சர்வதேசப் பத்திரிகையாளர் கூட்டமைப்பு (IFJ) வெளியிட்டுள்ள தகவலின்படி, 2025 ஆம் ஆண்டில் மட்டும் 128 ஊடகவியலாளர்கள் தங்கள் உயிரை இழந்துள்ளனர். 74 பேர் மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்தோராகக் காணப்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தில் காசா போர் நிமித்தம் 56 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் 10 பேர் பெண் ஊடகவியலாளர்கள். பெண்கள் எதிர்கொள்ளும் கொடூரமான பாலின அடக்குமுறைகளோடு, ஊடக வன்முறை என்பது மேலதிகமான ஒன்று. உலகம் முழுவதும் 533 ஊடகவியலாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதில் 143 ஊடகவியலாளர்களைச் சிறையில் வைத்துள்ள சீனா முதலிடத்தில் உள்ளது.
இந்த உலகளாவிய ஊடக அடக்குமுறை பின்னணியில், இலங்கையின் ஊடகச் சுதந்திர அச்சுறுத்தல்கள் என்பது விதிவிலக்கு அல்ல. ஏறத்தாழ 40 ஊடகவியலாளர்களின் கொலைகளுக்கு இன்றுவரை எவ்வித நீதியும் இலங்கையில் கிடைக்கவில்லை. “தண்டனை விலக்கு கலாச்சாரம்” (Culture of Impunity) இலங்கையின் கருத்துச் சுதந்திரத்தையும் ஊடகச் சுதந்திரத்தையும் முழுமையாக முழுங்கிக் கொண்டிருந்தபோது கொல்லப்பட்ட அல்லது காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களில் சிலருள் ரிச்சார்ட் டி சொய்ஸா, ஐயத்துரை நடேசன், மயில்வாகனம் நிமலராஜன், தர்மரத்தினம் சிவராம், ரேலங்கி செல்வராஜா, சுப்பிரமணியம் சுகிர்தராஜன், செல்வராஜா ரஜீவர்மன், சாகிப் மௌலானா, லசந்த விக்ரமதுங்க, வேலாயுதம் கிருபாகரன், இசைப்பிரியா, பிரகீத் எக்னலிகொட ஆகியோர் அடங்குவர்.
சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டு இவ்வருடம் 17 ஆண்டுகள் ஆன பிறகும் நீதி தொடர்ந்து மறுக்கப்படுகிறது. ஆனால், கொலையை விசாரித்து நீதியை நிலைநாட்ட எந்த அரசாங்கமும் அரசியல் ரீதியாக உறுதிபூண்டிருக்கவில்லை. ஜனவரி 8, 2009 அன்று, லசந்த விக்கிரமதுங்க வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது, ரத்மலானை இராணுவத் தளத்திற்கு அருகில் உள்ள கொழும்பில் உள்ள அத்திடிய சாலையில் மோட்டார் சைக்கிள்களில் வந்த அடையாளம் தெரியாத நபர்களால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். 2009 ஆம் ஆண்டு இலங்கைக்கு ஒரு சாபக்கேடாகும், லசந்தவின் கொலை மற்றும் வடகிழக்கில் நிகழ்ந்த முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை என ரத்தக்களரியில் இலங்கை தோய்ந்து கொண்டிருந்தது.
இந்தக் காலகட்டத்தில் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட பெரும்பாலான பத்திரிகையாளர்கள் இலங்கையின் தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மையினரைச் சேர்ந்தவர்கள். விக்கிரமதுங்கே பெரும்பான்மை சிங்கள இனத்தைச் சேர்ந்தவர், ஆனால் அவர் அரசின் தீவிர விமர்சகராகவும், பரவலாக அறியப்பட்ட, மதிக்கப்படும் ஊடக ஜாம்பவானாக இருந்தார். குறிப்பாக, அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் ராஜபக்ச சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் ஊழலை அவர் அம்பலப்படுத்தியிருந்தார். ராஜபக்ச, லசந்த மீதான அவதூறு வழக்கு தொடுத்திருந்த வேளையில் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கச் சில வாரங்களுக்கு முன்பு விக்கிரமதுங்க கொலை செய்யப்பட்டார்.
ஊழல் மற்றும் அவற்றுடன் வரும் தண்டனையின்மை குறித்த புலனாய்வு அறிக்கையிடல் காரணமாக லசந்த பல முறை மிரட்டல் முயற்சிகள், வழக்குகள் மற்றும் மரண அச்சுறுத்தல்களுக்கு இலக்காகி இருந்தார், இறுதியில் தனது சொந்த மரணத்தைத் தானே முன்னறிவிக்கும் ஆபத்தான நிலைக்குத் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். அவர் இலங்கையின் உள்நாட்டுப் போரைக் கடுமையாக விமர்சித்தவர், இனப் பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வை அடைவதை ஆதரித்தார். இலங்கை அரசாங்கத்தின் விசாரணை, லசந்த படுகொலை விவகாரத்தில் ஆரம்பத்திலிருந்தே குறைபாடுடையதாகவே இருந்து வருகிறது. ஆனால் அனுர தலைமையிலான அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டபோது இக்கொலைக்கு நீதி கிடைக்கும் என நம்பிக்கைகள் வெளிப்படுத்தப்பட்டன. முக்கியச் சந்தேக நபர்களின் சர்ச்சைக்குரிய விடுதலை உள்ளிட்ட சமீபத்திய நிகழ்வுகள் அரசியல் தலையீடு மற்றும் பலவீனமான நீதித்துறைக் கட்டமைப்புகளை அம்பலப்படுத்துகின்றன. இதுவரை எந்தச் சந்தேக நபர்களும் தண்டிக்கப்படவில்லை. உலகப் புகழ்பெற்ற பத்திரிகையாளரின் கொலையாளிகளைத் தண்டிக்கத் தவறி இலங்கை தடுமாறிக் கொண்டிருக்கின்றது. லசந்தவும் அவரது பத்திரிகையும் புலனாய்வு இதழியலின் (Investigative Journalism) சின்னமாகத் திகழ்ந்து இலங்கையில் ஊடகத்துறையில் ஒரு நீடித்த மரபை விட்டுச் சென்றுள்ளது. தனது கடைசி மூச்சு வரை மதச்சார்பற்ற இலங்கைக்கான, தொலைநோக்குப் பார்வையுடன் அச்சமின்றிப் போராடிய பேனாமுனையாக வாழ்ந்தவர்.
அவர் எழுதிய கடைசிப் பத்திரிகை தலையங்கத்திலிருந்து அந்த வலிமையான வார்த்தைகளை ஒருபோதும் மறக்க முடியாது. “வேறு எதுவும் நினைவில் இல்லை என்றால், இதை நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் சிங்களவராகவோ, தமிழராகவோ, முஸ்லீமாகவோ, தாழ்ந்த சாதியினராகவோ, ஓரினச்சேர்க்கையாளராகவோ, அதிருப்தியாளராகவோ அல்லது ஊனமுற்றவராகவோ இருந்தாலும், சண்டே லீடர் உங்களுக்காக இருக்கின்றது. அதன் ஊழியர்கள் தைரியத்துடன் பயமின்றி, தலைவணங்காமல் போராடுவார்கள். அந்த உறுதிமொழியைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள், நாங்கள் பத்திரிகையாளர்கள் செய்யும் எந்தத் தியாகங்களும் நம் சொந்த மகிமைக்காகவோ அல்லது செழுமைக்காகவோ செய்யப்படவில்லை என்பதில் எந்தச் சந்தேகமும் இருக்கக் கூடாது. அவை உங்களுக்காகவே செய்யப்படுகின்றன, நீங்கள் அவர்களின் தியாகங்களுக்குத் தகுதியானவரா என்பது வேறு விஷயம். என்னைப் பொறுத்தவரை, நான் முயற்சித்தேன் என்பது கடவுளுக்குத் தெரியும்.” என்பது அவருடைய கடைசி வாக்கியங்களாக இருந்தன.
உருளும் பனிப்பந்தானது அதன் பாதையில் காலப்போக்கில் அளவில் பெரிதாகிக் கொண்டே செல்லும். அதுபோல இலங்கையில் தொடர்ந்து நிலவும் சிக்கலான இனப் பிரச்சினை வருடங்கள் உருண்டோடும் போது அதன் சிக்கல் தன்மையை லசந்த புத்திசாலித்தனமாகக் கணித்தார். விரும்பியோ விரும்பாமலோ, இலங்கை அரசு இன்றுவரை மிகவும் வீரியமான ஆக்ரோஷமான தமிழ் புலம்பெயர்ந்தோர் சமூகத்துடன் போராட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்பு ஏற்பட்டால், அந்தப் பகுதிகளைச் சேர்ந்த தமிழ் மக்கள் என்றென்றும் இரண்டாம் தர குடிமக்களாக வாழ வேண்டியிருக்கும், அனைத்து சுயமரியாதையையும் இழந்திருப்பார்கள். போருக்குப் பிந்தைய காலத்தில் ‘வளர்ச்சி’ மற்றும் ‘புனரமைப்பு’ ஆகியவற்றை மட்டும் அவர்கள் மீது பொழிவதன் மூலம் அவர்களைச் சமாதானப்படுத்த முடியும் என்று நினைக்காதீர்கள். போரின் காயங்கள் அவர்களை என்றென்றும் காயப்படுத்தும், மேலும் நீங்கள் இன்னும் கசப்பான மற்றும் வெறுக்கத்தக்கப் புலம்பெயர்ந்தோரை எதிர்த்துப் போராட வேண்டியிருக்கும். ஒரு அரசியல் தீர்வுக்கு ஏற்ற ஒரு பிரச்சினை, நித்தியத்திற்கும் சண்டையை ஏற்படுத்தும் ஒரு புரையோடும் காயமாக மாறும். நாட்டு மக்களில் பெரும்பாலோரும் அரசும் இந்த வெளிப்படை உண்மையைப் புரிந்து கொள்ள முடியாமல் உள்ளனர் என அவரது விசனமாக இருந்தது.
“…சண்டே லீடர் தனது போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கும். இந்தப் போராட்டத்தில் நான் தனியாகப் போராடவில்லை, என் பத்திரிகையை மௌனிப்பதற்கு முன்பு, நம்மில் பலர் கொல்லப்படுவார்கள். எனது படுகொலை சுதந்திரத்தின் தோல்வியாகக் கருதப்படாமல், உயிர் பிழைத்தவர்கள் தங்கள் முயற்சிகளை முடுக்கிவிட ஒரு உத்வேகமாக இருக்கும் என்று நம்புகிறேன். உண்மையில், நமது அன்பான தாய்நாட்டில் மனிதச் சுதந்திரத்தின் புதிய சகாப்தத்தை ஏற்படுத்தும் சக்திகளை இது ஊக்குவிக்க உதவும் என்று நம்புகிறேன். தேசபக்தியின் பெயரால் எத்தனை பேர் படுகொலை செய்யப்பட்டாலும், மனித உணர்வு நிலைத்து வளரும் என்ற உண்மை, உங்கள் ஜனாதிபதியின் கண்களைத் திறக்கும் என்றும் நம்புகிறேன். அனைத்து ராஜபக்ஷர்களும் சேர்ந்து அதைக் கொல்ல முடியாது.” இதை நெஞ்சில் கொண்டு எழுதி விடுவதற்கு எந்த அளவு ஓர்மமும் உறுதியும் அஞ்சா நெஞ்சமும் கொண்ட ஆளுமையாக இருந்திருப்பார் என்பதை அறிய முடிகிறது.
2015 ஆம் ஆண்டில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கம், பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்கள் உட்பட முந்தைய அரசாங்கத்தின் மீறல்களுக்கு நீதி கோருவதாக வாக்குறுதிகளை வழங்கிப் பிரச்சாரம் செய்திருந்தனர். அந்த நேரத்தில், அனுபவம் வாய்ந்த துப்பறியும் நபரான சில்வா, குற்றவியல் புலனாய்வுப் பிரிவில் விக்ரமதுங்கவின் கொலை விசாரணைக்குத் தலைமை தாங்க நியமிக்கப்பட்டார். விசாரணையை முடக்கும் நோக்கில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததாக சில்வா தீர்ப்பாயத்தில் கூறினார்.
கொலை நடந்த கொழும்பின் தெற்கு புறநகர்ப் பகுதியான மவுண்ட் லவ்னியாவில் உள்ள உள்ளூர்க் காவல்துறையினர் ஆரம்பத்தில் விசாரணையைத் தொடங்கினர். பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரின் புகாருக்குப் பதிலளிக்கும் விதமாக வழக்கு, ஆண்டின் பிற்பகுதியில் குற்றவியல் புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டது, இது விசாரணையைத் தொடர்வதற்குத் தேவையானஅதிக வளங்களைக் கொண்டிருந்தது. ஆனால் அடுத்த ஆண்டு, வழக்கு மீண்டும் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவுக்கு (TID) மாற்றப்பட்டது, சில்வாவின் வாய்மொழிச் சாட்சியத்தின்படி, விசாரணைக்கான அனுபவமோ அல்லது வளமோ அங்கு இல்லை, விசாரணையும் நாளடைவில் நிறுத்தப்பட்டது. காரில் இருந்த விக்ரமதுங்கேவின் குறிப்பேடுகளை போலீசார் கைப்பற்றினர். ஆனால் அவை காவல்துறை துணைத் தலைவரால் பறிமுதல் செய்யப்பட்டன. அதன் பிறகு அவை காணாமல் போயின. ஒரு நோட்புக் அட்டையின் புகைப்படம், விக்ரமதுங்கே கொலை செய்வதற்கு முன்பு எழுதிய மோட்டார் சைக்கிள் உரிமத் தகடு எண்களைக் காட்டுகிறது. சில்வாவின் எழுத்துப்பூர்வச் சாட்சியத்தில், விக்ரமதுங்கேவைத் துரத்திய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் பயன்படுத்திய செல்போன் சிம் கார்டுகள் விவரிக்கப்பட்டுள்ளன. அவை இராணுவ உளவுத்துறையுடன் தொடர்புடைய ஒரு நபரிடமிருந்து கண்டுபிடிக்கப்பட்டன. சிம் கார்டுகளுடன் தொடர்புடைய மற்றொரு நபர் காவலில் இறந்தார், இம்மரணத்தை சில்வா “சந்தேகத்திற்குரியது” என்று கூறினார். இந்த மரணத்தைத் தொடர்ந்து எந்த விசாரணையும் நடைபெறவில்லை.
லசந்த இன்று உயிருடன் இருந்திருந்தால் 67 வயதை எய்தியிருப்பார். மத மற்றும் இனச் சமத்துவமின்மையை உடைத்து அமைதி, நல்லிணக்கம் மற்றும் நீதிக்கான அவரது அர்ப்பணிப்பு வீண் போகாது இலங்கையில் ஒரு புதிய சகாப்தம் உருவாக வேண்டும்.
லசந்த படுகொலை வழக்கைத் தீர்ப்பதற்கான NPP அரசாங்கத்தின் முயற்சிகள், அனுர குமார திசாநாயக்கவின் மனித உரிமைகளுக்கான உறுதிப்பாட்டினைத் தீர்மானிக்கும் ஒரு சின்னமாகும். சர்வதேச அரங்கில் இலங்கையின் நற்பெயரைப் பேணுவதற்கு லசந்தவின் படுகொலைக்கு மட்டுமல்லாது உயிர்போக்கப்பட்ட அல்லது காணாமல் ஆக்கப்பட்ட ஏனைய ஊடகவியலாளர்களுக்கான நீதி இப்போது அவசியமான அவசரமான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. நாட்டிற்கான அவரது மகத்தான சேவையைக் கௌரவிக்கும் விதமாக, லசந்த விக்ரமதுங்கவிற்கும், அவரது குடும்பத்தினருக்கும் கிடைக்க வேண்டிய நீதி விரைவில் கிடைத்து விடும் என்று நம்புவோம்.
பத்திரிகையைத் துறையில் ஓராண்டு பட்டயப் பிடிப்பை முடித்துக் கொண்டு இலங்கையில் ஊடகவியலாளராக தினக் குரலிலும் சண்டே லீடர் பத்திரிகையிலும் பணியாற்றியவர். பின்னர் இங்கிலாந்தில், கணக்கியலில் இளம் கலை பட்டத்தையும் பயின்று அத்துறையிலும் சட்டத்துறையிலும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது கணக்கியல் துறையில் பணி புரிந்து கொண்டு, அரசியலில் முதுகலைப் பட்டத்திற்குப் பகுதி நேரமாகப் பயின்று வருகிறார். இடதுசாரியான இவர் லண்டனில் பல புத்தக விமர்சனங்கள் மற்றும் பெண்ணியச் செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். இவரின் முதலாவது நூல் “கருப்பை அரசியல்” மிக அண்மையில் வெளியாகி உள்ளது. காட்சிமொழி காலாண்டிதழ் மற்றும் தினகரன் (இலங்கை) ஞாயிறு வார மஞ்சரியான சாளரம் ஆகியவற்றுக்கு ஆக்கங்கள் எழுதி வருகிறார்.








Leave a Reply