1)
டாக்டருக்கு முடிதிருத்தும் போது
எந்த டை சேம்பு கிரீம் போட்டா
பக்கவிளைவுகள் வராது எனக் கேட்கும் போது
டாக்டருக்கு எல்லா பெரிய
டாக்டராக நினைத்துக் கொண்டேன்
கட்சிக்காரருக்கு முடிதிருத்தும் போது
எந்தக் கட்சி ஜெய்க்கும்
எங்க கட்சி ஜெய்க்குமா
நான் ஜெய்ப்பேனா
என்னைப் பற்றி ஊரில்
என்ன பேசிக்கிறாங்க
என்று கேட்டபோது
அரசியல்வாதிக்கெல்லாம்
பெரிய அரசியல்வாதியாக
என்னை நினைத்துக்கொண்டேன்
அடுத்த வாரம்
பொண்ணு பார்க்கப் போறேன்
சும்மா ஹீரோ போல ஆக்குன்னு
வாடிக்கையாளர் கேட்டபோது
ஹீரோக்களை உருவாக்கும் பெரிய
ஹீரோவாக நினைத்துக் கொண்டேன்
எல்லா சாஸ்திரம் சம்பிரதாயம் தெரிந்திருந்தாலும்
எங்க ஊருக்குன்னு இருக்கிற
சாஸ்திரம் சம்பிரதாயப்படிதான்
செய்யனும் என்று
புதுசா வர ஐயருக்குச்
சொல்லிக்கொடுக்கும் போது
ஐயருக்கு எல்லாம் பெரிய
ஐயராக என்னை நினைத்துக்கொண்டேன்
பிரசவத்திற்கு
பன்னிரண்டு மணி ராத்திரியானாலும்
உரிமையோடக் கதவைத் தட்டி
சுடுதண்ணியைக்
கால்ல ஊத்திக்கிட்டு நிக்கிற மாதிரி
இடுப்பு வலி வந்தவளோட புருசன்
அம்மாவிடம்
கெஞ்சிக் கொண்டு நிற்கும் போதும்
சாராய போதை அதிகமாகி
ஐயா நினைவு தப்பிட்டா
சவத்துக்கு
பச்சை மட்டையை வெட்டிப் பின்னி
பாடை கட்டி பாடியைக் குளிப்பாட்டி
பாடையில் ஏத்திப் பள்ளத்தில் இறங்கிச்
செய்ய வேண்டியதை எல்லாம்
செய்து முடித்து நிமிரும் போது
பிறப்போ இறப்போ எதுவும்
எங்களை அறியாமல்
நடக்காது என்று நினைக்கும் போது
மனிதரில் புனிதராக
என்னை நினைத்துக்கொண்டேன்.
மேற்படி ஆட்களிடம்
கீழ்படிந்து சில பல
காரணகாரியமாகப் போனால்
வாசலிலேயே நிறுத்திப் பேசி
வழி அனுப்பி வைப்பார்கள்
கவனமாக
அப்போதுதான் தெரிந்து கொண்டேன்
எல்லா உயிர்க்கும்
நாம தேவை
எந்த மயிருக்கும்
நாம தேவையில்லையென்று.
♦
2)
ஒரே முகூர்த்தத்தில்
மூனு கல்யாணத்திற்குப்
பாக்கு வாங்கின டவுன் ஐயரு
இரண்ட முடிச்சிட்டு வரதுக்குள்ள
நல்ல நேரம் போயிகிட்டே இருந்தது
ஐயா
தாத்தாவையும் என்னையும்
கெட்டிமேளம் அடிக்கச் சொல்லி
தாலி எடுத்துக் கொடுத்துக் கட்ட வைச்சிட்டார்
கூட்டத்தில் ஒருத்தன் சொன்னான்
அமட்டனெல்லாம்
ஐயரு ஆயிட்டான்னு
ஆமான்டா
உள்ளூர் ஆட்டக்காரனை
எந்தக் காலத்திலடா
மதித்து இருக்கீங்க என்று சொல்லி
அவன்
வாயை அடைத்தார்
வாயிலே அடித்தார்.
♦
3)
மீசை வச்ச ஆம்பள யாருடா
வெளிய வாடான்னு
ஆவேசமாய்க் கூப்பிடுகிறார்கள்
எத்தனை நாளைக்குத்தான்
ஆமை போல் அடங்கி
நத்தை போல் ஒடுங்கி
பத்துக்குப் பத்துக் கடைக்கு
உள்ளேயே அஞ்சி வாழ்வது
போயேன்
உங்களுக்கெல்லாம் மீசை வச்ச ஆம்பள நான்தான்னு
மார்தட்டிச் சொல்லேன்
தகப்பனே.
♦
4)
நான் ஏன் எழுதுகிறேன்
குழந்தை பிறப்பா
அமட்டச்சியைக் கூப்பிடு
கிழவன் இறப்பா
அமட்டனைக் கூப்பிடு
காதுகுத்தா கல்யாணமா கருமாதியா
வாந்தியா பேதியா கக்குவானா இருமலா
பிள்ளைக்கு முடியலையா
பிள்ளைத்தாச்சிக்கு முடியலையா
காதுவலியா கழுத்து சுளுக்கா
மார்ச் சளியா தலைவலியா
பூச்சி பாம்புக் கடியா
சொரியா செரங்கா படையா தேமலா
மயிர் மழிக்கனுமா
மாப்பிள்ளை போல ஆக்கனுமா
மங்கலம் இசைக்கனுமா
என ஒவ்வொரு வேலையும்
விரட்டி மிரட்டி வாங்கிக் கொண்டு
ஊரில் உள்ளவன் சொல்லுவான்
தலையில கொ(த)ட்டி
இந்த ஊரை நம்பிதாண்டா
நீ வாழுறா என்பான்
இல்லடா இந்த ஊரே
என்னை நம்பித்தான்
வாழ்கிறது என்பதைச்
சொல்வதற்காகத்தான் எழுதுகிறேன்.
♦
5)
நீ
ண்
ட
நாள் கழித்துச் சொந்த ஊர் சென்றேன்
அவர்கள் விரும்பியபடி
அவர்கள் விருப்பப்படி
அவர்களுக்குத் தகுந்தபடி
அவரவர்களுக்கு ஏற்றபடி
பார்த்துப் பார்த்து வரைவேன்
அழகழகான மீசைகளை
இப்போது
மேலும் கீழுமாய்
இடமும் வலமுமாய்
ஏற்ற இறக்கமாய்
ஒவ்வொரு முகத்திலும்
ஆண் தண்மையற்ற மீசைகள்
எல்லாம் சுய சவரம்
ஒத்த வீட்டு நாவிதரான என்னை
ஊரில் வாழவிடாமல் பண்ணதற்கு
உங்களுக்கு
இதுவும் வேணும்
இன்னும் வேணுமடா
Art : etsy.com
திருவண்ணாமலையைச் சேர்ந்தவர். சென்னை சித்தாலப்பாக்கத்தில் வசித்து வருகிறார். பல்வேறு சிற்றிதழ்களில் கவிதைகள் எழுதி வருகிறார். ‘ஒரு சகலகலா சவரக்காரன் பராக் பராக்’ என்னும் கவிதைத் தொகுப்பின் மூலம் நவீனக் கவிதையின் மிக முக்கிய முகமாக உருவெடுத்து உள்ளார்.


Leave a Reply