(தென்னமெரிக்காவின் ஆண்டியன் மலைத்தொடரில் தோன்றிய பல நாகரிகங்களுள் இறுதியாக வந்த இன்கா இனம் குறிப்பிடத்தக்கது. சாவின், நாஸ்கா, மொச்சி, வாரி, சிமு என்று தொடர்ந்த பண்டைய இனங்களுக்குப் பிறகு பதிமூன்றாம் நூற்றாண்டினிறுதியில் தொடங்கிய இன்காப் பேரரசு பதினைந்தாம் நூற்றாண்டில் உச்சமடைந்தது. வடக்கே இன்றைய ஈக்குவேடாரிலிருந்து தொடங்கி பெரு, பொலீவியா என்று தொடர்ந்து தெற்கே சிலி வரை வியாபித்திருந்தது. பதினாறாம் நூற்றாண்டில் புதிய உலகம் தேடி வந்த ஸ்பானியர்களின் துப்பாக்கிகளுக்கு எதிரான போரில் இன்கா இனம் போராடித் தோற்றுப் போனது)
எல்லாம் நீர்மயமாயிருந்தது அப்போது. நீருக்கு அடியிலேயே நிலமும் இருந்தது. வீரகொச்சா ஆழங்காண முடியாத ஆழத்தில் உறங்கிக் கொண்டிருந்தான். அவன் சோம்பல் முறுவலித்தபோது நீரில் பெரும் அலைகள் தோன்றின. சில சமயங்களில் நீருக்குள்ளிருந்து நிலம் வெளியே வந்து விழுந்தது. அவனது உடலசைவில், அவனது பெருமூச்சில் கடலுக்குள்ளிருந்து நிலங்கள் முளைத்தன. நிலங்களிலிருந்து மலைகள் தோன்றின. அவ்வாறு தோன்றிய இரண்டு இணையான மலைகள் நீளமாய் முதுகெலும்பாய் நீண்டன ஒரு நிலப்பரப்பில். பலகாலத்துக்குப் பின்னர் அந்த மலைகளை ஆண்டியன் மலைகள் என்று அழைத்தனர். மலைகளின் உயரேயும் சமதளப்பரப்பை உருவாக்கினான் வீரகொச்சா தனது உடலசைவால். அந்த உயர்சமவெளிப் பகுதியில் நீண்ட நீர்ப்பரப்பாய் டிட்டிகாக்கா ஏரியை உருவாக்கினான். அந்த ஏரிக்கு அடியில் பலகாலமாய் உறங்கிக் கொண்டிருந்தான் வீரகொச்சா.
திடீரென்று ஒருநாள் நீரைக் கிழித்துக்கொண்டு வெளியே வந்தான் வீரகொச்சா. சிறிது நாட்களாகவே தான் படைத்த உலகத்தில் உயிரினங்களை உலவவிட வேண்டுமென்ற சிந்தனை அவனுக்கு உதித்த வண்ணம் இருந்தது. இருட்டு மட்டுமே அந்த உலகத்தின் விளக்கு. மலையின் கற்களில் தனது மூச்சுக்காற்றைச் சேர்த்து உயிரினங்களை உருவாக்கினான். பெரிய இராட்சத உருவத்தினராயிருந்தனர் அந்தக் கல்மக்கள். வாழும் முறைகளையும் தன்னைக் கடவுளாக வழிபடும் முறைகளையும் அந்தக் கல்மக்களுக்குச் சொல்லிக்கொடுத்தான் வீரகொச்சா. ஆனால் அந்தக் கல்மக்கள் நாகரிக உணர்ச்சி அற்றவர்களாய் ஒருவரை ஒருவர் மதிக்காமல் நடந்துகொண்டனர். கடவுளை நினைக்கவும் மறந்துவிட்டனர். கோபம் கொண்ட வீரகொச்சா மழையை உருவாக்கி, தொடர்மழை பெய்யச் செய்தான். விடாத மழை அது. மழைவெள்ளத்தில் சிக்கித் திணறித் தப்பிக்க வாய்ப்பில்லாமல் பலர் மாண்டனர். பூமி பிளந்து அதற்குள் அகப்பட்டு இறந்தனர் பிறர். எஞ்சியிருந்தவர்களையெல்லாம் மீண்டும் கல்லாகச் சமைத்தான் வீரகொச்சா.
வெள்ளம் மூடிய நிலத்தில் நீர் வடிந்து உலர்ந்ததும் தனது படைத்தல் தொழிலை ஆரம்பித்தான் வீரகொச்சா. ‘ஒளியைப் படைத்து அந்த ஒளியை உலகத்தில் உலவ விட்டாலென்ன’ என்ற யோசனை வீரகொச்சாவுக்குத் தோன்றியது. டிட்டிகாக்கா ஏரியின் ஆழத்திலிருந்து அவன் ஒளி தரும் உயிர்களான சூரியன், நிலவு, நட்சத்திரங்களை ஒவ்வொன்றாக எடுத்து வானத்தில் உலவ விட்டான். ஒளியுயிர்களை அவன் நீருக்குள்ளிருந்து பெயர்த்தெடுத்த இடத்தில் சில தீவுகள் உருவாயின. ‘இண்ட்டி’ என்பது சூரியனுக்கு அவன் வைத்த பெயர். நிலவுக்குப் பெண் உருக்கொடுத்து ‘மாம்மாகில்லா’ என்று பெயர் சூட்டினான். தொடக்கத்தில் மாம்மாகில்லாவின் ஒளி இண்ட்டியின் பிரகாசத்தை விடப் பலமடங்கு அதிகமாயிருந்தது. நாளக நாளாகச் சூரியனுக்குப் பொறாமை அதிகரித்துத் தனது பொறாமை வெம்மையில் தோன்றிய சாம்பலை நிலவின் மீது பூசிப் பூசி மாம்மாகில்லாவை வெளிச்சங்குன்றச் செய்தான்.
இம்முறை வீரகொச்சா களிமண்ணைப் பிசைந்து பல உருவங்கள் செய்தான். பல வண்ணங்களில் அவர்களுக்கு ஆடை செய்தான். ஒவ்வொரு வண்ண ஆடையையும் தான் பிசைந்த உருவங்களுக்கு அணிவித்து தனது மூச்சுக்காற்றால் அவர்களுக்கு உயிர்கொடுத்தான். அவன் அவர்களின் காதுகளில் சொன்ன சொற்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மொழியாகின. அவர்களைக் குழுக்களாய் வாழச் சொல்லிக் கொடுத்தான்; ஒற்றுமையாய் இருக்கச் சொன்னான். விலங்குகள், பறவைகள், தாவரங்கள் எனப்பிற உயிரினங்களையும் செய்தான் வீரகொச்சா. விவசாயம் செய்வதெப்படி என்றும் சொல்லிக்கொடுத்தான். ஒற்றுமையாயிருக்கச் சொல்லித் தான் உருவாக்கிய மக்களைப் பூமியின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பினான்.
படைத்தல் தொழிலை முடித்தபின் சில காலங்கழித்து மக்கள் எப்படியிருக்கிறார்கள் என்பதைப் பார்த்துவரக் கிளம்பினான் வீரகொச்சா. மூன்று உதவியாளர்களை உருவாக்கி அவர்களையும் எல்லாவிடங்களுக்கும் போகச்சொன்னான். ‘இமய்மானா வீரகொச்சா’ எனும் உதவியாளன் மலைத்தொடர்களை ஒட்டிய வனப்பகுதியின் வழியாக எல்லாவிடங்களுக்கும் நடந்து சென்றான். ‘தொக்காப்பு வீரகொச்சா’ என்றழைக்கப்பட்ட இரண்டாவது உதவியாளன் கடற்கரை ஓரமுள்ள பிரதேசங்களையெல்லாம் நடந்து கடந்து சென்றான். மூன்றாவது உதவியாளன் ‘தகுவபக்கா வீரகொச்சா’ சொல்பேச்சுக் கேளாமல் ‘நானே கடவுள்’ என்று எல்லாவிடங்களிலும் சொல்லிக்கொண்டு வந்தான். இதைக் கேள்விப்பட்ட வீரகொச்சா தனது மற்ற இரு உதவியாளர்களையும் அனுப்பித் தகுவபக்காவைத் தண்டித்து வரச்சொன்னான். இமய்மானாவும் தொக்காப்பும் தகுவபக்காவைத் தேடிப்பிடித்து அவனது கைகளையும் கால்களையும் கட்டி ஆற்றுக்குள் எறிந்தனர். அதன் பின்னர் அவனைப் பார்த்ததாகக் கேள்விப்படவில்லை ஒருவரும்.
வீரகொச்சாவின் கட்டளைப்படி எல்லாவிடங்களுக்கும் நடந்து சென்ற இமய்மானாவும் தொக்காப்பும் கடந்து சென்ற இடங்களில் வசித்த குடிகளுக்கும் புள்ளினங்களுக்கும் விலங்குகட்கும் பெயர் வைத்துக் கொண்டே சென்றனர். வீரகொச்சா பின்னர் மலைத்தொடர்கள் வழியாகத் தன் பயணத்தை ஆரம்பித்தான். சாதாரண கிழிந்த உடையில், கையில் கோலுடன் சென்ற அவனைக் கண்ட மக்களுக்கு அவன் யாரென்று அடையாளம் தெரியவில்லை. அவனை அடித்து விரட்டினார்கள். கோபங்கொண்ட வீரகொச்சா வானத்தை நிமிர்ந்து பார்க்க, அங்கிருந்து வந்த ஒளிப்பிழம்பு அந்த ஊரைச் சுற்றிலும் தீப்பிடித்து எரியச் செய்தது. பயந்துபோன ஊர்மக்கள் வந்திருப்பது யார் என்று புரிந்து வீரகொச்சாவை வணங்கி மன்னிப்புக் கேட்டனர். அவர்களை மன்னித்து நெருப்பைக் குளிர்வித்தான் வீரகொச்சா.
பின்னர் அங்கிருந்து வடக்கு நோக்கிப் பல்வேறு இடங்களுக்கும் சென்றவன் கண்ட மக்களையெல்லாம் பண்படுத்தி வாழும் வகைகளைச் சொல்லிக்கொடுத்துவிட்டுச் சென்றான். நோயாளிகளைக் குணப்படுத்தினான். கண்ணை இழந்தவர்களுக்குப் பார்வை தந்தான். இறுதியாய்க் கடலுக்கருகில் வந்து நின்ற வீரகொச்சா, தான் விடைபெறும் நேரம் வந்துவிட்டது என்று சொல்லிவிட்டுத் தன் உதவியாளர்களான இமய்மானா மற்றும் தொக்காப்பு இருவருடன் கடலில் நடந்து சென்றான். சிறிய புள்ளியாய்த் தொலைவில் தெரிந்து மறைந்தான். செய்வதறியாது நின்றன உயிரினங்கள். அதன் பின்னர் அவன் திரும்பி வரவே இல்லை.
வீரகொச்சா, முடிவுகளின் முடிவே!
ஒளிவீசும் உடைகளைத் தரித்திருப்பவனே!
உயிர்களை உலகிலே தோய்விப்பவனே!
எல்லாவற்றையும் நெறியாள்பவனே!
ஆணைப் படைத்தவனே! பெண்ணைப் பிறப்பித்தவனே!
வார்ப்பவனே! உருவாக்குபவனே!
பிண்டங்களுக்குள் உயிர் திணித்து
அண்டங்காக்கும் ஆண்டவனே!
எங்கே சென்றாயப்பா நீ ? உள்ளிலா, இல்லை வெளியிலா?
இந்த உலகத்தின் மேலே மேகக்கூட்டத்துக்குள்ளேயா?
இந்த உலகத்தின் கீழே கண்காணா மறைவிலா?
எங்கள் சொல் கேளாயோ? பதில் தருவாயோ?
Art : fineartamerica
சொந்த ஊர்: தூத்து








Leave a Reply