1.
கைவிரல் இரத்தத்தில் முளைத்தது கடிதம்
கழுத்தளவு இரத்தில் மூழ்கியது காதல்
2.
நான்கடி மரக்கிளையில்
ஆறடி மனிதன்
தூக்கிட்டுக் கொண்டான்
என்று எழுதும் அதிகாரிகள் கரத்தில்
பேனா இருந்தாலென்ன
கத்தி இருந்தாலென்ன
இரண்டுமே ஒன்றுதான்
3.
காட்டமான சாராயத்தை நீஞ்சிய பின்னும்
எப்படி கரி கேட்காமல் இருக்கும் ருசி கண்ட நாக்கு
கொத்துக்காரர்களுடன் காட்டிற்குள் இறங்கின கால்கள்
எப்படியும் மொசையின் கதகதத்த இரத்தம்
ரெட்டைவால் சுலுக்கியில் இறங்கத்தான் வேண்டும்
சமவெளியில் மூட்டிய தீயில் முயல் ரத்தம் சுண்டத்தான் வேண்டும்
ரெட்டைக்கிளி தீப்பெட்டியை ஆயத்தமாக எடுத்துவை
எல்லோரும் பாதங்களைக் கழற்றித் தலையில் வைத்துக்கொள்ளுங்கள்
கண்களைக் கழற்றி எட்டுத்திக்கும் வீசுங்கள்
எப்படியும் கிடைக்கத்தான் வேண்டும்
இராவுக்குள் இரண்டாவது
மால் இருளில் மயங்கித் திரியும்
நேரம்தான் சரியானது
அதைக்கொள்வதற்கென்று
கூக்குரலிட்டுக் கிளம்பிய வேட்டைக்காரர்களுக்குப்
பிசாசு இறங்கும் நேரம் வந்தும் ஒன்றும் அகப்படவில்லை
ஒரு மைல் தொலைவில் கேட்கும்
கோட்டானின் அலறலில் அடிவயிற்றுக்குள் முட்டியது சாராயம்
ஆளுக்கொரு மூத்திர வட்டமிட்டு அமர்ந்த பின்
எள்ளு போட்டு எள்ளு எடுக்கும் வெளிச்சத்தில்
எதன் குண்டியைப் பார்க்க வந்தீர்களென
ஏளனமாய்ச் சிரித்து நகர்கிறது பௌர்ணமி வெளிச்சம்
4.
செவ்வாய்க்கிழமை வந்துவிட்டால் போதும்
அப்பன் சந்தையை ஏறக்கட்ட
எப்படியும் ராவாகிவிடுமென்று
சினிமாவுக்கு அழைப்பாள்
முன்னிரவைக் கடந்து விடுவேன் எப்படியோ
சுப்பிரமணியன் பஞ்சர் கடையில் காலையிலே எடுத்து விடுவேன்
இரண்டு ரூபாய் வாடகை சைக்கிள்
மேட்னிப் படமும்
அம்பது காசு அச்சு முறுக்கும்
அம்பலவர்கட்டளை
சினிமா கொட்டகையும் வாடிக்கையாச்சி
ஒருநாள் “மைதிலி என் காதலி”
பார்த்துவிட்டுத் திரும்புகையில்
வழக்கமாகச் சட்டையை இறுக்கிப் பிடிப்பவள்
என்னை இறுக்கிச் சாய்ந்துகொண்டாள்
அவள் கண்ணீரில் என் மேல் சட்டை நனைந்தது இன்றும் நினைவில் இருக்கிறது
இன்று அரும்பு மீசையுடன்
தோள் வளர்ந்த மகனுடன்
உடையார்பாளையத்துச் சந்தையில்
கோவைக்காய் கூறு விற்றுக் கொண்டிருப்பவளைக்
கண்மூடி கடந்து செல்கின்றன கால்கள்
நகக்கண்களில் வழிந்து நனைகிறது நாசமாய்ப்போன நிலம்
5.
மஞ்சள் காயாத
மாலையிலே வீட்டுக்கதவடைக்கும் விடலைப் பெண்ணாய்
அந்தியிலேயே இருட்டி அவுத்துப் போட்டு ஆடுகிறது வானம்
மழையில் விறகுக்கடி நாயாய்
வீட்டின் மூலையில் சயனக்கோலம் பூண்டிருந்தேன்
கருவேல முட்களில் கனன்றுகொண்டிருக்கிறது அடுப்பு
என் இளஞ்சூட்டுக் காமம் போல் கொதித்து வெடிக்கிறது சோத்துச்சட்டி
கார்த்திகை மழையைக் கையோடு அள்ளி வீடு நுழைந்தார் அப்பா
அவர் சட்டைப்பையில் நீந்தியது இரண்டு நூறு ரூபாய்த் தாள்
அதை வாங்கிச் சோத்துச்சட்டியின்
கன்னத்தில் அறைந்தன அம்மாவின் கைகள்
காய்ந்துபோனது காந்தியின் முகம்
6.
ஏகாந்த நாளில்
கள்ளங்குறிச்சிக்குப் படையெடுக்கும் பேருந்துகள்
நெரிசலில் திணறும்
மொட்டைத் தலை வியர்வையில் கரையும் சந்தன வில்லை
நாள்தோறும் புழுக்களையும் புற்களையும்
தின்றுகொண்டிருந்த மயில்களும் மான்களும்
ஆரஞ்சு வாழைக்கு ஆர்ப்பரித்துக் கம்பிக்குள் நாக்கை நீட்டிக் காத்திருக்கும்
முறம் அரிவாள்மனை அம்மிக்கள் அத்தனையும்
புளியமரக்குடையின் கீழ் பேரம் பேசிக்கொண்டிருக்கும்
கோனைசும் கப்பைசும் மாறி மாறி காதல் பழக
இனிப்புக் கடைகளில் ஈக்கள் மொய்க்கும்
பிளாஸ்டிக் சங்கு ஊதித் திரியும் இளவட்டங்களின்
தொண்டை நரம்புகளில் சுருங்கி விரியும் ஊதப்படாத பலூன்
கருவரைக்கும் தேங்காய் கடைகளுக்கும் தொடர்ச்சியாகக் கைமாறும்
துளசிகளும் உப்புப்பொட்டலங்களும்
ஏலத்தில் விழிபிதுங்கிக் கொண்டிருக்கும் தொழுவத்து மாடுகள்
சீமெண்ணய் விளக்கை வெறித்துக்கொண்டிருக்கும் ஜோசியக்கிளிகள்
அச்சிட்ட மரப்பச்சை வாசனையில்
கூடிமுயங்கும் உள்ளங்கை ரேகைகள்
கயர்லாபாத் காவலர்கள் கைகள் வடத்தையும்
வாயில் வாக்கி டாக்கியையும் கவ்வியபடியிருக்கும்
கார்கள் பைக்குகள் விமானங்கள் குதிரைகள் என
ஒரேயிடத்தில் ஓட்டிக்கொண்டிருப்பார்கள் மழலைகள்
சிலர் அதை ஓட்டி மழலைகள் ஆவார்கள்
வேட்டுகளில் அதிர்ந்து
இராட்டினங்களில் சுழன்றுகொண்டிருக்கும் இரவு
தேர் முட்டியை அடையாளமாகக் கொண்டு
பிரிந்து சேறும் கைகள்
வீட்டின் சாமி மாடத்தில்
வேண்டுதலுக்காய் முனிந்து
அம்மா கொடுத்த சில்லரைக்காசுகள்
அரிசியில் பெயரெழுதி அவளுக்காகக் காத்திருக்கும்
என் கால்சட்டையில்
Art : Sathish K Sathyan
அரியலூர் மாவட்டம் விளாங்குடி கிராமத்தில் வசித்து வரும் அருண்பாண்டியன்.த சிவில் இஞ்சினியரிங் முடித்துள்ளார். கல்லூரிகளில் இருந்து குறும்படங்கள் எடுத்துக்கொண்டிருந்த இவர், இலக்கியத்தின் மீதுள்ள ஆர்வத்தால் கவிதை எழுதத் தொடங்கியுள்ளார். நீலம், சொல்வனம் இணைய இதழ்களில் இவருடைய கவிதைகள் வெளிவந்துள்ளன. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் அசோகமித்ரன் விருது பெற்றுள்ளார். நீலம் பண்பாட்டு மையம் அமைப்பில் இணைந்து சமூகச் செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார். மக்களின் சிறு அசைவும் இங்கு அரசியல் என்னும் இவர், தற்போது கூகை திரைப்பட இயக்க மாணவராக இயங்கி வருகிறார்.








Leave a Reply