கிர்ஸ்டி வீட்டு வாசலிலிருந்து கத்தினாள்: “கண்ணா… ஜான்… சீக்கிரம் வாடா, கதவை மூடிடுவாங்க, அப்புறம் வெளியிலதான் நிக்கணும்.”
“ம்மா, இதோ வந்துட்டேன். ஒரு நிமிஷம், ஷூ மாட்டிட்டு இருக்கேன்.”
“ம்மா, வந்துட்டேன். நீ இப்ப வண்டியை எடுக்கலாம். நான் வண்டியில உட்காரட்டா?”
“டேய், இது என்ன கேள்வி? உட்காருடா. நானே லேட் ஆயிடுச்சுன்னு பயந்துட்டு இருக்கேன். லேட் ரிஜிஸ்டர்ல சைன் போடணும், சம்பளம் பிடிச்சிடுவாங்கன்னு. சீக்கிரம் ஏறு, நாம போகணும்”னு சொல்லிக்கிட்டு வண்டியை ஓட்ட ஆரம்பிச்சா கிர்ஸ்டி.
கிர்ஸ்டி ஒரு தனியார் பள்ளியில் கணக்கு ஆசிரியையாக வேலை செய்கிறாள். அதே பள்ளியில் ஜானும் ஐந்தாவது படிக்கிறான். கிர்ஸ்டியின் கணவனும் ஒரு தனியார் நிறுவனத்தில் அக்கவுண்ட்ஸ் பிரிவில் வேலை செய்கிறான். காலையில் அடித்துப் பிடித்து அனைவரும் வீட்டை விட்டு வெளியே கிளம்பினார்கள் என்றால், பிறகு ஒன்றாய் கூடுவது சாயங்காலம்தான். கிர்ஸ்டியும் ஜானும் சுமார் ஐந்தரை மணி அளவில் வீட்டிற்கு வருவார்கள். கிர்ஸ்டியின் கணவன் மைக்கேல் சுமார் ஏழு மணியளவில் வீட்டிற்கு வருவான். ஏனெனில் அவனது அலுவலகம் அவனது வீட்டிலிருந்து சுமார் நாற்பது கிலோமீட்டர் தூரம். நிறுவனத்திலிருந்து வண்டியானது அவனை வீட்டுப் பக்கத்தில் ஏற்றி இறக்கி விடுவதால் கொஞ்சம் அவனுக்கு ரெஸ்ட்டு, தூக்கமெல்லாம் அந்த வண்டியிலதான்.
♦
பள்ளி முடித்து வீடு திரும்பியதும் கிர்ஸ்டிக்கு மலையைக் கட்டி இழுத்தது போல் அப்படி ஓர் அயர்ச்சி. அவள் அப்படியே சோபாவில் உட்கார்ந்துவிடுவாள். ஜானோ புத்தகப் பையை ஒரு இடத்தில் வைத்துவிட்டு, அவன் போட்டிருந்த சீருடையைக் கழற்றி கை, கால், முகம் எல்லாம் அலம்பி வேறு துணி உடுத்திடுவான். அவன் கீழே வந்தவுடன்,
“கண்ணா ஜான், ஃபிரிட்ஜிலிருந்து பாலை எடுத்துப் பாத்திரத்தில் ஊத்திவை என்பாள். நான் குளித்துவிட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு அவள் குளியலறைக்குச் சென்று கை, கால், முகமெல்லாம் சுத்தம் செய்துவிட்டு வருவாள்.
கிர்ஸ்டி சமையலறைக்கு வருவதற்குள், ஜான் பாலைப் பாத்திரத்தில் ஊற்றி அடுப்பு மேடையில் வைத்து அவளுக்காகக் காத்திருப்பான். கிர்ஸ்டி அவனுக்கு இன்னும் அடுப்பைப் பற்றவைப்பது பற்றிச் சொல்லித் தரவில்லை. அதனாலேயே ஜான் அடுப்பைப் பற்றவைக்காமல் அவளுக்காகக் காத்திருந்தான். அவள் அடுப்பைப் பற்றவைத்து, பாலைச் சுடவைத்து, டீத்தூளை அதில் போட்டு ரெண்டு மூன்று முறை பொங்கி வரும் வரை காத்திருந்து, டீயை வடிகட்டி இருவரும் சர்க்கரையைப் போட்டுக் குடிப்பார்கள். குடித்தவுடன் ஜானை வீட்டுப் பாடம் எழுதச் சொல்வாள். பின் மீண்டும் அவள் விட்டுப்போன அன்றைய வேலையைத் தொடங்குவாள். வீட்டு வேலை அல்ல, பள்ளி வேலையைத்தான்.
எட்டு மணி நேர வேலை என்றுதான் சொல்லிச் சேர்ந்தாள். ஆனால் சேர்ந்த பிறகுதான் தெரிந்தது வேலைப் பளுவைப் பற்றி. அன்றாடம் 365 நாட்களும் வேலை வேலை என்று, அதன் பின்னும் கணினிக்கு முன்னாலும் உட்காருவதை வழக்கமாக வைத்திருந்தாள். இதற்கெல்லாம் காரணம், கிர்ஸ்டியிடம் வேலையைக் கொடுத்தால், அவள் அதைச் சரியான நேரத்திற்குக் கொடுப்பாள் என்ற நம்பிக்கையைப் பள்ளி நிர்வாகம் அவள் மீது வைத்திருக்கிறது. அதனாலேயே அவள் வீட்டிற்கு வந்த பிறகும் ஸ்கூல் வேலைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாள்.
♦
சில தருணங்களில் மைக்கேலுக்கும் கிர்ஸ்டிக்கும் பனிப்போர் மூண்டுவிடும். மைக்கேல் நிறுவனத்தில் மதிய உணவு உண்பதால், அவனால் வீட்டில் சமைத்த சாப்பாட்டை எடுத்துக்கொண்டு போக முடியாது. இதனால் இரவு ஒரு வேளை நல்ல வீட்டுச் சாப்பாடு சாப்பிடலாம் என்று யோசித்துக்கொண்டு வருபவனுக்கு, பல நாள் கிர்ஸ்டி அவனிடம்,
“ஏங்க, இன்னிக்கு வெளியில வாங்கிக்கலாமா? கொஞ்சம் ஸ்கூல் வேலை அதிகமா இருக்கு” என்பாள்.
மைக்கேலும், ‘சரி கிர்ஸ்டி, வெளியில வாங்கிக்கலாம்’ என்பான். அவன் உதட்டளவில் தான் அதைச் சொல்லுவான், ஆனால் மனதளவில் அல்ல என்பது நிதர்சனம். ஏனென்றால், இப்போதெல்லாம் வாரக்கடைசியில் கடைகளுக்குப் போய் சாப்பிடும் காலமெல்லாம் போய்விட்டது. வாரத்திற்குத் தற்போது இரண்டு மூன்று முறை வெளியில் வாங்கிச் சாப்பிடும் சூழல் நிலவிவந்தது. இதற்குக் காரணம் கிர்ஸ்டியின் பணிச்சுமைதான் என்று அவனுக்குப் புரியும். ஆனால் அவனால் அதை அவளிடத்தில் கேட்க முடியாது. அவளை அவளது நிர்வாகம் நம்பி, பொறுப்புகளைக் கொடுக்கிறது. அதை அவள் தன்னாலான மட்டும் முழு முயற்சியுடன் செய்து முடிக்கிறாள்.
இதை அவளது குற்றம் என்று எடுத்துக்கொள்ளலாமா இல்லை அந்தப் பள்ளியின் சாமர்த்தியம் என்று சொல்லலாமா! சில சமயங்களில் அவளைப் பார்க்கும் போது கஷ்டமாக இருக்கும்.
ஏனெனில், நான் கடந்த பதினைந்து ஆண்டுகளாக வேலையில் உள்ளேன். வெகு நேரம் நிற்க்கும் பழக்கம் எனக்கு உள்ளது. ஆனால் அவளோ, இப்போது கடந்து நான்கு ஐந்து ஆண்டுகளாகத்தான் வேலைக்குப் போகிறாள். வெறுமனே நிற்க வேண்டும் என்றால் கூடப் பரவாயில்லை, ஆனால் அவளோ, நின்றுகொண்டு முப்பது நாற்பது குழந்தைகளுக்குக் கத்திக்கத்தி பாடம் நடத்தவேண்டும். தொண்டைத் தண்ணீர் வற்றிப் போய் விடும்.
♦
பள்ளியில் லெஷர் பீரியட் உள்ளது. அதில் ஆசிரியைகள் தங்களது இருக்கையில் உட்கார்ந்து சிறிது ஆசுவாசப்படுத்திக்கொள்ளலாம், அடுத்த வகுப்புக்குக் குறிப்பு எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அதில் ஒரு சிக்கல் உள்ளது, அவளது சக ஆசிரியை யாராவது விடுப்பு எடுத்துவிட்டால், அவர்களது வகுப்பைக் கிர்ஸ்டியை அந்த லெஷர் பீரியடில் பார்த்துக்கொள்ளச் சொல்வார்களாம்.
இதெல்லாம் எனக்கு எப்படித் தெரியும் என்றால், சில சமயம் அவளே சாயங்காலம் சொல்லுவாள்,
“இன்று எட்டு பீரியடும் நின்னுட்டே வந்திருக்கேன், ரொம்ப டயர்டா இருக்கு” என்பாள்.
அதைக் கேட்டவுடன் மனதில் சங்கடம் தோன்றும், ஆனால் வெளியில் காட்டிக்கொள்ளாமல் இருந்துவிடுவேன். அந்த மாதிரி நாட்களில் அவள் சொல்லும் முன்னரே, நானே வெளியில் இன்று வாங்கிக்கொள்ளலாம் என்று வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லிவிடுவது வழக்கம். அப்போது அவள் ஒரு பார்வை என்னைப் பார்ப்பாள், பாருங்கள்… ஆயிரம் அர்த்தங்கள் அதனுள் புதைந்திருக்கும்,தனது நன்றியைக் கண்களில் தெரியப்படுத்துவாள்.
என் அம்மா கூட சில சமயங்களில் அவளிடத்தில்.
“ஏம்மா வேலை ரொம்ப கஷ்டமா இருந்தா விட்டுடேன்” என்பாள்
“அத்தை வேலை பிடிச்சு போகவேதான் செய்துட்டு இருக்கேன்”. அதை போய் எப்படி விடுவது என்பாள் பதிலுக்கு.
ஆனாலும் அம்மா சும்மாவே இருக்க மாட்டா, மேலும் அவளிடத்தில்.
“ஏம்மா ஒண்ணோட நிறுத்திட்டயே! அவனுக்கு ஒரு துணை வேண்டாமா” என்பாள் குதர்க்கமா.
“அத்தை ஒண்ணையே சமாளிக்க முடியல இதுல ரெண்டாவதா போதுமடா சாமி ஆள விடுங்க” என்று பதிலடி கொடுத்திடுவா கிர்ஸ்டி.
♦
ஒவ்வொரு நாள் காலையிலும் கிர்ஸ்டி பரபரப்பாகத்தான் காணப்படுவா, சமையலறையில் அவளைத்தவிர வேறு யாரையும் உள்ளே விடமாட்டா. கேட்டா பதிலும் ரெடியாக வைத்திருப்பா.
கொஞ்சம் பொறுங்க பத்து நிமிஷத்துல வேலையை முடிச்சுடுவேன். பிறகு நீங்க வாங்க என்ன வேண்டுமோ சமையற்கட்டில் செய்யுங்க என்பாள்.
“ஏன்டி ஒரு கப்பு காபி தான் கேட்டேன் அதுக்கா இப்படி?”
“இல்ல நானும் தான் கேட்கிறேன் நேரத்துக்கு எழுந்தா என்னவாம்? எனக்கு காபி போடும்போதே நான் உங்களுக்கும் போட்டு கொடுத்துடுவேன் அல்லவா. இப்படி ஆளாலுக்கு ஒரு நேரத்துல எழுந்தா இப்படிதான்.”
“நீங்கத்தான் பாலை மறுபடியும் சுடவைத்து காபி போட்டு குடிக்கணும்.”
இன்னும் எனக்கு மொத்தத்துல இருபது நிமிஷம்தான் இருக்கு அதுக்குள்ள நான் போய் குளிச்சுட்டு புடவையை கட்டிக்கிட்டு, கீழ வரணும். அதற்கு பிறகு சாப்பிட்டு கிளம்பணும்.
“நீங்க எங்களுக்கு அப்புறம் தான் கிளம்புறீங்க பின்ன என்ன இவ்வளவு அவசரம்.” கொஞ்சம் நிதானமாத்தான் கிளம்பினா என்ன? என்பாள்.
நானும் பல சமயங்களில் பதில் ஏதும் சொல்வதில்லை. ஏனென்றால் நாம் பேசப்போய் அது தேவையில்லாத சண்டையில்தான் முடியும் என்று.
அதனால அவ சமையலை முடித்த உடனே பாலை அடுப்புல வைத்து மறுபடியும் சூடு பண்ணி நல்லா வடிகட்டின டிகாஷனை கொஞ்சம் நிறைய ஊற்றி அதுல பாலை கலந்து, சக்கரையை போட்டு. ஒரு கையில் கப் ஒரு கையில் பேப்பர் ஒரு பத்து நிமிஷம் அல்லது பதினைந்து நிமிஷம் படிப்பதில் எனக்கு ஒரே ஆனந்தம். இப்படி செய்யவில்லை என்றால் அந்த நாளே ஏதோ மாதிரி இருக்கும்.
♦
சில சமயங்களில் இரவு படுக்கையில் தூங்கப் போகும் போது அவளைப்பற்றி நினைவு வந்துட்டா போதும், அந்த இரவு முழுவதும் அவளை மற்றும் அவளது வேலையை பற்றியே ஒரே சிந்தனை மனதில் ஓடிக்கொண்டிருக்கும்.
இவ்வளவு கஷ்டப்படுறாளே, அவளுக்கு ஏத்த மதிப்பு, மரியாதை, சம்பள உயர்வு எல்லாம் ஒழுங்கா வருமா? நான் இவளை மட்டும் வைத்து சொல்லவில்லை. இவளை மாதிரி மற்ற பெண்களும் தங்களது குடும்பத்தையும் பார்த்துக்கிட்டு ஸ்கூலுக்கும் போய் வேலையை செய்யுறாங்களே, அவங்களுக்கும் அவங்களுக்கு ஏத்த மதிப்பு, மரியாதை, சம்பளமெல்லாம் ஒழுங்கா தராங்களா பள்ளி நிர்வாகம். எனக்குத் தெரிந்த வரை ஆசிரியர் மற்றும் ஆசிரியை தொழில் சர்வ சாதாரணமானது அல்ல. பல கடின உழைப்பை போட வேண்டியிருக்கிறது. அவரவர் சரியான அப்டேட்டில் இருக்க வேண்டும், கரென்ட் டிரெண்டிங்கில் கூட தம்மைத்தாமே ஆயத்தப்படுத்திக் கொள்ளவேண்டும். அப்படி இல்லை என்றால் அந்த ஆசிரியர் அல்லது ஆசிரியை பின் தங்கிவிடுவார் மற்றவர்களைக் காட்டிலும்.
ஆனா இவளைப் பொறுத்தவரை அந்த கவலையெல்லாம் வேண்டாம். ஏனெனில் அவளை அவளே வருத்திக்கொண்டு வேலையை எப்பாடுபட்டாவது முடித்துவிடுவாள். அதனாலேயே மேலும் மேலும் அவளுக்கு அவளது நிர்வாகம் வேலை பளுவை அதிகமாக அவளது முதுகில் வைக்கிறது. தற்போது சில சமயங்களில் அவள் சற்று புலம்பிக்கொண்டே இருக்கிறாள். தனக்குப் பின் வந்தவர்களுக்கு நல்ல சம்பளம் தருகிறார்கள். அவர்களுக்கு முன் அனுபவம் உள்ளது என்றால் கூட பரவாயில்லை. ஆனால் அவர்களிடம் முன் அனுபவம் அவ்வளவாக இருக்காது. ஆனாலும் நிர்வாகம் அவர்களுக்கு அள்ளித் தருகிறார்கள். ஏனோ பல வருடங்கள் இதே பள்ளியில் வேலை செய்துவந்தாலும் சம்பளம் என்னவோ குறைவே என்று அடிக்கடி என்னிடம் கூறியது நினைவுக்கு வந்துப் போகும்.
♦
உடனே விழிப்பு தட்டவே படுக்கையிலிருந்து எழுந்து சுவிட்சை அழுத்தியவுடன் அறை முழுவதும் மஞ்சள் ஒளி படர ஆரம்பிக்கும். எழுந்து குளியலறையில் போய் சிறுநீர் கழித்துவிட்டு கை கால் அலம்பிக்கிட்டு மீண்டும் படுக்கைக்கு வந்து கடிகாரத்தைப் பார்த்தால், நாலரை. நல்ல பிரம்ம முகூர்த்தம். உடனே கடவுளிடம் எல்லோரும் நல்லா இருக்கணும், கர்த்தாவே கிர்ஸ்டிக்கு நல்ல சம்பள உயர்வு கிடைக்க வேண்டும். எல்லாம் வல்ல இறைவா உன் கருணையே கருணை, அவளையும் எல்லோரையும் ரட்சியும் என் கர்த்தாவே என்று வேண்டிக்கொண்டு மீண்டும் படுக்கைக்குச் சென்று தூங்கியவன்.
“கிர்ஸ்டி எழுந்து, சமையற்கட்டில் பாத்திரம் உருட்டும் சத்தத்தில் தான் நான் மீண்டும் எழுவேன். என் மனதில் மீண்டும் அவள் ஒரு போராட்டத்திற்கு தயாராகிவிட்டாள் என்ற ஒரே நம்பிக்கைத்தான் மேலோங்கி இருக்கும்.”
Art : Beren Bilmem from Turkey








Leave a Reply