புறாக்கள் பறக்கவில்லை என்றால்
புறாக்கள் பறக்க வில்லை என்றால்
இந்த வானத்திற்கு நீண்ட பெயர் இல்லை
புத்தம் புதிய நீரோடை இல்லை
நீண்ட அலைவரிசையில் பாடல்கள் இல்லை
தளிர்விட்ட விரல்களுக்கு
கனிவு மிக்க சகோதரனின் தோள்களும்
இசைக்கோர்வையும்
சமத்துவப் பார்வையும் இல்லவே இல்லை
கைகளைப் பிசைந்தபடி இருக்கும் அவன்
புல்லாங்குழலை
எங்கு வைப்பது என்று யோசிக்கிறான்
தெருநாய்கள் படுத்திருக்கும் மைதானம்
குறுகிப் போகாத வரை
ஒரே ஒரு முறை ஏதாவது சொல்லுங்கள்
இலக்கணத்தில்
பரந்துபட்ட வானத்திற்கு ஏதோவொரு அசைவு வேண்டும்
கள்ளத்தனமாக வரும் சாத்தான்
கள்ளத்தனமாக வரும் சாத்தான்
புன்னகையோடு வந்து
மலர்களைக் கசக்கி
வீதியில் எறிந்து விட்டுச் செல்கிறான்
கால்தோய நடப்பவர்களைக்
கண்ணி வைத்துப் பிடித்து
மதுவால் நிறைத்து
ரம்மி ஆடுகிறான்
ஒரு கிலோ ஆப்பிள் பழத்தை
32 துண்டுகளாக வெட்டி
பி டி கத்தரிக்காயும்
வால்மார்டின் தேவை குறித்தும் கண்களால்
நவீனப் போதன முறையில் பாடம் நடத்துகிறான்
அவன் உடம்பிலிருந்து
அழுகிய முட்டை வாடை வருவதை
மற்றவர்கள் தவறாக எண்ணிவிடக்கூடாது
என்றெண்ணி
நூதன அறிவியல் கண்டுபிடிப்புகளைப்
பட்டியலிட்டுப் பெருமை பேசி
அலைபேசி வாயிலாகவே
அனைவரையும் ஒன்றிணைக்கிறான்
குழந்தைகளுக்கும்
ஆபாச வீடியோக்களை அனுப்பி
ஓர் அறைக்குள் தாழிட்டு
பின்னால் நின்று வேடிக்கை பார்க்கிறான்
உலக மயத்தின்
தேவை இன்னும் நிறைய இருக்கின்றன
என்பதற்காக
நூதன உடை அணியும் பெண்கள்
கருத்தடைகளுக்கும்
கலாச்சார வெடிகுண்டுகளுக்கும்
சிக்க வைத்து
துயரத்தில் இன்பம் காண்கிறான்
எல்லோருக்கும்
கணக்கில் வராத பணத்தைக் கொடுத்து
பொருளாசையைத் தூண்டி
மாய வலையில் சிக்க வைக்கும்
அவனை
நம்பிக் கொண்டிருந்தால்
இன்னும் கள்ளத்தனமான சாத்தான்கள் கள்ளச் சாவியுடன்
வணிகச் சந்தையில் பெருகி
எல்லோர் வீட்டுக் கதவையும் திறந்து
கொள்ளையாடி விட்டுப் போவான்
நிகழ்காலம் அவனால் கெட்டழிகிறதென்று
கையைப் பிசைந்து கொண்டிருக்கும்
நீங்களும் நானும்
வெறும் வாய்க்கு அவில் கிடைப்பது போல
பேசிப் பேசிக் காலத்தைப் போக்குவோமா
வேறென்ன மானிடா
எங்கு போய் இருப்பார் கடவுள்
இவ்வழியே போகும் ஒருவன்
கடவுளின் வீட்டைத் தெரிவு செய்யாமல்
கண் போன போக்கில் போகிறான்
கடவுள் எவ்வளவு நேரம் கூப்பிட்டும்
அவன்
தூரத்தில் இருந்து பார்த்துவிட்டுச்
சித்திரம் இல்லாத சுவரில்
தன் எண்ணத்தைப் பதிய வைக்கிறான்
உலகில்
கால்கள் இல்லாத மரங்கள்
இங்கேதான் படுத்துக் கிடக்கின்றன
என்றவாறு
நாலு திட்டுத் திட்டி விட்டுக்
கடவுளைப் பார்க்கிறான்
அவன் பார்த்த தடத்தில்
கடவுள் இல்லவே இல்லை
கடவுள் எங்கு போய் இருப்பார்
தட்டியும் திறக்காத கதவு
இந்தக் கதவு
எவ்வளவு நேரம் தட்டியும்
ஏன் என் மீது இரக்கத்தைக் காட்டவில்லை குளிரைத் தாங்க முடியவில்லை
இந்த நாள் ஏன் இப்படி அமைந்தது என மனத்தாங்களுடன்
நாயைப் பார்த்து நீவவும் முடியாமல் பூனையைப் பார்த்து கொஞ்சம் முடியாமல்
துயர்மிகு இரவைச் சபித்துக் கொண்டு கடலை நோக்கிக் கால் போனது
அங்கே எழும் அலை உக்கிரத்துடன்
பாறை மீது அடித்து மோதி உடைந்து நாலாப்புறமும் சிதைந்து கொண்டிருந்தது
வேகத்தில் மனம்
மேலும் மேலும் குமுறிக் கொண்டிருந்தது செய்வது தெரியாமல்
இரண்டு கிலோமீட்டர் நடையும் வேகமாக நடந்து பார்த்தேன்
சென்ற இடமெல்லாம்
விலை மாதர்களும்
குடியால் அலைபவர்களே
கண்ணில் தட்டுப்பட்டார்கள்
என்ன செய்வதென்றே தெரியாமல்
அருகில் இருக்கும்
குத்துக்கல்லில் போய் அமர்ந்து விட்டேன்
நள்ளிரவு தாண்டி
சரியாக மூன்று மணி அளவில்
ஆகாயத்தில் மின்னிக் கொண்டிருக்கும் நட்சத்திரம்
இரக்கத்தைக் காட்டிப் பேசியது
மனிதர்கள் இல்லையென்றால் நான் இல்லாமலா போய்விட்டேன் என்றது
அந்தச் சொல்லாடலைப் பிடித்துக் கொண்டு
காலத்தை நீட்டிக்கொண்டு போகிறேன் என்றாவது ஒரு நாள்
மூடிய கதவு திறக்காமலா போய்விடும்.
மொட்டவிழ்ந்த பூவின் வாசம்
ஒரு கால் மீது
இன்னொரு கால் போட்டு அமர்ந்திருக்கும் பெண்ணைப் பார்த்தவன்
முதலில் நாற்காலியை உடைத்தான்
பிறகு
நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும் இடத்திற்குத
தன்னைத் தீவிரப்படுத்தினான்
இருந்த போதும்
மொட்டவிழ்ந்த பூவின் வாசம்
எங்கிருந்தோ வந்து கொண்டிருக்கிறது.
art : Kartick Dutta
கடந்த 2007ஆம் ஆண்டு முதல் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் தமிழ்த் துறையில் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார். வம்சி வெளியீடுகளாக ‘ஆன்மாவின் பெருந்துயர்’, ‘அன்பின் முகத்தில் பச்சைத் தாவரம் வளர்கிறது’ ஆகிய கவிதை நூல்களும் வெளிவந்துள்ளன. இவரது கவிதைகள் காலச்சுவடு, உயிர்மை, நீலம் இதழ்களிலும் வாசக சாலை, நடுகல், சொல்வனம் ஆகிய இணைய இதழ்களிலும் வெளியாகியுள்ளன.








Leave a Reply