தோட்ட மலர்களில் மிகப் பிரபலமானதும், மிக அழகியதுமான, சூரியகாந்திக் குடும்பமான அஸ்ட்ரேசியைச் சேர்ந்த தாலியாக்கள் மிகப் பழமையான கலாச்சார வேர்களைக் கொண்டவை.
தாலியாக்கள் 14-லிலிருந்து 16-ம் நூற்றாண்டு வரை மீசோ அமெரிக்கப் பகுதியில் பெரும்பான்மையாக இருந்த பழங்குடி இனக்குழுக்களின் தொகுப்பான அஸ்டெக்குகளின் தாவரமாக அஸ்டெக் மலைப்பகுதிகளில் மட்டுமே இருந்தன.
ஸ்பெயின் படையெடுப்பின் பின்னரே தாலியாக்கள் ஐரோப்பாவிற்கு அறிமுகமாயின. பூர்வீக நிலமாகிய மெக்சிகோவில் தாலியா மரமும், செடிவகை தாலியாக்களும் செழித்து வளர்ந்தன, சாகுபடியும் செய்யப்பட்டன.
20 அடி உயரத்தில் வளர்ந்திருக்கும் அழகிய பெருமலர்களைக் கொண்டிருக்கும் தாலியா மரத்தை அஸ்டெக்குகள் acocoxochitl – நீர்க்குழாய் மரம் என்றழைத்தார்கள்.
மூங்கிலைப் போல் உள்ளே வெற்றிடம் கொண்டிருந்த அந்த மரத்தின் நீண்ட தண்டை நீர் கடத்தும் குழாய்களாகவும், பயணங்களில் நீரை எடுத்துச் செல்லவும் அவர்கள் பயன்படுத்தியதால் அந்தப் பெயர் வந்திருந்தது.
பிற்பாடு தாலியா மரம் Dahlia Imperialis என்று அறிவியல் பெயரிடப்பட்டது. ஆனால் மலர்களின் அழகுக்காக அஸ்டெக்குகள் தாலியாவைச் சாகுபடி செய்யவில்லை. தாலியாவின் உருளைக்கிழங்கு போன்ற சுவையான தரையடித் தண்டுகளுக்காகவும், அந்த மரத்தின் மருத்துவப் பயன்களுக்காகவுமே அவர்கள் அதைச் சாகுபடி செய்தார்கள்.
1525-ல் மெக்ஸிகோவிற்கு வந்த ஸ்பெயின் நாட்டினர் இந்த அழகிய மலரைப் பார்த்தார்கள். தாலியா மலர்களைக் குறித்து ஆவணப்படுத்தினார்கள்.
1570-களில் மெக்ஸிகோவிற்கு ஸ்பெயினின் இரண்டாம் பிலிப் மன்னரால் அனுப்பப்பட்ட அவரது தனிப்பட்ட மருத்துவர் ஃப்ரான்சிஸ்கோதான் முதன் முதலாகத் தாலியாக்களை எழுத்தில் விவரித்தவர். மன்னரால் அந்தப் பிரதேசத்தின் இயற்கைப் பொருட்களைக் குறித்து விரிவாக அறிந்துகொண்டு வரும்படி பிரான்சிஸ்கோ ஆணையிடப் பட்டிருந்தார். அச்சமயத்தில் தாலியாவின் வகைகளில் சிலவற்றின் கிழங்குகளைப் பழங்குடியினர் உணவாகப் பயன்படுத்துவதையும் ஃப்ரான்சிஸ்கோ ஆவணப்படுத்தினார்.
7 வருடங்கள் மெக்சிகோவின் தாவரங்களை அறிந்து ஆராய்ந்து முடிவுகளை நான்கு தொகுதிகளாகப் பிரசுரித்த ஃப்ரான்சிஸ் மிக அழகிய சித்திரங்களையும் தன் கைப்பட வரைந்திருந்தார்.
Nova Plantarum, Animalium et Mineralium Mexicanorum Historia என்னும் அந்நூல் 1578-ல் வெளியானது. அந்நூலில் தாலியாவின் Acocotli மற்றும் Cocoxochitl ஆகிய இரு சிற்றினங்களை அஸ்டெக்குகளின் மொழியிலேயே பிரான்சிஸ்கோ விவரித்திருந்தார். (பிற்பாடுதான் அவை Dahlia pinnata & Dahlia Imperialis என அடையாளம் காணப்பட்டன) 1615-ல் அந்த நூல் லத்தீன மொழியாக்கம் செய்யபட்டு இரு தொகுதிகளாக வெளியானது.
1787-ல் இரத்தச்சிவப்புச் சாயம் அளிக்கும் cochineal பூச்சிகளைத் திருடிவருவதற்காக மெக்சிகோவிற்கு அனுப்பப்பட்ட ஃப்ரெஞ்ச் தாவரவியலாளர் நிக்கோலஸ் (Nicolas-Joseph Thiéry de Menonville) இந்தப் பிரகாசமான மலர்களைக் குறித்தும் ஆவணப்படுத்தினார். நிகோலஸ் அவருக்குச் சொல்லி அனுப்பியபடி cochineal பூச்சிகளைத் திருடவில்லை மாறாக அவற்றை மெக்ஸிகோ பழங்குடியினரிடமிருந்து விலைக்கு வாங்கி அவை வளரும் சப்பாத்திக்கள்ளி வகைகளைத் தாவரவியல் பூங்காவில் வளர்த்து அந்தப் பூச்சிகளைப் பெருகச் செய்து அதற்கான பாராட்டையும் பெற்றார். இன்றும் அந்தப் பூச்சிகள் அந்தச் சப்பாதிக்கள்ளிகளில்தான் வாழ்கின்றன.
இந்தப் பூச்சிகளால்தான் அடர்சிவப்பு நிறத்துக்கே “coccineus” எனப் பெயர் பெற்றது. தாவரங்களின அறிவியல் பெயர்களில் காக்சினியா என்று இருப்பவைகளின் மலர்கள் எல்லாம் குருதிச்சிவப்பில் இருப்பதைப் பார்க்கலாம். (ரத்தச்சிவப்பு தெட்சி மலரின் அறிவியல் பெயர் இக்ஸோரா காக்சீனியா)
16-ம் நூற்றாண்டில் ஸ்பெயின் நாட்டினர் தாலியாவை மெக்சிகோவில் ஆவணப்படுத்தினார்கள் என்றாலும் அதிகாரபூர்வமாக மெக்சிகோ தேசியப் பூங்காவின் இயக்குநரான வின்செண்ட் (Vicente Cervantes) மெக்சிகோவிலிருந்து இரண்டு செடிவகை தாலியாவின் கிழங்குகளையும் விதைகளையும் ஸ்பெயினின் மேட்ரிட் பூங்காவின் இயக்குநரான ஆண்டோனிக்கு (Abbe Antonio José Cavanilles) 1789-ல் தான் அனுப்பினார்.
அவற்றின் செடிகளை வளர்த்த ஆண்டோனி அந்த அழகிய மலர்களைப் பார்த்த பின்னர் இரண்டு வருடங்களுக்கு முன்பு, 1789-ல் இறந்து போன தனது நண்பரும் லின்னேயஸின் மாணவரும் சக தாவரவியலாளருமான, ஆண்டெர்ஸ் தால்-லின் (Anders Dahl) (நினைவாக அதற்குத் தாலியா Dhalia என 1791-ல் பெயரிட்டார்.
(தாலியா என்னும் இதன் பேரினப் பெயரை தாவர வகைப்பாட்டியலை நிறுவியவரான லின்னேயஸ் அவரின் மாணவரான ஆண்டெர்ஸ் என்பவரைச் சிறப்பிக்கும் பொருட்டு வைத்தார் எனப் பரவலாக நம்பப்பட்டது. ஆனால் தாலியா ஐரோப்பாவுக்கு அறிமுகமான 1789-க்கு 11 வருடங்கள் முன்பே லின்னேயஸ் இறந்துவிட்டார்).
பின்னர் பல வருடங்கள் தாலியாவின் நறுக்கப்பட்ட தண்டுகளும் விதைகளும் தொடர்ந்து ஐரோப்பாவிற்கு மெக்ஸிகோவிலிருந்து அனுப்பப்பட்டன. படிப்படியாக உலகநாடுகள் அனைத்திற்கும் தாலியா அறிமுகமானது. ஆயிரக்கணக்கான கலப்பின வகைகளும் உருவாகின.
1805-ல் ஜெர்மானியத் தாவரவியலாளர் கார்ல் (Carl Ludwig Willdenow, Asserting) தாலியாவை ஜார்ஜினா (Georgina) என்று பெயர் மாற்றம் செய்தார். 1810-ல் எழுத்துபூர்வமாக இம்மலர் மீண்டும் தாலியா எனக்குறிப்பிட்டது.
இப்போது நாம் காணும் பல்லாயிரக்கணக்கான நிறங்களிலும் அளவுகளிலும் வடிவங்களிலும் இருக்கும் மலர்களை அளிக்கும் தாலியாச் செடிகள் 1789-ல் ஸ்பெயினுக்கு அனுப்பப்பட்ட அந்த இரு தாலியாவின் விதைகளிலிருந்து தொடர்ச்சியாகப் பலமுறை கலப்பினம் செய்யப்பட்டு உருவாக்கப்பட்டவைதான்.
மெக்சிகோவின் கலாச்சார அடையாளமாக இருந்துவரும் தாலியா அங்கு தேசியமலராக 1963-லிருந்து இருக்கிறது. சியாட்டில் மற்றும் சான்ஃப்ரான்சிஸ்கோவின் அதிகாரபூர்வ மலரும் தாலியாதான்.
தாலியா பேரினத்தில் மெக்சிகோவைச் சேர்ந்த அதன் காட்டுமூதாதைகளான 42 சிற்றினங்களிலிருந்து இதுவரை சுமார் 57,000 தாலியா வகைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. மேலும் ஆயிரமாயிரம் புதிய இனங்களும் கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
கடல் மட்டத்துக்கு மேல் 1,500 – 3,700 மீ உயரத்தில் செழித்து வளரும் தாலியாக்கள் பனிப்பொழிவற்ற உலகின் எல்லாப் பகுதிகளிலும் வளருகின்றன.
2 அடி உயரம் வரை வளரும் தாலியாக்கள் பல வருடங்கள் மலரளிக்கும் பெரினியல் வகையைச் சேர்ந்தவை. அவற்றின் மலர் எனச் சொல்லப்படுவது உண்மையில் மலர்த்தலை என்னும் மஞ்சரிதான். மலர்த்தலைகள் பிரகாசமான வண்ணங்களில், 5 செ.மீ லிருந்து 30 செ.மீ வரை குறுக்களவு கொண்டிருக்கும். பெரும்பாலும் தாலியாக்களில் மணம் இருக்காது. மகரந்தச்சேர்க்கைக்குப் பூச்சிகளைக் கவர பிரகாசமான அதன் வண்ணங்களே போதுமென்பதால் நறுமணம் இருப்பதில்லை.
இங்கிலாந்தின் புகழ்பெற்ற ராயல் ஹார்டிகல்சர் அமைப்பு 1969-ல் சர்வதேச தாலியா பெயர்களின் பதிவேட்டை உருவாக்கியது இந்தப் பதிவேடு ஆண்டுதோறும் புதுப்பிக்கப்படுகிறது. (The International Register of Dahlia Names) தாலியாக்களின் உருவாக்கத்திலும் அவற்றின் உலகளாவிய பரவலிலும் மிக முக்கியப் பங்காற்றியவராக நியூயார்க்கின் ஜார்ஜ் தோர் பர்ன் (George C.Thorburn) அறியப்படுகிறார்.
ஒற்றை அடுக்கு, பல அடுக்கு, டின்னர் ப்ளேட் என்று பெயரிடபட்ட மிகப்பெரிய மலர்கள், மிகக்குட்டியான மினி வகைகள், நாடா போன்ற இதழ்கொண்டவை, வெளியடுக்கு பெரிதாகவும் உள்ளடக்குச் சிறியதாகவும் இருப்பவை, பந்துபோன்ற பொம்பன் (Pompon) வகைகள் என இப்போது சுமார் 5700 வகை தாலியாக்கள் நீலத்தைத் தவிர மற்ற எல்லா நிறங்களிலும், நிறக்கலவைகளிலும் இருக்கின்றன.
எடின்பர்க் தோட்டக்கலைத்துறை 1846-ல் நீல நிறத் தாலியாக்களை உருவாக்குபவர்களுக்கு 2000 பவுண்டு பரிசு அறிவித்தது. அது இன்று வரை உருவாக்கப்படவில்லை. அதன்காரணம் தாவரவியலாளரல்லாதோருக்குப் புரிந்துகொள்ளக் கடினமென்றாலும் எளிமையாகச் சொல்ல முயற்சிக்கிறேன்.
நீல நிறம் உருவாக ஆந்தோசையானின் என்னும் நிறமி தேவை. தாலியாக்களில் ஆந்தோசையானின்கள் உள்ளன. எனினும் தூய நீல நிறம் உருவாக delphinidin என்னும் ஆந்தோசையானின் ஒரு வகை நிறமியில் 6 ஹைட்ராக்சைல் தொகுப்புகள் இருந்தாக வேண்டும். ஆனால் இன்று வரையிலும் தாலியாக்களில் 5 ஹைட்ராக்சைல் தொகுப்புக்களே உருவாகி இருக்கின்றன.
பொதுவாகவே இயற்கையில் நீல நிற மலர்கள் மிக அரியவை. நூற்றாண்டுகளாகத் தாவரப் பெருக்கவியலாளர்கள் முயற்சித்தும் இன்றுவரை ட்யூலிப்களில் நீல நிற மலர்களைக் கொண்டு வர முடியவில்லை. இப்போது இருப்பவை எல்லாம் ஏறக்குறைய நீலம்-almost blue என்னும் வகையில் வருபவைதான்.
இயற்கையாக நீல நிறத்தில் ஹைட்ராஞ்சியா, கார்ன் மலர்கள், இமாலயப் பாப்பிகள் மற்றும் டெல்பீனியம் போன்ற ஒருசில மலர்களே இருக்கின்றன.
ஆஸ்டெக் மலைப்பகுதியிலிருந்து உலகிற்கு மெக்ஸிகோவின் அழகிய பரிசாகப் பல நூற்றாண்டுகளைக் கடந்து வந்த தாலியா இன்றுவரையிலும் உலகின் மிக விரும்பப்படும் தோட்டமலராக இருக்கிறது.
வேட்டைக்காரன் புதூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். பொள்ளாச்சி கல்லூரியில் தாவரவியல் பேராசிரியராகப் பணி புரிந்துகொண்டிருக்கிறார். மேலும், அரிஸோனா பல்கலைக்கழக வலைத்தளத்தில் அறிவியல் தகவல்களைத் தமிழில் மொழிமாற்றம் செய்ய மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். தற்போது தமிழில் தாவரவியல் அகராதியை உருவாக்கும் முயற்சிலும், அந்தியூர் வனப்பகுதி பழங்குடியினரான சோளிகர்களின் தாவரவியல் தொடர்புகள் குறித்த ஆய்விலும் ஈடுபட்டு வருகிறார்.
தாவர உலகம், ஸாகே-போதையின் கதை, வானவில் மரம், விலக்கப்பட்ட கனி, தந்தைப்பெருமரம், நுண்ணுயிருலகு உட்பட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். மரங்களின் மறை வாழ்வு என்னும் நூலை மொழியாக்கம் செய்துள்ளார்.
தோழி விருது 2019, செங்கால் நாரை விருது 2022, இந்திய மருத்துவக் கழகம் வழங்கிய Women of Wonder விருது 2025, சிறந்த அறிவியல் நூலிற்கான முனைவர் உலோ.செந்தமிழ்க்கோதை நினைவு விருது 2025 ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.








Leave a Reply