திரிபு
சவுந்தர் மாமாவுக்கு போன் பண்ணும் போது உடல் எதற்கு அப்படி உதறியதென்றே புரியவில்லை. அத்தையைப் பற்றி எப்படிச் சொல்லுவது என்று இரண்டு மூன்று முறை அவர் நம்பரை போன் போட்டு போட்டு கட் செய்துகொண்டிருந்தேன். ஒரு பக்கம் மாமா மீது கோபமும் இன்னொரு பக்கம் இந்தச் செய்தியைக் கேட்டதும் அவர் என்ன நினைப்பார் என்ற ஆதங்கமும் மாறி மாறி வந்துகொண்டிருந்தது.
அந்தப் பதற்றம் மாமா இடிஞ்ச மண்டபம் வரும் வரை நிற்கவே இல்லை.
எங்க பாத்தே.
வாயு லிங்கம் பக்கத்தலதான் காலையில பார்த்தேன். அத பார்த்த உடனே உலகமே ஒரு நிமிஷம் நின்னு போனது போல ஆயிடுச்சி.
அவளுக்கு என்ன கொறை வச்சேன். தனியா வீடு, டி.வி, பிரிட்ச், கேஷ்னு வாங்கிதானே போட்டேன். அங்க இருக்க முடியாம என்னுடைய மானத்தை வாங்கவே இப்படிப் பண்ணிட்டிருக்கா என்றதும் எனக்கும் கோவம் தொண்டையை அடைத்தது.
பள்ளிக்கூட நாட்களில் பெல் அடித்ததும் வீட்டுக்குக் கூடப் போகாமல் ஆறு ஏழு பேர் அத்தை வீட்டுக்குத்தான் ஓடுவோம். கை நிறைய எங்களுக்காகக் கடலை மிட்டாயை அவளே செய்து கொடுப்பாள். பெரிய திண்ணை வைத்த வீடு, ஏழு ஏக்கர் நிலத்தில் விளைந்த மல்லாட்டை, நெல், சோளம், மொச்சை என மூட்டை மூட்டையாய் வீடு முழுக்கக் கிடக்கும்.
ஊரில் கூத்து நடந்தால் கூத்துக் கட்டுவதற்குத் துணியிலிருந்து, கூத்துக்காரருக்குச் சாப்பாடு வரை அத்தைதான் பார்த்துப் பார்த்துச் செய்வாள்.
மாமாவுக்கு அத்தையின் சொல் எங்கிருந்து வரும் அதை எப்படிச் செய்து முடிக்கலாம் என்று காத்திருப்பார். கார்த்திகை தீபம் முடிந்த மூன்றாவது நாள் அண்ணாமலையார் மலை சுற்றி வரும் போது நந்தி லிங்கத்தில் வைத்து ஊருக்கே சாப்பாடு போடுவாள். அதுவும் யாசகரைத் தேடித் தேடி கூட்டி வந்து சாப்பாடு போடுவார். அதற்குப் பிறகுதான் அத்தைக்கு சவுந்தர் பிறந்தார் என ஊரே சொல்லும்.
ஆனால் சவுந்தர் வளர வளர நந்தி கோயிலே கதி என்றானார். வார வாரம் வெள்ளிக் கிழமை நடக்கும் நந்தி பூஜைக்குப் போன மாமா தினமும் நந்திக் கோயிலிலே கிடக்க மாமா எங்கே சாமியார் ஆகிவிடுவாரோ என்று ஊரெல்லாம் பொண்ணு பார்த்துக் கட்டி வைத்தார். சும்மா சொல்லக் கூடாது. அந்தப் பொண்ணு வந்த நேரம் மாமாவுக்கு உலகாயத்தின் மீது பிடிப்பு வந்தது.
கொஞ்ச நாட்களிலே அத்தையின் கணவர் மர்மக் காய்ச்சலில் இறந்து போக மாமாவும் ஊரு விட்டு தள்ளியிருக்கிற புது நகருக்குக் குடி போனார். நிலம் கொஞ்சம் கொஞ்சமாகப் பயிர் வைப்பது சுருங்கிப் போனது. அத்தையும் வீட்டுக்குள் சுருங்கிப் போக ஆரம்பித்தாள்.
இரண்டு வாரத்து முந்தி கூட அத்தை நிலத்து வரை போய்க் காலார நடந்து அங்கிருக்கும் சுள்ளி முள்ளுகளைப் பெருக்கி வரும் போது வழியில் பார்த்துப் பேசிக்கொண்டிருந்தேன்.
என்ன எங்க போயிட்டு வர்ர அத்தை?
ஒன்னுமில்லடா எவ்வள நேரந்தான் டி.வியே பார்த்துட்டு இருக்கிறது. எங்கனாவது கொல்லை வேலைக்குப் போகலாம்னாலும் ஊ மாமாங்கார ஏ மரியாத போயிடும் வீட்டுலே இருங்குறான். முன்ன மாதிரி உடம்பும் ஒத்துழைக்க மாட்டேங்குது. அடிக்கடி அவ வீட்டுக்கும் போகமுடியல ஏதோ அப்படி இருந்தும் ஒரு வாரம் அவன் வீட்டுல போய் இருந்தேன். புள்ளைங்களும் காலையில ஏழுமணிக்குப் போனா ராத்திரி தூங்கனுதக்கு அப்புறம்தான் வருதுங்க. ஒருத்தர் மூஞ்சிய ஒருத்தரப் பார்த்துக்கிட்டு எவ்வளவு நேரந்தான் வேலையே இல்லாம ஒட்கார்ந்துட்டு இருக்கிறது. அதான் வந்துட்டேன் என்று சொல்லும் போது அத்தையின் கண்ணோரம் ஈரம் படர்வதைப் பார்க்கமுடிந்தது.
நான்கு நாட்களுக்கு முன்னாடி கும்பகோணம் காபி கடை பக்கம் வேடிக்கை பார்த்தபடி அத்தை ஒரு அம்மாவோடு போவதைப் பார்த்தேன். இரவு பகலென ஜனங்கள் மலை சுற்ற ஆரம்பித்ததும் சுற்றி இருந்த நிலங்களெல்லாம் பிளாட்டுகளாக ஆகி சம்சாரிகளெல்லாம் வெற்று உடம்புகளாக ஊரில் நடமாடுவது போல் இருந்தது.
வாயு லிங்கம் அருகில் போன போது மாலை வெயில் இறங்கியிருந்தது. ஏழு எட்டுப் பேர் கோயிலுக்கு வெளியே உட்கார்ந்திருந்தார்கள். அதில் அத்தையோடு பார்த்தவளும் உட்கார்ந்திருந்தாள். கோயிலுக்குப் போய் வெளியே வந்தவர்கள் அவர்களின் கைகளில் தாராளமாகக் காசு போட்டு விட்டுப் போய்க்கொண்டிருந்தனர்.
நானும் மாமாவும் சுற்றிலும் அத்தையைத் தேடிக்கொண்டிருந்தோம். அத்தை அங்கு இல்லாத போது மாமா கோவத்தோடு வண்டியை எடுத்துக்கொண்டு அடிஅண்ணாமலை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார். நான் திரும்பி வரும் வழியில் யதேச்சையாக வாயு லிங்க நந்தவனம் பக்கம் பார்த்தேன். அத்தை அங்கிருந்த மரத்திற்குப் பின்னே மறைந்துகொண்டு ரோட்டையே பார்த்துக்கொண்டிருப்பது தெரிந்தது.
வேறு வேறு முகம்
அது மழைக்காலப் பூஞ்சையான காலைவேளை. சுற்றிலும் ஈரம் பிசுபிசுக்க எழுந்திருக்க மனமின்றிப் பாயில் சுருண்டு படுத்திருந்தான் மணி.
ஓட்டுத் தாழ்வாரத்தில் இறங்கிவரும் பனிக்கு முகம் வரைப் போர்வையை இழுத்து மூடினான். தூக்கம் கலைந்திருந்தாலும் இரவெல்லாம் கண்ட கனவை ஒருமுறை நினைவுப்படுத்திக்கொண்டிருந்தான். முன்னும் பின்னுமாக ஞாபகங்களில் சில காட்சிகள் மட்டுமே தீர்க்கமாகத் தெரிந்தன. சிறு வயதில் நண்பர்களோடு பனையேறிய நாட்களும், ஓரிக்கட்டிக்கொண்டு மத்தியானத்தில் கிணற்றில் விளையாடிய காட்சிகள் ஓடிக்கொண்டிருந்தன. இப்படி காலை வேளையில் கனவுகளைப் பின் தொடர்வது அவனுக்கு இப்பொழுது வாடிக்கையாகி இருக்கிறது. சில நாட்கள் சுவரில் மாட்டிவைக்கக் கூடிய அளவுக்கு இருக்கும் காட்சிகளும், சில நாட்களில் அவமானத்தால் உடல் எரியும் காட்சிகளும் நினைவுகளில் வந்து போவது தவிர்க்கமுடியாமல் ஆகிறது.
இது எப்பொழுதிலிருந்து ஆரம்பித்தது என அவன் யூகித்த போதெல்லாம் அவன் நெஞ்செலும்பு வின்னென்றாக அதை யோசிப்பதையே விட்டுவிட்டான். மூன்று நாட்களுக்கு முன்பு கூடக் கடையில் மூக்குக்கு உள்ளார இருக்கிற முடியை வெட்டச் சொல்லி கஸ்டமர் சொன்னபோது நெஞ்செலும்பு வின்னென்று எழ அதை முடிந்த மட்டும் ஆசுவாசப்படுத்திக்கொண்டு வெட்டி விட்டு கண்ணாடி முன் சவம் போல நின்றுகொண்டிருந்தான். அந்தாள் கடையை விட்டுப் போகும் வரை வின்னென்ற அதிர்வு அடங்காமல்தான் இருந்தது. இத்தனைக்கும் இது எல்லோரும் செய்யச் சொல்வதுதான். அவனும் அதை நம் வேலை என்று செய்திருக்கிறான். ஆனால் அந்தாள் அப்படிக் கேட்கும் போது ஏதோ ஒன்று அழுத்துவது போல இருந்தது.
படுக்கையிலிருந்து எழுந்து முன்கட்டுக்குப் போன போது பழையகாலத்து ஆட்டுரலின் பக்கம் ஒடுங்கிப்போன பித்தளைக் கிண்ணம் கிடப்பதைப் பார்த்தான்.
அப்பா அந்த ஆட்டுரலுக்குப் பக்கத்தில்தான் வாழ்நாள் முழுக்க ஊர்க்காரர்களுக்குச் சவரம் பண்ணி வாழ்ந்துகிடந்தார். அப்பா போன பிறகு அவர் உபயோகித்த ஒவ்வொரு பொருளும் தானாகவே காணாமல் போனது. அப்பாவுக்கென்று இருந்த மூன்று சவரக்கத்தி, இரண்டு கத்திரிக்கோல், ஒரு பழைய காலத்து இரும்புப் பெட்டி, அதில் மூன்று செட்டுத் துணி எல்லாவற்றையும் அப்பா இறந்த நாளில் அவர் கூடவே சுடுகாட்டுக்கு எடுத்துப் போய்த் தூக்கிப் போட்டாச்சி. அப்பாவின் நண்பர் சண்முகத்தோடு எடுத்த புகைப்படம் ஒன்று மட்டும் அம்மாவின் பெட்டிக்குள் மாறியிருந்தது. ஒரே மாதிரி உடை, ஒரே மாதிரி மீசை என இளைமையாக இருக்கும் போது ஸ்டுடியோவுக்குப் போய் எடுத்தது.
அது ஞாபகம் வந்தவுடன் அந்தப் பெட்டியைத் தேடினான். மூன்று பிள்ளைகளின் அடுக்கக அலமாரிக்குப் பின்னாடி ஒடுங்கிக் கிடந்தது அந்தப் பெட்டி. அப்பாவின் கல்யாணத்துக்குப் பச்சைக் கலர் பெட்டிதான் வேண்டும் என்று சொல்லிவிட வேலூர் வரைத் தேடி வாங்கி வந்ததாக அப்பாவைப் பார்க்க வந்திருந்த சண்முகம் பெரியப்பா ஒரு முறை நிறை போதையில் இருக்கும் போது அம்மாவைப் பார்த்துச் சொல்லக் கேட்டிருக்கிறான். பச்சை நிறம் மங்கிப் போய்ப் பெட்டி திட்டுத் திட்டாகத் துரு தெரிய ஆரம்பித்தது. அவன் அம்மாவின் வயோதிக முகம் போலவே.
பெட்டிக்குள் அம்மாவின் பழைய காலப் புடவைகளுக்கு மேலும் அப்பாவின் புகைப்படத்துக்கு அடியிலும் பத்திரமாக ஒரு மஞ்சள் பை இருந்தது. அப்பாவின் படத்தை எடுத்துக் கொஞ்சம் தூரம் வைத்துப் பார்த்தான். சண்முகம் பெரியப்பா வீட்டுக்கு வரும்போதெல்லாம் இந்தப் படத்தை வைத்துத்தான் அப்பாவைக் கேலி பண்ணுவார். “எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாவுனும் சாமி” முதல் மரியாதை வசனத்தை நடித்துக் காட்டி அப்பாவைக் கிண்டல் செய்வார்.
சாய்ந்த பார்வை, ஒடுக்கலான முகம், லேசான முறுக்கிய மீசை என அப்பாவின் புகைப்படத்தைப் பார்க்கும் போது அந்தச் சாயல் இருப்பதாகவே நினைத்தான் மணி. அவருக்குப் பக்கத்தில் பெரியப்பாவின் முகமோ அகலமாக நெற்றியும், தூக்கி வைத்து வாரிய முடியும், மீசையைத் தொட்டுக்கொண்டு இறங்கும் மூக்கு முடி என வேறு மாதிரி இருந்தார். ஆனால் அப்பா வாழ்க்கையில் “ஒரு உண்மை தெரியாமலே செத்துப் போய் விட்டாரே” என்ற ஆதங்கம் உள்ளூர அரித்தது மணிக்கு.
எழுந்து போய்க் கண்ணாடி முன் நின்று பார்த்த போது அவன் மூக்கிலிருந்து முடி வளர்ந்து தரை வரைப் பாவியிருந்தது.
Art : lelandlittle.com
மாரி.கிருஷ்ணமூர்த்தி திருவண்ணாமலை மாவட்டம் ஆடையூர் கிராமத்தைச் சேர்ந்தவர். இங்கு அப்பா மாரிமுத்து, அம்மா ஜெகநாதம்மாள், மனைவி சுகன்யா ஆகியோருடன் வசித்து வருகிறார்.
கனலி, யாவரும், நடுகல் இணைய இதழ்களில் சிறுகதைகள் வெளியிட்டு வருகிறார். “தளம்”சமூக உரையாடல் மையம் வழியாக இலக்கியக் கூட்டங்களும், ஊர்ப் பொதுக் கிணறு புனரமைப்பு இயக்கம் வழியாக மூன்று பொதுக் கிணறுகளை மக்களோடு இணைந்து தூர் வாரி மக்களிடமே ஒப்படைப்பு வேலையும் செய்திருக்கிறார். மேலும், சொந்த ஊரில் குழந்தைகளுக்கான மகிழ்ச்சியான கல்வியை நோக்கி “தும்பட்டான்” சிறார் மாலை நேரப்பள்ளியும் நடத்தி வந்திருக்கிறார். தற்சமயம் the film school லில் படித்து முடித்து சுயாதீன சினிமா எடுக்கும் பணியில் இருக்கிறார். இவருடைய “பிடிமானம்” என்ற முதல் சிறுகதை தொகுப்பு 2025 வருடம் வெளிவந்துள்ளது.








Leave a Reply