அவர்கள்
உன்னிடம் இருக்கும் நான்
என்னிடம் இருக்கும் நீ
அவரவர்கள் அவரவர்களுக்கு உரியவர்களை எடுத்துக் கொண்டார்கள்.
எடுத்துக் கொண்டவர்களைப் பார்த்து
எப்பொழுதும் மௌனமாகக் கவனித்துக் கொண்டிருப்பவர்கள் இருக்கிறார்கள்.
அவர்கள் ஒருவரை ஒருவர்
கண்காணிப்பவர்கள்,
சுதாரிப்பாக இருப்பவர்கள்,
கவனத்தின் பனி மூடிய இரவுகளில் விழித்திருப்பவர்கள்,
அவர்கள் ஒருவரின்றி ஒருவரோடு பேசுபவர்கள்
ரகசியத் தர்க்கம் செய்பவர்கள்.
அவர்கள் வாழ்நாளில் கடைசி வரைக்கும்
சந்திக்காமல் மரிக்கப் போகிறவர்கள்.
அவர்கள் என்னிடம் இருக்கும் நான்
உன்னிடம் இருக்கும் நீ
அருள் கூற்று
தாய் அருவி கொட்டுகிறது
ஊறிய மருந்தாகக் கொட்டுகிறது
நிலவு உருகி பாலருவியாகக் கொட்டுகிறது
தெய்வத்தின் அருள்
நீரின் வடிவில் கொட்டுகிறது
சித்தம் தணிந்து தெளிய கொட்டுகிறது
மொழியின் வனத்திலிருந்து
கவிதையின் உச்சாடனம் இடையறாது கொட்டுகிறது
மிக உச்சியில் இருந்து
உன் உச்சிக்குக் கொட்டுகிறது
காரணங்களின் காரணம்
காரணம் கேட்கிறார்கள்
எல்லாவற்றுக்கும்,
எல்லா இடங்களிலும்
ஏதோ ஒரு காரணம் தேவைப்படுகிறது
எல்லோருக்கும்,
எல்லோரும் சொல்கிறார்கள்
காரணங்களை,
பெரிய பொய்கள் காரணங்களில்
பதுங்கி மறைந்திருக்கின்றன,
உண்மையான காரணங்களை
பலரால் சொல்ல முடியவில்லை,
எல்லோரும் காரணங்களைக் கண்காணிக்கிறார்கள்.
காரணங்களைப் பரப்புகிறார்கள்
காரணங்களைப் போற்றுகிறார்கள்
காரணங்களை அவதூறு செய்கிறார்கள்
காரணங்களை புறங் கூறுகிறார்கள்
பலர் அதை மிகவும் கௌரவமாக விரும்புகிறார்கள்,
பள்ளிக்குப் போகாமல்
ஒரு காரணத்தை விடுமுறைக்கு எழுதச் செய்யும்
குழந்தைகளுக்குக் காரணங்களைக் கையாளும் பயிற்சியை ஆரம்பித்து விடுகிறார்கள்,
இறந்த காரணத்தை அறிய முற்படுவதன் அவசரமும்
அவர்கள் வாழ்ந்த காலத்தின் காரணங்களை அறியாமல்
விட்டு விடுவதும் வினோத வாழ்வின் நடனம்,
காரணமின்றி நடக்கும்
எதிர்பாராச் சம்பவங்களுக்குப் பின்னே
யாரோ காரணத்தோடு சிரிக்கிறார்கள்,
அதைக் கடவுள் என்கிறார்கள் சிலர்.
அதை விதி என்கிறார்கள் பலர்,
காரண காரியமின்றி
நிகழப்போகும் ஒரு மனித நட்பை
நான் உவந்து மகிழ்கிறேன்.
மனம்
எல்லோரோடும் இருக்க முடியாமல் போகிறது
சிலரோடு இருக்க நேர்கிறது
இருக்க நினைப்பவர்களோடு
இருக்க நினைத்தாலும்
அவர்களுக்கு
அந்த எண்ணம் இல்லாமல் போய்விடுகிறது
நம்மோடு சிலர் இருக்க விரும்புகிறார்கள்
கொஞ்சம் விலகியிருந்தால் தேவலையென்று படுகிறது
திண்ணையில் படுத்துக்கொள்வேன்
தெருமுனை டீக்கடையில்
படித்த தினத்தந்தி மீது
சிறு கல் வைத்து மறக்காமல்
வந்த வழி ஊன்றி
திண்ணையில் மீண்டும்
படுத்துக் கொள்வேன்.
வெயில் மழை பனி எல்லாம்
அதற்குள் அந்த எல்லைக்குள்
வந்து போய்விடுகிறது
யாரும் வரவில்லை
யாரும் வர வேண்டாம்
ஊரெல்லாம் சுற்றிவிட்டு
நேரத்திற்கு வந்து சேரும்
இங்கு வளரும் நாய்
சிறிது அதிகாரம் செய்ய எனக்கு,
மகாமுனி வருசநாட்டு கருப்பண்ணசாமியிடம்
எனக்குப் போதும் என்று சொல்லி
நாளாயிற்று,
காத்திருக்கிறேன்.
Art : Isabella Lee








Leave a Reply