பை (π) க்கான ஒரு வாழ்த்துப் பா
– விஸ்லாவா ஸிம்போர்ஸ்கா
வியத்தகு எண்ணாகிய பை
மூன்று புள்ளி ஒன்று நான்கு ஒன்று, 3.141
அதைத் தொடர்ந்துவரும் எண்களும்கூட தொடக்கமே
ஐந்து ஒன்பது இரண்டு, ஏனெனில் அது ஒருபோதும் முடிவுறுவதில்லை
ஆறு ஐந்து மூன்று ஐந்து, அவற்றை ஒரே நோட்டத்தில் கிரகிக்க முடியாது
எட்டு ஒன்பது எனக் கணக்கீடுபுரிய முடியாது.
ஏழு ஒன்பது, கற்பனையாலும் வசமாகாது
மூன்று இரண்டு மூன்று எட்டு என ஒரு விகடத்தாலும் பிடிக்க முடியாது.
நான்கு ஆறு, ஒப்பீடு செய்தாலும்
இரண்டு ஆறு நான்கு மூன்று என உலகில் எதனோடும்
அளவிட முடியாது.
இந்தப் பூவுலகின் மிக நீண்ட பாம்பு நாற்பது அடிகளில் முடிந்து போகிறது.
தொன்மங்கள் புராணங்களின் பாம்புகள் கொஞ்சம் அதிகம் நீளலாம்.
ஆனால், பையைப் பொதிந்த இலக்கங்களின் அணிவகுப்போ,
தாளின் விளிம்பில் முடிவதில்லை.
அது மேசையைக் கடந்து, காற்றை அளாவி, சுவரைத் தாண்டி
ஓர் இலையை, பறவைக் கூட்டை, முகில்களை, விசும்பை ஊடுருவி,
அந்தமிலாத, அகண்ட பரவெளிகளைக் கடந்து செல்கிறது.
எலியின் வால் போல, பன்றிக்குட்டியின் வால் போல
எத்தனை குறுகியது, எரிமீனின் வால்!
விண்வெளியை மோதுற்று மடியும் நட்சத்திரத்தின் ஒளிக்கதிர் எத்தனை நலிந்தது!
ஆனால் இங்கு நமது பை- யுள் அடங்கியுள்ளது
இரண்டு மூன்று பதினைந்து முன்னூற்று பத்தொன்பது
எனது தொலைபேசி எண், உங்கள் சட்டை அளவு,
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபத்து மூன்று எனும் ஆண்டு
ஆறாவது மாடி, மக்கள் தொகை எண்ணிக்கை, அறுபத்தைந்து சென்ட்,
இடுப்பின் அளவு, இருவிரல்கள், சொற்புதிர், சங்கேதங்கள்,
மேலும் அதனுள் கண்டறியலாம் வாசகங்களை:
hail to thee, blithe spirit, bird thou never wert
ஆராதிக்கிறேன் உனை, குதூகல ஆன்மாவே
நீ வெறும் பறவையன்று
“தாய்மார்களே, கனாவான்களே அமைதி கொள்க.”
மேலும்
“பரலோகமும் இகலோகமும் கூட மறைந்து போகும்!”
ஆனால் பை மறையாது, அதற்கு வழியே இல்லை.
அது தொடர்கிறது, தனது தீர்க்கமான ஐந்துடன், விசேடமான எட்டுடன்
ஏழிலிருந்தும் முடிவிலாத தொலைவுகளுடன்
மெல்ல உந்தித்தள்ளி
மந்தகதியான நித்தியத்தை நீளச்செய்து
மெல்ல உந்தித்தள்ளி
அது தொடர்கிறது..

சாத்தியமாகக்கூடியதன் காலம்
– மரியா பப்போவா
அங்கு,
ஜீவிதத்தின் அடியாழத்தில்
இக்கோளைப் பூவுலகாக உயிர்ப்பிக்கும் நீருலகு
கால-வெளியின் நிறம் தரித்துள்ளது.
ஆக்டோபஸ்
தனது
உடல் வடிவ மனத்துடன்
அந்நிய உலகின் தினப்பாடுகளை அளாவும்
எண் கரங்களுடன்
துருவமயமான ஒளியை உணரும்
நிறக்குருடுப் பார்வையுடன்
எப்போதும் வியப்பில் விரிந்த
மூடிதழ் அற்ற கண்ணுடன்
நமக்குப் புலப்படாத நீலத்தின் சாயைகளைப் பார்க்கிறாள்.
அளந்துணரமுடியாத பூரணத்தின் மகத்துவத்தை அளந்திட
நாம் பழகிய சொற்களில்தான் சாயமுடியுமென்றால்
அவளைக் ’கடவுளெ’ன்று விளித்துக் கொள்ளலாம்.
இதற்கிடையில், மேற்பரப்பில் இங்கு நாம்
கற்பனைக்கெட்டா பரிமாணங்களில் மடங்கியிருக்கும்
புரிந்துணரமுடியாத துகள்களின் மத்தியில் நீந்திக்கொண்டு,
எது உண்மை
எது சாத்தியமானது
இருத்தல் என்பதன் பொருளென்ன
என்றெல்லாம் கதைகள் பின்னுகிறோம்.
சிமிட்டும் காலத்துக்கு முன்பாக
நாம் ஆக்டோபஸ் என்பது சாத்தியமில்லை என நினைத்தோம்.
முந்நூறு ஃபாதம்களுக்குக் கீழாக
இந்த நீல உலகு உயிரற்றது என நம்பினோம்.
ஆனால் 1898 இல்,
பாஹ்க் தன் இசைக்குறிப்பின் ஓரத்தில்
“சாத்தியமாக முடிந்த எதுவும் மெய்யே” எனக் கிறுக்கியதன் பிறகான
ஒரு யுகத்தின் பின்பு
நீல ஆழத்தில் நமது எந்திரக் கண்களை மூழ்கடித்து
ஓர் உயிர்ப் பிரபஞ்சத்தைக் கண்டறிந்தோம்,
அங்கு அந்த ஆக்டோபஸ் சாத்தியமானதாகவும் கடவுளற்றும் இருக்கிறாள்.
அவளது மூன்று இதயங்களில் ஒன்றேனும்
நமக்காக,
நமது அசாத்திய துயரங்களுக்காக வருந்திடுமா?
உற்றுக் கவனித்திருக்கிறோம்.
– டையன் ஆக்கர்மன்
பூரண இருளுக்கு
எமது உலோகக் கண்கள் விழிக்கும் போது
காலத்தின் மூலாந்திரத்திலிருந்து
மிதந்து வரும் முணுமுணுப்பைக் கருதி
செவிகளை பரமண்டலங்கள் நோக்கிக் குவிக்கிறோம்
நாம் உற்றுக் கவனிக்கிறோம்
ப்ளாக்ஸ்டாஃபின் எரிமலை உதடுகளில் இருந்து
பாஸ்டனுக்குப் புறத்தான வயல்களில் இருந்து
பாலைவனப் படுகையில், பவளங்களைப் போல மலர்ந்த
பிரமிக்கும் வரிசைகளில் இருந்து
பியூர்டோ ரிக்கோவின் கணினிச் சிலந்திகள் ரோந்துபுரியும்
உயர் வடங்களின் வலையகங்கள் மீதிருந்து
ஆழ்ந்து செவிகூர்கிறோம்..
ஓர் ஒலிக்காக..
நமக்கு அப்பாலான, ஒலிக்கு அப்பாலான
ஓர் ஒலிக்காக..
எமது உறுதியின்மையின் அலைதாங்கிகளில்
கலங்கரை ஒளியொன்றைத் தேடுகிறோம்..
ஒரு மின்னணு முனகலுக்காக
நம்பிக்கைதரும், சன்னமான ஒரு “நான் இருக்கிறேன்”
முடிவிலாத சதுப்புவனத்தில் ஒரு சிறு முனையைக்
காத்து நிற்கும் மரத் தவளைகள் போலும் சின்னஞ்சிறிய
நாம், அனுமானிக்கின்ற இரவை
நட்சத்திரங்களின் வாழ்வுக்கும் காலத்திற்குமிடையில்
நீளும் மிக நெடிய இரவைச்
செவிகூர்ந்து கவனித்திருக்கிறோம்..
உள்ளார்ந்த மின்னதிர்வில் எமது குரல் நடுங்குகிறது
உடும்புகளைப் போன்ற உளப்பாங்கெய்திய நாம்
ஆயுளின் மூன்றிலொரு பகுதி துயிலுறும் நாம்
பசிய வேட்டையின் வெதுவெதுப்பைப் போல
உணவைச் சூடேற்றி
பின் ஆடம்பர அலங்கார நடத்தையுடன்
விருந்துண்டு அதைக் குளிரவிடுகிற நாம்
ரேடியோ தொலைநோக்கிகள், நோவுவது போல தம் தலைகளைச் சுழற்ற
பாரசீக லைலாக்குகளும் சில்வண்டுகளும் சூழ,
சிந்தனைப் புல்வெளியிலும் நிஜத் தாழ்வாரங்களிலும்
உற்றுக் கவனித்திருக்கிறோம்
பரபரத்த புத்தியுடன், இமைகொட்டா உறுதியுடன்
மெலிந்த, குழைவான தேகத்துடன்
தாவுறும் அகவிருப்புகளுடன்
கனத்த பேரண்டத் தனிமையுடன்
காதல் தத்துறும்
அலைமுடுகும் இதயங்களோடு
அபாரக் கனவுகள்தாங்கிய
சிறிய இருகாலிகளான
நாம் செவிகூர்ந்து கவனித்திருக்கிறோம்.
ஒரு செவ்வாய்க் கோளர் தன் வீட்டுக்கு அனுப்பும் அஞ்சலட்டை
– கிரெய்க் ரெயின்
காக்ஸ்டன்கள் (*புத்தகம்) பற்பல சிறகுகள் கொண்ட எந்திரப் பறவைகள்
அவை சில விசேட அடையாளங்களுக்காக பொக்கிஷப்படுத்தப்படுகின்றன.
அவை கண்களை உருக வைக்கின்றன
வலியின்றி உடலை அலறச் செய்கின்றன.
அவை பறப்பதை நான் பார்த்ததே இல்லை
ஆனால், சிலநேரம் அவை கைகளில் அமர்கின்றன.
மூடுபனி என்பது வானம் தன் பறத்தலில் சோர்ந்து
தனது மென்மேக எந்திரத்தைத் தரையில் ஓய்வெடுக்கச் செய்வது..
பின் உலகம் மங்கலாகவும் புத்தகம் போலவும்
மென்துகிலின் மூடிய செதுக்குதல்கள் போலும் ஆகிறது.
மழை என்பது பூமி ஒரு தொலைக்காட்சியாகும் நேரம்,
அது வண்ணங்களை அடர்த்தியாக்கும் பண்புகொண்டது.
T உருமாதிரி (மகிழுந்து) என்பது உள்ளே பூட்டுள்ள ஓர் அறை,
உலகை விடுவிக்க, உள்ளே ஒரு சாவி திருப்பப்படுகிறது .
வெளியே சட்டென அசைவுகளின் திரைக்காட்சி ஓடுகிறது
தவறாது கண்டுகளிக்க..
ஆனால் காலம் மணிக்கட்டில் கட்டப்படுகிறது
அல்லது டிக் டிக் எனப் பொறுமையின்றிக் காத்திருக்கப் பெட்டியில் வைக்கப்படுகிறது.
வீடுகளில், பைசாசக் கருவி ஒன்று தூங்குகிறது,
எடுத்தால் அதில் குறட்டை ஒலிக்கும்.
அந்தப் பைசாசம் கரைந்தழுதால் அவர்கள் அதை
உதடுகளுக்கு எடுத்துச் சென்று
மெல்லொலிகளால் உறக்கத்திற்கு ஆறுதல்படுத்துகிறார்கள்.
சில நேரம் வேண்டுமென்றே, விரல்களைச் சொடுக்கி அதை எழுப்புகிறார்கள்.
பாலகர்கள்தான் திறந்தவெளியில் வருத்திக்கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள்
பெரியவர்களோ தண்ணீரோடு ஒரு தண்டனை அறைக்குச் செல்கிறார்கள்
அங்கு சாப்பிட எதுவுமில்லாமல்,
அங்கு கதவைச் சாத்திக்கொண்டு தனிமையில் சப்தங்களை வருத்திக்கொள்கிறார்கள்.
எவரும் விதிவிலக்கல்ல.
ஒவ்வொருவரது வருத்தத்திற்கும் விசேட வாசனை உண்டு.
இரவில் எல்லா நிறங்களும் இறந்தபின்னர்
அவர்கள் ஜோடிகளாக மறைந்துகொண்டு
தங்களைப் பற்றித் தாங்களே வாசிக்கிறார்கள், வண்ணமயமாக,
இமைகளை மூடியபடி.
வல்லமை
– அட்ரியன் ரிச்
நமது சரித்திரத்தின் புதைபடிவுகளின் மீது வசித்திருக்கையில்
இன்று, நொறுங்கும் இடிபாடுகளின் பக்கம்
அகழ்பொறி, தேன்நிறக் குப்பி ஒன்றை வெளியெடுத்தது..
அது நூறாண்டு பழையது,
காய்ச்சலுக்கும் மனத்துயருக்கும் நிவாரணமாகும்,
இங்கு குளிர்காலங்களில் வாழத் துணைபுரியும் ஒரு சத்து மருந்துக் குப்பி..
இன்று நான் மேரி க்யூரி குறித்துப் படித்துக்கொண்டிருந்தேன்
தான் கதிர்வீச்சு சீக்கால் பாதிக்கப்பட்டிருப்பது அவளுக்குத் தெரிந்திருக்கும்.
தான் சுத்தீகரிப்பு செய்த தனிமத்தால் அவள் உடல் பல வருடங்களாகத் துளைக்கப்பட்டிருந்தது.
தனது கண்களில் இறங்கிய புரையைப் பற்றியும்
வெடிப்புகளும் சீழ்ப்புண்ணும் பரந்த விரல்நுனிகள் பற்றியும்
ஒரு பென்சிலையோ சோதனைக் குழலையோ கூட
ஏந்த முடியாமல் போனது வரையும் அதன்
மூலக்காரணத்தையும்
அவள் கடைசிவரை ஒத்துக்கொள்ள மறுத்ததாகத் தெரிகிறது.
தனது ரணங்களை மறுத்தபடியே
அவள் புகழ்பூத்த சீமாட்டியாக மரித்தாள்.
அவளது வல்லமையின் அதே மூலத்திலிருந்துதான்
அவளது ரணங்களும் வந்தன என்பதை மறுத்தபடியே.

Art : Etsy
பிரவீண் பஃறுளி, இயற்பெயர் நா.பிரவீண் குமார். சென்னை, குருநானக்கல்லூரி தமிழ்த்துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். தமிழ் விமர்சன வரலாறு குறித்து ஆய்வு செய்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். புறனடை, இடைவெளி, பாபல் ஆகிய சிற்றிதழ்களில் ஆசிரியராகப் பங்களித்துள்ளார். அயல்மொழிக் கவிதைகளை ‘திணை மயக்கம்’ என்னும் நூலாக மொழிபெயர்த்துள்ளார்.
சிற்றிதழ்களில் அறிவியல் புனைவுகளை மொழிபெயர்த்துள்ளார்.
கல்குதிரை, மணல் வீடு, இடைவெளி, வனம், கனலி,ஓலைச்சுவடி உள்ளிட்ட சிற்றிதழ்களில் எழுதிய விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பாக “அளாவும் புல்” என்னும் நூல் வெளிவந்துள்ளது. தனி-மை வெளி, சிறுபத்திரிகை, வனம், கல்குதிரை ஆகிய இதழ்களில் புனைகதைகள் எழுதி வருகிறார். பல மொழிபெயர்ப்பாளர்களின் பங்களிப்புடன் முன்னோடியான உலக அறிவியல் சிறுகதைள் பலவற்றைத் தொகுத்து ” மீ : உலக விஞ்ஞானப் புனைவு புத்தகம் என்னும் பெருந்தொகுப்பைக் யாவரும் வெளியீடாகக் கொண்டு வந்துள்ளார்.








Leave a Reply