இந்தியாவின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நாடாளுமன்றக் கூட்டத்தொடரொன்றில், இந்தியாவில் மூங்கிலின் பொருளாதார மற்றும் அவற்றின் கலாச்சார முக்கியத்துவத்தை விவரித்தார்.
இந்தியா போன்ற வளரும் நாட்டின் பொருளாதாரப் பங்களிப்பில் “தொட்டில் முதல் கல்லறை வரை” பல பயன்பாடுகள் கொண்டிருக்கும் மூங்கில்கள் பெரும்பங்காற்றுகின்றன.
மூங்கில்கள் புல் குடும்பமான போயேசியைச் (Poaceae) சேர்ந்தவை. போயேசியின் துணைக்குடும்பமான பேம்புசாய்டியேவின் (Bambusoideae) கீழ் வரும் இவற்றில் 91 பேரினங்களும், 1000 சிற்றினங்களும் உள்ளன.
இவை பெரும்பாலும் வெப்பமண்டல மற்றும் உபவெப்பமண்டலப் பகுதிகளில் பரவலாகக் காணப்படுகின்றன, சில இனங்கள் மிதவெப்பமண்டலச் சூழலிலும் வளர்கின்றன.
மூங்கிலின் தண்டு (culm) கடினமான நார்ப்பொருள் நிறைந்தது; இதன் வலிமை காரணமாகக் கட்டிடக்கலை, பசுமைப் பொறியியல், துணி, காகிதம் மற்றும் உயிர்மட்கு உற்பத்தியில் பரவலாகப் பயன்படுகிறது. (சூழலியல் நோக்கில், மூங்கில் உயர் கார்பன் உறிஞ்சும் திறன் (up to 12 t CO₂ ha⁻¹ yr⁻¹) கொண்டது. அதன் பரந்த வேர்க்கிழங்கு வலையமைப்பு (rhizome system) மண் அரிப்பைக் கட்டுப்படுத்தி, நிலத்தின் ஸ்திரத்தன்மையை soil stabilization) உறுதிசெய்கிறது. கூடுதலாக, பல பறவை, பாம்பு, பூச்சி இனங்களின் வாழிடமாகவும் மூங்கில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, டைனோஸர்களின் அழிவுக்குப் பிறகான காலத்தில் தோன்றியவை மூங்கில்கள்.
பொதுவாக மூங்கில்களை அவற்றின் வளரியல்பைக் கொண்டு கூட்டமாக வளரும் பொந்து மூங்கில்கள் (clumping bamboos) மற்றும் வேர்க்கிழங்குகளிலிருந்து தொடர்ந்து குருத்துக்களை உருவாக்கி இடைவெளி விட்டு வளருபவை (Running bamboos) என இரண்டாகப் பிரிக்கலாம்.
1927-ம் ஆண்டின் இந்திய வனச் சட்டத்தின்படி, புல் வகையான மூங்கிலுக்கு மர அந்தஸ்து வழங்கப்பட்டது. இதனால் மூங்கிலை வெட்டி மற்ற பகுதிகளுக்குக் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. மூங்கிலை வெட்ட, சிறப்பு அனுமதி பெற வேண்டும் என்னும் நிலை உண்டானது.
இதனால், உலகின் இரண்டாவது பெரிய மூங்கில் உற்பத்தியாளரான இந்தியா, தைவான் மற்றும் சீனாவிலிருந்து மூங்கிலை இறக்குமதி செய்ய வேண்டி வந்தது. இதைக் கருத்தில் கொண்டு, 2017 -ம் ஆண்டில், 1927-ம் ஆண்டின் இந்திய வனச் சட்டம் தேவைக்கேற்பத் திருத்தப்பட்டு, மூங்கில் மீண்டும் மரத்திலிருந்து புல் வகைக்கு மாற்றப்பட்டது. இந்த நடவடிக்கை மூங்கிலைப் பயன்படுத்த பல புதிய வழிகளைத் திறந்தது.
உலகின் பல வகையான மூங்கில்களில் வறண்ட பகுதிகளில் வளரும் கல் மூங்கிலான டெண்ட்ரோ கலாமஸ் ஸ்டிரிக்டஸ் (Dendrocalamus strictus), ஈரச் செழிப்புள்ள இடங்களில் வளரும் பொந்து மூங்கிலான பம்பூசா அருண்டினேசியா (Bambusa arundinacea) ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
இவற்றைத் தவிர, பொன்னிற மூங்கில், ஒரு அடி விட்டமுள்ள ராட்சஸ மூங்கில், முள்ளி மூங்கில், கொடி மூங்கில் எனப் பல்வேறு வகையான மூங்கில்களும் உள்ளன.
உலகின் மிக வேகமாக வளரும் தாவரங்களில் மூங்கிலும் ஒன்று. சில வகை மூங்கில்கள் 24 மணி நேரத்தில் 40 மி.மீ வளரும் இயல்புடையவை. மூங்கிலின் 1200 வகைகள் உலகெங்கிலும் பரவியுள்ளன. இவற்றில் 24 பேரினங்களின் 138 சிற்றினங்கள் இந்தியாவில் வளருகின்றன. இதில் 3 மட்டுமே அயல் தாவரங்கள் மற்ற அனைத்துமே இயல் தாவரங்கள்.
உலகின் பல நாடுகளில் இயற்கையாகவே வளரும் மூங்கில்கள் அவற்றின் வாழிடங்களைப் பொருத்து ஆசிய பசிபிக் மூங்கில்கள், அமெரிக்க மூங்கில்கள் மற்றும் ஆப்பிரிக்க மூங்கில்கள் என வகைப்படுத்தப்படுகின்றன. ஐரோப்பாவில் இயற்கையான மூங்கில் வளருவதில்லை, அங்கு இருப்பவை அறிமுகப்படுத்தப்பட்டவை.
மூங்கில்கள் வாழ்நாளின் இறுதியில் ஒரே ஒரு முறை மட்டும் மலர்ந்து பின்னர் அழியும் Monocarpic வகையைச் சேர்ந்தவை. 48-லிருந்து 50 ஆண்டுகளில் மூங்கில்கள் இப்படி முதலும் கடைசியுமாக மொத்தமாகப் பூத்து விதைகளை ஏராளமாக உருவாக்கிவிட்டுப் பின்னர் மடிந்துவிடும். மூங்கில் மலர்வது என்பது உண்மையில் மூங்கில் அழிவதுதான். மீண்டும் வேர்க்கிழங்குகளிலிருந்து மூங்கில் வளர பல ஆண்டுகளாகும் என்பதால் மூங்கிலையே உணவாகக் கொண்டிருக்கும் விலங்குகள் இம்மலர்வினால் பாதிப்படைகின்றன.
சீனாவில் 1980ல் பசானியா ஃபாங்கியானா (Bashania fangiana) என்னும் மூங்கில் இனத்தின் மிகு மலர்வினால் முதன்மை உணவாக மூங்கிலையே எடுத்துக்கொள்ளும் பாண்டா (Giant Panda) விலங்குகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டன.
மூங்கில் சாவு எனப்படும் மூங்கிலின் இத்தகைய மிகைமலர்வு பஞ்சத்துக்கும் அழிவிற்குமான அறிகுறி என்றே இந்தியாவில் நம்பப்படுகின்றது. ஆனால் மூங்கில் மலர்விற்குப் பிறகு மண்ணில் விழுந்த மிகுதியான விதைகளை பெருச்சாளிகள், எலிகள் ஆகிய கொறிக்கும் உயிர்கள் உண்டு, பல்கிப்பெருகி பிற தானியங்களையும் உண்ணத் துவங்குவதால்தான் உணவுத்தட்டுப்பாடு வருமே ஒழிய இந்த மிகைமலர்வுக்கும் பஞ்சத்துக்கும் எந்தத் தொடர்புமில்லை என்று தாவர அறிவியல் சொல்லுகின்றது. மூங்கில் பூக்கும் காலத்தையொட்டி எலிகள் மற்றும் பெருச்சாளிகளுக்குக் கூடுதல் இனப்பெருக்க உந்துதல் உண்டாகுமென்றும் சொல்லப்படுகிறது.
இப்படி பல நூறு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஆயிரக்கணக்கான மூங்கில்கள் சேர்ந்து ஒரே சமயத்தில் மலரும் விந்தையைத் தாவர அறிவியலாலும் சரியாக விளக்க முடிவதில்லை. Phenology எனப்படும் தாவரங்களின் புதுத்தளிர்களும் மலர்களும் உருவாகும் காலத்திற்கான தனி அறிவியல் பிரிவான பருவகாலப் பரவலியல் இன்னும் இதைக் குறித்து ஆய்வு செய்த படியேதான் இருக்கிறது.
மூங்கில்களின் அடியிலிருக்கும் கிழங்கு போன்ற பகுதிகளில் தலைமுறைகளாகச் சேமிக்கப்பட்டிருக்கும் நினைவுக்குறிப்புகள் அதே இனத்தைச் சேர்ந்த பிற மூங்கில்களுக்கும் பூக்கும் சமயத்தைக் குறித்த தகவல்களை அனுப்பும். அல்லது எப்படியோ தெரிவிக்கும் சாத்தியம் இருக்கிறது என்று மட்டுமே இப்போதைக்கு ஆய்வுகள் அனுமானித்துச் சொல்லுகின்றன.
இப்படி குறிப்பிட்ட இடைவெளியில் மிகைமலர்வு நிகழ்வைக் கொண்டிருக்கும் மூங்கில், குறிஞ்சி போன்றவை Plietesials எனப்படுகின்றன. குறிஞ்சியில் 12 வருடங்களுக்கு ஒருமுறை மலர்பவையும், 9 மற்றும் 7 வருடங்களுக்கு ஒருமுறை மலர்பவையும் அவற்றிற்குள் எந்தக் குழப்பமும் இல்லாமல் மிகத்துல்லியமாக அதே காலத்தில் மலர்கின்றன என்பது பெரும் அதிசயமே!
பூத்த மூங்கில் மஞ்சரிகளில் மகரந்தச் சேர்க்கை நடந்து பெண்பூக்கள் கருவுற்று, பின்னர் விதைகள் முற்றி விழுந்து அவற்றிலிருந்து புதிய மூங்கில்கள் வளர சில ஆண்டுகளாகி விடும். அதுவரை மூங்கிலின் இலைகளையும் குருத்துக்களையும் விரும்பி உண்ணும் அக்காட்டின் யானைகளும் அவ்வுணவுக்காகக் காத்திருக்க வேண்டியதுதான்.
எல்லா மூங்கில் இனங்களும் 48-50 வருட இடைவெளியில்தான் மலரும் என்பதில்லை. ஜாவா வகையான Schizostachyum elegantissimum மற்றும் Arundinaria wightiana மூங்கில்கள் மூன்று வருடங்களுக்கொரு முறையும், Phyllostachys bambusoides எனப்படும் சீன மூங்கில் 120 வருடங்களுக்கு ஒரு முறையும், Bambusa vulgaris வகை 150 வருடங்களுக்கு ஒரு முறையும் மலர்ந்து அழியும். பூக்காமலே அழியும் மூங்கில் இனங்களும் உள்ளன.
இந்தியாவில் மணிப்பூரில் மட்டும் 53 சிற்றினங்களும், அருணாச்சலப் பிரதேசத்தில் 50 சிற்றினங்களுமாக, வடகிழக்கு மாநிலங்களில் மட்டுமே இந்தியாவின் மொத்த மூங்கிலின் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட வகைகள் விளைகின்றன.
இப்பகுதிகளில் இசைக்கருவிகள், காகிதங்கள், தொப்பிகள், ஆயுதங்கள், மேசை நாற்காலிகள், வீடுகளின் கட்டுமானப் பொருட்கள் உள்ளிட்ட அன்றாட வாழ்விற்கான 1500-க்கும் மேற்பட்ட பொருட்கள் மூங்கிலால்தான் செய்யப்படுகின்றன.
மூங்கில் குருத்தும், மூங்கிலரிசியும் அம்மக்களின் மிக விருப்பமான முக்கியமான உணவாகும். சாப் ஸ்டிக் எனப்படும் உணவுக் குச்சிகளாகவும், எரிவிறகாவும் மூங்கிலே இங்கு பயன்படுகிறது. ஆசியாவின் மிக உயர்ந்த கட்டிடங்களின் கட்டுமானப் பணிகளில் இங்கு விளையும் உறுதியான, நீண்ட கணுவிடைவெளிகளும், வளையும் தன்மையும் கொண்டிருக்கும் நெடுமூங்கில்களே சாரம் கட்டப் பயன்படுகிறது. மூங்கிலின் இலைகளும் கால்நடைத் தீவனமாகப் பயன்படுகின்றன.
அஸ்ஸாமிய மூங்கிலான டென்ரோகலாமஸ் துல்டா (Dendrocalamus tulda) விலிருந்து செய்யப்படும் புல்லாங்குழல்தான் அங்கு கோவில் விழாக்களில் இசைக்கப்படுகிறது. இக்குழலிசை துஷ்டசக்திகளை விரட்டுவதாக அங்கு நம்பிக்கை நிலவுகிறது.
மிசோரத்தின் மெலொகன்னா பாக்கிஃபெரா (Melocanna baccifera) என்னும் தாவர அறிவியல் பெயர் கொண்ட முள்ளி மூங்கிலிலிருந்தே (Muli Bamboo) தொட்டில்களும், கிறிஸ்துவ மதம் அதிகம் பரவியிருப்பதால் சவப்பெட்டிகளும் கூடச் செய்யப்படுகின்றன.
இப்பகுதிகளில் வளரும் ஃபில்லோஸ்டேகைஸ் பம்புசாய்டெஸ் (Phyllostachys bambusoides) எனப்படும் பிறிதொரு மூங்கில் வகையின் கணுக்களிலிருந்து சுரக்கும் மணலைப் போன்ற சொரசொரப்பான ஒரு வடிதலைச் சுரண்டி சேகரிக்கப்படும் தபஷீர் (tabasheer) உள்ளூர் மக்களால் பல நோய்களுக்கு மருந்தாகப் பயன்பாட்டில் இருக்கிறது. தரைமட்டத்தில் குறுக்கும் நெடுக்குமாக அமைக்கப்பட்டிருக்கும் மூங்கில் கழிகளை அசைத்து, தாளத்திற்கேற்ப அவற்றின் இடைவெளிகளில், மூங்கில் தலையணியுடன் பாரம்பரிய உடையில் இருக்கும் மிசோரம் மக்கள் ஆடும் செரா (Cheraw) நடனம் உலகப்புகழ் பெற்றது.
மிசோரம் மாநிலத்தின் மொத்த நிலப்பகுதியில் 49 சதவிகிதப் பகுதியில் மூங்கில் காடுகள்தான் உள்ளன.
இப்பகுதி மக்கள் மூங்கிலைச் சூடு பண்ணுகையில் கிடைக்கும் எளிதில் எரியும் தன்மையுடைய பிசினை விளக்கெரிக்கப் பயன்படுத்துகின்றனர். சிலிசிக் அமிலம் நிறைந்துள்ள மூங்கிலின் கெட்டியான கணுக்களை மட்டும் நறுக்கித் துண்டுகளாக்கி, வறுத்துப் பொடித்து அதிலிருந்து காபியைப் போல ஒரு மணமுள்ள பானம் தயாரித்து அருந்துவதும் கிழக்கிந்திய மாநிலங்களில் பரவலாக உள்ள ஒரு உணவுப் பழக்கமாகும்.
சீனா, ஜப்பான், தாய்லாந்து மற்றும் இந்தோனேஷியாவிலும் மூங்கில் காடுகள் இருக்கின்றதென்றாலும் சீனாவின் மூங்கில் காடுகளே உலகில் மிகப்பெரியவை. ஆந்தோசயானின் நிறமிகள் அடர்ந்துள்ள கறுப்பு மூங்கில் உள்ளிட்ட சுமார் 300 மூங்கில் சிற்றினங்கள் சீனாவில் விளைகின்றன. சீனா மட்டுமே ஆண்டுக்கு 57 பில்லியன் ஜோடிகள் மூங்கில் உணவுக்குச்சிகளைத் (Chopsticks) தயாரிக்கின்றது.
ஜப்பானிலும் மூங்கில் மிக முக்கியமான தாவரம். பைனுடன் சேர்ந்து, மூங்கிலையும் ஜப்பானியர்கள் மகிழ்ச்சி மற்றும் தூய்மையின் அடையாளமாகக் கொண்டிருக்கின்றனர்.
ஜப்பானில் சகானோ மூங்கில் காடுகளின் மூங்கில் தண்டுகளின் இடையே புகுந்து வரும் காற்றின் ஒலியை ஜப்பானிய அரசாங்கம் “பாதுகாக்கப்பட வேண்டிய ஜப்பானின் நூறு ஒலிகளில்” ஒன்றாக அங்கீகரித்திருக்கிறது.
மூங்கிலின் குருத்து முளைகள் மிக சுவையானவை. உலகில் பல்வேறு மக்களின் உணவுகளில் மூங்கில் குருத்து முக்கியமானதாக இருக்கிறது. இதில் புரதம், பாஸ்பரஸ் சுண்ணாம்பு, நார்ச்சத்து, இரும்புச் சத்து, வைட்டமின் பி3, செலினின் உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. சரும வறட்சி, தயமின் குறைபாடு, எலும்புருக்கி நோய், மாலைக்கண் நோய், உயர் ரத்த அழுத்தம், கழிவு நீக்கம், உடல் எடைக் குறைப்பு எனப் பலவற்றுக்கும் மூங்கில் குருத்துணவு பயன்படுகிறது.
மரவள்ளிக் கிழங்குகளிலிருப்பது போல சிறிதளவு நச்சுப்பொருட்களும் மூங்கில் குருத்துக்களில் இருப்பதால் அவற்றை ஒருபோதும் சமைக்காமல் உண்ணக் கூடாது. வேக வைக்கும் போது இதன் நச்சுக்கள் நீங்கி விடும்.
டேக்கினொக்கொ- (takenoko) எனப்படும் சுவையான சத்தான மூங்கில் குருத்துணவு ஜப்பானில் வெகு பிரபலம். தற்போது மூங்கில் குருத்து உணவுகள் தமிழ்நாட்டிலும் குறிப்பிட்ட உணவகங்களில் கிடைக்கின்றன. இந்தியப் பழங்குடி இனத்தவர்களின் உணவில் இவை பிரதான இடம்பெற்றிருக்கின்றன.
இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் வாஸ்து மூங்கில் / அதிர்ஷ்ட மூங்கில் என அழைக்கப்பட்டுச் சிறு கிண்ணங்களில் வளர்க்கப்படும் தாவரம், மூங்கிலே அல்ல. சீனா மற்றும் தாய்வானில் வளர்க்கப்பட்டு உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் Dracaena sanderiana என்னும் தாவர அறிவியல் பெயர் கொண்ட இவற்றின் கணுக்களும் கணு இடைவெளிகளும் மூங்கிலைப் போல இருப்பதால் இவை மூங்கில் என்று அழைக்கப்படுகின்றன.
2020 -ம் ஆண்டில், மூங்கில் தரை, கூழ், காகிதம் மற்றும் பிளைவுட் போன்ற மூங்கில்களில் இருந்து தயாரிக்கப்படும் தயாரிப்புகளை உள்ளடக்கிய தொழில்துறை மூங்கில் தயாரிப்பு 35% பங்குடன் சந்தையில் ஆதிக்கம் செலுத்தியது. இந்தியா, சீனா, வியட்நாம் மற்றும் மியான்மர் ஆகியவற்றை கொண்டுள்ள ஆசிய பசிபிக் பிராந்தியங்கள் இதில் மிக முக்கியமான வருவாய்ப் பங்கைக் கொண்டுள்ளது,
2022-ன் தேசிய மூங்கில் பொருட்கள் கண்டுபிடிப்புப் போட்டியில் வாரணாசியின் உயிர்வேதிப்பொறியியல் பேராசிரியரான திரு ப்ரத்யூத் தார் (Pradyut Dhar) முதல் ஐந்து வெற்றியாளர்களில் ஒருவராக இருக்கிறார்.
நெடுஞ்சாலைகளில் ஒளிரும் சமிஞ்ஞைகள், விவசாயம், ஆரோக்கியம் வாகன உதிரிப் பாகங்கள், மிக உறுதியான கட்டுமானப் பொருட்கள் மற்றும் பின்னலாடைத் துறைகளில் உபயோகப்படுத்தப்படும் மூங்கில் பொருட்களைக் குறித்தான இவரது முன் வரைவுத்திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
மூங்கில் உற்பத்தியில் உலகின் இரண்டாவது பெரிய நாடாக இருப்பினும், உலகளவில் மூங்கில் சார்ந்த பொருட்களின் வர்த்தகத்தில் இந்தியாவின் பங்கு வெறும் 4 சதவீதம்தான். திரு ப்ரத்யூத் தார் போன்றவர்களின் இத்தகைய தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள், திறன் மேம்பாட்டுடன் இணைகையில், மூங்கில்கள் முழுமையாகப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்கிறது. உதாரணமாக சமீபத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் அருணாசலப்பிரதேசத்தின் மூங்கிலால் ஆன டோனி போலோ விமான நிலையத்தைச் சொல்லாம். (Donyi Polo Airport.)
மூங்கில் ஒரு பன்முகத்தன்மை கொண்ட புல்வகைத் தாவரமாக உலகளாவிய அளவில் சூழலியல், பொருளாதாரம் மற்றும் சமூகத் துறைகளில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. உயர் கார்பன் சேமிப்புத் திறன், மண் அரிப்புக் கட்டுப்பாடு, உயிர்வளப் பாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படையில், எதிர்காலச் சுற்றுச்சூழல் மேலாண்மையில் மூங்கில் ஒரு மிக அத்தியாவசியமான இயற்கை வளமாக இருக்கும்.
வேட்டைக்காரன் புதூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். பொள்ளாச்சி கல்லூரியில் தாவரவியல் பேராசிரியராகப் பணி புரிந்துகொண்டிருக்கிறார். மேலும், அரிஸோனா பல்கலைக்கழக வலைத்தளத்தில் அறிவியல் தகவல்களைத் தமிழில் மொழிமாற்றம் செய்ய மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். தற்போது தமிழில் தாவரவியல் அகராதியை உருவாக்கும் முயற்சிலும், அந்தியூர் வனப்பகுதி பழங்குடியினரான சோளிகர்களின் தாவரவியல் தொடர்புகள் குறித்த ஆய்விலும் ஈடுபட்டு வருகிறார்.
தாவர உலகம், ஸாகே-போதையின் கதை, வானவில் மரம், விலக்கப்பட்ட கனி, தந்தைப்பெருமரம், நுண்ணுயிருலகு உட்பட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். மரங்களின் மறை வாழ்வு என்னும் நூலை மொழியாக்கம் செய்துள்ளார்.
தோழி விருது 2019, செங்கால் நாரை விருது 2022, இந்திய மருத்துவக் கழகம் வழங்கிய Women of Wonder விருது 2025, சிறந்த அறிவியல் நூலிற்கான முனைவர் உலோ.செந்தமிழ்க்கோதை நினைவு விருது 2025 ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.








Leave a Reply