தொன்மங்களும், காப்பியங்களும், நாட்டுப்புறக் கதையாடல்களும் நம்முடைய நாடக வடிவங்களின் பின்புலங்களாக அமைந்து தொடர்ந்த உத்வேகங்களையும், செயலாக்கங்களையும் வழங்கிக்கொண்டிருக்கும் ஒரு நீண்ட மரபு நம்முடையது. மரபைக் கடந்து செல்வதற்கான உத்வேகங்களையும், எழுச்சிகளையும்கூட அவை தொடர்ந்து வழங்கிக்கொண்டிருப்பவை. நம்முடைய காலம் காலமான சிந்தனை மற்றும் கலாச்சாரப் போக்குகளின் ஊடாக நாம் எண்ணற்ற புதிய வாசிப்புகளை அவ்வப்போது நிகழ்த்துவதற்கான களன்களையும் அவை தொடர்ந்து வழங்கிக்கொண்டிருக்கின்றன. மகாபாரதத்தில் இரக்கத்துக்கும், பரிதாபத்துக்கும் இலக்கான அரவான் பாத்திரம் இன்று கோபத்தைத் தூண்டும் ஒடுக்கப்பட்ட குரலின் அடையாளமாக வாசிப்புக் கொள்கிறது. சூர்ப்பனகையின் காம வெளிப்பாடு நெகிழ்வைத் தூண்டும் ஓர் இயல்பான பெண் உணர்வின் கட்டற்ற தன்மையாக குறியீடு கொள்கிறது.
ஆனால் இலக்கிய வாசிப்புகள் வேறுபட்ட அடையாளங்களையும், குறியீடுகளையும் உணர்த்துவதற்கு ஒரு திட்டவட்டமான கலாச்சார சூழலும், கால இடைவெளிகளும் அத்தியாவசியமான நிலையில் நாடகத் தளத்தில் வெளிப்பாடு கொள்ளும் மனித உடல்கள் அதிகமான வலியுறுத்தல்கள் இன்றி மனித இயல்புகளின் பல்வேறு நெகிழ்வுகளைச் சரளமாகப் புலப்படுத்தும் சாத்தியங்கள் கொண்டிருக்கின்றன. நன்மை, தீமை ஆகிய இறுக்கமான மதிப்பீடுகளுக்கு இலக்காகும் பாத்திரங்கள் நாடகத்தளத்தில் இறுக்கங்கள் தளர்ந்த பல்வேறு நெகிழ்வு நிலைகளை இயல்பாக வெளிப்படுத்திவிடுகின்றன. மனித உடல்களின் ஊடாக வெளிப்பாடு கொள்ளும் இருப்பின் நியாயங்கள் அறவியல் வரையறைகளைக் கடந்து செல்லும் முகாந்திரங்களை எளிதில் வழங்கிவிடுகின்றன.
நம்முடைய பாரம்பரியக் கூத்து நன்மை, தீமை ஆகிய மதிப்பீடுகளுக்குள் நிலவிவரும் இடைவெளிகளை டம் பெயர்த்து பல நெகிழ்வான உரையாடல்களைத் தொடர்ந்து நிகழ்த்திக்கொண்டிருப்பதை நாம் பல கூத்து நிகழ்வுகளில் இன்றும் கண்கூடாகக் காணலாம். துரியோதனன், இராவணன், இந்திரஜித் ஆகிய தீமைகளின் பிரதிநிதிகளாக வாசிக்கப்படும் பாத்திரங்கள் ஸ்தூல வடிவில் பிரசன்னமாகி அவர்களுடைய செயல்பாடுகள் உரிய விளக்கம் பெறும் நிலையில் அவர்களுடைய இருப்பின் நியாயங்கள் குறித்த சமன்நிலை விரைவில் பார்வையாளர்களுக்கு எட்டிவிடுகின்றது. தாய் மகன் உறவு குறித்த இடிப்பஸ் மனநிலை ஒரு இலக்கிய வாசிப்பில் தரும் அதிர்வுகள் ஒரு ஸ்தூலமான நாடக இருப்பில் அதிகம் சமனப்பட்டுவிடுகின்றன. கிரேக்க நாடகங்கள் தம்முடைய வெளிப்பாட்டில் சோகங்களும் அவலங்களும் நிறைந்த ஒரு வாழ்வின் சுவையை எதிர்கொள்ளும் எண்ணற்ற கோரிக்கைகளை உலக அரங்கில் முன்வைத்தவை. அதனாலேயே அரங்கச் செழுமைகொண்ட கலாச்சாரங்கள் மனித நடத்தைகள் குறித்த புரிதலை முன்னெடுத்துச் செல்வதில் முன்னோடிகளாக விளங்குகின்றன. இந்தியச் சூழலிலும் எண்ணற்ற குரல்களையும் வேறுபாடுகளையும் ஒலிக்கும் ஆழந்த கலாச்சார வெளிப்பாடுகளின் ஒத்திசைவுச் சரடுகளையே நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டியவர்களாக இருக்கிறோம்.
ஆனால் உடற்கூறுக் கலைகளும், உடல் மொழியின் நுட்பங்களும் பரவலாக வேரூன்றியுள்ள நாட்டுப்புறச் சூழல்களில் மனிதர்கள் குறித்த நெகிழ்வுகளும், கறார் தன்மையற்ற மதிப்பீடுகளும் இயல்பாக நிலவுவதையும் அங்கு உருவாக்கப்பட்டுள்ள பிம்பங்கள் மனித உறவுகள் குறித்த சமன்நிலைகளை உறுதிசெய்வதையும் நாம் சுலபமாகப் பார்க்க முடியும். இன்னும் அங்கு உருவாகியுள்ள பிம்பங்கள் தொடர்ந்து வன்முறையின் இலக்குகளாக அவர்கள் மனதில் தங்கி இருப்பதால் வன்முறை குறித்த அச்சங்கள் விலகிய ஒரு மனநிலையும் அச்சூழல்களில் இயல்பாகப் பெறப்படுகின்றன.
குரோசோவாவின் ரோஷமான் படத்தில் மனித உறவுகளின்மீது பாய்ச்சப்படும் வெளிச்சத்தை அச்சூழலின் அடர்ந்த தன்மையின் பின்புலத்திலிருந்தே நாம் பார்க்க வேண்டும். ஜப்பான், சீனா போன்ற கீழை நாடுகளின் உடல்கூறுக் கலாச்சாரம் மனித உறவுச் சிக்கல்களின் அடர்ந்த தன்மையை வாழ்வின் அழகியல் அம்சமாக எதிர்கொள்ளும் சாத்தியங்களை வழங்குவதையும் இங்கு நாம் பார்க்க முடியும். இத்தகைய சூழல்களில் விதைக்கப்படும் பிம்பங்களின் மாறுபட்ட தன்மைகளும், முரண்பாடுகளும்தான் அங்கு நிலவிவரும் மதிப்பீடுகளில் சலனங்களை உருவாக்கிக்கொண்டும் தொடர்ந்து ஒருவித ஈடுபாட்டையும், சுவையையும் வழங்கிக்கொண்டு வருவதையும் பார்க்கலாம்.
புதுமைப்பித்தனின் கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும் சிறுகதையை நான் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் படித்து மாறுபட்ட பாதிப்புகளை அடைந்திருந்தாலும், கூத்துப்பட்டறையின் இயக்கத்தில் அதை நாடக வடிவில் பார்த்தபோது அதன் உள்ளார்ந்த விமர்சனப் பார்வையும் நகைச்சுவை உணர்வும் ஸ்தூல் வடிவில் மிகவும் வசீகரமான தோற்றம் கொண்டன. சிறு சிறு விசாரணைகளும் குறிப்புகளும் அதிக பரிமாணங்கள் கொண்டன. கந்தசாமிப்பிள்ளையின் தோற்றமும், அவருடைய மனைவியும் குழந்தையும், அவருடைய காப்பி ஆசையும் ரிக்ஷா பயணங்களும், வைத்தியக் குறிப்புகளும், கலை அபிமானிகளின் வேஷங்களும் புதுமைப்பித்தனின் எள்ளல் தொனியின் அடையாளங்களாய் அதிகம் மகிழவைத்தன. தொடர்ந்த வாசிப்பில் அதன் சுவை மங்கத் தொடங்கியிருப்பதாக நான் உணரத் தலைப்பட்டிருந்தபோது இந்த வடிவத்தில் என்னால் பார்க்க முடிந்த அக்கதையின் ஒரு தன்மை மிகவும் உற்சாகமூட்டுவதாக இருந்து அக்கதையை மீண்டும் படிக்க என்னைத் தூண்டியது.
அதேபோல் சுந்தர ராமசாமியின் கோவில் காளையும் உழவு மாடும் சிறுகதை ஒரு கோவில் பண்டாரம் பற்றியும், ஒரு உழைப்பாளிக் கிழவன் பற்றியும் சில சித்திரங்களை அளித்துச் சென்றதாக என் நினைவில் இருந்தது. ஆனால் அதை நாடகமாகப் பார்த்தபோது சடங்கும், உயிர்ப்புத்தன்மையும் கொண்ட வாழ்க்கை வடிவங்களின் சந்திப்பும் பிரிவுமாக உருக்கொண்டு ஒரு வெறுமை உணர்வின் நீட்சியாக விரிவுகொண்டதைப் பார்க்க முடிந்தது. பெய்துகொண்டிருக்கும் மழை, வெறுமனே பார்த்துக்கொண்டு உடலை சிலர்த்துக்கொள்ளும் நாய் என படிமங்கள் நீண்டுகொண்டிருந்தன. இரந்து திரிந்தும் உழைத்து மடிந்தும் சுவடின்றி மறைந்துபோகும் எண்ணற்ற மனிதச் சித்திரங்கள் வந்து வந்து போயின. கதை வாசிப்பில் உணரத் தவறிய தருணங்களை மீட்டு நாடகம் ஏதோ ஒரு அமானுஷ்ய உணர்வுக்குள் இழுத்துக்கொண்டிருந்தது.
வைத்தீஸ்வரன் கவிதைகளின் படிமங்கள் ஓர் எளிமைப்படுத்தப்பட்ட நிலைக்கும் ஒரு அதீத நிலைக்கும் இடையே ஊடாடுவதாகத் தோற்றமளித்துக்கொண்டிருந்த நிலையில் காட்சிப்படுத்தலுக்காக அணுகியபோது அவை உள்வாங்கப்பட்டவிதமும், அங்கு வெளிப்பட்ட உணர்வுகளும் அனுமானிக்க இயலாதவைகளாக இருந்தன. கவிதை தன்னிச்சையாக எங்கோ பயணித்துக்கொண்டிருந்தது. ‘பெஞ்சி’ என்ற தலைப்பில் உள்ள அந்தக் கவிதை இது:
அந்தப் பார்க் பெஞ்சில்
பல நாளாக அவன்
தூங்குவதை
நீங்களும் பார்த்திருக்கலாம்
ஆனால் உண்மையில்
அவனை எப்போதும் யாரும்
பார்க்கவில்லை.
காலுக்கும் தலைக்குமாய்
போர்த்திக்கொண்டிருந்த
கழுதை நிறத்துணிக்குள்
அவன் தூக்கத்தை எழுப்ப நினைத்தவன்
அவனை நெருங்க நினைத்தபோது
மேலும் எத்தனையோ வருஷங்கள்
கடந்திருக்கலாம் என்ற அனுமானம்
மூடிய துணியை தூக்கிப் பார்த்தபோது
துணி மட்டும்தான்
மூடிக்கொண்டிருந்தது.
துணியை உதறி உதறித்
தேடியபோது
உதிர்ந்தது அவன் சாயலில்
மண் மட்டும்
இப்போது
பார்க் பெஞ்சு
பசியோடு காத்துக்கொண்டிருக்கிறது
மீண்டும்.
என்ற இந்தக் கவிதையில் உருவகம் பெற்றிருந்த பார்க் ஒருவிதமான புகலிட உணர்வுகளின் இருப்பிடமாக உருமாற்றம் பெற்றிருந்தது. அலைக்கழிக்கப்பட்ட பல்வேறு உணர்வுகளின் புகலிடமாக நாடப்பட்ட அந்த பார்க் ஒவ்வொருவருடைய அனுமானத்துக்கும் ஏற்ற தோற்றங்களை அளித்தபடி இருந்தது. அனுமானங்களைக் கலைத்து நிதர்சனங்களைச் சந்திக்க மனமில்லை யாருக்கும் அங்கு. அனுமானங்களுடனேயே ஓடிக்கொண்டிருந்தது வாழ்க்கை. ஆனால் கலையக் காத்திருக்கும் அனுமானங்கள் வெறுமையை வெளிச்சமிடுவதை யார் தடுக்கமுடியும்? பார்க் என்னவோ ஒப்பனைகளையும், அனுமானங்களையும் இறைக்கக் காத்துக்கொண்டுதான் இருந்தது. வாசிப்பின்போது தட்டையாகத் தோற்றமளித்த பல படிமங்கள் புத்துயிர் பெற்று அனுமானங்களும் நிதர்சனங்களுமாய்ப் பல்வேறு உணர்வுகளின் நிலையாமை குறித்த ஒரு சமன்நிலையை நாடகம் உள்ளீடாகக் கொண்டிருந்தது.
அதேபோல் தற்கொலை எத்தனிப்புகளில் உருவாக்கப்படும் அனுதாபங்களின் இடம் பெயர்ந்த நிலையை விவரிக்கும் ‘ஒன்ஸ்மோர்’ கவிதை காட்சித் தன்மையில் அந்த விவரிப்புகளைக் கடந்து தற்கொலையின் நிதர்சனம் தரும் ஒரு பேருணர்வை நோக்கி அழைத்துச் செல்வதாக இருந்தது.
அவனுக்கு மட்டும் எப்படி
தபால்பெட்டியில் கார்டு மாதிரி
தன் உடம்பைக் கிணற்றுக்குள்
போட்டுவிட முடிகிறது?
தன் வாழ்வைக்
குப்பைக் கடுதாசிபோல்
எட்டாம் மாடியிலிருந்து
விட்டெறிந்துவிட முடிகிறது?
♠
எதற்கும் கவலைப்படாதே
குழந்தையைப் பார்த்துக்கொள்
போகிறேன் என்று முத்தமுடன்
கடிதம் எழுதிப் பார்வைக்கு
தப்பாத இடத்தில் பத்திரப்படுத்திவிட்டு
வாசலில் கட்டிய நாய்க்கு
வட்டிலில் சோறு வைத்துவிட்டு
பொருத்தமான கறுப்பு உடுப்புகளை
இறுக்கமாகப் போட்டுக்கொண்டு
தூளிக்கயிறு காலை வாரிவிடாதவாறு
ஒருமுறைக்கு இருமுறை
இழுத்துப் பார்த்துவிட்டு
உத்தரக் கம்பியின்
உயரத்தை அளந்து கட்டி
கழுத்து முடிச்சுகளை
கச்சிதமாகப் போட்டுக்கொண்டு
நாற்காலியைத் தள்ளிவிட்டு
நாசூக்காய் உயிர் விட முடிகிறது
அவனால் எவ்விதம்?
♠
நானே அவனேபோல்
அடிக்கடி இக்காட்சியை
ஒத்திகை பார்த்துக்கொள்கிறேன்
எனக்குள்.
தற்கொலையை, வாழும் நடிகனுக்கும் கடைசியில் அனுதாபத்தை அபகரிக்கும் டூப் நடிகனுக்குமான இடப்பெயர்ச்சியாக உருக்கொள்ளும் இக்கவிதை தற்கொலை மனநிலையின் பல்வேறு அதிர்வுகளை நினைவில் கொண்டுவந்து அதற்கு சாட்சியான பார்வையாளர்களும் நடிகர்களாக மாறுவதான தோற்றம் கொண்டிருந்தது.
தமிழ்ச் சூழலில் நாடகச் சலனங்கள்கொண்ட பல பிரதிகள் இலக்கிய வாசிப்புடன் முடிவடைந்து விடுகின்றன. இலக்கியம் அதன் சாராம்சவாதப் போக்கிலிருந்து விடுபட்டு அது வெறும் கருத்தாகச் சுருக்கப்படும் அபாயத்திலிருந்து தப்பவேண்டுமானால் அதன் நிகழ்த்து சாத்தியங்களை ஆராயும் நிலையில் இலக்கியமும் நிகழ்வும் ஒன்றின் இயக்கத்தில் மற்றொன்று புத்துயிர் பெறுவதைப் பார்க்க முடியும். நம்முடைய காப்பியங்களின் இலக்கிய மதிப்பு தொடர்ந்து நீடிப்பதின் காரணம் அவற்றிலிருந்து பெறப்படும் நிகழ்த்து சாத்தியங்களே.
2008 ஆம் வெளிவந்த ‘இலக்கிய வாசிப்பும் நாடக வாசிப்பும்’ என்னும் நூலில் இடம்பெற்ற கட்டுரை.
Art : Michael Valotto








Leave a Reply