மிக மிருதுவான ஆனால் மிக மிக உறுதியான பட்டுபோலவே மின்னும், அரிதான நாரிழைகள், தாமரை இலைத் தண்டுகளிலிருந்து பெறப்படுகிறது. இது பட்டுப்புழுக்களின் கூட்டிலிருந்து உருவாக்கப்படாத பட்டிழையாதலால் இதற்கு சைவப்பட்டு என்னும் பெயரும் இருக்கிறது.
நூற்றண்டுகளாக தாமரை நாரிழைகள் துறவிகளுக்கான ஆடைகளுக்கெனப் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டன. இப்போது உலகின் மிக விலை உயர்ந்த இந்த நாரிழை பின்னலாடை வணிகத்திலும் அறிமுகமாகி இருக்கிறது.
பின்னலாடைத் தொழிலில் இயற்கை நாரிழைகளின் நீடிக்கும் தன்மையில் உள்ள சிக்கல்கள், மேலும் பல புதிய இயற்கை நார் இழைகளைக் குறித்த ஆராய்ச்சிகளுக்கு வழி வகுத்திருந்தது.
உலகெங்கிலும் பல்வேறு தாவரங்களில் இருந்து இழைகள் பெறப்படுகின்றன. கற்றாழை, வாழை, யானைக்கற்றாழை, சணல், சணப்பை, மூங்கில், பால் நார், சோளம், சோயா, புல்நார், நிலக்கடலை ஓடு, காபி பீன்ஸ் கழிவுகள், அன்னாசி இலைகள் மற்றும் யூகலிப்டஸ் ஆகியவை அவற்றில் சில.
இயற்கை இழைகள் பற்றிய உலகளாவிய விழிப்புணர்வை அதிகரிப்பதில் கவனம் செலுத்தும் பொருட்டு ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை 2009 ஆம் ஆண்டை சர்வதேச இயற்கை இழைகளின் ஆண்டாக அறிவித்தது – (IYNF). இப்படியான முயற்சிகளின் பின்னர்தான் பண்டைய இந்தியாவின் இயற்கைநாரிழையான இந்த சைவப்பட்டின் புழக்கம் இப்போது அதிகரித்திருக்கிறது.
புத்த மதத்தின் மிக முக்கியக் குறியீடு தாமரை. பண்டைய காலத்தில் கம்போடிய புத்தத் துறவிகள் தாமரை நாரிழைகளால் பின்னப்பட்டு இயற்கைச் சாயமிடப்பட்ட ஆடைகளையே தூய்மை, தெய்வீகத்தன்மை மற்றும் அமைதியைக் குறிக்க அணிந்தனர். தென்கிழக்காசியாவில் துறவிகளுக்கு மட்டுமென அப்போது தாமரைநாரிழைகள் உருவாக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டன. தாய்லாந்திலும் மியான்மரிலும் தாமரை நாரிழைகளிலான ஆடைகள் இன்றும் மிக ஆடம்பரமான உயர்தர ஆடைகளாகக் கருதப்படுகின்றன.
ஒவ்வொரு நாட்டிலும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களால் செய்யப்பட்ட பாரம்பரிய நாரிழைகளும் ஆடைகளும் உள்ளன. கம்போடியா மற்றும் மியான்மரில் தாமரை நாரிழைகளாலான ஆடைகள் அவ்வாறான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன. ஆனால் மற்ற இயற்கை இழைகளுடன் ஒப்பிடும்போது இவை மிக்குறைவாகவே உருவாக்கபட்டு குறைவாகவே பிரபலமாயிருக்கின்றன.
தாமரை நாரிழைகளின் பயன்பாடு சுமார் 150 வருடங்களுக்கு முன்பு 1910-ல் டா சா ஊ (Daw Sa Oo) என்னும் இந்த்தா (intha) பழங்குடி இனப்பெண் ஒருவரால் துவங்கப்பட்டது.
அப்பெண்மணி தாமரை இலைகளின் நீண்ட காம்புகளைக் கத்தரித்து அவற்றிலிருந்து நார்களைச் சேகரித்து அடுத்த ஒரு வருடம் முழுவதும் அவற்றைக்கொண்டு ஆடைகளை நெய்வதில் ஈடுபட்டிருப்பார். அருகிலிருந்த புத்த மடத்தின் துறவிகளுக்கென அவர் அந்த ஆடைகளை உருவாக்கினார். அவரது மறைவுக்குப் பின்னர் அவரது குடும்பத்தினரால் சிறிய அளவில் இத்தொழில் செய்யப்பட்டது.
தாமரை இழைகளால் உருவாக்கப்பட்ட ஆடைகளே உலகின் ஆகச்சிறந்த சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் புனிதமான ஆடைகள் எனக் கருதப்படுகின்றன.
கம்போடியா, மியான்மர் மற்றும் இந்தியாவில் தாமரை சாகுபடி செய்யப்படும் நீர்வயல்களிலிருந்து இந்தியத் தாமரையான Nelumbo nucifera வின் இலைத் தண்டுகள் அதிகாலைகளில் நறுக்கி அறுவடை செய்யப்பட்டு சேகரிக்கப்படுகின்றன. இந்த நாரிழைகள் மிக மென்மையானவை என்பதால் இவற்றை இயந்திரங்களால் அறுவடை செய்யமுடியாது. அறுவடை செய்யப்படும் இலைத்தண்டுகளில் நீளவாக்கில் சுமார் 20ருந்து 30 நாரிழைகள் வரை இருக்கும், தண்டுகளில் கவனமாகக் கூரிய கத்தியால் காயம் உண்டாக்கப்பட்டு மெதுவாகத் தண்டு முறிக்கப்பட்டு உள்ளிருக்கும் நாரிழைகள் எடுக்கப்படுகின்றன.
அவை உருவி எடுக்கப்பட்டுக் கைகளால் திருகித் திருகி ஒற்றை இழையாக்கப்பட்டு பின்னர் கழுவி உலர்ந்தபின்னர் மூங்கில் தறிகளில் நெய்து ஆடையாக்கப்படுகின்றன.
தாமரை இழைகளை நெய்கையில் அவ்வப்போது நீர் தெளித்துக்கொண்டே இருக்கவேண்டும் இல்லாவிட்டால் அவை பயன்படுத்த முடியாத அளவிற்கு உலர்ந்துவிடும். தண்டுகள் அறுவடை செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் அவற்றை நெய்துவிடவேண்டும் இல்லாவிட்டால் நார்களில் இருக்கும் பசை உலர்ந்து நார்களைப் பிரித்தெடுக்க முடியாமல் வீணாகப்போய்விடும்.
தாமரை இழை நெய்தலில் ஒரு சிறு துண்டு நார் கூட வீணாவதில்லை. நீளமான நாரிழைகள் ஆடைகளுக்குப் பயன்படுகின்றன, உடைந்த சிறு நாரிழைகள் விளக்குத் திரிகளாக உபயோகிக்கப்படுகின்றன.
அறுவடையிலிருந்து ஆடை உருவாக்கம் வரை முழுக்க முழுக்க கைகளாலேயே உருவாக்கப்படும் இச்செயல் அதிக நேரத்தையும், அதிக உடலுழைப்பையும் கோருவது. சுமார் 1,20,000 தண்டுகளிலிருந்துதான் ஒரு ஆடை உருவாக்கப்படும். அதாவது ஒரு சதுர மீட்டர் அளவிலான துணியை உருவாக்க 3 லிருந்து 5 தாமரைத்தண்டுகளும் 20 நாட்களும் தேவைப்படுகின்றன.
முழுக்க முழுக்க இயற்கையான வழிகளில் இந்த நாரிழைகளிலிருந்து ஆடைகள் உருவாவதால் இவற்றிற்கு GOTS எனப்படும் உலகின் மிகச் சிறந்த சூழலுக்குகந்த ஆடையிழைகள் என்னும் அந்தஸ்து அளிக்கப்பட்டிருக்கிறது. (Global Organic Textile Standard)
தாமரை இழை ஆடைகள் புற ஊதாகதிர்களைத் தடுக்கும், ஈரத்தை உறிஞ்சும், காற்றை உள்ளே அனுமதிக்கும், அணிபவர்களுக்கு மிக மிருதுவாகவும் செளகரியமாகவும் இருக்கும். மேலும் இவை நீடித்தும் உழைக்கும், சுருங்காது, தாமரை இழையாடைகளில் கறை படியாது, தாமரையைப் போலவே இவையும் தூய்மையானவை.
இந்த ஆடைகளை அணிபவர்களுக்கு மனஅமைதியும் நல்ல ஆரோக்கியமும் கிடைப்பதாகவும் நம்பப்படுகிறது, பருத்தி மற்றும் லினென் துணிகளுடன் ஒப்பிடுகையில் தாமரை இழைகளே உயர்ந்த தரத்துடன் இருக்கின்றன.
தாமரை இழைநார் ஆடைகள் மருத்துவதுறை மற்றும் விண்வெளிப் பயணங்களுக்கான உடைகளை உருவாக்கவும் இப்போது பயன்படுகிறது. ஹாங்காங், ஜப்பான் மற்றும் அமெரிக்காவில் இவ்விழைகளால் உருவாக்கப்பட்ட ஆடைகளுக்கு நல்ல தேவை இருக்கிறது. புத்தத் துறவிகளும் இவற்றையே விரும்பி அணிகிறார்கள்.
உலகளவில் தாமரை இழைகளில் உருவாக்கப்பட்ட ஆண்களின் ஆடைகளில் Nomark சட்டைகளும், பெண்களுக்கான Kyar hi கழுத்துகுட்டைகளும் (scarf) பிரபலம். 2012-ல் யுனெஸ்கோவின் தனிச்சிறப்பான SOE முத்திரை அந்தஸ்தையும் இவ்விழையாடைகள் பெற்றிருக்கின்றன. (Seal of Excellence). Samatoa என்னும் பிரபல பெயரிலும் தாமரை இழைஆடைகள் சந்தைப்படுத்தப்படுகின்றன.
சாயமேற்றப்படாத தாமரை இழைகளின் நிறம் பால் வெண்மையில் இருக்கும், இயற்கைச் சாயங்களில் ஆரஞ்சு மஞ்சள் நீலம் பச்சை ஆகியவையே இவ்வாடைகளுக்கு நிறமேற்ற அதிகம் பயன்படுகின்றன.
மருத்துவக் காரணங்களுகாகவும், தண்டு, வேர்க்கிழங்கு ஆகியவற்றின் சத்துக்கள் மற்றும் சுவைக்காகவும், உணவுக்காகவும், அழகிய தூய மலர்களுக்காகவும் மட்டும் அறுவடை செய்யப்பட்டுக்கொண்டிருந்த தாமரைக்கொடியின் இலைத்தண்டுகள் இத்தனைகாலமாக வீணாகிக்கொண்டிருந்தன. தற்போது அவற்றிலிருந்து உலகின் மிக அதிக விலையுள்ள மிகத் தரமான ஆடைகள் உருவாக்கப்படுகின்றன. தாமரை இலைகளின் தண்டுகளிலிருந்து மட்டுமல்ல, குட்டையாகவும் இலைத்தண்டுகளைவிட மெலிதாகவும் இருக்கும் மலர்களின் தண்டுகளிலிருந்தும் குறைந்த அளவில்நாரிழைகள் பெறப்படுகின்றன.
கம்போடியா, வியட்னாம் மற்றும் மியான்மரிலும், இந்தியாவின் மணிப்பூர் மற்றும் குஜராத்திலும் தாமரைகள் நாரிழைகளின் பொருட்டு சாகுபடி செய்யப்படுகின்றன. தாமரை இழைகளிலிருந்து ஆடைகள் மட்டுமல்லாது ஆபரணங்களும் உருவாக்கப்படுகின்றன.
மணிப்பூரின் பிஷ்ணூபுர் மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயது பிஜியஷாந்தி (Bijiyashanti Tongbram) தாமரை இழையாடைத் தொழிலை 2019-ல் அங்கு பிரபலமாக்கியவர். தாவரவியல் பட்டதாரியான அவரது வீட்டிற்கருகேதான் இந்தியாவின் வடகிழக்கு பிரதேசத்தின் மிகப்பெரிய நீர்நிலையான லோக்டாக் நன்னீர் ஏரியும் (Loktak lake) அதனை சுற்றிலும் ஆயிரக்கணக்கான தாமரைக்கொடிகள் வளர்ந்திருக்கும் பும்டி என்கிற நூற்றுக்கணக்கான மிதக்கும் மணிப்பூரின் பிரத்யேகமான சிறு தீவுத்தொடர்களும் உள்ளன.
கம்போடியாவின் தாமரைநாரிழை தொழிலைக்கேள்விப்பட்டு அது குறித்தான ஏராளமான காணொளிகளையும் பார்த்து தானும் தாமரைநார் பிரித்தெடுக்கும் தொழிலில் ஈடுபட்டார் பிஜியஷாந்தி. இவர்தான் பண்டைய காலத்திலிருந்தே இந்தியாவில் நெய்யப்பட்ட தாமரைஇலைநார்களைச் சந்தைப்படுத்திய முதல் இந்தியர் என்னும் பெருமைக்குரியவர்.
அவருடைய சொந்த நிறுவனமான சனாஜிங் சனா தம்பால் (‘Sanajing Sana Thambal’) தாமரை நாரிழைகளைத் தயாரிப்பதோடு அந்த ஊர்ப்பெண்களுக்கும் இத்தொழிலில் வேலைவாய்ப்பும் வழங்குகின்றது.
மனதின் குரல் நிகழ்வொன்றில் திரு நரேந்திர மோடி பிஜிஷாந்தியின் இம்முயற்சியை வெகுவாகப் பாராட்டினர். அவரது பாராட்டுக்குப்பிறகு பிஜியஷாந்திக்கு ஏராளமானோரிடமிருந்து தாமரை இழைநார்களிலிருந்து உருவாக்கப்படும் துணிகளுக்கான அனுப்பாணைகள் வந்துகொண்டிருக்கின்றன.
மிகவெற்றிகரமாக இந்தத் தொழிலில் முன்னுக்கு வந்துகொண்டிருக்கும் பிஜியாசாந்தி அடிப்படைத் தாவரவியல் அறிவைக்கொண்டே, சமூகத்தை மேம்படுத்தும் ஒரு நிலையான, உயர்மதிப்புள்ள துணி வணிகத்தை எவ்வாறு உருவாக்க முடியும் என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறார்.
வேட்டைக்காரன் புதூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். பொள்ளாச்சி கல்லூரியில் தாவரவியல் பேராசிரியராகப் பணி புரிந்துகொண்டிருக்கிறார். மேலும், அரிஸோனா பல்கலைக்கழக வலைத்தளத்தில் அறிவியல் தகவல்களைத் தமிழில் மொழிமாற்றம் செய்ய மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். தற்போது தமிழில் தாவரவியல் அகராதியை உருவாக்கும் முயற்சிலும், அந்தியூர் வனப்பகுதி பழங்குடியினரான சோளிகர்களின் தாவரவியல் தொடர்புகள் குறித்த ஆய்விலும் ஈடுபட்டு வருகிறார்.
தாவர உலகம், ஸாகே-போதையின் கதை, வானவில் மரம், விலக்கப்பட்ட கனி, தந்தைப்பெருமரம், நுண்ணுயிருலகு உட்பட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். மரங்களின் மறை வாழ்வு என்னும் நூலை மொழியாக்கம் செய்துள்ளார்.
தோழி விருது 2019, செங்கால் நாரை விருது 2022, இந்திய மருத்துவக் கழகம் வழங்கிய Women of Wonder விருது 2025, சிறந்த அறிவியல் நூலிற்கான முனைவர் உலோ.செந்தமிழ்க்கோதை நினைவு விருது 2025 ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.











Leave a Reply