கிராமங்கள் சார்ந்த நமது அழகியல் மயக்கங்களை உடைத்தெறிந்தவை ஒடுக்கப்பட்ட மக்களின் இலக்கியங்கள். அதன் தொடர்ச்சியாக வருபவைதான் நடராஜன் பாரதிதாஸின் கவிதைகளும். இந்தத் தொகுப்பின் முதல் கவிதையிலேயே இது வெளிப்படுகிறது. ஊருக்கே மீசை வைத்துவிட்ட நாவிதருக்கு மீசை வைத்துக்கொள்ள கிராமத்தில் உரிமை இல்லை என வெறுத்துப்போய் நகரத்துக்கு வந்ததை இந்தக் கவிதை பேசுகிறது. எனினும், கிராமம் அளவுக்கு இல்லை என்றாலும் நகரமும் தன் கரங்களை விரித்துவைத்துக்கொண்டிருக்கவில்லை என்பதுதான் உண்மை. இங்கே வந்தும் அதே நாவிதர் தொழில்தான்.
மதச்சிறுபான்மையினருக்கு எண்ணிக்கை பலம் இருப்பதால் அவர்கள் கணிசமான வாக்குவங்கியைக் கொண்டிருக்கிறார்கள். இதனால் அவர்களுக்கென்று அரசியல் அதிகாரம் கிடைப்பது எளிதாக இருக்கிறது. எண்ணிக்கைச் சிறுபான்மையினர் வாக்குவங்கியாக இருக்குமளவுக்கு வாக்குகளைக் கொண்டிருப்பதில்லை என்பதால் எந்தக் கட்சியும் அரசும் இவர்களைப் பொருட்படுத்துவதில்லை. இதனால் எந்தவித அரசியல் அதிகாரமும் கிடைப்பதில்லை என்பது ஒரு துயரம். இந்தத் துயரம் நடராஜன் பாரதிதாஸின் முதல் தொகுப்பிலிருந்தே ஒலித்துக்கொண்டிருக்கிறது.
திராவிட இயக்கத்தை வளர்த்ததில் முடிதிருத்தும் நிலையங்களுக்கும் கணிசமான பங்குண்டு. படிப்பகங்கள் இல்லாத ஊர்களிலெல்லாம் முடிதிருத்தும் நிலையங்கள்தான் படிப்பகங்கள். அந்தக் கடைகள் மூலம் திராவிட இயக்கத்தைத் தமிழ்நாட்டின் மூலைமுடுக்குகள்வரை கொண்டுசேர்த்தவர்கள் சிகைதிருத்தும் கலைஞர்கள். இன்று அவர்களை திராவிட இயக்கமும் ஏனைய கட்சிகளும் கண்டுகொள்வதில்லை என்ற குரல் நடராஜன் பாரதிதாஸின் பல கவிதைகளிலும் ஒலிக்கிறது. சமூகத்தில் நசுக்கப்பட்டவர்களுக்காகத் தோன்றிய திராவிட இயக்கம் நடராஜன் பாரதிதாஸின் இந்தக் குரலை அக்கறையுடன் செவிகொள்வது அவசியம். இல்லையேல் இதுபோன்ற நசுக்கப்பட்ட எண்ணிக்கைச் சிறுபான்மையினர் பலரும் திராவிட இயக்கங்களை விட்டு விலகிச் சென்றுவிடும் அபாயம் இருக்கிறது. நடராஜன் பாரதிதாஸின் குரல் பகைக் குரல் அல்ல; உரிமைக் குரல் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
என்னதான் நவீனத்துவம் வந்தாலும் இன்னமும் அதனால் மாற்றமுடியாத தீண்டாமைகள் நிறைய இருக்கின்றன. நாவிதர் எனப்படும் மருத்துவர் சமூகத்தினர் மீதான தீண்டாமை அவற்றுள் ஒன்று. பிய்த்துக்கொண்டு ஓட முடியாதவாறு சமூகம் அவர்கள்மீது இழிவைச் சுமத்துகிறது. அதைத்தான் கீழ்க்கண்ட கவிதை சொல்கிறது:
அழகுபடுத்துற நாமும்
அழகா சொல்ல முடியல
அழகுபடுத்திக்கிற அவங்களும்
அழகா கூப்பிடுறதும் இல்ல
இந்த மயிர்த் தொழிலை விட்டுட்டு
வேற கடை போட்டா என்ன
அதுவா
நீ எந்தக் கடை போட்டாலும்
அங்கேயும் வந்து
இது அமட்டன் கடைதான்னு
பெயர் வைப்பார்கள் மகனே
ஒரு டாக்டருக்கு மரியாதை கொடுக்கும் சமூகம் கிராமத்தில் அதே டாக்டர்களின் வேலை செய்யும், கூடவே சகல சுகதுக்கங்களிலும் முக்கியக் காரியங்கள் ஆற்றும், அழகுபடுத்தும் நாவிதர் எனப்படும் மருத்துவச் சமூகத்தினரை ஏன் இந்தச் சமூகம் இவ்வளவு இழிவாக நடத்துகிறது என்ற கேள்வியும் நடராஜன் பாரதிதாஸின் கவிதைகளில் திரும்பத் திரும்ப வருகிறது. ஆண்டு முழுவதும் சுரண்டிக்கொண்டு ஒரே ஒரு முறை கூலி தரும் கிராமத்து நடைமுறைகள் பலவற்றையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
எல்லோருக்கும் முடிவளர்கிறது. எல்லோரும் முடி வெட்டிக்கொள்கிறார்கள். ஆனால், முடிதிருத்தும் கலைஞர்கள் வாழ்வு என்னவோ இன்னமும் தரைமட்டத்தில்தான் கிடைக்கிறது. அதனால்தான் சிகைதிருத்தும் கலைஞரின் குழந்தை வரையும் மனிதப் படத்தில்கூட அப்பாவின் வறுமையைப் போக்குவதற்காக முடியை மட்டும் பெரிதாக வரைகிறது என்கிறார் நடராஜன் பாரதிதாஸ்.
பாரம்பரியச் சிகைதிருத்தும் கலைஞர்கள் தற்போது எதிர்கொள்ளும் பெரிய சிக்கல் ஒன்று அவர்கள் தொழில் உள்ளேயே முளைத்திருக்கிறது. அதுதான் கார்ப்பரேட் நிறுவனங்கள் நடத்தும் சிகைதிருத்தும் நிலையங்கள். இந்த நிலையங்களின் முதலாளிகளுக்கு நாவிதர்கள் மேல் சுமத்தப்பட்டதுபோல் தீண்டாமை இழிவு இல்லை. இதைப் பற்றியும் நடராஜன் பாரதிதாஸ் பேசுகிறார். மேலும், ரூ.50-க்குச் சவரம், ரூ.100-க்கு முடிவெட்டுதல் என்று அந்த கார்ப்பரேட் நிலையங்கள் சலுகை அறிவித்து, பாரம்பரிய முடிதிருத்தும் கலைஞர்களின் அன்றாட வாழ்வில் மண்ணை அள்ளிப் போடுகின்றன.
எவ்வளவு இழிவை இந்தச் சமூகம் தங்கள் மீது திணித்தாலும் அவற்றைச் சுமந்துகொண்டு சமூகத்துக்குத் தங்கள் சேவையை முகம் சுளிக்காமல் இந்த முடிதிருத்தும் கலைஞர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். சாதியைச் சொல்லித் தன் கன்னத்தை அறைந்தவனுக்குக்கூட இரு கன்னத்திலும் சவரம் செய்து ஏசுவைத் தாங்கள் விஞ்சிவிடுவதாக ஒரு கவிதையில் நடராஜன் பாரதிதாஸ் பேசுகிறார். தினமும் தங்களுக்கு நரகத்தைக் காட்டியவர்கள் இறந்தபின் ஈமச்சடங்கு செய்து அவர்களுக்குச் சொர்க்கத்துக்கு வழிகாட்டிக்கொண்டிருக்கிறோம் என்று நடராஜன் பாரதிதாஸ் கூறுகிறார்.
அப்படிப்பட்ட சமூகத்தை என்ன செய்துவிட முடியும். இதற்குப் பதில் தரும் விதத்தில் ‘நான் ஏன் எழுதுகிறேன்’ என்று கவிதைகள் எழுதுகிறார் நடராஜன் பாரதிதாஸ். அவற்றுள் ஒரு கவிதையை இப்படி முடிக்கிறார்:
இவர்களை எல்லாம்
களத்தில் என்னால்
ஒன்றுமே செய்ய முடியவில்லை
ஆனால்
கவிதையில் கட்டி வச்சி உதைக்கலாம்
அதற்காகத்தான் எழுதுகிறேன்.
ஆம். கவிதையின் பலம் அதுதான். படிமம், அலங்காரம், சொல்வீச்சு, உவமை, உருவகம் போன்றவை எதுவுமில்லாமல் இந்தச் சமூகத்தைத் தன் வலிகொண்ட வார்த்தைகளால் நடராஜன் பாரதிதாஸ் கட்டி வச்சி உதைக்கிறார். அதுவே கவிதை ஆகிவிடுகிறது.
பார்பர் நாமா நூலில் இடம்பெற்றுள்ள முன்னுரை
நன்றி : ப.நடராஜன் பாரதிதாஸ், யாவரும் பதிப்பகம்








Leave a Reply