ஒரு நண்பகல் வேளையில் பழைய புத்தகம் ஒன்றைப் புரட்டிக்கொண்டு அமர்ந்திருந்த நான் ஏதோ சத்தம் கேட்டுத் திரும்பினேன். மிக நிதானமாக வீட்டிற்குள் நுழைந்து முற்றத்தில் செருப்பைக் கழற்றினாள் சுமி.
கண்களை விரித்து நான் என் வியப்பைக் காட்டிச் சிரித்தேன். வீட்டின் உள்ளே ஓடி வந்தவள் என்னை அணைத்துக்கொண்டாள். அவள் கண்கள் கலங்கியிருந்தன. “எவ்ளோ வருசம் ஆச்சு உன்னப் பாத்து” என்றவள் கையில் இருந்த கைக்குட்டையால் கண்களைத் துடைத்துக்கொண்டாள்.
“ஆமாம். நீ எப்படி இருக்க” என்று அவள் கைகளைப் பற்றிக்கொண்டே கேட்டேன்.
“எனக்கென்ன நல்லாதான் இருக்கேன்” என்றவளின் கண்கள் இன்னும் கலங்கிக்கொண்டுதான் இருந்தன.
சுமி என் சிறுவயதுத் தோழி. சிறு வயது என்றால் எனக்குப் பன்னிரண்டு வயது இருக்கும். அவளுக்கு அப்போது பதினாறு. என்னைவிட நான்கு வயது மூத்தவள் அவள்.
முற்றத்தில் இருந்த கட்டிலில் அவளை அமரச் சொன்னேன். அவள் தரையில் அமர்ந்துகொண்டாள். குடிக்க நீர் கொண்டு வந்து நீட்டினேன். வாங்கிக் குடித்துவிட்டு “இன்னும் எத்தனை வருசம் படிக்கணும்” என்றாள்.
சுமி முன்பைக் காட்டிலும் மெலிந்திருந்தாள். அவள் முகத்திலும் உடலசைவுகளிலும் ஒருவித முதிர்ச்சியை உணர முடிந்தது.
நான் “இன்னும் ஒரு ஆண்டு” என்று பதிலுரைத்தப்படி அவள் அருகில் அமர்ந்தேன். மீண்டும் “ஆமாம். நீ எப்படி இருக்க. எத்தனை பிள்ளைங்க” என்றேன். இப்போதும் அவள் கைகளைப் பற்றிக்கொண்டே.
“மூனு பிள்ளைங்க”. இரண்டு பெண் பிள்ளைகள். ஒரு பையன் என்றாள். மகன் இப்போதுதான் பள்ளிக்குச் செல்லத் தொடங்கியதாகக் கூறிச் சிரித்தாள்.
கணவரைக் குறித்து விசாரித்தேன்.
நலம் என்று ஒரே வார்த்தையில் முடித்தாள்.
திடீரெனத் தெருவில் ஐஸ் வண்டிச் சத்தம் கேட்டதும் சிறுபிள்ளைபோல் எழுந்து ஓடியவள் ஒரு மஞ்சள் நிற சேமியா ஐஸும் பிங்க் நிறத்தில் ஒன்றும் வாங்கிக்கொண்டு மீண்டும் வீட்டிற்குள் நுழைந்தாள்.
நான் சிரித்துக்கொண்டே மஞ்சளை வாங்கினேன். ம். உனக்கு பிங்க் தானே பிடிக்கும் என்று இடது கையிலிருந்த மஞ்சள் நிற சேமியா ஐஸை அவள் பக்கமாக இழுத்துக்கொண்டு பிங்க் நிற சேமியா ஐஸை எனக்கு என்று நீட்டினாள்.
சிரித்துக்கொண்டே “இன்னும் இதெல்லாம் மறக்கலையா” என்றேன்.
“இப்போ வரைக்கும் உயிர்ப்போட இருக்குற ஒரே விசயம் நாம ஒன்னா இருந்ததுதான். எப்படி மறக்கும்” என்றாள்.
இதைச் சொல்லும்போது அவள் கண்களில் அத்தனை மினுமினுப்பு.
பத்து வருடங்களுக்கு முன்பு அண்டை வீட்டிற்குக் குடிவந்திருந்தாள் சுமி.
ஒல்லியான மாநிறப் பெண். வட்ட முகம். பெரிய உதடுகள். ஆனாலும் உறுத்தல் இல்லாத அழகு. முதல் நாள் பெயர்களைக் கூறிக்கொண்டதில் இருந்து எங்கள் நட்பு தொடங்கியிருந்தது.
சுமி பெரிதாகப் படிக்கவில்லை. அவள் வீட்டில் இரண்டு பெண் பிள்ளைகள். இளையவள் இவள். மூத்த சகோதரி திருமணமாகிச் சென்றதால் குடும்பக் கடனும் உடல்நலம் சரியில்லாத தாயைக் கவனித்துக் கொள்வதும் இவளது பொறுப்பாக மாறியது.
சுமியின் தாயும் கனிவான பெண். எல்லோரிடமும் மரியாதையாகப் பழகும் சுபாவம் கொண்டவள். சுமியிடம் இருக்கும் இத்தனை அன்பும் நற்பண்புகளும் நிச்சயமாக அந்த அன்னையிடம் இருந்துதான் வந்திருக்க வேண்டும் என்று அவ்வப்போது மனதில் தோன்றும்.
சுமி பேருந்து நிலையத்திற்கு அருகில் இருந்த ஒரு பேன்சி ஸ்டோரில் விற்பனைப் பெண்ணாக வேலை செய்தாள். ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் வேலை. காலை 9.30க்கு வீட்டில் இருந்து செல்லும் சுமி இரவு 8.30 க்குத் திரும்புவாள். மாதம் ஆயிரத்து ஐந்நூறு ரூபாய்ச் சம்பளம். வார செவ்வாய்க் கிழமைகளில் மட்டும் விடுமுறை.
இரவு சுமி வீடு வந்து சேர்ந்ததும் நானும் சுமியும் சிறிது நேரம் பேசிக்கொண்டு அமர்ந்திருப்போம் அல்லது வெறுமனே வானத்தைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருப்போம். அப்போதெல்லாம் கண்களுக்குப் புலப்படும் அத்தனை நட்சத்திரங்களும் எங்களுக்கானதாகத் தோன்றும். சில சமயங்களில் அந்த நட்சத்திரங்களுக்குப் புதிது புதிதாகப் பெயரிட்டு ரசித்திருப்போம்.
நாளுக்கு நாள் எங்கள் நெருக்கம் அதிகமானது. ஒன்று போலவே உடை உடுத்தித்கொண்டோம். பின்னலிட்டுப் பூச்சூட்டிக்கொண்டோம். எங்கு சென்றாலும் இரட்டைச் சகோதரிகள் போல ஒன்றாகத் தென்பட்டோம்.
சுமிக்குப் பிடித்தது மஞ்சள் நிறம். எனக்கு இளஞ்சிவப்பு. வாங்கும் எல்லாப் பொருட்களிலும் அவளுக்கு மஞ்சள் எனக்கு பிங்க் என்பது எங்களுக்குள் எழுதப்படாத விதியாக இருந்தது.
ஐஸ் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து கொண்டிருந்தது. பிங்க் நிற ஐஸைச் சாப்பிட்டதால் என் நாக்கு மற்றும் உதடுகள் பிங்க் சாயத்தை அப்பிக்கொண்டன. சுமிக்கு நாக்கு மஞ்சளாக மாறியது. உதடுகளில் பெரிய மாற்றம் தெரியவில்லை. உருகி ஒழுகும் ஐஸ் தண்ணீரை நாவால் பிடிக்க எத்தனித்து முடியாமல் போவதால் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக்கொண்டோம்.
“என் பெரிய பாப்பாக்கு சேமியா ஐஸ்னா ரொம்பப் பிடிக்கும். ஒரே சமயத்துல நாலு கூட தின்னுடும்” என்றாள் சுமி.
நான் தலையாட்டினேன்.
“சின்ன பாப்பா அப்படி இல்லை. எல்லாத்துலையும் சுத்தம் பாக்கும். இதெல்லாம் என்ன தண்ணில பண்றாங்களோனு முகம் சுழிக்கும்.”
“அவ சொல்றதும் சரிதான. எப்படிப் பண்றாங்கனே தெரியாதுல” என்று சாப்பிட்டு முடித்த ஐஸ் குச்சியை வாசலில் இருந்த சர்க்கரைப்பழ மரத்தினடியில் வீசினேன்.
“இப்படியெல்லாம் சுத்தம் பார்த்தா நாம வளந்தோம்” என்று அவளும் அவளது ஐஸ் குச்சியை அதே மரத்தடியில் வீசினாள். ஒரு மெல்லிய காற்று வீச மரத்தில் இருந்து சில சர்க்கரைப் பழங்கள் உதிர்ந்து விழுந்தன. விழுந்த பழங்களை எடுக்கத் தொடங்கினாள் சுமி.
நம்மைப் புரிந்துகொள்ளும் துணை ஒன்று அமைந்துவிட்டால் எல்லாமும் நலமாகத் தானே அமையும் என்பது போல் அப்போதைய சிலநாட்கள் நன்றாகவே சென்றன. திடீரென ஏதோ மாறியதாகத் தோன்றியது. சுமி வேலை முடிந்து வீட்டிற்கு வரத் தாமதமானது. அவள் வருவதற்குள் நான் உறங்கிப்போனேன். எங்களுக்குச் சொந்தமான நட்சத்திரங்கள் எங்களுக்காகக் காத்திருந்தே ஒவ்வொன்றாக உதிர்ந்து போனதாக எனக்குத் தோன்றியது. செவ்வாய்க் கிழமைகளிலும் வேலைக்குச் சென்றாள் சுமி.
ஏதோ ஒரு இடைவெளி எங்களுக்குள் விழுந்திருந்தது.
ஒரு நாள் இரவு கடைக்குச் செல்ல வேண்டும் என்று என்னை உடன் அழைத்துச் சென்றவள் கடைக்குச் செல்லாமல் கடையின் வெளிப்புறமாக வைக்கிப்பட்டிருந்த காயின் ஃபோன் பாக்ஸ் அருகில் சென்று ஒரு ரூபாய் காசை பாக்ஸ் உள்ளே நுழைத்துக் கையில் எழுதி வைத்திருந்த ஒரு எண்ணை அதில் அழுத்தி யாருக்கோ அழைத்தாள்.
பின் ஓசையே இல்லாமல் எதையோ முனகியபடி பேசினாள். எனக்கு எதுவுமே புரியவில்லை. ஆனால் அவள் பேசும்போது அவள் முகத்தில் ஏதோ ஒரு இனம்புரியாத பதற்றம் நிலவியது.
இரண்டொரு நாட்கள் சென்றிருக்கும்.
அதுவரைப் பரிச்சயம் இல்லாத ஒருவன் அடிக்கடி தெருவிற்குள் வந்து சென்றான். முக்கியமாகச் சுமியின் வீட்டின் முன்பாக. அவன் வருகையின் போதெல்லாம் ஒரு பூவைப் போல பூக்கத் தொடங்கினாள் சுமி. பிறகுதான் தெரிந்தது. சுமி காதலில் விழுந்திருந்தாள்.
என்னைப் போலவே சுமியின் அன்னையும் சுமியின் காதலை அப்போதுதான் கண்டறிந்திருக்கிறார் என்று தெரிந்தது. பிறகு சுமிக்கும் சுமியின் அன்னைக்கும் ஒரு பெரிய வாக்குவாதம் ஏற்பட்டு அது பெரும் சஞ்சலத்தில் முடிந்திருந்தது.
ஒரே வாரத்தில் சுமியின் திருமணப் பேச்சைத் தொடங்கினாள் சுமியின் அன்னை. சுமிக்கு அறிவுரை கூறவென அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்றாள் சுமியின் சகோதரி.
இத்தனை விரைவாக ஒரு இயல்பு வாழ்க்கை மாறுமா என்பதே எனக்குப் பெரும் வியப்பாகவும் பதற்றமாகவும் இருந்தது.
நான் மிகவும் சிறிய பெண். காதல் குறித்தோ திருமணம் குறித்தோ எனக்கு எந்தச் சரியான புரிதலுமே இல்லாத பருவம் அது. ஆனால் சுமியின் வருத்தத்தை என்னால் பொறுக்கமுடியாமல் தவித்தேன். சுமி எல்லாவற்றிலிருந்தும் தன்னைத் துண்டித்திருந்தாள். இருவரும் அமர்ந்திருந்த வாசல்படியில் நான் மட்டும் அமரவே மனது பாரமாக கொஞ்சம் பயமாகவும் உணர்ந்தேன்.
சுமிக்காகப் பேச முடிவெடுத்து நான் அவள் அன்னையிடம் பேசினேன். சுமியின் விருப்பத்தை ஏன் தடுக்க வேண்டும் எனக் கேட்டேன்.
சுமியின் காதலன் இவளைப் போலவே படிப்பறிவு அற்றவன். எந்த ஒரு பணிக்கும் செல்லாத பொறுப்பற்ற ஒரு இளைஞனாகத்தான் இப்போது வரைச் சுற்றிக் கொண்டிருக்கிறான் என்றாள் சுமியின் அன்னை.
அந்தக் காதலனை அவள் கைப்பிடித்தால் இதே வறுமையும் அதே ஃபேன்ஸி ஸ்டோரும்தான் அவள் வாழ்க்கையாக அமையும் வேறு எதுவும் மாறாது என்று மிகத்தீர்க்கமாக என்னைப் பார்த்தாள் அவள்.
“உனக்கு இதெல்லாம் புரியுமானு கூட தெரியல கீதா. பொம்பளைங்க அவங்க வாழ்க்கையில எடுக்குற முக்கியமான முடிவெல்லாம் அவங்கள கொஞ்சமாச்சும் வாழ்வாதார அடிப்படையில மேம்படுத்துறதா இருக்கணும். இல்லைனா அதுவே பெரிய சிரமத்துல தள்ளிடும் அவளை மட்டுமல்ல அவள் பிள்ளைகளையும்.” என்றாள் சுமியின் அன்னை.
தனது வாழ்க்கை அனுபவங்களை வைத்துத்தான் அவள் இப்படிக் கூறியிருக்க வேண்டும் என்றாலும் சுமியின் திருமண விசயத்தில் ஒரு அன்னையாக மட்டுமே அவள் நின்றாள் என்பதையும் நான் உணராமல் இல்லை.
“ஐஸ் சாப்பிட்டதால சக்கரை பழம் டேஸ்ட் தெரியல. வாசமே இனிக்கிது பாரேன்” என்று கைநிறையப் பழங்களைக் கொண்டு வந்து என் மூக்கருகில் நீட்டினாள் சுமி.
ஆமாமா. நல்லா இனிக்கிது என்று புன்னகைத்தேன்.
ஒரு பழத்தை வாயில் வைத்துக் கடித்துக்கொண்டு கீழே விழுந்திருக்கும் மற்ற பழங்களையும் எடுத்துக் கொண்டிருந்தாள் சுமி. பிறகு “நாம பாத்து எத்தனை வருசம் இருக்கும்” என்றாள்.
“ஆறேழு வருசம் இருக்கும்ல” என்றேன்.
சற்று யோசித்து “பெரிய பாப்பாக்கு இப்ப எட்டு வயசு. ஆமா எட்டு வருசம்” என்று தெளிவுபடுத்தினாள்.
ம்ம் என்று தலையசைத்தேன்.
மரத்தில் அசையும் இலைகளின் நிறத்தைப் பார்த்ததும் சுமியைப் பெண் பார்க்க வந்த அன்று அவள் அணிந்திருந்த பச்சைத் தாவணி என் நினைவில் ஆடியது. சுமியைப் பார்க்க வந்த மாப்பிள்ளை கல்லூரிப் படிப்பை முடித்தவர். சுயதொழில் ஒன்று செய்து வந்தார். அவர் வயது முப்பத்தி ஐந்தைக் கடந்திருந்தது. தந்தை இல்லாத பெண் என்பதால் வரதட்சணை இல்லாமலே திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்தார்.
இரண்டு மாதங்களில் திருமணம் முடிந்தது. சுமி வீடு மாறினாள். முதல் குழந்தை பிறக்கும் வரை எப்போதாவது சந்தித்துக்கொண்டோம். பிறகு கல்லூரிக்காக நான் இடம் மாறியதால் சில ஆண்டுகள் இருவருக்குள்ளும் எந்த ஒரு தொடர்பும் இல்லாமல் போனது.
“உன் வீட்டுக்காரர் எப்படி இருக்கார். நல்லா பாத்துக்குறாரா? நீ நல்லாருக்கியா” என்றேன் மீண்டும்.
“பையன் பிறக்குற வரைக்கும் எல்லாம் அப்படி இப்படி கொஞ்சம் நல்லாதான் போனது. அதுக்கப்புறம் கொஞ்சம் கொஞ்சமா அவர் எங்கிட்ட பேசுறத விட்டுட்டாரு. ஆனா நல்லவர்தான். வீட்டுக்கும் பிள்ளைங்களுக்கும் எல்லாம் பண்ணிடுவாரு”. என்றாள். வெறுமனே தரையைப் பார்த்துக்கொண்டு.
நான் முதலில் அதிர்ந்தேன். பின் கேட்டேன்.” என்ன சொல்ற. ஏன் பேசுறத நிறுத்தினாரு.”
“ஒரு கட்டத்துக்கு மேல ரெண்டு பேரும் பேசினாலே சண்டையில முடிஞ்சிருது. நாம யோசிக்கிறதுக்கும் அவங்க யோசிக்கிறதுக்கும் சம்பந்தமே இருக்குறதில்லை. புள்ளைங்க முன்னாடி சண்ட போட்டு அவங்களக் கஷ்டபடுத்துறதுக்குப் பேசாம இருக்கிறது பரவாலதான. யாருக்கும் இப்போ சிரமம் இல்லை” என்று என்னைப் பார்த்தாள். எத்தனை அப்பாவியான பார்வை அது.
“உனக்குக் கஷ்டமா இல்லையா?” என்றேன்.
“யாருக்கு கஷ்டம் இல்லை., இல்லாத ஒருத்தர காமி எனக்கு” என்றாள் ஒரு துறவியைப் போல.
சுமிக்கு என்ன பதில் கூறுவதென்று தெரியவில்லை.”ஒரே வீட்டுல ஒன்னா இருந்தும் பேசாம இருக்குறது வலிதான” என்றேன்.
“அந்த வீட்டுல அவர் மட்டும் இல்லையே கீதா. நானும் என் மூனு புள்ளைங்களும் இருக்கோம்ல. என் புள்ளைங்களுக்கு எல்லாத்துக்கும் நான் வேணும். அவருக்கு அவர் புள்ளைங்க வேணும். இது போதும் தானே நாங்க ஒன்னா இருக்க”.
“என் பையனுக்கு என் மேல கால் போட்டு தூங்கினா தான் தூக்கமே வரும். பாதி நேரத்துல எழுந்து படுக்கையில கூட என்னைத் தேடி என் பக்கத்தில் வந்து படுத்துக்குவான். என் சின்னப் பொண்ணு எங்கிட்ட மட்டும்தான் தலை வாரிக்கும். வேற யாரு தலை வாரி விட்டாலும் அதுக்குப் பிடிக்காது. என் பெரிய பொண்ணுக்கு நல்லாவே விவரம் தெரியிது. வீட்டு நிலவரத்தை அவங்க அப்பாகிட்ட சொல்லுறது, சமையலுக்கு உதவுறது எல்லாம் அதுதான். என் மூஞ்சி கொஞ்சம் சோர்ந்தாலும் அதுக்குத் தாங்காது. எதாவது சேட்டை பண்ணி சிரிக்க வச்சிடும்.”
“இன்னொன்னு கீதா. நீ ஒரு முறை அம்மா ஆயிட்டனு வச்சிக்கோ நீ அம்மா மட்டும்தான். வேறெதுவும் உன் காதுலையும் விழாது. உன் மூளையையும் தொடாது. அதுக்கப்புறம் எதுவும் இல்லைனாலும் இந்த வாழ்க்கைய வாழ உனக்கு ஒரு பெரிய பிடிப்பு வந்துரும். இப்போ எனக்கு வாழ்க்கை என் புள்ளைங்கதான்”. என்று ஒரு தீர்க்கமான புன்னகையைச் சிந்தினாள். அப்போது அவளுக்கு அவள் அன்னையின் சாயல் இருந்தது.
எதுவும் பேசாமல் அமைதியாக அவளைப் பார்த்துக்கொண்டு நின்றேன்.
இப்போதும் ஒரு மெல்லிய காற்று வீசியது மரத்தில் இருந்து உதிர்ந்த சக்கரைப் பழங்களோடு சில இலைகளும் உதிர்ந்தன. கையிலிருந்த பழங்களை முந்தானையில் வைத்து இடுப்பில் செருகிக்கொண்டு விழுந்த பழங்களை ஒவ்வொன்றாக எடுத்தாள் சுமி.
சுமி என் தோழியாக, சகோதரியாக இருந்ததைக் காட்டிலும் இப்போது அத்தனை வசீகரமாக தெரிந்தாள் பெருந்தாயாக.
Art : gnaniarts
ஆசிரியர் குறிப்பு.
சேலத்தை அடுத்த ஆத்தூரில் பிறந்த கீதா பட்டதாரிப் பெண். கவிதைகளில் தொடங்கிய இவரது கலைப் பயணம்
பாடல்கள், கட்டுரைகள், பத்திகள், கதைகள் எனப் பரிணமித்து வருகிறது.
பட்டறிந்தவற்றிலிருந்து தனது ஆக்கங்களை வெளிக்கொணரும் கீதாவிற்கு கதை எழுதுவதில் பெரும் மயக்கம். கதை வடிவமே தனக்கான வெளிப்பாட்டு வடிவம் என்று கண்டடைந்த இவர் வருங்காலத்தில்
தேர்ந்த கதைசொல்லியாகவும், சிறுகதை ஆசிரியராகவும் இலக்கிய உலகில் தடம் பதிக்கும் தகவமைந்தவர். கவிஞர், பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா இவரது கணவர். இவரது கவிதைகள் இணைய இதழ்களில் முகிழ்நிலா என்ற பெயரிலும் கீதா என்ற பெயரில் நீலம் இதழிலும் வெளி வந்துள்ளன.








Leave a Reply