம் செல்லச் செல்ல சிட்லு, கேட்லு இரண்டும் வளர்ந்தன. வால் வலிமையாகியது. வேகம் அதிகரித்தது. சிறிய மீன்களை எளிதில் பிடிக்கத் தொடங்கின.
“இப்போது நீங்கள் இருவரும் பெரிய சவாலுக்குத் தயாராக இருக்கிறீர்கள். பெரிய இலக்கு எப்போதுமே சிறிய பயிற்சிகளின் மேல்தான் அமைகிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்” என்றது அப்பா மீன்.
ஒவ்வொரு நாளும் சிட்லுவும் கேட்லுவும் புதிய சவால்களைச் சந்தித்தன. பெரிய மீன்களையும் பிடிக்க ஆரம்பித்து இருந்தன.
Art : Les Classics
ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் பிறந்தவர். தமிழிலும் உளவியலிலும் முதுகலைப் பட்டமும் கல்வியியலில் நிறைஞர் பட்டமும் பெற்றவர். தமிழகம் முழுவதும் இதுவரை அரசு தனியார் பள்ளி கல்லூரிகளிலும் பல்வேறு தனியார் அமைப்புகளிலும் 1000க்கும் மேற்பட்ட கதை சொல்லல்களை நிகழ்த்தியுள்ளார்.
சிற்றூளி இலக்கிய இதழின் இணை ஆசிரியராகவும் இயல் சிறார்களுக்கான மின்னிதழின் இணை ஆசிரியராகவும் உள்ளார்.
நீல மரமும் தங்க இறக்கைகளும், கனவுக்குள் ஒரு கண்ணாம்மூச்சி, கிளியோடு பறந்த ரோகிணி உட்பட பல சிறார் சிறுகதைத் தொகுப்புகளை எழுதியுள்ள இவர், அசோகமித்திரன் நினைவு படடைப்பூக்க விருது, திருப்பூர் சக்தி விருது, உலகத் தமிழ் பேரியக்கத்தின் தங்க மங்கை விருது, தனிஷ்க் புதுமைப்பெண் விருது உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். இவர் புழுதி இணைய இதழில் ‘சாவ்பாடி’ என்னும் மிக முக்கியமான கட்டுரை எழுதியவராவார்.








Leave a Reply