2003-ல் அரசு ஊழியர், ஆசிரியர்களிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுக்கும் போராட்ட வரலாறு
சூரியனின் கதிர்கள் அடி வானத்தின் கீழ் அனைவருக்கும் சமம்தானே! கையளவு அரிசி இல்லை. ஆகையால் கால் வயிற்றைக் கழுவ முடியவில்லை. அக்கம் பக்கம் கேட்டால், அவமானம் அறிந்தோர் தெரிந்தோர் அலோசனைகளை வழங்குவதில் கில்லாடிகள். ஆனால் பிடி அரிசிக்கு வழிகாட்டாத சுயநலமிகள். என்னதான் செய்வாள் உமா…? ஆனாலும் சூரிய கதிர்கள் அந்த வீட்டின் மீதும் ஒளிக்கற்றையைப் பாய்ச்சின.
மூன்று நாட்கள் அடுப்படியிலிருந்து புகை எழும்பி ஓடுகளின் இடுக்குகள் வழியாக மேகத்தை நோக்கிக் காற்றின் திசைக்கேற்பப் பரவவில்லை. நான்கு தினங்களுக்கு முன்பாகக் காலையில் வீட்டை விட்டுப் பிரிந்த உமாவின் கணவன், தமிழரசு இன்னும் வீடு திரும்பவில்லை.
என்ன ஆனான்? எங்கே சென்றான்? ஏன் வீடு திரும்பவில்லை? இப்படி உமா நடு வீட்டுக்குள் பாயில் இருந்து எழுந்து உட்கார்ந்துகொண்டு மனதுக்குள் கணக்குப் போட்டாள்.
“நாலு நாளைக்கு முன்னாடி சம்பளம் வாங்கிட்டு வந்து, புள்ளைகளுக்குத் தின்பண்டம் வாங்கிக் குடுத்துட்டு மீதி அம்பது ரூபா குடுத்தாப்ல, நம்மளும் என்னா ஏதுன்னு கேக்கல, ஏனா சம்பளம் வாங்கி, எல்லா கடங்காரன்களுக்கும் குடுத்தது போக அஞ்சோ, பத்தோ, மிஞ்சும். அதே அன்னக்கி தேவக்கி செல வழிச்சிட்டி, அடுத்த நாளுலேர்ந்து பாலுல இருந்து, படுக்குற பாய் வர கடன்தான், இதுதான் பொழப்பு, இது எப்பவும் நடக்குறது தானே நாமளும் அந்தாளுட்ட எந்தச் சண்ட சச்சரவும் வாய்க்கல. அப்பறம் எங்க போயி தொலஞ்சுச்சு இந்த மனுஷன் எனப் புலம்பிக் கொண்டு இருக்கும் உமா, அப்போது பால், எனக் கத்தினான் சைக்கிளில், பால் கேன் கட்டியபடி காலுன்றி நின்றபடி இவளும் ஆவலோடு பாத்திரத்தை எடுத்துக் கொண்டு ஓடினாள். வாசலின் எதிர்வீடு, அக்கம் பக்கத்தில் பாத்திரத்தோடு நின்றிந்தாள்….
“எவ்வளவு மா”
“முந்நூறு ஊத்துங்க”
காசு இருக்காமா? என்றான் வழக்கத்தை மீறி பால்க்காரன்.
“ஏப்பா மாச மாசம்தானே குடுப்போம்.
போன மாசம் பணம் எண்ணூறு ரூபா என் வீட்டுக்காரு கொடுத்தாருல”
“அது மாசச் சம்பளம் வாங்கும்போது, இப்பத்தான் அந்த வேலயே கெடயாதுல்ல” என ஆருடம் சொன்னான்.
“என்னப்பா சொல்ற” எனப் பதற்றத்துடன் கேட்டாள்.
“ஒங்க புருஷனுக்குத்தான் இனிமே வேல கெடயாதுல, பேப்பர்ல பாக்கலயா (அவள் முழித்தாள்? இவன் தொடர்ந்தான்”. அரசாங்கத்த எதிர்த்துப் போராட்டம் செஞ்சவங்கல்ல உங்க வீட்டுக்காரும் ஒருத்தாரு. அதனால அவர உள்ள புடுச்சிப் போட்டுறிச்சி கவர்மென்ட்டு. அது மட்டுமில்லாம வேலைக்கு ஒல வச்சிருச்சி. அதான்மா, டிஸ்மிஸ் செஞ்சிருச்சி” என அவன் அடுக்கினான். உமா நொறுங்கினாள். கையில் கொண்டு வந்த பாத்திரம் தரையில் விழுந்து சுற்றிச் சுழன்றது. அவளும் அதனோடு சுற்றினாள். உலகம் சுற்றியது, ஊர், சுற்றியது. நகரம் சுற்றியது. கிராமம் சுற்றியது, தெரு சுற்றியது. ஏற்கெனவே எல்லாமே சுற்றிக் கொண்டுதான் இருக்கின்றன. நாம்தான் அவற்றைக் கவனிப்பதில்லை. நாம் தடுமாறும்போதுதான் உலகம் சுற்றுவதை உணர்கிறோம். அக்கம் பக்கத்தார் தன் நிலைமை கண்டு என்ன நினைக்கிறார்களோ என்று அவள் எண்ணி வீட்டுக்குள் சென்று அனல்பட்ட பூவாகக் கருகினாள். அடிவயிற்றை எக்கியபடி, பாயில் சுருண்டு கிடக்கும் மூன்று பிள்ளைகளைப் பார்த்து விம்பி விம்பி அழுதாள், உமா…
மத்திய சிறையின் மதில் சுவர்களுக்கு மையப் பகுதியில் இருக்கும் செல்களில் அரசியல் கைதிகள் என அழைக்கப்படும் அரசு ஊழியர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், உயர்நிலை மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள். உயர்நிலை அலுவலர்கள் சிறையில் அடைப்பட்டுக் கிடக்க, அந்த அதிகாலையிலும், அவ்வப்போது புதிய கைதிகள் இரவோடு இரவாக நள்ளிரவுக் கைதிகளாகக் கைது செய்யப்பட்டவர்களைத் தானியங்கித் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் கொண்டு வந்து செல்களில் அடைப்பது தொடர்ந்த வண்ணம் இருந்தது. செல்கள் பூட்டப்படாமல் இருந்தமையால், கைதிகள் அங்குமிங்கும், உலாவித் திரிந்தனர். செல்களுக்கு முன்பாகப் பெரிய திடல், கழிவாறை தண்ணீர்த் தொட்டி, இவைகளின் ஊடே, வேம்பு மரங்கள் சுற்றிலும் உயர்ந்த மதில் சுவர்கள் அவைகளின் மேல், மின்சாரம் பாய்ச்சும் முள் வேலிகள் நான்கு மூலையிலும், கண்காணிப்புக் கோபுரங்கள். கோபுரத்தின் மீது ஆறுமணி நேரத்திற்கு ஒருமுறை காவலர்கள் சுழற்சிமுறையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவார்கள். செல்களில் செவனேன்னு கிடப்பவர்கள் ஒருபுறம், செல்லிற்கு வெளியில் உள்ள திடலில் அரசியல் கைதிகளாக வந்து செல்லும் மூத்த சங்க நிர்வாகிகள். அது சிறையல்ல நான்கு சுவர் அவ்வளவுதான் என மிக அசாத்தியமாக எண்ணிக்கொண்டு, தனது உடலையும், மனதையும் பலப்படுத்த கைகளையும், கால்களையும் வீசி வீசி நடந்து கொண்டும், கை கால்களைத் தூக்கி உடற்பயிற்சி செய்துகொண்டும் இருந்தனர்.
மையத்தில் ஆங்காங்கே சந்தையில் விலைபேசக் கூட்டி வந்திருக்கும் ஆட்டு மந்தையைப் போல் பேந்தப் பேந்த முழித்துக்கொண்டு, படுத்தும் படுக்காமலும் அமர்ந்தும் அமராமலும் இருமல் வருகிறதோ இல்லையோ, இருமிக் கொண்டும் இருக்கும், சிறையை சினிமாவில் மட்டும் பார்த்துணர்ந்த ஒரு சிலர் விக்கமும் மாட்டாமல் முழுங்கவும் மாட்டால் முழித்துக் கொண்டிருந்தனர்.
அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் அன்றாட நிகழ்வு என்பது காலையில் படுக்கையில் இருக்கும்போதே, பெட்காப்பி வந்துவிடும். அந்த காப்பியும் ஆடவர் எழுந்து கொள்வதற்காக அல்ல; கூட மாட சமையலறைக்கோ தண்ணீர் பிடிப்பதற்கோ உதவி செய்வதற்காக, மனைவி கட்டாயமாகக் கணவர் எழுவதற்குக் கொடுக்கும் அதிவேத மருந்துதான் காபி. அதைப் புரிந்துகொண்ட ஒரு சில கணவர்கள், தூக்கம் வராவிட்டாலும் கண்களை இறுக மூடிக்கொண்டு படுத்துக் கொள்வார்கள். ஒருசிலர், தன் மனைவியின் கஷ்டத்தை உணர்ந்து, காப்பிக்கு முன்பாகவே எழுந்துகொண்டு உதவி செய்வார்கள்.
ஆனால் இங்கு காபியும் இல்லை, மனைவியும் இல்லை. அதனால் ஆண்களுக்குத் தொந்தரவும் இல்லை. அதனால் சிறையில் இருக்க சிறையின் சுகம், சிலர் சுதந்திரமாகவே உணர்ந்தார்கள். என்னதான் வீட்டில் அன்புத் தொல்லைகள் இருந்தாலும், கணவன் மனைவி குழந்தைகள் என்று ஒன்று சேர்ந்து ஒரு வேளை உணவு உண்ணும்போது கிடைக்கும் இன்பம், உற்சாகம் இந்த உலகில் எங்கும் கிடைத்துவிடப் போவதில்லை.
அப்படிப்பட்ட குடும்பத்திலிருந்து, அப்படிப்பட்ட அன்பால் விளைந்த சின்னச்சிறிய பாசத்தைச் சிறு சிறு சுள்ளிகளால் வேய்ந்த கூடுகளைக் களைத்து இப்படிச் சிங்கக் குகையில் அடைத்து வைத்து, சீராட்டிப் பாடினால், யாருக்கும் அந்த ராகம் செவிகளில் இறங்கி இதயத்தை வருடாது. மாறாக , மனதையும் உடலையும் மண்பாண்டங்கள் போல் சுக்கு நூறாக உடைக்கத்தான் செய்திடும். சிறைக்குள் சிக்கி மூன்று நாளாகியும் அரசிடமிருந்து எவ்விதக் கருணையும் கிடைக்கவில்லை. அதற்குப் பதிலாக அனைவருக்கும் புதிய செய்தி காத்திருந்தது.
கழிவறைக்குள் சென்றவர்கள், தண்ணீரைக் கோதியபடி, தண்ணீர்த் தொட்டியில் குளித்தவர்கள் சோப்புப் போட்டதை நிறுத்தியபடி, வாக்கிங் சென்றவர்கள் கைகளையும், கால்களையும் வீசியபடி, வேப்பமரத்தின் உச்சக் கிளை அசைந்து நிறைபடி, ஆலமரத்தின் கிளைகளில் தாவித் திரிந்த அணில் முன்னோக்கித் தாவியது. கிளையில் அமராமல் அந்தரத்தில் நின்றபடி திடலில் அமர்ந்தும் ஒருக்களித்துப் படுத்திருந்தவர்கள் அப்படி அப்படியே இருக்க செல்களில் கிடந்தவர்கள் புற்றுக்களிலிருந்து வெளிப்படும் எறும்புகள் போன்று வெளியேற எத்தனிக்க …
ஆயுள் கைதி ஒருவன் அறிவித்தான்.
11 ரோல்கால் … ரோல்கால்… ரோல்கால்
எவ்விதச் சலசலப்புமின்றி அனைவரும் ஒருவருக்குப் பின் ஒருவராக நிற்கத் துவங்கினார்கள். அப்போதும் வரிசைக்குத் தயாராகும் போது, சந்தைக் கூச்சல் ஏற்படும். ஆனால் இங்கு அப்படி அல்ல. ஒரே மயான அமைதி இது எப்படித்தான். சாத்தியமானதோ தெரியவில்லை. இவர்களிடமும்.
ஒரு அரசை எதிர்த்துப் போராட்டம் செய்து சிறையேகியவர்கள். சிறைக்குள் இவ்வளவு ஒழுக்கமா? என எண்ணுவது சிரமமாக இருந்தது. இது ஒன்றும் புதியது அல்ல, மழை பெய்து மண்ணில் விழுந்த நீர் மண்ணுக்கேற்றப்படி நிறம் மாறிக் கொள்வதுப்போல், சிறைக்குள் வந்தவுடன் சிறையின் தன்மை அவர்களுக்குள் புகுந்து அவர்களையும் கைதிக்களுக்குண்டான விதிகளுக்குப் பழக்கப்படுத்திக் கொண்டது எனச் சொல்வதில் வியப்பேதுமில்லை. “கிருஷ்ணன்” கையை உயர்த்துகிறார். பதிலுக்கு எதுவும் சொல்லத் தேவை இல்லை. பதிலுக்குக் குரல் எழுப்புவதுகூடச் சிறைக் கண்காணிப்பாளரின் பதவிக்கு இழுக்கானதுபோல, அங்கு அவரின் குரல் மட்டுமே ஓங்கி உரைக்க வேண்டும். மாறாக யாராவது மறுப்புரைத்தோ அல்லது பதிலுரைத்தோ எளிதாகப் பேசிவிட முடியாது. அப்போ ஆயில் கைதி மட்டும் எப்படி, அவர்கள் ஒத்துழைப்பு இருந்தால்தான், “பாம்பின்கால் பாம்பு அறிய முடியும்” அதற்காக அவர்களைச் சிறைப் பறவையாக, சில நேரங்களில், சிறைச் சிங்கங்களாக, வளர்த்து விடுவார்கள். அப்போதுதான், சின்னஞ்சிறு விலங்குகளை அடக்கி ஆளமுடியும். பெயர் வாசிக்க, வாசிக்க அனைவரும் கை உயர்த்தினார்கள்.
பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பி வைத்துவிட்டு கணவன் தமிழரசைத் தேடும் படலத்தின் முதல் பகுதி அவன் வேலை பார்க்கும் அலுவலகம், உமா குடியிருக்கும் பகுதியிலிருந்து ஐந்தோ, ஆறு கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும், தமிழரசன் அலுவலகத்திற்கு நடந்தே சென்றாள் உமா. போக்குவரத்து உண்டுதான். ஆனால் அதற்குச் செலவு செய்துவிட்டால், இரவுக்குக் கொசுவத்தி வாங்குவதற்குக் கூடக் காசு மிஞ்சாது. அதே நேரத்தில் நடந்து சென்றால், எதிர்ப்படும் யாராவது தன் கணவன் பற்றிக் கூற மாட்டார்களா என்ற கனத்த நம்பிக்கையில் கால்நடையாக ஆறுகிலோ மீட்டரைக் கடக்க ஆய்த்தமானாள்.
வழிநெடுகிலும், எல்லோரும் ஏதேதோ காரிய காரியங்களுக்குச் சென்றபடி இருந்தனர். அவர்கள் அனைவரும், உமாவைத் தவிர அனைத்து விதமான ஆண்கள், பெண்கள் குழந்தைகள், சந்தோஷமாகவே இருப்பதாகவும். இவள் ஏன் தெருவிலும், சாலை நெடுகிலும் திரிந்தலையும், நான்கு கால் விலங்கினங்கள், சாலையின் இருமறுங்கிலும் உள்ள புளியமரங்கள் ஆங்காங்கே இருக்கும், பலதரப்பட்ட கம்பெனிகள், உற்பத்திச் சாலைகள் உணவு விருந்துகள் தானியக் கிடங்குகள் போன்ற வான் உயர்ந்த கட்டிடங்களைச் சுற்றி உள்ள மரங்களில் காலை இரைத் தேடலுக்குப் பின் இளைப்பாறும், பறவை இனங்கள் தன் கீச்சு ஒலிகளை எலுப்பியபடி மிகுந்த சந்தோஷமான நிலையில் இருப்பதாகவும், தான் மட்டும் இவ்வுலகில் நாதியற்று, பிழைப்பற்று எல்லாமிழந்த, நிராயுதபாணியாக இருப்பதாக எண்ணியபடி ஒரு தப்படியையும் தீக்குள் நடத்திக் கடப்பதாகக் கடந்து கொண்டிருந்தாள்.
அவள் பின்னால் ஒரு பஸ் அவள் முன்னாள் ஒரு டிராக்டர் இடையில் ஒரு இரு சக்கர வாகனத்தில் மூன்று இளைஞர்கள் நான்கு திசைகளில் இருந்து வாகனங்கள் வந்து பிரிந்து செல்லும் இடம். மூன்று வாகனமும் ஒன்று போல் ஒலி எலுப்புகிறது. ஆனால்; அவள் செவிகளில் எங்கே, எங்கே” என்ற ஒற்றை வார்த்தை மட்டும் ஒலிக்கிறது. அதனால் அங்குமிங்குமிருந்து எழும்பும் எந்தச் சப்தத்திற்கும் இணங்காமல் நடந்து கொண்டிருக்கிறாள். இரு சக்கர வாகனத்தில் கருத்து குண்டான தேகமுடையவன், அவள் அருகில் இரு சக்கர வாகனத்தை செலுத்தி ஏம்மா ஓரமா போமட்டியா எனக் கத்திச் சொல்கிறான். அவள் அதைக் கவனித்தும் கவனியாதது போல் பிரமை பிடித்தவளாகக் கடக்கிறாள்.
பஸ்ஸிலிருந்து ஓட்டுநர் வெளியே எட்டிப் பார்த்து, ஏதோ சொல்கிறார். பின்னால் வந்த டிராக்டர் ஒட்டியும், அவன் பாணியில் திட்டுகிறான்.
யார் என்ன வேண்டுமென்றாலும் கத்துங்கள். நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள்தான் என ஒரே சிந்தனையில் மூழ்கிவிட்டாள் உமா.
ஆறு கிலோ மீட்டர் எப்படி கடந்தாள் என்பது அவள் கவனிக்கவில்லை. அவள் வந்து சேர வேண்டிய இடத்திற்குச் சரியாக வந்து விட்டாள்.
அலுவலகம், தேனீ கூட்டில் கல்லெறிந்தால் கலைந்துவிடும், தேனீக்கள் போன்று வெறும் தேன் கூடாக இருந்தது. அதே தேனீக்களில் சுய நல தேனீக்கள் என்னதான் தாக்குதல் நடந்தாலும், ஏற்றுக்கொண்டு அதாவது அடிமை சுவாசத்தை, சுவாசிப்பதில்லையே சுகம் கண்ட தேனீக்கள் திரும்ப வந்து ஒட்டிக்கொள்ளும் அப்படி தேனீக்கள் ஒன்றிரண்டு அலுவலகக் கூட்டில் அப்பிக் கிடந்ததன.
உமா சுற்றுமுற்றும் பார்த்தாள், வழக்கமான சூழல் அங்கு நிலவவில்லை. அதற்காகத் தேடும்படலத்தை விடமுடியுமா, பிரதான கேட்டில் நின்றாள். அவளைப் பார்த்தது, வாயில் காப்பாளன் சுந்தரன் வந்து அவளைப் பார்த்து என்னம்மா எனக் கேட்டாள்.
“எங்க அவங்க, வேலைக்கு வந்தாங்களா?” என ஏற்கெனவே தேக்கி வைத்திருந்த வார்த்தைகளை ஒப்பித்தாள். அவன் ஏளனமாக அவளைப் பார்த்துச் சிரித்தான். அவனே அவனைப் பற்றிச் சொல்ல முற்பட்டாலும், அவனுக்கு மேல் பெரிய திமிங்கலம் மேல் அறையில் இருக்கிறது அங்கே சென்று கேட்டுக் கொள் என வலுக்காட்டயமாகச் சொன்னான். அவள் மாடிப்படி ஏறி மேலே சென்றாள்.
அலுவலகமும், அதற்கான அடையாளமும் இருந்தது. ஆனால் அலுவல் பணி செய்திட அங்கு யாருமில்லை. சொகுசான சாய்வு நாற்காலியில் ரஸ்தாளி பழம் வண்ணத்தில் நெற்றிக் கீற்றில் குங்குமம், சந்தனம் மலர திலகமிட்டு முழுக்கைப் பச்சைச் சட்டை வெள்ளை பேன்ட்டில் அலுவலரும் அவளுக்கு எதிரே ஒரு இரண்டாம் அலுவலர், நிறம் வெளுத்த அலுமினிய கலர்சட்டை சுருக்கலாகவும், கறுப்புமின்றி வெள்ளையுமின்றி இருக்கும் அலுவலர் இவளைப் பார்த்தவுடன், வாமா.. எனச் சின்னதாய் புன்னகையும், அதே நொடியில் வேதனையில் முகம் சுருங்கியும் இருபெரும் பாவனைகளையும் மித மிஞ்சிய பெரும் நடிகனைப் போல் பாவித்தார்.
அலுவலர் அவள் யார் என்று? இரண்டாம் அலுவலரைக் கேட்பதுப் போல் பார்த்தார்.
“அய்ய இவுங்க நம்ம தமிழரசோட ஒயிப்”
“ஒ அப்படியா என்னம்மா எங்க, வேல கெடைக்காம, எவ்வள பேரு படிச்சிட்டு வீதியில திரியுரான், ஒம், புருஷன் என்னடனா சங்கம், கிங்கம்ன்னுட்டு போயி, இப்ப வேலய தொலைச்சுடடான்”
“என்ன சொல்றீங்க” என இவளுக்குக் கேள்விப் பட்டது உண்மையா என மீண்டும் எதிர்பார்ப்பு கூடியது.
“அவர் மேலும் அவனைப் பற்றி எந்த அளவுக்கு எதிராகவும் அவனைக் குடும்பத்திலிருந்து பிரிக்க அல்லது சமயத்தைப் பயன்படுத்திக் கணவன் மனைவிக்கு : பிரிவினை உண்டாக்கப் போட்டுக் கொடுக்க முடியுமோ அந்த அளவுக்குப் போட்டுக் கொடுத்தார். அவர் தலையில் இடி விழவில்லை. மாறாக வானமே சரிந்து விழுந்தது. அலுவலகப் படிகட்டிகளைத் தீக்குண்டங்களைக் கடப்பதாக எண்ணிக்கொண்டு கீழே வந்தாள். வந்தவள் அங்கு ஒரு நிமிடம் தாமதிக்க முடியாமல் எங்கேயாவது சென்று விழுந்து சாகவேண்டும் போல் இருந்தது.
“காலணா காசா இருந்தாலும் கவர்மெண்ட் வேலை” அவள், அவன் எப்படிப் பொழைக்கிறான். இவன் வாழ்நாளெல்லாம், பொதுக் காரியம், சங்கம், போராட்டமுன்னு போயி அவனையும் கெடுத்துத் தன் குடும்பத்தையும் வீதியிலே விட்டுட்டுப் போயிட்டானே பாவி, நான் என்னசெய்வேன்” என்று மனதுக்குள் பூகம்பம் வெடித்து அடங்குவதற்குள், அடுத்த பூகம்பம் வெடித்தது. உந்து சக்தியாக சக ஊழியன் ஒருவன் அதான் ஏற்கனவே அலுவலகப் பிரதான வாசலில் நின்றிருந்த சுந்தரன் வந்து அவளிடம் யாசகம் சொல்வதாக நினைத்துக் கொண்டு எரிந்து கிடக்கும் சுள்ளியை எடுத்துக் காய்ந்த வைக்கோல் படப்புக்கு வைத்து எரியூட்டி விடுகிறான்.
ஏம்மா நானும் உம் புருசானோடதான் வேலை பார்க்குறேன். எங்களுக்கெல்லாம் ஸ்டிரைக் போவ தெரியாமலயா, சங்கமெல்லாம் ஆபிசர்களுக்குத்தாமா நம்மள மாரி ஆளுகளுக்கு ஆபிஸர் தாம எல்லாம். அவங்கள எதுத்துகிட்டு வேலக்கி வராம இருந்தா எப்படிம்மா,
இப்ப வேலயும் போச்சி.
“நெசமாவா வேல போச்சி” என்றாள் உமா.
“ஆமாம்மா வேலைக்கு வராம இருந்தவர்களை அரசாங்கம் டிஸ்மிஸ் பண்ணிருச்சிம்மா, அதுல உன் வீட்டுக்காரனும் ஒராளு? போ, எப்படித்தான் புள்ளக்குட்டிகளே வச்சிகிட்டுப் பொழைக்கப் போறியோ, ஏமா எங்கம்மா ஒம் புருஷன்” எனக் கேட்டான். அவர் அதற்குப் பதில் ஏதும் சொல்லாமல் பற்றி எரியும் தீ ஒரு இடத்தில் நிற்காமல் தொடர்வதைப் போன்று தொடர்ந்து நடக்க ஆரம்பித்தாள். மதில் சுவர்கள் நான்கு பக்கமும் சூழ்ந்து இருக்கும். முன் பக்கவாட்டுச் சுவரின் அருகே சென்று பார்த்தாள். உள்ளே பரந்து விரிந்த மையத்தில் பச்சை வர்ணமடங்கிய பங்களா முன்னே ரயில் வேலையாட்கள் உதவி அலுவலர்கள் பரபரப்பாக இருந்தனர்.
வாசல்முன்பாகச் சீருடையணிந்த இருபது வயதுடைய இளைஞர் கையில் துப்பாக்கி ஏந்தி ஆற்றங்கரையில் சூரிய ஒளிக்கற்றையை உள் வாங்கிய நாணல் தட்டையைப் போல் விறைப்பாக நின்றிருந்தான். இவள் வாசலில் போய் நின்றாள். அவன் திரும்பாமல் அவன் கழுத்து மட்டும் திரும்பி என்னவென்று வினாவியது. பதிலுரைத்தார், அவளுக்குப் பயிற்சிக் களத்தில் சவுக்கடி வாங்கிய ரணம் ஏற்பட்டது போல் துடி துடித்தாள்.
அவள் உள்ளே நுழைய அறப் போராட்டம் செய்தாள். போலீஸ் பார்க்காத போராட்டமா! உள்ளே விடவில்லை. அரைமணி நேரம் ஆர்ப்பாட்டம் செய்து பார்த்தாள்.
இரைக்காகக் கத்தி அலறித் தானாக அடங்கும் ஆந்தையைப் போல் அவளாகவே அடங்கிப் போனாள். இவள் யாரைப் பார்க்க உள்ளே போக நினைத்தாளோ, அந்த அதிகாரியே வெளியே வெள்ளைநிற அம்பாஸிட்டர் காரில் தேசியக் கொடி பட படக்க வெளியே வர இவள் குறுக்கே மறிக்க, அப்பறமென்ன போலீஸ் தலைதெறிக்க ஓடிவர அவர் காரிலிருந்து இறங்கி “என்னம்மா” எனக் கேட்க அனைவரும் அடங்க இவள் தொடங்க ”எம் வீட்டுக்காரரே எங்க வச்சுறிக்கீங்க” அவர் முழிக்க “ஆரம்பிக்க உளவுத்துறை அவர் அருகில் வந்து மிகப் பவ்யமாக எடுத்துரைக்க”, “ஏம்மா, ஒங்க வீட்டுக்காரு வேலைக்கு வராதுனால டிபார்ட்மெண்டு ஆக்ஷன் எடுத்திருக்கு, மதுரை சென்ரல் ஜெயில்ல வச்சு இருக்காங்கம்மா அங்கே போங்க எனப் பதில் சொன்னாள்.
உமா சரியென்றோ, இல்லையென்றோ பதில் முடியாமல் தேம்பித் தேம்பி அழுகிறாள். கார் அவளைக் கடந்து செல்கிறது.
வளாகத்தில் இருக்கும் தேநீர்க் கடைக்கு வந்து தண்ணீர் கேட்கிறாள். டீ மாஸ்டர் ஜக்கில் தண்ணீர் தருகிறார். வாங்கி அருந்திக் கொண்டே, கடையின்முன்பாகத் தொங்கிய நாளேட்டின் தலையங்க பிட் பேப்பரைப் பார்க்கிறாள்.
தலைப்புச் செய்தியாக அந்த வாசகம் அச்சிடப்பட்டிருக்கிறது.
1) பணிக்கு வராத அரசு ஊழியர் ஆசிரியர்கள் 1,76,000 பேர் டிஸ்மிஸ்.
2) போராட்டத்தைத் தூண்டிய சங்க நிர்வாகிகள் 3,600 பேர் சிறையில் அடைப்பு.
3) தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா வேலைக்கு வராத அரசு ஊழியர்கள் ஆசிரியர்களை எஸ்மா, டெஸ்மா சட்டத்தின் பிரகாரம், நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
தண்ணீர் தொண்டைக்குள் சென்று குளிராட்டவில்லை. வெந்து தணிந்த சாம்பலில் தண்ணீர் பட்டவுடன் சுர்ரென்று மீண்டும் எரிவதற்கு எத்தனிக்குமே அதுபோன்று இருந்தது உமாவுக்கு.
பள்ளியில் இருந்து திரும்பி இருக்கும் குழந்தைகளுக்காக இவள் காத்திருக்கவில்லை. உடனடியாக பஸ்ஸில் ஏறி அமர்ந்து மதுரை சென்று இறங்கினாள். மத்தியச் சிறைக்குச் செல்ல வேண்டுமென்று ஆரப்பாளையம் டீக்கடையில் தொங்கிய மாலை முரசு பத்திரிகை வழிகாட்டியது, சென்றாள். மத்தியச் சிறை வாசலை அடைந்தாள். மாலை 5 மணி இவளுக்காகச் சிறைச் சட்டம் மாறுமா, திறக்கவில்லை. ஆனால் மறுநாள் வந்து பார்க்கலாமென்று துப்பு கிடைத்தது ஊர் திரும்பினாள்.
ஆர்.பி.கண்ணன் என்னும் இயற்பெயர் கோண்ட R.பாண்டியக்கண்ணன் விருதுநகர் மாவட்டம் கட்ராம்பட்டியைச் சேர்ந்தவர். தமிழ்நாடு அரசு சுகாதாரப் போக்குவரத்துறத் துறையில் பணி செய்கிறார். 2008 ஆம் ஆண்டு சலவான், மழைப்பாறை, நுகத்தடி, மேடை, துயர் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.








Leave a Reply