என் புனிதச் சமூகத்தெச்சங்கள்
குருதி நதி வழிந்தோடிக் கலந்த
கடலின் மீன்கள்
நாவூஉர ருசிக்கின்றன
ஆண்டவனை அண்டிய அம்மனசுகள்
ஆசைகளோடு அரக்கராகிக் கொள்கின்றன.
அம்மணமாகியவை எல்லாம்
ஆடைக்கு அடுக்கடுக்காய்
மேலாடை அணிகின்றன.
ஆனந்த அரசொன்றின்
அழிவினிலே ஆங்காங்கே
நரிகளின் வீடுகள் தோன்றுகின்றன.
காலோடு கையில்லாக் காவலன் வீட்டிலே
காட்டுக்கிழங்கு கறிக்குச் சமைக்கிறாள்.
அவன் காலையும் கையையும்
விற்றவன் பரம்பரைக்கோ
பசும்பொன் சொத்துக்கள்.
கண்ணொன்று இல்லாமல்
காதொன்றும் கேளாமல்
களமாடியவனோ இன்று
கையேந்தி அலைகின்றான்
கடவுள் தேசத்துச் சுடலைகள் மீது
சிவப்பிரிய எருக்களைகள்தான் பூஜிக்கின்றன
வார்த்தெடுத்த சமூகத்தின் எச்சங்கள்
இன்று வாசனை போதையில்
கூட்டுக் களியாடுகின்றன.
நிகழ்ந்ததால் நிகழ்வதைக் கண்டு
செல் விழுந்து செத்த பேய் ஒன்று
ஆலமரக் கீழிருந்து அழுதுகொண்டிருக்கிறது.
காலணியில் சிரிக்கும் கண்டிக் காந்தள்
கார்த்திகை மலரே…
உன்மீதான மழையின் காதலால்
கொட்டித் தீர்த்து
உனை உயிர்ப்பித்து விடுகிறது
கார்த்திகையில் மலர்கிறாய்
தையில் இறக்கிறாய்
நீயல்லவோ மழையின் காதலி
வந்தேரி தேசத்தவன்
உனைக் காலணியில் காட்சியாக்கிக்
கால்களிலே மாட்டுகிறான்.
கண்டனக் கூட்டமொன்று
கண்ணீரோடலைகிறது.
கண்கொண்டு பார்த்தாலே
கண்வருத்தம் வருமென்று
காதாலே முன்னொருகால்
கருத்தொன்று கேட்டதுண்டு.
பூசைகளில் உன்னை ஏற்க
கடவுளுக்கு மனசில்லை
மாலையாக்கி மகிழ்விற்க
மனிதனுக்குத் துணிவில்லை
உனைப் போற்றித் தொழுதோரோ
போரிட்டு மாண்டுவிட
அவர் மரணப்படுக்கைகள் மீது
இன்றும் தான் நீ பூத்துச் சிரிக்கிறாய்
யார்தானுனைக் கிள்ளியெடுத்து
அணைத்து அணைத்து முத்தமிட்டு
முகை சிந்தும் கண்களில்
ஒற்றிக் கொண்டனர்.
காலணியில் உனைக்கண்டு
கதிகலங்கிப் போனோரோ
கதறிக்கொண்டு உயிருருகி
உனையள்ளிப் பூஜையறையில்
பூசிக்கவல்லவா போகின்றனர்.
முற்றத்துத் துளசிகளில்
முன்னிருந்து நீ சிரிக்கையிலே
முக்கால விளக்கேற்றி
விரதங்களும் இருக்கலாம்.
மறந்துவிட்ட மனிதனொன்று
கண்டிக்குச் சென்றவேளை
காலணியை மாற்றியதால்
வீட்டுத் துளசிக்குத் தூரமாய்….
காந்தல் மலரிரண்டு காலணியில் சிரிக்கின்றன.
Art : Shusha Guna
ரவிக்குமார் பிரமிளா என்னும் இயற்பெயரைக் கொண்ட பிரமி ருத்ரா இலங்கை கிளிநொச்சியில் பிறந்தவர். இளங்கலை, முதுகலைப் பட்டங்கள் பெற்றவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் உதவி விரிவுரையாளராகக் கடமையாற்றியுள்ள இவர், தற்போது சிங்களப் பாட ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார். இலங்கையிலிருந்து வெளியாகும் ஞானம் அச்சிதழில் இவரின் கவிதைகள் வெளியாகி உள்ளன.








Leave a Reply