எதேதோ குரல்கள் கேட்கின்றன. பிறகு காணாமல் போகின்றன. பனிநிரம்பிய சாலையைப் பார்க்கிறான். கடைகள் திறந்திருக்கின்றன. அவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் மோட்டார் ஸ்லெட்ஜ் வண்டிகள் பனியைச் சிதறடித்துக்கொண்டு ஓடுகின்றன. பனிப்பொழிவினூடே சென்ட்ரல் ரயில் நிலையத்தின் அழகைப் பார்க்க வேண்டுமே. வெள்ளை உறைபனியில் சிவப்புக் கட்டடத்தின் பேரழகுத் தோற்றத்தைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான். அப்போது அவன் முன்பு எங்கோ பார்த்திருந்த 4 கறுப்புக் குதிரைகள் பூட்டிய கறுப்பு நிற ஆடம்பரமான சறுக்கு வண்டி ரயில் நிலையத்திலிருந்து பனியை வாரியடித்துக்கொண்டு பாய்ந்து வருகிறது. அதை ஆச்சரியமாகப் பார்த்தபடி நிற்கிறான். கலையலங்கார வேலைப்பாட்டுடன் மின்னும் அழகிய கறுப்புநிறப் பனிச்சறுக்கு வண்டியின் சன்னல் வழியே மஞ்சள் நிற வெளிச்சம் கசிய வலுவான முரட்டுக் கறுப்புக் குதிரைகள் பனியைச் சிதறடித்துப் பாய்கின்றன.
“வெள்ளக்காரன் காலத்தில் கட்டுன இந்தோ சாரசெனிக் பாணிக் கட்டடங்களைப் பார்க்க லண்டன்லருந்து யாரோ வந்திருக்கிறாராம்.”
“யாரோ இல்ல. ராபர்ட் சிஷோம் பெல்லாஸ்தான் அவர். அப்ப கட்டுன பழைய சிவப்பு நிறக் கட்டடங்களைப் பார்க்க வந்திருக்கிறாராம்.”
“ராபர்ட் சிஷோமே வந்திருக்கிறாரா?”
“ஆமாம், அவரேதான்.”
பதிலளிப்பதும் கேள்வி கேட்பதுமான காலத்தின் குரல்கள் கேட்கின்றன. பொது மருத்துவமனை நோக்கி ஆம்புலன்ஸ் ஸ்லெட்ஜ் ஒன்று கத்திக்கொண்டு போய் மறைகிறது. அதைத் தவிர சாலை பனியால் மூடப்பட்டு வெறிச்சோடிக் கிடக்கிறது. வானத்தைப் பார்க்கிறான். எடையற்ற பனி மேலிருந்து கீழிறங்குகிறது, பனிப்புயல் வீசுவதற்கான அறிகுறிகளுடன் வானிலிருந்து மின்னல் கிளைக்கக் கர்ஜனை கேட்கிறது. தூரத்தில் மின்னல் கீற்றுகள் தோன்றி மறைகின்றன. இதெல்லாம் புயல் வீசுவதற்கான அறிகுறிகள், எங்காவது பாதுகாப்பான இடத்துக்குப் போக வேண்டும், அரசு உத்தரவை மதிக்காமல் போனால் தண்டனை கிடைக்கும். இயற்கையின் அறிகுறிகளை மதிக்காமல் போனால் என்ன கிடைக்கும்… அவன் தனக்குள் கேட்டுக்கொள்ள வெப்பயுகம் பனியுகமாக, பனியுகம் வெப்பயுகமாக, பசுஞ்சோலைகள் பாலைவனமாக என்று பனியில் உறைந்த பக்கிங்காம் கால்வாய் மீது ஒருவர் உரக்கக் கத்திக்கொண்டு போவது அவனுக்குக் கேட்கிறது.
உறைபனி கன்னத்தில் அறைகிறது. ஈவெரா பெரியார் சாலையில் நின்று சாலையைக் கிழக்கும் மேற்குமாகப் பார்க்கிறான். அச்சத்தின் காரணமாகப் பனியால் மூடப்பட்ட இந்த அழகிய சாலையைப் பார்க்கும் வாய்ப்பை மக்கள் இழந்துவிட்டார்கள். குளிரில் நான் விறைத்துப் போகாமலிருக்க வயிற்றுக்கு எதாவது போட வேண்டும் என்ற தீவிர உந்துதலில் இருந்தபோது, தற்செயலாக அந்த யோசனை வந்தது. பனியோ, புயலோ, இடியோ, மின்னலோ, ஸ்ட்ராகோட்டா ரெஸ்டாரண்ட் உங்களுக்காக இருபத்திநாலு மணி நேரமும்… என்கிற விளம்பரம் நினைவுக்கு வருகிறது. அரசின் எந்த உத்தரவுகளும் அந்தப் பன்னாட்டு உணவகத்தைக் கட்டுப்படுத்தாது. அதனால் அது திறந்திருக்கும் என்று எண்ணமிட்டபடி பசியுடன் பனியில் நடக்கிறான். மருத்துவமனை எதிரில் உயரக் கம்பத்தில் கழுத்து வரையிலான பனியில் உறைந்த குதிரை கோட்டோவியம் பனிபொழிவுக்கிடையிலும் ஆரஞ்சு வண்ணத்தில் ஒளிர்வது
தெரிகிறது.
குதிரை இறைச்சியாலான உணவகம், சமீபமாக வந்த லேசான நிலநடுக்கத்தின்போதுகூட அவர்கள் உணவகத்தை மூடவில்லை. இந்திய மாட்டிறைச்சிக்கு அகில உலகத்திலும் சிறப்பான வரவேற்புடன் விலையும் அதிகம். மாட்டிறைச்சியின் விலை தங்கத்தின் விலை போலாகிவிட்டது. வெளிநாடுகளில் தங்க நகை விற்றுக்கொண்டிருந்த பல இந்திய வியாபாரிகள் இப்போது அங்கே மாட்டிறைச்சி விற்கிறார்கள். கருவறையில் சூடம் காட்டிக் கொண்டிருந்தவர்களில் சிலர் அவர்களுக்குச் சுவையான மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறார்கள். இப்போது உள்ளூர் அசைவ உணவுக்குக் குதிரை இறைச்சி மேற்காசியாவிலிருந்து இறக்குமதியாகிறது. பண்டைய மித வெப்பகாலத்தில் குதிரை இறைச்சி உண்ணும் வழக்கம் இங்கில்லை. பனியுகம் தொடங்கிய பிறகே அந்தப் பழக்கம் வந்திருக்கிறது. இறைச்சி உண்ணும் பழக்கம் காலத்துக்குக் காலம் மாறிக்கொண்டிருக்கிறது. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் இந்தியாவில் பசுங்கறியைத் தின்னாதவருக்கு மோட்சமில்லை என்கிற பழைய கருத்து மீண்டும் உயிர் பெற்றிருக்கிறது. அதை விதவிதமாகச் சமைப்பது எப்படியென்று சமையல் குறிப்பு நூல்கள் எழுதும் அளவுக்கு அதன் பயன் இருந்தது.
புத்தனின் கொல்லாமை கருத்து எழுச்சியிலிருந்து தப்பிப் பிழைக்கச் சிலர் பசுங்கறியை வெளிப்படையாகத் தின்பதைத் தவிர்த்தனர். இந்திய மாட்டிறைச்சி அதிகமாக ஏற்றுமதியாகிவிடுவதாலோ என்னவோ ஐரோப்பிய மத்தியக் கிழக்காசியக் குதிரை இறைச்சிக்கு இங்கு கிராக்கி… இறைச்சிப் பாக்கட்டுகள் மீது கோடிகா மான்ஸ் என்று இந்தியில் எழுத வேண்டுமென உத்தரவுகள் வர அதை மக்கள் நிராகரித்துவிட்டனர். எப்போதும் கிர்கீஸ், கஜகஸ்தான் குதிரையின் இறைச்சியின் சுவையில் அவனுக்கு அதிக மயக்கமுண்டு… இறக்குமதிச் சரக்கு என்பதால் உள்ளூர் மாட்டிறைச்சியைவிட விலை அதிகம்தான். குதிரை இறைச்சியுடன் நல்ல தரமான, இறக்குமதியான, குளிருக்கு ஏற்ற கதகதப்பான குமிஸ்* இங்கே கிடைக்கும். உணவகத்தின் வாயிற்கதவு கறுப்புக் கண்ணாடியால் மூடியிருக்கிறது. திறந்துகொண்டு போகிறான். மிகப் பண்டைய அரசர்களின் உணவுக்கூடம் போன்ற தோற்றத்தில் அலங்காரமாக இருக்கிறது. ஆனால், ஆட்களற்றுக் காலியாக இருக்கிறது. குளிருக்கு இதமாகக் கதகதப்பான உணவுக்கூடத்தில் வசதியான ஓரிடத்தில் போய் உட்கார்ந்துகொண்டான்.
மிதமான இசை அறைக்குள் ததும்பிக்கொண்டிருந்தது. திடீரென ராணுவ வீரர்கள் அணிவகுத்து வருவதற்கான இசையுடன் பூட்சுகள் தரையில் மோதி உண்டாக்கும் ஒரே சீரான ஓசை கேட்க, திரும்பிப் பார்க்கிறான். ராணுவத் தளகர்த்தர் போன்ற அலங்காரத்துடன் ஒருவர் வந்து அவனை வணங்குகிறார். உணவுப் பட்டியலடங்கிய பெரிய பைபிளைப் போன்ற கனத்த புத்தகத்தை நீட்டுகிறார். அவரைப் பார்க்க அவனுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அவரது முகம் ஐம்பொன்னில் செய்தது போலப் பளபளவென மின்னுகிறது. அவரை எந்த ஊர்க்காரரென்று கண்டுபிடிப்பதே சிரமமாக இருக்கிறது. ஆனால், உள்ளூர் மனிதன் போலில்லை. வடக்கிலிருந்து வந்தவனா இல்லை மேற்கு நாடுகளிலிருந்து வந்தவனாவென உறுதிப்படுத்த முடியவில்லை.
குதிரை இறைச்சி நீங்கள் கேட்கும் வகையில் சமைத்துக் கொண்டுவர நேரமாகும். அதற்கு முன் ஒரு கோப்பை குமிஸ் இலவசம். கொண்டு வரட்டுமா என்று கேட்க அவனுக்கும் குளிருக்கு இதமாகக் குமிஸ் அருந்தும் ஆவல் அதிகமாகக் குமிஸ் கொண்டுவரச் சொல்லிவிட்டுக் கஜகஸ்தான் குதிரை இறைச்சி, காசி (உப்புக்கறி) ஒரு தட்டும், சுச்சுக் கொத்துக்கறி ஒரு தட்டும், பிலிப்பைன் கபாயோ (சோயா, மீன் சாஸில் ஊற வைத்து, பின் பொறித்தது) எடுத்து வரச்சொன்னான். அந்தத் தளகர்த்தர் போன்ற அலங்காரத்தில் இருந்தவர் மிகப் பணிவாக மன்னனை வணங்குவதற்கொப்பான பணிவுடன் வணங்கிச் செல்கிறார். அந்தக் கனத்த புத்தகத்தைப் புரட்டுகிறான். குதிரைகள் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவையல்ல என்று தொடங்குகிறது. அந்தப் புத்தகம் உணவுப் பட்டியலடங்கிய குதிரை இறைச்சி பற்றிய பல்லாயிரம் ஆண்டு வரலாறும், அதில் செய்யப்படும் உணவுகளின் பெயர்கள், அதோடு குதிரைகளை எப்படிக் கொல்ல வேண்டும் கொல்லப்பட்ட குதிரையின் இறைச்சியை எப்படி வெட்டி எடுக்க வேண்டும், அதை எப்படியெல்லாம் சமைப்பதென்கிற பல நூறு குறிப்புகள் உள்ள பெரிய தொகுப்பு அது.
ஆங்கிலம் பேசும் நாடுகளைத் தவிர மற்ற நாடுகளில் உள்ள பெயர் பெற்ற அத்தனை உணவுகளும் பட்டியலிடப்பட்டிருந்தன. ஆங்கிலம் பேசும் நாடுகளில் குதிரை இறைச்சிக் கடைகள் வெளிப்படையாக இல்லை. அவர்கள் அதைச் செல்லப் பிராணியாக வளர்க்கிறார்கள். ஆனால், விரும்பி உண்பவர்களைத் தேடிப்பிடித்துக் கொல்லும் பயங்கரவாதிகள் அங்கில்லை. அதோடு அவர்கள் குதிரையின் கழிவுகளைக் கைகளால் தொடுவதை நாகரீகமற்ற ஒன்றாகப் பார்க்கிறார்கள் என்று துவங்குகிறது.
குதிரைகளின் வரலாறு, அதன் இறைச்சிக்கான தேவை, எந்தெந்த நாட்டில் என்ன விதமாகச் சமைக்கிறார்கள் என்கிற விவரம், இந்த உணவகத்தில் கிடைக்கும் உணவுகளென விளக்கங்களுடன் 500 பக்கங்களுக்குப் படங்களுடன் அச்சிட்டிருந்தார்கள். ஆர்வமூட்டக்கூடிய சில பக்கங்களைப் படிக்கத் தொடங்க, வட அமெரிக்காதான் குதிரைகளின் பூர்வீகம். கி.மு 12,000 வாக்கில் அவை உலகின் பல பகுதிகளுக்கும் இடம் பெயர்ந்தன. வட அமெரிக்காவில் குதிரைகளே அற்றுப் போன நிலையில் காலச்சக்கரம் சுழன்று 16ஆம் நூற்றாண்டில் ஸ்பானியர்கள் மீண்டும் வட அமெரிக்காவுக்குக் குதிரைகளை அறிமுகம் செய்கிறார்கள். ஆர்வமூட்டும் வரலாற்றுக் கால உணவுப் பட்டியலை வாசித்துக்கொண்டிருக்கிறான்.
மீண்டும் அதே பழைய ராணுவ அணிவகுப்பு ஓசை. இப்போது குமிஸ் பானத்தைப் பருகும் ஆவலுடன் பார்க்க உடல் வலுமிக்க மூன்றரை அடி உயரமுள்ள ஜாக்கியைப் போன்று உடையணிந்த பெண் குமிஸ் அடைக்கப்பட்ட கண்ணாடிப் பீப்பாயைத் தூக்கி வருகிறாள். அவன் அந்தப் பீப்பாயையே உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறான். பீப்பாயில் குமிஸ் ததும்புகிறது. ராணுவ முறைப்படி பீரங்கிக்குள் குண்டை நுழைக்கும் பாணியில் அலங்காரமான முக்காலி ஒன்றில் பீப்பாயை அதற்குரிய முறையுடன் வைத்தவள் அவனைப் பணிந்து வணங்கி, கைப்பிடியற்ற கண்ணாடிக் கோப்பையைப் பீப்பாயின் குழாய் அமைப்புக்குக் கீழே வைக்க கோப்பையில் குமிஸ் நிரம்புகிறது. அந்தப் புத்தகத்தில் குமிஸ் மற்றும் அதன் தயாரிப்பு பற்றிய குறிப்பை படித்துக் கொண்டிருந்தான்.
(குமிஸ் என்பது குதிரைப் பாலை புளிக்க வைத்துத் தயாரிக்கும் பாரம்பரிய மது)








Leave a Reply