நாடகம் : வாருங்கள் மயிரைச் சாப்பிடுவோம்
மூலப்பிரதி : கார்ல் லாஸ்லோ, தொகுப்பு : Postwar German Theatre
(Anthologies of German Theatre Since 1945)
மொழிபெயர்ப்பு : ஜம்புநாதன்
நாடகமாக்கம் : பத்மநாபன் சாரதி.
வரலாறு அரசர்களையும் வீரர்களையும் நினைவு கொண்டுள்ளது. ஏனெனில் அவர்கள் அழிவைச் செய்தவர்கள். கலை மனிதர்களை நினைவு கொண்டுள்ளது. ஏனெனில் அது படைக்கிறது.
~ வில்லியம் மோரிஸ்
“டாடாயிசம்” என்பது போருக்குப் பின்னான கலை இயக்கம். பேரரசுக்கும், bourgeoisie கலாச்சாரத்தின் மேட்டிமைத்தனத்திற்கும் எதிராகக் கிளர்ந்து எழுந்த கலை இயக்கமே டாடாயிசம். bourgeoisie manners, பழக்க வழக்கங்கள், உடை அலங்காரம், உணவுப் பழக்கம், உயர் ரகப் பொருட்கள் நிறைந்த வாழ்க்கைத் தரம், மேட்டிமைக் கலை இலக்கியப் படைப்பாக்கம் என எல்லாவற்றுக்கும் எதிரான இயக்கமே டாடாயிசம். முதலாளித்துவ மதிப்பீடுகளுக்கு முற்றிலும் எதிரான anti-art இயக்கமாக இது உருவெடுத்தது. இரண்டாம் உலகப்போரின் சமயத்தில் எழுதப்பட்ட முதலாளித்துவ வர்க்கத்தின் மதிப்பீடுகளை முன்னிறுத்திய நூல்களை இலக்கியங்களைப் புறந்தள்ளி, அம்மரபுக்கு எதிராக நின்று முற்றிலும் அபத்தமான, தொடர்ச்சியற்ற, சீர்மைத்தன்மையற்ற, அர்த்தமுமற்ற இலக்கியங்களை, கலைகளைப் படைத்தது இவ்வியக்கம்.
1933 முதல் 1945 வரை கலை இலக்கியப் படைப்பாக்கம் என்பது முதலாளித்துவச் சமூகங்களின் விழுமியங்களுக்கு உட்பட்டே இருந்தது. நாஜிக்களின் ஜெர்மனியில் படைப்பாக்கம் என்பது முற்றிலும் வேறான, இரு வேறு தொடர்பற்ற நிலைகளாகவே இருந்தன. படைப்பாக்கத்திற்கும் நிஜத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் உண்மைக்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை. நாஜிப் போர் நடந்து கொண்டிருந்தது, வதை முகாம்களில் மக்கள் செத்துக் கொண்டிருந்தனர். ஆனால் படைப்பாக்கமும் படைப்பாக்கங்களின் மொழியோ அவற்றை வெளிப்படுத்தவே இல்லை. இதற்கு எதிராகத்தான் டாடாயிசம் என்னும் கலை இயக்கம் தோன்றியுள்ளது. இருவேறாகப் பிளவுபட்டுள்ள நிஜத்தையும் படைப்பாக்கங்களையும் கேலி செய்யும் வகையில் கசப்பான உண்மையை உரக்கச் சொல்லும் வகையில் டாடாயிசப் படைப்பாக்கங்கள் உள்ளன. மிக முக்கியமாக கார்ல் லாஸ்லோ என்கிற ஜெர்மானிய எழுத்தாளர் எழுதிய பிரதிகள். “LETS EAT HAIR!” மற்றும் “THE CHINESE ICEBOX” என்கிற இரு குறு நாடகங்கள். இதில் lets eat hair என்கிற நாடகம் முழுக்க முதலாளித்துவப் பேரரசுகளின் வாழ்க்கை முறையைக் கேலி கிண்டலுக்கு உள்ளாக்குவது மட்டுமல்லாமல், போர்ச்சூழலைக் கண்டுகொள்ளாதிருக்கும் படைப்பாக்கத்தின் தன்மையை விமர்சிக்கிறது. பகடியிலும், நகைச்சுவையிலும் நாடகமாகிறது பிரதி. இந்நாடகத்தின் தலைப்பே வெறுப்பை ஏற்படுத்தும் படியாக, தாளாத பசியை உணர்த்தும்படியாக வறட்சியான சூழலை முன்னிறுத்துகிறது. வியாபாரத்திற்கும், நுகர்வுக் கலாச்சாரத்திற்கும் ஆட்பட்டுக் கொண்டிருந்த ஜெர்மானியச் சமூகத்தின் மொழியை மீட்டுருவாக்கம் செய்யும் ஒரு முயற்சியாக இந்நாடகம் எழுதப்பட்டுள்ளது.
மனித உணர்வுகள் எவ்வாறெல்லாம் விழிப்புணர்வுகொள்ள வேண்டுமோ, மனிதனுக்கு எவ்வாறெல்லாம் உதவ வேண்டுமோ அவ்வாறின்றி முதலாளித்துவ மதிப்பீடுகளுக்கு ஒரு மொழி சுருங்கி முழுக்கக் கலப்படமாவதை இந்நாடகத்தின் மொழி சுட்டிக்காட்டுகிறது. அமைப்பியல் ரீதியாக மொழியின் இம்மாற்றத்தை அணுகி மொழியின் மீதான பெருமுதலாளித்துவ உற்பத்தியை மீள் கட்டமைப்பு செய்யப் பிரதி கோருகிறது. முதலாளித்துவப் பேரரசு வர்க்கத்தினைச் சார்ந்தவர்கள் பயன்படுத்துகிற உணவுப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள் போன்றவற்றைக் கேலி செய்து மொழியில் பரவிக்கிடக்கிற மேட்டிமைத்தனத்தை வெளிக்கொண்டு வந்து அதனை மீட்டுருவாக்கம் செய்யக் கோருகிற ஒரு படைப்பாக இது திகழ்கிறது. இம்மொழியைக் கையாளுவதன் மூலம் முதலாளித்துவமான மொழியைக் கட்டமைத்து அதனை உலகத்தின் மொழியாக உருவெடுக்கச் செய்து தன்னுடைய முதலாளித்துவ நலன்களுக்காகப் பரப்புரை செய்வதை இந்நாடகம் சுட்டிக்காட்டுகிறது.

போருக்கு எதிரான அமைதியைக் கேள்வி கேட்கிறது. இந்நாடகம் வெறும் இரு நபர்கள் பேசிக்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. சோபாவில் அமர்ந்து கொண்டு இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். பேசி முடித்த பின்னர் இருவரும் தூங்கச் சென்று விடுகின்றனர். இப்படியாகவே இந்நாடகம் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆனால் முதலாளித்துவ மொழியின் மீதான தாக்குதல் மற்றும் போருக்கு எதிரான கலையின் அமைதிக்கு எதிரான தாக்குதல் எனக் காத்திரமான நிலைப்பாட்டோடு இந்நாடகத்தின் மொழி அமைந்துள்ளது. நாங்கள் முள்ளங்கியைச் சாப்பிட மாட்டோம் எனச் சொல்கிற வரியில் முதலாளித்துவக் கலாச்சாரத்தை எதிர்த்துப் பேசுகிறது.
“மேஜை செய்பவர் மேஜைகளைச் செய்கிறார். காலணி செய்பவர் காலணிகளைச் செய்கிறார். பூட்டுகள் செய்பவர் பூட்டுகளைச் செய்கிறார்.”
“The price of the milk is going up and the singers sing the songs”- Let’s at hair , Carl Laslo
அமைதியை உடைத்துப் போட்டு மிகவும் காத்திரமான சத்தம் நிறைந்த கவிதைகளையும் கலைப்படைப்புகளையும் உருவாக்குவதில் டாடாயிசம் முனைப்புக் காட்டியது. டாடாயிசம் தனக்குத்தானே ஒரு எல்லையை வகுத்துள்ளது. அது தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் சாத்தியத்தையும் தனக்குள் கொண்டுள்ளது. எனவே, அதனை உள்வாங்கிக் கொண்டு கார்ல் லஸ்லோ “Panderma” என்கிற இயக்கத்தை முன்னெடுக்கிறார். டாடாயிசத்தின் கருப்பொருட்களைத் தனக்குள் கொண்டு ஆனால் முடிவற்ற, டாடாயிச நிலைப்பாடுகளைக் கொண்ட கலைப்படைப்புகளைப் படைப்பதே இதன் நோக்கம். இவைதான் கார்ல் லாஸ்லோவின் நாடகங்களின் பின்னணி, அடித்தளம், கலாச்சார மற்றும் அரசியல் சூழல். இப்படியாக எழுதப்பட்ட இந்நாடகத்தின் தமிழ் மொழியாக்கத்தில் உருவாக்கப்பட்ட நாடகமே “வாருங்கள் மயிரைச் சாப்பிடுவோம்.”
இந்நாடகத்தின் எழுத்து வடிவம் அடர்த்தியான மொழியைக் கொண்டுள்ளது. இம்மொழியே நாடகம் நிகழ்த்துகிற ‘போராட்டம்’. இவ்வடர்த்தியான பிரதியை நாடகமாக்கம் செய்கிற போது வெவ்வேறான பார்வைகளும், அணுகுமுறைகளும் கிடைக்கின்றன. நாடகத்தின் கருப்பொருளை மட்டும் எடுத்துக் கொண்டு, அதனை மேற்கொண்டு இயக்கி நாடகமாக்கலாம். பிரதியில் இருந்து தவறாமல் அப்படியே நாடகம் செய்யலாம். நாடகத்தின் இறுதியை மாற்றியமைத்து முற்றிலும் வேறொரு ஆற்றுகை ஆக்கலாம். அவற்றில் எதைத் தீர்மானித்தாலும் பிரதியின் தீவிரத்தன்மை வெளிப்படும். இயக்குநர் பத்மநாபன் போரின் குரூரத்தையும், சிதைவுகளையும் முன்வைக்க நாடகப் பிரதியை எடுத்துக்கொண்டார். அதற்கு ஏற்றாற்போலக் கதாபாத்திரங்களையும் உருவாக்கிக் கொண்டார். நாடகப் பிரதியின் பின்புலம் ஜெர்மானிய நிலப்பரப்பு. நிலம் கடந்து அனுபவங்களை இணைக்கிற புள்ளியாகப் போர் உள்ளது. அப்பொருண்மையில் ஒரு மனிதர் இன்னொரு மனிதருக்கு எதிராக நிகழ்த்தும் எல்லா வகையான குரூரங்களையும் முன்வைத்து நாடகம் கட்டமைக்கப்பட்டுள்ளது. சுதந்திர மனிதனுக்கு எதிரான ‘எல்லா வகையான ஒடுக்குமுறைகளையும்’ (all forms of oppression) நாடகப் பாத்திரமாக்கி, கதையின் அசைக்க முடியாத எதிர்க் கதாபாத்திரங்களாக உருவாக்கியுள்ளார் இயக்குநர். நாடகப் பிரதியின் வசனங்கள் அப்படியே நாடகத்தில் பயன்படுத்தப்பட்டிருந்தன. எனவே, உள்வாங்கிக் கொள்வதில் சிக்கல்கள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. இருப்பினும், குரூர அரங்கின் தாக்கம் நிறைந்த நிகழ்த்துதலில், பார்வையாளர்களின் உணர்வுநிலையை மொழி தாக்கியது. கவிதை நடையிலான மொழி மேலும் நிகழ்வைக் காவியத்தன்மை கொண்டதாக மாற்றியது.
பார்வையாளர்களின் உணர்வு நிலைகளை நேரடியாகத் தாக்கி ஒருவகையான அதிர்ச்சியில் வைத்திருப்பதில் நாடகம் வென்றுவிட்டது. எனினும் கார்ல் லாஸ்லோவின் மொழியை, மொழியின் மீதான முதலாளித்துவ ஆதிக்கத்தைக் கட்டுடைக்கும் மீட்டுருவாக்க மொழியை உள்வாங்கி இந்நாடகம் வெளிப்படவில்லை. மையமாகக் கொண்டல்லாமல், இயக்குநர் தன்னுடைய சொந்த வசனங்களையும் நாடகத்தோடு இணைத்துள்ளார். ஈழப் போர், போரில் பெண்களும் குழந்தைகளும் அனுபவிக்கும் சித்திரவதைகள், ஆணவக் கொலை செய்யப்பட்ட கவின், விவசாயக் கூலிகளின் போராட்டம் என நிறையப் படிமங்களை நாடகத்திற்குள் உள் நுழைத்திருக்கிறார். அவற்றில் கவின், இசைப்பிரியா போன்ற சில படிமங்கள் அடையாளங்களை வெளிப்படையாக முன்வைத்தன. ஆனால் சில அடையாளங்கள் பெயரற்று இருந்தன. இந்த இரட்டைத்தன்மை நாடகத்தைப் பாதித்துக்கொண்டிருந்தது.
நாடகத்தில் ‘மேசையைத் தின்பது’, ‘பொருட்களைத் தின்பது’ எனப் பசியின் தீவிரம் ஆழமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அது பார்வையாளர்களை இணைத்துக் கூட்டு நாடக அனுபவத்தை ஏற்படுத்தியது. அரசியலான மனிதர்களின் அடையாளங்கள் நாடகத்தில் முன்வைக்கப்பட்ட போது, அவை சந்தித்த அநீதிகளுக்காக அஞ்சலி செலுத்தி, நாடகத்தின் வழி ஆற்றாமையை இறக்கி வைக்க ஓர் வெளி கிடைத்தது. ஆனால், அடையாளமற்ற பொதுவான உடல்கள், உணர்வுகள் முன்வைக்கப்படும்போது நாடகம் ‘எல்லோருக்குமான’ தன்மையைப் பெறுகிறது. இரண்டுக்கும் இடையில் வெளிப்பட்டு மறையும்போது புரிதலில் சிக்கல் எழுகிறது. இவ்வகையான வெவ்வேறான படிமங்கள் நாடகத்தில் ஊடாடிக் கொண்டிருந்தமையால் கார்ல் லாஸ்லோவின் நாடகத்தின் முழுமைத்தன்மையை நாடகம் கடத்தவில்லை. ஆனால் நாடகம் மனிதர்களுக்கு எதிரான எல்லாவகையான வன்முறைகளையும் முன்னிறுத்தி, முதலாளித்துவ அதிகாரத்தின் பிடியிலிருந்து எல்லாவகையான அடக்கு முறையில் இருந்தும் வெளிவருவதற்கான புரட்சியை முன்னிறுத்தியது. அதிகாரப் பரவலின் சுழற்சி குறித்தான விரிவான வரைவை வெளிக்காட்டியது.
மனிதரின் இயல்பை மறக்கச் செய்து, மனதளவில், உடலளவில் இயங்கியல் வரையில் முதலாளித்துவம் தனக்கான மனிதர்களை, மனித உடல்களை, உணர்வுகளை, தன்மைகளை மாற்றியமைத்துக் கொள்கிறது என்பதுதான் மையக்கரு. மனிதர்களின் ஓயாத போராட்டமே இதன் முரண் (conflict). இந்நாடகத்தின் இசை மிக முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியது. நாடகத்தின் நடிகர்கள் மேடையில் நொந்து கொண்டும் செத்துக் கொண்டும் இருந்தார்கள். ஆனால் நாடகத்தின் இசையோ அதற்கு எதிர்முனையில் நின்று கொண்டு பார்வையாளர்களின் எண்ண ஓட்டங்களைப் பிரதிபலிக்கும் வகையில் சலனமற்ற, ஆதரவான உணர்வைக் கோரும் வகையில் இருந்தது. மேடையில் நடிகர்கள் ஓடுகிறார்கள், கத்துகிறார்கள், அலறுகிறார்கள். ஆனால் இசை, மெல்லிய கிட்டார் நரம்புகளோடு சலனமற்று இருந்தது. இசையும் நாடகமும் வெவ்வேறு துருவங்களில் நின்று கொண்டு பார்வையாளர்களை நாடகத்திற்குள் இணைத்தவிதம் அற்புதமானது. நாடகத்தைப் புரிந்து கொள்வதற்கான பாலமாக இசை செயல்பட்டுக் கொண்டிருந்தது. இசையும் ஒரு நடிகர் போலவே செயலாற்றிக் கொண்டிருந்தது.

இதுபோன்ற காத்திரமான நாடகங்கள் கலைச் சூழலில் மிகவும் அவசியமானவை. இவையே நுகர்வுக் கலாச்சாரத்திற்கும் முதலாளித்துவத்திற்கும், முதலாளித்துவக் கலாச்சாரத் திணிப்பிற்கும் எதிர்முனையில் நின்று மக்களின் அடையாளத்தை மீட்டெடுப்பதற்கான வெளியாக இயங்குகின்றன. மேலும், மனித உடல்களின் மீதான ஆதிக்கத் திணிப்பை, சூழலை உணர்ந்து கொள்ளவும், அவற்றுக்கு வெளியில் நின்று உலகின் போக்கு குறித்துச் சிந்தித்து, ஆதிக்க நீக்கம் பற்றி யோசிக்க இடமளிப்பது நல்ல கலையின் நோக்கம் என Frankfurt சிந்தனைப்பள்ளியின் அறிஞர்கள் கூறுகிறார்கள். பாப்புலர் கலாச்சாரத்திற்கு ஆட்படாமல் அசலான மனிதர்களையும், கலைப் படைப்பையும் வெளிக்கொண்டுவரும் படைப்பாக்கங்கள் மிகவும் முக்கியமானவை. அவ்வகையில் இந்நாடகம் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த முன்னெடுப்பு.
மதுமிதா கோவையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். புகிரி அரங்காட்டத்திலும் நிகர் கலைக்கூடத்திலும் நிகழ்த்துக் கலைஞராக உள்ளார். நாடகம், கலை, இலக்கியம் சார்ந்து கட்டுரைகள் எழுதி வருகிறார்.








Leave a Reply