நுண்கதை :
வைகை. தெளிந்த நீர் கரைகளை அடைத்து நிதானமாக ஓடிக் கொண்டிருந்தது. காற்றில் பறவைகளும் நீரில் மீன்களும் நீந்தியபடி இருந்தன. இருபதுக்கும் மேற்பட்ட துறவிகள் நீருக்கு வலிக்கா வண்ணம் தங்களை நனைத்துக் கொண்டிருந்தனர். அப்போது சாலையிலிருந்து ஆற்று நீரில் ‘சளக்’ என்ற சப்தத்துடன் ஏதோ ஒன்று விழுந்தது. சிறிது நேரத்தில் மீன்கள் தங்களின் வாயில் ஓலைத் துண்டுகளைக் கவ்வியபடி பாய்ந்து கொண்டிருந்தன.
குறுங்கதை :
தலைமைத் துறவியின் உத்தரவின் பேரில் மலையை நீங்கியவர்கள் நடந்து வந்ததன் களைப்பு தீர வைகையின் நீரைச் சுவைத்தனர். அதில் சிலர் நீராட விரும்ப, சிலர் மண் சாலையிலும் சிலர் தங்கள் கால்களை நனைத்தபடி நதியோரப் பெருவேர் மரங்களிலும் அமர்ந்தனர்.
♦
சிறிது நேரத்தில் மீன் பிடிக்கும் நோக்கில் சிலர் உரிய உபகரணங்களுடன் செல்ல அவர்களுக்கு எதிர்த் திசையில் விரைந்தபடி இருந்த சலங்கை கட்டிய காளைகளால் பூட்டப்பட்ட வண்டி தனது வேகத்தைக் குறைத்தது.
♦
பிறகு, துறவிகளின் பார்வையிலிருந்து மறைந்ததும் வண்டியை நிறுத்திய சாரதி ஆராய்ந்தார். தன் தலையில் அடித்துக் கொண்டவர் நிணம் நனைத்திருந்த மூட்டையை ஆற்றுக்குள் வீசிவிட்டு நிதானமாக மாடுகளை முடுக்கினார்.
♦
வைகை தெளிந்திருந்தது. அப்போது சாலையிலிருந்து ஆற்று நீரில் ‘சளக்’ என்ற சப்தத்துடன் துணியால் கட்டப்பட்ட மூட்டை ஒன்று விழுந்து நீருள் அமிழ்ந்தபடி ஆற்றின் போக்கில் ஓடத் துவங்கியது.
♦
சிறிது நேர இடைவெளியில் மீன்கள் தங்களின் வாயில் நன்றாய் நறுக்கப்பட்ட பனை ஓலைத் துண்டுகளைக் கவ்வியபடி நீரை எதிர்த்துப் பாய்ந்துகொண்டிருந்தன. முதலில் துறவியரும் பிறகு மீன் பிடிக்க வந்தோரும் அதைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
சிறுகதை
பரிதி மேற்கில் இறங்கிக் கொண்டிருந்தான். இன்னும் பத்து நாழிகையில் மொத்தமாக அடங்கிவிடுவான்.
♦
அதை மலை என்று சொல்லிவிட முடியாது. கரடு. எங்கும் காட்டுச் செடிகளும் கொடிகளும் கற்றாழைப் புதர்களும் எருக்கும் பரவியிருந்தன. சில இடங்கள் கற்கள் நிறைந்து செங்குத்துச் சரிவுகளுடன் சமனற்றுக் காணப்பட்டன. அந்த மட்பாங்கான ஒற்றையடிப் பாதையில் வேல மரங்கள் செழித்திருந்தன. பரவலாய்க் குரங்குகள் நிறைந்திருந்தன. அவை மரங்களில் அமர்ந்தபடி துறவிகளின் அமைதியான நடையைக் கண்டு அலைக்கழிப்பில் இருந்தன. எவர் கையிலும் சுமை எதுவுமில்லை. சில முதிர்ந்தோர் கழிகளுக்கு வலிக்குமோ என்ற எண்ணத்துடன் மென்மையாக நிலத்தில் ஊன்றி நகர்ந்தபடி இருந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இவ்வாறு ஒட்டுமொத்தமாகச் செல்வதைக் கரடு அமைதியாய்ப் பார்த்துக் கொண்டிருக்கிறது. அதற்குத் தெரியும். இனி ஒருபோதும் அவர்கள் இங்குத் திரும்பப் போவதில்லையென்று.
♦
கருத்த திண்ணென்ற உடல்வாகு கொண்ட இடையில் மட்டும் கச்சுடுத்திய வேடனான வேங்கையன் குட்டையாக இருந்தான். அதனாலேயே அவன் உடல் சற்று பருமனாகத் தெரிந்தது. சிறுவயதிலிருந்தே மற்றவர்களின் கேலி கிண்டல்களை வெறுப்பவன் தனித்தே வேட்டைக்குச் சென்று பழகியிருந்தான். எத்தனையோ முறை பெரிய பெரிய வேட்டைகளை நிகழ்த்தியிருக்கிறான். அதிலும் பெரும் பெரும் விருகங்களைக்கூடத் தனித்து அடித்துத் தூக்கி வந்து குடியையே ஆச்சர்யம் கொள்ளச் செய்திருக்கிறான்.
♦
நடந்தபடியிருந்த துறவிகள் அனைவரும் கரடை நீங்கியதும் திரும்பி நின்று தங்கள் தலையை வணங்கி அதற்கு நன்றி செலுத்தினர். பிறகு, தலைமைத் துறவியார் ‘வைகைக் கரையில் உள்ள மண்டபத்தில் இரவு சந்திப்போம். ஆகவே, முன்பாகச் செல்வோர் சிரமபரிகாரம் கொள்க’ என்றார். ஆமோதித்தனர்.
♦
வேங்கையனின் தோளில் விருகம் கிடந்தது. அதன் உருவம், இருபது நபர்கள் இரண்டு நாட்களுக்கு உண்ணும் அளவில் இருந்தது. அதன் முன்னங்காலுக்கும் தலைக்கும் இடையே தைத்திருந்த அம்பு உயிரை வாங்கியிருந்தது. பிளந்த அதன் வாயிலிருந்தும் அடிபட்ட இடத்திலிருந்தும் வழிந்த உதிரம் வேடனின் தோளின் வழி இறங்கி நிலத்தில் சொட்டிக் கொண்டிருந்தது.
♦
வைகை நதிக் கரையை அடைவதற்கான முதன்மைத் தாரையைக் கண்டடைந்தவர்கள் செழித்துக் கிடக்கும் நிலத்தை இரசித்தபடி முன்னேறிக் கொண்டிருந்தனர். நெல்லும் கரும்பும் வாழையும் ஆற்றோரங்களில் அதிகம் இருந்தன. ஆற்றோர நாணல்கள் காற்றுடன் இசைந்து பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் இருந்தன.
♦
வழமைபோல வேடர்குடி வேடிக்கை பார்த்தது. உதவிக்குச் சென்ற முதியோன் குடிசைகளுக்கு மத்தியிலிருந்த மேட்டில் வேட்டையை இறக்கி வைக்க உதவினான். பிறகு, வேங்கையன் தோளில் தட்டி ‘உன் உடலைச் சுத்தம் செய். நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’ என்றுகூறி அனுப்பிவைத்ததுடன் இருவரை அழைத்து ‘வாட்டி கூறிட்டுப் பிரியுங்கள்’ என்றார். அங்கிருந்த சிறுவர்களில் இருவர் வாழைக் கொந்தங்களை அரிந்துவரப் புதருக்குள் விரைந்தோடினர்.
♦
பரிதி இறங்க இறங்க நீரில் குளுமை கூடியது. காற்று இதமானது. நாணலின் தலையிலிருந்த வெண்பூக்கள் தங்கள் பஞ்சினை உதிர்த்தபடி இருந்தன. தூண்டில், கூடையுடன் சிலர் வைகை நதியோரப் பெரு மர வேர்த் தூரில் அமர்ந்து, மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். தூண்டிலில் புழு கோர்க்கப் படுகையில் அதன் உயிர்படும் வாதையைக் காணச் சகியாத துறவியர் கண்களை மூடியதோடு திரும்பிக் கொண்டனர்.
♦
தண்டு மேற்புறம் இருக்கும்படி வாழை கொந்தம் தரையில் நெடிதாக விரிக்கப்பட்டிருந்தது. சுடப்பட்டுக் கீற்றுகீற்றாகப் பிளக்கப்பட்ட விருகத்தின் உடலானது எலும்பு, சதை, ஈரலெனச் சமமாகக் கூறு கட்டப்பட்டு அனைவருக்கும் பகிரப்பட்டது. எந்த வேட்டையானாலும் தலை வேட்டையாடிக்கு உரியதென்பதே வழமை. ஏனையோரைப் போன்றே பெற்றுக் கொண்ட வேங்கையன் முதியோனுக்கு மரியாதை செலுத்தி அகன்றான்.
♦
ஆற்றோரத்தில் அடுத்தடுத்து பெரிய மரத் தூரினைக் கண்டவர்கள் சற்று நேரம் ஓய்வெடுத்துச் சென்றாலென்ன என்ற எண்ணத்தில் மெதுவாகச் சென்று அமர்ந்தனர். வைகையின் தொடுகையால் அவர்களுக்கு உடல் சிலிர்த்தது.
♦
மட்பாண்டத்தில் வேகவைக்கப்பட்ட இறைச்சியிலிருந்து பிரிந்த நிணத்தை அகப்பையில் மொண்டு சேர்த்தவன் உரியில் தொங்கவிட்டான். பிறகு, நாவாற வயிறாற குடும்பத்தினருடன் உண்டவன் சற்று நேர ஓய்வின்பின் மருத நிலத் தலைவனைச் சந்தித்து சேர்ந்திருந்த விருகத்தின் நிணத்தை ஒப்படைத்தான். தலைவன் ஏழு மரக்கால் தினையும் மூன்று மரக்கால் நெல்லும் வழங்கிட நன்றியுடன் குடி திரும்பினான் வேங்கையன்.
♦
கைகளில் தண்ணீரை அள்ளி மிக மிகக் கவனமாக அதில் மீன் குஞ்சுகள் ஏதேனும் உள்ளதா? என்பதைக் கவனித்துக் கொண்ட துறவியர் சிலர், களைப்பு நீங்க நீரை முகத்தில் அடித்துக் கொண்டனர். சிலர், உடையைக் களையாமலேயே நீராடத் தொடங்கினர்.
♦
மருத நிலத் தலைவன் வண்டியைப் பூட்டச்சொல்லி துணியால் கட்டப்பட்ட மூட்டைகளுடன் நான்கு மூங்கில் துண்டங்களில் அடைக்கப்பட்ட விருகத்தின் நிணத்தையும் கொடுத்து நகரில் உள்ள தன் நண்பன் இல்லத்தில் சேர்க்கச் சொன்னார்.
♦
நீரோட்டம் மிதமாக இருந்தது. நீச்சல் அறிந்த துறவிகள் மறு கரை வரை சென்று திரும்பினர். அறியாதோர் விருட்சத்தின் வேரினைப் பற்றியபடி ஓரத்தில் மூழ்கி மூழ்கி எழுந்தனர். வைகை அவர்களுக்கு எல்லையற்ற புத்துணர்வை வாரிவாரி வழங்கிக் கொண்டிருந்தது.
♦
வண்டியோட்டி விரைந்து செலுத்தினார். காளைகளின் கழுத்து மணியோசை வைகையின் தென்றலுடன் இணைந்து அச்சூழலுக்கு மேலும் சுகம் சேர்த்தது. வண்டிக்குள் பெருகிய நிண நாற்றத்தால் வேகம் குறைத்தவர் பொதிகளைச் சோதித்தார். கூடையிலிருந்த மூங்கில் துண்டுகளில் ஒன்றின் துவாரத்தை அடைத்திருந்த தக்கை விலகி அருகிலிருந்த மூட்டையை நனைத்திருந்தது. யோசித்தவர் தக்கையை நன்றாகச் செருகிவிட்டுத் துணியின் முடிச்சுகளை நெகிழ்த்தி அவிழ்த்துப் பார்த்தார். சுவடிக் கட்டுக்கள் நனைந்திருந்தன. இதை மட்டும் அவர்கள் கண்டார்களென்றால்… விளைவுகளை எண்ணிப் பார்த்தவர் உடல் நடுங்கிடச் சுவடியிடம் மன்னிப்பைக் கோரியவாறு அப்படியே தூக்கி ஆற்று நீரில் வீசிவிட்டு மெதுவாக வண்டியைச் செலுத்தினார். துணி அவிழ்ந்து அவை மெல்லமாய் நீருள் படர்ந்தன.
♦
நீரை எதிர்த்து வரும் சுவடிகள் கண்டு நீராடிக் கொண்டிருந்த / அமர்ந்திருந்த துறவியர் திகைத்துப் போயினர். பிறகு, தெளிந்திருந்த அந்நீரைச் சற்று நிதானித்துப் பார்க்கையில் அவற்றை மீன்கள் கவ்வியபடி செல்வது புரிந்தது.
♦
வைகை எல்லாவற்றையும் கடந்து கொண்டிருந்தது.
Art : Rae Parker







Leave a Reply