1. மின்மினிப் பூச்சிகள்
மலைக் கரையோர இருளில் மின்மினிப் பூச்சிகள் கூட்டம் ஒன்று சூரியனின் கனவைத் தங்கள் மிகச் சிறிய உடல்களில் ஏந்திக்கொண்டிருந்தது. ஒவ்வொரு ஒளியும் துகள் துகளாகச் சேர்த்து வானத்தைக் கருநீல ஒளியால் வலைபின்னியது. அங்கே பறந்து சென்ற விண்கலம் அந்த ஒளியின் மங்கலான வழிகாட்டுதலால் தன் வழியை மாற்றியது. மனிதர் வரைந்த விண் வரைபடத்தை விட, பூச்சிகளின் ஒளிக்கிரகணமே விண்வெளியின் மஹா ரகசியம் எனவும் மின்மினிகள் நிரூபித்தன.
2. சரிந்த மலை
சஹாராவின் மணற்பரப்பிற்கு அந்தப்பக்கம் பன்னெடுங்காலமாகக் காற்றால் பலவந்தமாகக் கீறப்பட்ட மலைச்சரிவு திடீரென உயிர்பெற்றது. சரிந்த மலை திடீரென நிமிர்வது எவ்வளவு அற்புதம். கீழே கிடந்த மணற்துகள்கள் ஒரே நேரத்தில் நடனமாடி, ஒவ்வொரு சிறு துகளின் வடிவமும் பிரபஞ்சத்தின் பழைய மணல் எழுத்துக்களிலிருந்து பறந்து நிமிர்ந்த மலை மீது பனி போல நிறைந்தது. புவியின் நினைவுகளைத் தாங்கும் அந்த நிமிர்ந்த மலைஆயிரம் ஆண்டுகளாகக் குனிந்த நிலையில் புதைக்கப்பட்ட உயிர்களின் குரலை வெளிப்படுத்துகிறது.
3. உஷ்
முற்காலத்தில் பெருங்கடலின் நடுவே உள்ள அந்தத் தீவில், பாம்புகள் ஒருபோதும் தரையைத் தொடவில்லை. அவற்றின் பீதியேற்படுத்தும் மூச்சொலி காற்றில் மிதக்கும் ஒலி அலைகளில் பயணித்தன. மறை ஞானிகள் அவற்றை அணுகினால், ஒலி அலைகள் நாற்புறமும் சிதறி மரண பயத்தின் இசை ஆனது. அங்கே வாழ்ந்தோர் அந்த இசையின் மூலம் காலத்தைக் கணக்கிட்டனர். தீவு தனக்குத்தானே எக்கணமும் உஷ் எனும் ஓர் உயிருள்ள இசைக்கருவியாக விளங்கியது. வேறு ஜீவராசிகள் அங்கே தலை காட்டவில்லை.
4. பறக்கும் அருவி
ஆழ்கடலில், பாறைகளுக்கிடையில் மறைந்து இருந்த ஒரு கருந் துளையில் நீர்க்காற்று எதிர்பாராத விதமாக மேலே பாய்ந்து அருவியாக எழுந்தது. அந்த விநோத அருவி கீழே அல்ல, மேலே பீறிட்டு ஓடியது. மீன்கள் அதில் பாய்ந்து வானில் திளைத்தன. கடற்கரையில் நின்ற ஒரு குழந்தை நம்ப முடியாத இக்காட்சியை, மனிதக் கண்களுக்கு அப்பாற்பட்ட தரிசனமாகத் தன்னையறியாமலேயே ஒரு கணம் கண்ணுற்றது. அந்த ரகசியம் பூமியில் ஒருவருக்கும் இதுகாறும் யாராலும் சொல்லப்படவுமில்லை.
5. எறும்பு கொசு ஈ
எறும்பும் கொசுவும் ஈயும் இந்த உலகத்தை எப்படிப் பார்க்கும். எறும்பு பூமியை வானளாவிய சுவர் போல கண்டது. கொசு மனிதரின் தோலை அதிகம் புளித்த ஆரஞ்சுத் தோல் போலக் கண்டது. ஈ அழுகிச் சிதைந்த உணவின் வாசனையைப் பிரபஞ்சத்தின் நறுமணமெனக் கண்டது. இந்த மூன்று மிகச் சிறு உயிர்களின் வேறுபட்ட பார்வை ஒன்றாகச் சேரும்போது, மனிதக் கண் காணாத உலகின் வேறுவடிவம் உருவாகியிருப்பது போல. இப்படி வெவ்வேறு பல்லுயிர்களின் பார்வையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாம் நம் கண்களில் காணக் கூடாத முற்றிலும் புதிய விநோத அண்ட கோளங்கள் ரகசியமாக ஒளிந்து கொண்டுள்ளன. நாம் வாழும் இப்புவிக்கோளம் முழுவதும் ஒரு மனித உயிரினத்தின் பெருங்கனவாக மட்டுமே இதுகாறும் இருந்தது.
6. அருங்காட்சியகம்
ராஜஸ்தானின் கர்ணி மாதா கோவிலில் ஆயிரக்கணக்கான எலிகள் பக்தர்களின் காலடியில் சுதந்திரமாக ஓடித்திரிகின்றன. அவற்றின் மனித பயம் எங்கே மறைந்ததென்பது புதிராக இருந்தது. ஆனால் இரவில், அவற்றின் நிழல்கள் கோவில் சுவரில் மனித வடிவம் கொள்கின்றன. அந்த நிழல்கள் என்ன பேசுகின்றன என்பது யாருக்கும் புலப்படவில்லை. வரலாற்றில் மறைக்கப்பட்ட அரசர்கள் மற்றும் மகா ராணிகளின் உள்ளக்குரல்கள் அங்கே ஒலித்தன. கோவில் தனக்குத் தானே வரலாற்றை உயிரோடு வைத்த எலிகளின் அருங்காட்சியமாக வெளிப்பட்டது. எலிகளின் பிரார்த்தனைகளை மனிதர்கள் வெளியே சொல்லா விட்டாலும் மனிதர்கள் இன்னும் மிருகங்களின் மீதுள்ள பயத்தை விடவில்லை. இந்த எலிகளோ தீவினைகள் நிறைந்த மனிதர்கள் மீதான குலை நடுக்கத்தை
வேண்டுதல் ஏதுமின்றியே தாண்டிச் சென்றுவிட்டன.
7. பென்குயின்
எங்குமே இருள். ஒரு சிறு தீக்குச்சியளவு ஒளியே பூமியிலிருந்தது. தென் துருவத்தின் பனிக்கட்டிகளுக்கு நடுவே, ஒரு பென்குயின் ஒவ்வொரு நாளும் வட துருவத்தை நோக்கிப் மெதுவாகப் பயணம் செய்தது. பனி வழியாக அது சிற்றொளியின் அடிச்சுவட்டைத் தொடர்ந்து சென்றது. ஒருநாள், யாரும் நம்ப முடியாத அளவிற்கு அது வானின் யாரும் காண மாயக் கதவைத் தட்டியது. மேகத்தை உடலாகக் கொண்ட ஒரு வெண் கொக்கு மந்திரக் கதவைத் தன் சிறகால் நீக்கித் திறந்தது. அங்கே இருந்து வெளிச்சம் பாய்ந்து இருளில் விடப்பட்டிருந்த புவியை சம்பூர்ண வெளிச்சமாக்கியது. அந்த பென்குயின் வெளிச்சத்தின் பொருட்டு பூமியின் சமநிலையைத் தன் தேடுதலில் தாங்கியதின் பொருட்டு அது ஓர் அதிரகசியக் காவலாளியும் ஆனது.
8. விண்மீன் வலை
ஒரு மலையிலிருந்த பழைய சிலந்தி இரவெல்லாம் வானத்தை நோக்கிப் பார்த்தது. அது நெய்த வலை இழைகள் வானில் மின்னும் நட்சத்திரங்களைப் பிடிக்கத் தொடங்கின. நாளடைவில் வலை ஒளிரும் விண்மீன் வரைபடமாகி, உலகின் ரகசியப் பாதைகளைக் காட்டியது. வானியலாளர்கள் அந்த வலை வழியாகப் புதிய கோள்களைக் கண்டுபிடித்தனர். ஆனால் ஒருநாள் சிலந்தி மறைந்தது வலை மட்டும் வானில் தொங்கிக் கொண்டிருந்தது. இன்று கூட நட்சத்திரங்களைப் பார்க்கும் போது, அந்த வலை மெல்லிய சேலையாகக் கண்ணுக்குத் தென்படுகிறது. ஆனால் அதில் ஒரு மூப்படைந்த சிலந்தி இறந்து கிடப்பது, ஏனோ நம் கண்களுக்குத் தெரியவில்லை.
9. கடல் முள்ளி
பெருங்கடலின் அடித்தளத்தில், ஆயிரம் ஆண்டுகள் வயதான ஒரு கடல் முள்ளி இருந்தது. அது சாதாரணமான உயிரல்ல. எப்படியென்று தெரியவில்லை; அது தன் முள்களுக்குள், மனிதர்களின் கனவுகளைச் சேமித்து வைத்திருந்தது. கரையில் தூங்கும் யாரோ ஒருவரின் கனவு எப்படி நீரலைகள் வழியாக அதனை அடைந்து விடுகிறது, இது வியப்பளித்தது. ஆனால் காலப்போக்கில் மனிதர்கள் தங்களின் கனவுகளை இந்தக் கடல் முள்ளியிடம் இழந்துவிட்டனர். உலகமே இன்னதென்று யூகிக்கவியலாப் பாழ் வெறுமையாகிப் போனது. கடல் முள்ளிக்கு என்ன தோன்றியதோ அது வெளியே வந்து ஒரு பாறையில் தன்னுடைய முள்களை உடைத்து, கனவுகளை மீண்டும் வெளிச்சத்திற்கு அனுப்பியது. கனவுகளற்று மரணத் தூக்கத்தில் இருந்த மனிதர்கள் கனவுகளால் சூழப்பட்டு மீண்டார்கள். அதிலிருந்து உலகம் பேரதிசயமான வண்ணம் பெற்றது. ஆனால் துரதிஷ்டவசமாக ஆயிரம் ஆண்டுகளைக் கடலில் கழித்த கடல் முள்ளி கரையில் இறந்து கிடந்தது.
10. பேன்கள்
நகரின் நடுவில் ஒரு நூற்றாண்டுப் பழமையான வீடு இருந்தது. அங்கே யாரேனும் நுழைந்தால், அவர் உடல் இன்னும் இருக்க, அவரது மனம் காலத்தில் பின்தள்ளப்பட்டு, பதினெட்டாம் நூற்றாண்டில் வாழத் தொடங்கியது. அந்த வீடு எல்லாக் காலங்களையும் பிழையெனக் குவித்து வைத்திருந்தது. மக்கள் அந்த வீட்டை “பீழையின் அரண்மனை” என அழைத்தனர். அந்த அரண்மனையை ஒரு கவிஞன் யதேச்சையாகத் தன் கனவில் திறந்து பார்த்தான். மனிதர்கள் கடவுளின் தலையில் பேன்களாக வாழ்ந்து கொண்டிருந்தனர்.
11. இரட்டைப் பிரதிபலிப்பு
மனிதர்களின் ஆண்மைக் குறைவை ஆராயும் பொருட்டு ஓர் ஆய்வகத்தின் மேசையில் இந்தப் பிரச்சனைக்குச் சம்பந்தமில்லாத, ஓர் எலி மேசையில் மயக்கத்தில் கிடத்தப்பட்டிருந்தது. எதற்காகவோ அதன் சிறு முதுகுத்தண்டில் மின் தூண்டுதல் எழச் செய்யும் போது, அதன் ஆணுறுப்பு இயக்கம் அருகிலிருந்த மனித ஆராய்ச்சியாளரிடம் மறைந்து கிடக்கும் ஆண்மைக் குறைவை உணர்த்துகிறது. மயக்க எலி தன் உடலில் எரியும் சிறு மின்சிக்னல் எதற்கென்றே அறியாமல் இருப்பதை விட தனக்கு வழங்கப்பட்ட இந்த அநீதியை அறியாமல் இருப்பதுதான் துயரமென்றாலும் எலக்ட்ரிக் ஷாக்கில் வைக்கப்பட வேண்டிய கணக்கற்ற ஆணுறுப்புகளுக்காக ஆய்வக எலி தண்டனையை எதற்கென்று தெரியாமலேயே ஏற்றுக் கொண்டுள்ளது. ஆய்வக ஆராய்ச்சி மருத்துவரும கூட “நான் உடலால் மட்டும் அல்ல, நரம்பாலும் உடைந்தவன்” என்ற உண்மையைப் பிறருக்காகத் துன்பம் சகிக்கும் எலியின் காதில் வெளிப்படுத்திய அக்கணத்தில் அந்த எலி தன் அபயமிடும் கண்களை ஒரு முறை திறந்தது மறு கணம் இறந்தது.
12. பூனையும் நாயும்
நட்சத்திரங்கள் மழையாகப் பொழியும் இரவு. ஒரு பூனையும், ஒரு நாயும் விண்மீன் வழியில் நடந்து சென்றனர். அவர்கள் இருவரும் பழைய சண்டைகளின் நினைவுகளை இழந்திருந்தனர். “நாம் எப்போதும் பகைவர்கள்” என்று சொல்வதற்கான காரணம் கூட அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் இணைந்து நடந்து கொண்டே, ஒரு வெள்ளை நட்சத்திரத்தைத் தொட்டுப் பார்த்தார்கள். அந்த நேரத்தில், உலகின் அனைத்துப் பூனை-நாய் சண்டைகளும் மறைந்துவிட்டன. ஆனால், அந்த மாயம் மனிதர்கள் பார்க்காததால் – உலகம் இன்னும் அதேபோலவே இருந்தது.
13. ஹெர்மீஸின் மணிக்கடிகாரம்
ஒரு விண்வெளி ஆராய்ச்சிக் கப்பலில், விஞ்ஞானிகள் எரிந்துகொண்டிருக்கும் ஒரு நட்சத்திரத்தின் பக்கத்தில் பண்டைய வெர்மீஸின் மணிக்கடிகாரத்தைக் கண்டுபிடிக்கிறார்கள். அதை யாரோ விட்டுச் சென்றது போல, அதில் மங்கலான கிரேக்க எழுத்துக்கள் நகர்கின்றன. கப்பல் தளபதி அவற்றைத் தொடும்போது, முழுக் குழுவும் எதிர்காலத்திற்குத் தள்ளப்பட்டு ஒரு முடிவில்லாப் பயணத்தை அனுபவிக்கிறார்கள். மனிதர்களோ அங்கு நேரத்தை விற்கும் சந்தையில் வாழ்கிறார்கள். அவர்கள் விண்வெளிப்பாதைக்குச் சென்ற ஒரு புனைவின் தீரமிக்கக் கப்பலைக் கண்டுபிடிக்க நிர்பந்தப் படுகையில் அந்தப் பழைய மணிக்கடிகாரமே அவர்களுக்கு முன் மீண்டும் ஒரே காலத்தில் சுழலாமல் இரு வேறு காலத்தில் சுற்றிச் சுழல்கிறது. அங்கிருந்துதான் மனம் பிறழ்ந்த சிறுமிகள் கப்பலிலிருந்து கடலில் குதிப்பதாக நினைத்து ஓடும் ரயிலிலிருந்து கற்பாறைகளின் மீது விழுந்து கொண்டிருந்தார்கள்.
14. கவிஞன்
பீஜிங்கில் உள்ள ஒரு மாணவன், தன் கவிதையை அவனுள் பொருத்தப்பட்டிருந்த தன் புதிய மூளைச் சிப்பில் பதிவேற்ற முயன்றான். ஆனால் அவனுடைய குரல் மட்டுமல்ல, துரதிர்ஷ்டவசமாக அவனுடைய உள்ளான மனமும் சிப்புக்குள் புகுந்துவிட்டது. அதிலிருந்து அவனால் தொடர்ந்து முன்போல கவிதை எழுத இயலவில்லை. ஆனால் அவன் எழுதிய அவனுடைய பழைய கவிதைகள் மொழியின் ஒளிவீச்சாக மாறின. நகரின் மேல் இரவு வானத்தின் கீழ் ஒரு சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்திருந்த அந்த மாணவன் என்னால் இனிக் கவிதைகள் எழுத இயலாது என்று அழுதான். தெருவில் சென்ற மக்கள் அவனைப் பார்த்துக் கண்ணீர் விட்டுக் கதறினர்.
15. பேரண்ட வெடிப்பு
ஒரு விஞ்ஞானி, விண்வெளிக் கூடத்தில் ஒரு சிறிய குவாண்டம் உருண்டையை உருவாக்கினார். அது சின்னதாய்த் தோன்றினாலும், அதன் உள்ளே பேரண்ட வெடிப்பு மீண்டும் மீண்டும் நிகழ்ந்தது. அவர் அந்த உருண்டையைத் தனது கைகளில் பிடித்தபோது, ஆயிரம் பிரபஞ்சங்கள் விரிந்தன. ஒவ்வொரு கணமும் அவர் வாழும் வாழ்க்கை வேறுபட்டது – ஒருமுறை கவிஞன், ஒருமுறை வீரன், ஒருமுறை பிச்சைக்காரன், ஒருமுறை கடவுள். அந்த உருண்டை திடீரென உடைந்து போனபோது, எல்லாப் பிரபஞ்சங்களும் ஒன்றாகக் கலந்து விட்டன. விஞ்ஞானி தன்னையே நினைவில் கொள்ள முடியாத ஒரு சாம்பல் துகளாய் மாறினார்.
16. பதிமூன்றாவது சீடன்
ஜோவிற்கு இயேசுவை எவ்வளவு பிடிக்குமென்றால் சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. ஜோ இயேசுவை தரிசிக்க வேண்டி ஒரு மலைக் கிராமத்தில் தன்னை வருத்தி உபவாசமிருந்தான். முதல் நாள் பாவ அறிக்கை ஜெபத்தில் அவர் தோன்றவில்லை. இரண்டாம் நாள் பரிசுத்த வேண்டுதலில் அவர் தரிசனமாகவில்லை. மூன்றாம் நாள் ஜோ கண்ணீராக ஒழுகினான். இயேசு காட்சித்தரவில்லை. நான்காம் நாள் ஆயிற்று அவர் வரவில்லை. ஐந்தாம் நாளில் ஜோ பேரழுகையோடு இயேசுவைக் கூப்பிட்டுக் கொண்டிருந்தான். அவன் தென்படவில்லை. ஆறாம் நாள் ஜோ சோர்ந்து போய் பசியின் களைப்பில் இயேசு என்கிற நாமத்தை மட்டும் உதடுகளில் மெல்ல நடுநடுங்கிய உதடுகளில் இசைத்துக் கொண்டிருந்தான். அவர் உதயமாகவில்லை வாரத்தின் கடைசி ஏழாவது நாளில் ஜோ ஒரு பைத்தியக்காரனைப் போல வறண்ட தொண்டையில் இயேசுவின் வேறு வேறு பெயர்களை நித்திய பிதா, சமாதான பிரபு, இம்மானுவேலர், இல்லாதவைகளை இருக்கிறதைப்போல அழைக்கிறவர் என்றெல்லாம் அழைத்து அரற்றிக் கொண்டிருந்தான். இன்னும் இயேசு பிரதட்சணமாகவில்லை. ஜோவின் முன் வெறுமையின் பாழ் அமைதி மயான வெறுமை போல விடப்பட்டிருந்தது. அவன் உபவாசத்தை முடித்துக் கொண்டு பாயிலிருந்து எழுந்தான். அந்தப்பாயெல்லாம் அவன் ஆறாத கண்ணீரில் நசநசத்திருந்தது. அவன் உபவாசத்தை முடிக்கும் தருணம் நெருங்க
சொம்பில் பாதிரி கொண்டு வந்த ஜெப நீரை தொண்டைக் குழியிலிருந்து உள் விழுங்கும் போது இயேசுவின் நாமத்தை முழுமையாக ஒரு கூழாங்கல் போல விழுங்கிக் கொண்டான். அதன் பிறகு இயேசு என்று நாமத்தைத் தன் வாழ்நாளில் ஒரு போதும் ஒரு முறையும் விளிக்கவில்லை. ஜோ இறந்த போது அவன் விழுங்கிய அந்தக் கூழாங்கல்லை ஆற்றுப்படுத்தும் பொருட்டு அவன் நாவில் இயேசு என்று பச்சை குத்தப்பட்டது. அச்சொல் அவன் நாவில் முழுமையடைந்த கணம் வானத்திலிருந்து ஒரு பெரிய இடி மின்னல் முழக்கமுண்டாகி “நானே ஆதியும் அந்தமும் அல்பாவும் ஒமேகாவுமாக இருக்கிறேன்” என்கிற சப்தம் ஒரு பேரொளியிலிருந்து பெருமுழக்கமாக உண்டாகி ஜோவின் புதைகுழி மேட்டின்மீது விழுந்தது.
அவனைப் புதைக்க வந்தவர்கள் பீதியடைந்து ஓடி மறைந்து விட, பின்நாட்களில் அவர்கள் பிழைப்பிற்காகப் பல்வேறு தேசங்களுக்குக் கப்பலில் பிரயாணம் பண்ணிய போது தங்களையறியாமலேயே ஜோவின் கதைகளை வாய்மொழியாகச் சொல்லத் துவங்கினர். இடி மின்னலின் கைகொண்டு கடவுளால் நாவில் பச்சைக்குத்திப் புதைக்கப்பட்ட ஜோ கடவுளின் தீர்க்கதரிசியென்ற கதை பரவலாக எல்லா தேசங்களிலும் பரவியதோடல்லாமல் ஜோ இயேசுவின் பதிமூன்றாவது சீடனென்றும் சில சபை அங்கத்தினர்களால் நம்பப்பட்டதன் காரணமாக ஜோவிற்குப் புனிதர் பட்டமளிக்கப்பட்டு ஜோவைப் பின்பற்றுபவர்களின் சபை உலகெங்கிலும் எழுப்பப்பட்டதோடல்லாமல் அச்சபைகளுக்கான பாதிரிகள் உருவாக்கப்பட புதிய வேதாகமக் கல்லூரிகளும் எழுப்பப்பட்டன. புதிய பிரார்த்தனைக் கீதங்களில் ஜோவின் பெயரும் சேர்ந்து கொண்டது. இக்காலத்தில் ஜோவின் கதை ஆராயப்பட்டது. அவனுக்கொரு காதலி இருந்திருக்கிறாள். பாலியல் ரீதியாக அவர்களுக்குள் யாதொரு தொடர்புமில்லை. ஜோ இயேசுவின்பால் ஈர்க்கப்பட்ட நிலையில் அவள் வேறொருவனோடு ஓடிப்போய்விட்டதாகவும் அதற்குப்பின் அவள் ஜோ இறக்கும் வரை அவன் கண்ணில் தட்டுப்படாமல் எதனால் ஒளிந்து வாழ்ந்தாளென்றும் விவரம் வெளிவரவில்லை. ஜோவின் சரிதம் புதிய ஏற்பட்டில் சேர்க்கப்படாவிட்டாலும் தள்ளுபடியாகமத்தில் ஜோவின் கதை ரகசியமிக்க முக்கியமான பாடபேதமாக வைக்கப்பட்டது. ஜோ இயேசு மரித்து உயிர்த்தெழுந்த பின்பு சில வருடங்களில் பவுல் வாழ்ந்த காலத்தைச் சேர்ந்தவன் என்பதால் ஜோ எழுதிய நிரூபங்களைத் தேடி வந்தவர்களுக்கு ஆச்சர்யமூட்டும் வகையில் ஜோ எழுதிய இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைப் பாடல்கள் ஹீப்ரு மொழியின் ஓலைச்சுவடிகளில் கிடைத்தன. இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக இருந்தது. ஆனால் ஜோ எழுதிய காதல் பாடல்களை யாராலும் துக்கமின்றி இன்றளவும் வாசிக்க இயலுவதில்லை. அக்கவிதைகளை வாசித்தவர்கள் இன்றும் கூட தங்கள் மேலாடையைக் கிழித்தபடி மார்பில் அடித்துக் கொண்டு ஊளையிட்டு அழுவதை உலகெங்கிலும் பார்க்க இயலும்.
Art : stockcake








Leave a Reply