வீரர்கள் வரிசையாய் அணிவகுத்து நிற்க, அவர்களுக்கு முன்னே படைத்தளபதி ஒய்யாந்தே கம்பீரமாக நின்றான். அவன் சொல்லப்போகும் சொல்லை எதிர்பார்த்து அவனது வார்த்தைக்குக் கட்டுப்பட்டு நடக்க ஆயத்தமாக இருந்தனர் படை வீரர்கள். அவர்களது கைகளில் மக்கானா, சம்ப்பி எனப்படும் ஆயுதங்கள் இருந்தன. வலுவான மரக்கொம்புகள் அவை. மரக்கொம்புகளின் முனைகள் கல்லிலோ நட்சத்திர வடிவ வெண்கலத்திலோ முடிவடைய, எதிரிகளின் தலையை அடித்துக் கொல்லப் பயன்பட்ட ஆயுதங்கள் அவை. அய்லு எனப்படும் கவணைச் சுமந்துகொண்டு நின்றனர் சில வீரர்கள். கயிற்றால் செய்யப்பட்ட அந்தக் கவணிலிருந்து கற்களை எறிந்து நீண்ட தூரத்திலிருந்து எதிரிகளைத் தாக்கப் பயன்பட்ட ஆயுதம் அது. போலோஸ் எனப்படும் கால்கட்டு ஆயுதம் அது. கயிறுகளால் இணைக்கப்பட்ட கற்களைக் கொண்டிருந்த போலோஸைக் கொண்டு, எதிரிகளின் காலில் எறிந்து அவர்களை இடறி வீழ்த்த முடியும். மரத்தால் செய்யப்பட்ட செவ்வக அல்லது வட்ட வடிவக் கவசங்களையும் அவர்கள் கைகளில் பிடித்த வண்ணம் நின்று கொண்டிருந்தனர்.
எப்போதும் வீரமும் விவேகமும் செறிந்திருக்கும் ஒய்யாந்தேயின் முகம் வாட்டமாயிருந்தது அன்றைக்கு. இருப்பினும் அவன் வீரர்களை நோக்கித் திரும்பி உறுதியான குரலில் சொன்னான்: “இன்காப் பேரரசின் வீரர்களே. எனது தலைமை ஏற்று, ஸாப்பா இன்கா, பேரரசன் பச்சக்குட்டியின் தளபதிகளில் ஒருவனாக என்னை மதித்து, இதுவரைக்கும் பலபோர்களில் பங்கு பெற்று அரசனுக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தீர்கள். ஆனால் இப்போது அரசன் பச்சக்குட்டியை எதிர்த்தே போர் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. மன்னனின் பெரும்படைகளை எதிர்த்துப் போர் செய்து வெற்றிபெறுவது முடிகின்ற காரியமா? ஆயிரக்கணக்கான படைவீரர்களையும் திறமை மிக்கத் தளபதிகளையும் கொண்டே அருகாமை நாடுகள் அனைத்தையும் இன்கா பச்சக்குட்டியால் வெல்ல முடிந்தது. அனைத்துப் போர்களிலும் பங்கு பெற்று வெற்றியை ஈட்டித்தந்த உங்களது வீரம் அளப்பரியது. ஆனால் காலத்தின் கோலம், இன்கா பச்சக்குட்டியை எதிர்க்க வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது. இந்த முயற்சிக்கு நீங்கள் எனக்கு உறுதுணையாக இருப்பீர்களா?”
“நிச்சயம் உறுதுணையாக இருப்போம்” என்று ஒரே குரலில் கூறினார்கள் வீரர்கள்.
“இது எனது சொந்தப் பிரச்சினை என்று தெரிந்தும் நீங்கள் எனது பக்கம் நிற்க முடிவு செய்துள்ளீர்களா?” என்று மீண்டும் கேட்டான் ஒய்யாந்தே.
“ஆமாம்”, “ஆமாம்” என்று பல்வேறு திசைகளிலுமிருந்து குரல்கள் எழுந்தன.
ஒய்யாந்தேயின் கண்கள் சில நொடிகள் பனித்தன. பின்னர் அந்தக் கண்களில் வன்மம் தெறித்தது. “கூஸ்கோவை நோக்கி முன்னேறுவோம். இன்காவின் படைகளைத் தோற்கடிப்போம்” என்று சொல்லிக்கொண்டே அந்த மலைப்பாதையில் நடந்தான் ஒய்யாந்தே. ஆரவாரம் செய்தவாறே அவனைத் தொடர்ந்து நடந்தனர் வீரர்கள்.
மலைப்பாதையில் நடக்க ஆரம்பித்தவுடன் ஒய்யாந்தேயின் மனதில் கூஸி கூயுரின் நினைவுகள் எழுந்தன. அவளை நினைத்தவுடன் அவனது மனதை ஒரு பாரம் அழுத்தியது. அந்தப் பாரத்தைச் சுமந்துகொண்டே நடந்தான்.
இன்காப் பரம்பரையின் ஒன்பதாவது அரசனான பச்சக்குட்டியின் ஆட்சி நடந்துகொண்டிருந்த காலம் அது. ‘பச்சக்குட்டி’ என்றால் உலகத்தைப் புரட்டிப் போடுபவன், அதிர வைக்கும் மாற்றங்களைச் செய்பவன் என்று பொருள். அவனது ஆட்சிக்காலத்தில் இன்கா இராச்சியத்தின் எல்லைகள் நீட்டிப் பேரரசாக்கப் பட்டது; புதிய சட்டங்கள் இயற்றப்பட்டன; நாட்டின் கட்டமைப்பு திட்டமிட்டு உயர்த்தப்பட்டது; ஆயிரக்கணக்கில் புதிய படைவீரர்கள் சேர்க்கப்பட்டனர்.
அந்தப் படைப்பிரிவுகளின் ஒரு தளபதியாக விளங்கியவன் ஒய்யாந்தே. எளிய குடும்பத்தில் பிறந்த ஒய்யாந்தே, தனது சிறுவயதிலிருந்தே கடின உழைப்பாளி. போர்க்கலைகளைக் கற்றுத் தேர்ந்து இளவயதிலேயே போர்வீரனாகப் படைப்பிரிவில் சேர்ந்தவன்; பங்கு பெற்ற போர்களிலெல்லாம் தனது வீரத்தை வெளிப்படுத்தி, எதிரிகளைப் பந்தாடியவன்; படையில் சேர்ந்த சிறிது காலத்திலேயே பதவி உயர்வு பெற்றுப் படைத்தளபதியாகப் பொறுப்பேற்றவன்; மன்னன் பச்சக்குட்டியின் பெருமதிப்பைப் பெற்றவன்; அரசனிடமிருந்து பல பரிசுகள் பெற்றவன்; இன்கா இராச பரம்பரையில் பிறக்காதிருப்பினும் தனது வீரத்தால் இராச பரம்பரைக்கு இணையான செல்வாக்கைப் பெற்றவன்.
ஸாப்பா இன்கா பச்சக்குட்டிக்குப் பல மனைவியர் இருந்தனர். அவர்களுள் முதன்மை மனைவியானவள் ‘மாமா அனவார்க்கி’. இருவருக்கும் பிறந்த பல பிள்ளைகளுள் ‘கூஸி கூயுர்’ குறிப்பிடத்தக்கவள். அவளது அழகைப் பற்றித் தலைநகரம் கூஸ்கோவில் மட்டுமன்றி இன்கா இராச்சியம் முழுமைக்கும் வியந்து பேசினார்கள். ‘கூஸி கூயுர்’ என்றால் ‘மகிழ்வான நட்சத்திரம்’ என்று பொருள். கூஸி கூயுரின் அழகைக் கண்ட ஒய்யாந்தே அதில் மயங்கிப் போனான். ஒய்யாந்தேயின் வீரத்தையும் வலிமையும் பற்றிக் கேள்விப்பட்டிருந்த கூஸி கூயுர், அவனை நேரில் பார்த்தவுடன் அவனது தோள்வலிமையைக் கண்டு அவனிடம் மயங்கிப் போனாள். இருவரும் காதலில் விழுந்தனர். பிறரறியா வண்ணம் அடிக்கடித் தனிமையில் சந்தித்தினர். இருவரையும் காதல் நோய் பீடித்தது. மணந்தால் அவளையே மணக்கவேண்டும் என்று ஒய்யாந்தே உறுதி பூண்டான்; மணந்தால் அவனையே மணக்கவேண்டும் என்று கூஸி கூயுர் உறுதி பூண்டாள். ஆனால் அது எளிதான செயல் அல்ல.
அரசக் குடும்பத்தில் பிறக்காது எளிய குடும்பத்தில் பிறந்த ஒய்யாந்தே, மன்னனின் மகளை மணம் முடிக்க நினைப்பது கனவிலும் நடக்காதது. என்ன செய்யலாம் என்று யோசித்தான் ஒய்யாந்தே. மன்னனிடம் சென்று கேட்கலாம் என்றால் அதற்கும் தயக்கம். தன்னைக் கொல்லக்கூட மன்னன் உத்தரவிடலாம். பலவாறு யோசித்த ஒய்யாந்தே, இறுதியில், பேரரசின் தலைநகர் கூஸ்கோ நகரத்தில் இருக்கும் இண்ட்டியின் கோவில் (சூரியக்கோவில்) ‘கோரிகான்ச்சா’வின் தலைமைப் பூசாரியிடம் சென்று வருங்கூறச் சொல்லிக் கேட்டான். இதைக் கேட்டு தலைமைப் பூசாரி அதிர்ச்சி அடைந்தாலும், ஒய்யாந்தேயின் மீது இரக்கங்கொண்டு, சூரியக்கடவுள் ‘இண்ட்டி’யைத் தொழுது பூசைகள் செய்து ஒய்யாந்தேயிடம் சொன்னான்: “கெட்ட சகுனங்களும் தோல்வியும் மட்டுமே உனக்கு முன்னால் தெரிகின்றன. நீ மன்னனின் மகளை மறந்துவிடுவதே நல்லது.”
பூசாரியின் மொழிகளைக் கேட்ட ஒய்யாந்தே கவலை அடைந்தாலும் அவன் கூஸி கூயுரை மறக்க முயற்சிக்கவில்லை. அவளைத் தொடர்ந்து இரகசியமாகச் சந்திப்பதைத் தொடர்ந்தான். விளைவு: கூஸி கூயர் கருத்தரித்தாள். நிலைமை எல்லை மீறிவிட்டதை உணர்ந்த ஒய்யாந்தே, தைரியத்தை வரவழைத்துக் கொண்டு இன்கா பச்சக்குட்டியைச் சந்தித்து அவனது மகளை மணம் முடித்துத் தரும்படி தாழ்மையுடன் கேட்டான்.
அதைக்கேட்ட பச்சக்குட்டி கடுஞ்சினம் கொண்டான். “ஒய்யாந்தே! சூரியக்கடவுளாம் இண்ட்டியின் வழித்தோன்றல்கள், அரசக் குடும்பத்தினர் மீது எளிய பிறப்புகளாம் உன் போன்றவர்கள் உறவு கொள்ளத் துணிவது ஏற்றுக்கொள்ள இயலாதது. உனக்கு எப்படி இவ்வளவு துணிச்சல் வந்தது? “ என்று இரைந்தான். ஒய்யாந்தேயைப் படைத்தளபதி பொறுப்பிலிருந்து விடுவித்தான். “உன்னை உயிருடன் விடுவதே உனக்கு நான் தரும் மிகப்பெரிய பரிசு. நடைபெற்ற போர்களில் உனது வீரத்தினால் பல வெற்றிகளைக் குவிப்பதற்கு உதவியாக இருந்ததனால் நீ உயிர் தப்பினாய். எங்காவது சென்று பிழைத்துக்கொள்!” என்று சொல்லி ஒய்யாந்தேயைத் திருப்பி அனுப்பினான்.
ஸாப்பா இன்கா பச்சக்குட்டி அத்துடன் நிறுத்தவில்லை. தன் மகள் கூஸி கூயுரைக் கடிந்து கொண்டான். எளியகுல ஆடவனைக் காதலித்த குற்றத்துக்காக அவளை ‘தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்கள்’ அக்யாக்கள் (சூரியனின் மகள்கள்) வசிக்கும் அக்யவாசிக்கு இரகசியமாக அனுப்பி அவளை அங்கே அடைத்து வைக்கும்படியும் ஆணையிட்டான். அதன்பிறகு அவளால் ஒய்யாந்தேயைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. சில மாதங்களில் அவளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அவளுக்கு ‘இமா சுமாக்’ என்று பெயரிட்டாள். ‘இமா சுமாக்’ என்றால் ‘எவ்வளவு அழகானவள்’ என்று பொருள். அந்தப் பெண் குழந்தையைத் தனது தோழி பிட்டு சாயாவிடம் கொடுத்து அவளையே தன் மகளை வளர்க்கச் சொன்னாள்.
இதற்கிடையே, மன்னனிடம் அவமானப்பட்டுத் திரும்பிச் சென்ற ஒய்யாந்தேயின் மனதில் பழி வாங்கும் எண்ணம் கொளுந்து விட்டெரிந்து கொண்டிருந்தது. தனக்கு நெருக்கமான போர் வீரர்களிடமும் துணைத்தளபதிகளிடமும் தனது எண்ணத்தைத் தெரியப்படுத்தி, மன்னனை எதிர்க்கத் துணிந்துவிட்டதாகச் சொன்னான். மன்னனை வெற்றி கொள்வதன் மூலமே கூஸி கூயுரை மணம் முடிக்க முடியும் என்றும் சொன்னான். அவன்மீது கொண்டிருந்த நல்லெண்ணத்தாலும், அவனது துயரத்தையும் கண்ட அந்த வீரர்கள் அவனது முயற்சிக்கு உறுதுணையாக இருக்க முன்வந்தார்கள். அவர்களையெல்லாம் திரட்டிக்கொண்டு, கூஸி கூயுரை மனதில் நினைத்துக் கொண்டு கூஸ்கோவை நோக்கி நடந்து கொண்டிருந்தான் ஒய்யாந்தே.
ஒய்யாந்தே படைகளுடன் வந்துகொண்டிருப்பதை அறிந்த மன்னன் பச்சக்குட்டி, அவனைத் தடுத்து நிறுத்த, தனது படைகளில் ஒரு பிரிவை ஆயத்தப்படுத்தினான். ‘ரூமி நாவி’ எனும் படைத்தளபதி தலைமையில் எதிர்த்தாக்குதல் நடத்த கூஸ்கோவின் எல்லையில் படைகள் அணிவகுத்து நின்றன. ஒய்யாந்தேயின் படைகள் நெருங்கி வந்தன. ஒய்யாந்தேயின் நம்பிக்கை பெற்ற படைத்தளபதி ‘ஒர்க்கோ வாராங்கா’ போர் உத்திகளை வகுத்துக் கொண்டே முன்னின்று தாக்குதல் நடத்த முன்னேறினான். இரு படைகளும் உக்கிரத்துடன் சண்டையிட்டன. போர் நீண்டு கொண்டே சென்றது. எந்தத் தரப்புக்கும் வெற்றி கிட்டவில்லை. பல நாட்களாகப் போர் நீடித்தது. ஒய்யாந்தேயின் படைகள் முன்னேறி வெற்றியடையும் நிலை ஏற்பட்டது.
வீரம் மிக்க ஒய்யாந்தேயின் படைகளை வெல்வது கடினம் என்று தெளிந்த படைத்தளபதி ரூமி நாவி சூழ்ச்சியால் வெல்லத் திட்டம் இட்டான். ஒய்யாந்தேயிடம் சரணடையப்போவதாக வேண்டி அவனிடம் தூது அனுப்பினான். மன்னனுடன் இணைந்து சண்டையிடப் போவதில்லை என்றும் தனது குழுவினர் பலருடன் வந்து ஒய்யாந்தேயுடன் இணைந்து கொள்வதாகவும் சொன்னான். இதைக்கேட்டு நம்பிய ஒய்யாந்தே, ரூமி நாவியையும் அவனது ஆட்களையும் தன் படைகளுடன் இணைந்து கொள்ளச் சம்மதித்து அவர்களைத் தன் கூடாரத்துடன் தங்கிக் கொள்ள அனுமதித்தான். இரவுவேளை வந்தது. அந்தச் சமயத்தில் எங்கிருந்தோ வந்த மன்னனின் படைவீரர்களும், ஒய்யாந்தே படையில் ஊடுருவியிருந்த ரூமி நாவியின் படையினரும் இணைந்து கொண்டு, அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த ஒய்யாந்தேயையும், ஒர்க்கோ வாராங்காவையும், பிற படை வீரர்களையும் கைது செய்தனர். மன்னன் பச்சக்குட்டி அனைவரையும் சிறையிலடைக்க உத்தரவிட்டான். கூஸ்கோவிற்கருகே இருந்த சிறையில் ஒய்யாந்தேயும் அவனது வீரர்களும் இப்படியாகத் தோற்கடிக்கப்பட்டனர்.
ஆண்டுகள் கடந்தன. ஸாப்பா இன்கா பச்சக்குட்டி வயது முதிர்ந்து இறந்தான்; அவனுடைய மகன் இன்கா ‘துப்பாக் யுப்பன்கி’ அரசனானான்; ஒய்யாந்தே இன்னும் சிறையலடைக்கப்பட்டிருந்தான்; கூஸி கூயுர் அக்யவாசியில் வாழ்ந்து கொண்டிருந்தாள்; அவளது மகள் இமா சுமாக் இன்னும் அவளது தோழி பிட்டு சாயாவிடம் வளர்ந்து வந்தாள். அவளுக்குப் பத்து வயது ஆகியிருந்தது. தனது பிறப்பைப் பற்றி பிட்டு சாயாவிடம் கேட்டறிந்தவள் தனது தந்தை தாயைப் பற்றிக் கவலை கொண்டாள். அவர்களை ஒன்று சேர்க்க உறுதி பூண்டாள்.
இமா சுமாக் கூஸ்கோ நகரத்துக்குச் சென்று அங்கே அரண்மனையில் மன்னன் துப்பாக் யுப்பன்கியைச் சந்தித்துத் தன் கதையைச் சொன்னாள். தனது சகோதரியின் மகள் சொல்வதையெல்லாம் கவனமாகக் கேட்டான் இன்கா துப்பாக் யுப்பன்கி. பின்னர் ஆழ்ந்த யோசனையில் ஆழ்ந்தான். இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தவனாக, சிறையிலடைத்து வைத்திருக்கும் ஒய்யாந்தேயையும் அவனது வீரர்களையும் விடுதலை செய்யச் சொன்னான். அக்யவாசியில் தனிமைப் படுத்தப்பட்டிருந்த தனது சகோதரி கூஸி கூயுரையும் கூஸ்கோவுக்கு வரவழைத்தான். இருவரும் மணம் முடிக்க வழிசெய்தான். ஒய்யாந்தேயை மீண்டும் தளபதியாகப் பொறுப்பில் அமர்த்தினான். அனைவரும் பலகாலம் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்.
கூஸ்கோவிலிருந்து எழுபது கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள ‘உருபம்பா’ பள்ளாத்தாக்கிலிருக்கும் முக்கிய நகரம் ஒய்யாந்தேயின் பெயரால் ‘ஒய்யாந்தேதாம்போ’ என்றே அழைக்கப்படுகிறது.
இந்தக் கதை நாடகமாக்கப்பட்டு, அன்றிலிருந்து இன்றுவரை தொடர்ந்து நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கிறது.
Image : pintrest
சொந்த ஊர்: தூத்து








Leave a Reply