ஒரு மருத்துவர் ஜாதி இளைஞனும் ஒரு வன்னியர் சாதிப் பெண்ணும் (சூர்யா – மகேஸ்வரி) காதலித்துத் திருமணம் செய்து கொண்டு உள்ளார்கள். பெண்ணின் பெற்றோர்களும் உறவினர்களும் அதை ஏற்காமல் தம் மகளைத் தம்மோடு வந்துவிடுமாறு அழைக்கின்றனர். அப்பெண் மறுத்துவிட்டார். 6 மாதங்கள் கடந்த நிலையில் இளைஞனின் தாய் சுமதி (வயது 44) கேரளாவில் வேலை செய்து பிழைத்து வந்தவர், தன் ஊரான கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எஸ்.கொளத்தூர் கிராமத்திற்கு கடந்த 13.6.2023 அன்று வந்து தன் வீட்டில் இருந்தார். 13.6.2023 அன்று பகல் சுமார் 2.15 மணி அளவில் சுமதி வீட்டில் தனியாக இருந்தபோது சக்திவேல், ஏழுமலை, வள்ளி, சிவகாமி ஆகியோர் சுமதி வீட்டிற்கு வந்து ஆபாச வார்த்தைகளால் திட்டி வள்ளியும் சிவகாமியும் அவர்கள் கையில் வைத்திருந்த கட்டையால் அடித்துள்ளார்கள். இதில் சுமதிக்கு மூக்கில் இருந்து ரத்தம் வந்தது. வள்ளியும் சிவகாமியும் சுமதி தலைமுடியினைப் பிடித்து இழுத்துக் கையாலும் அடித்துக் காலாலும் உதைத்து இழுத்து வந்து மாரியம்மன் கோயில் முன்பு போட்டுள்ளனர். அக்கம் பக்கம் இருந்தவர்கள் தடுக்க யாரும் வரவில்லை. அப்போது ஏழுமலை, சக்திவேல், வள்ளி, சிவகாமி ஆகியோர் சுமதி பார்த்து இந்த இடத்திலேயே வச்சு கொன்னுடுவோம்னு மிரட்டி உள்ளனர். அடிபட்ட சுமதி, ஆட்டோ மூலம் சுமதி மகள் தனலட்சுமி உதவியுடன் சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சுமதியை வள்ளி, சிவகாமி, ஏழுமலை, சக்திவேல் ஆகியோர் வன்கொடுமை செய்த போது எடுக்கப்பட்ட வீடியோ பாலிமர் தொலைக்காட்சியில் வெளியானது. சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சுமதி உள்நோயாளியாக இருப்பதாகக் கிடைத்த மருத்துவத் தகவலின் பேரில் சங்கராபுரம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜா என்பவர் மருத்துவமனையில் இருந்த முடிதிருத்தும் தொழிலாளி தனபால் மனைவி சுமதியிடம் புகார் வாக்குமூலம் பெற்றார். புகார் மனுவைப் பெற்றுக்கொண்ட காவல் துறை சக்திவேல், ஏழுமலை, வள்ளி, சிவகாமி ஆகியோர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் கைது செய்யப்படவில்லை. இந்தச் செய்தி கள்ளக்குறிச்சியில் ஜாதிய மோதல் என்கிற தலைப்பில் வெளியாகின. மேலாகப் பார்த்தால் இது ஒரு திருமணத்தால் ஏற்பட்ட ஆவேசத்தால் நிகழ்ந்த வன்முறை போலத்தான் முதலில் தோற்றமளித்தது.
ஆனால் நேரில் சென்று பார்க்கும் போதுதான் உண்மை இதுவல்ல என்பது தமிழ்நாட்டிற்குப் புரிய ஆரம்பித்தது. நாட்கள் செல்லச் செல்ல இது தற்செயலாக நிகழ்ந்த வன்முறை அல்ல, முன்கூட்டியே திட்டமிடப்பட்டு நிகழ்த்தப்பட்ட வன்முறை என்கிற உண்மை வெளித்தெரிய ஆரம்பித்தது. சமூகச் சமத்துவப் படை கட்சி, மருத்துவர் சங்கம் போன்ற அமைப்புகள் கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகத்திடம் ஆதிக்க ஜாதியினருக்கும் வண்ணார் மருத்துவர் போன்ற குலத்தொழில் ஜாதியினருக்கும் இடையிலான உறவு சகோதரத்தன்மை கொண்டதல்ல என்றும், அவர்களுக்குள் ஆதிக்கமும் சார்பு நிலையும் இருப்பதைச் சுட்டிக்காட்டி, புகார் மனுவைப் பெற்றுக்கொண்ட காவல்துறை கொலை முயற்சி, பெண் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சக்திவேல், ஏழுமலை, வள்ளி, சிவகாமி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு முறையிட்டனர்.
குலத்தொழில் ஜாதியைச் சேர்ந்த இளைஞனை மணந்து கொண்டதற்காகக் கர்ப்பிணி என்றும் பாராமல் சடங்கு செய்வதாக அழைத்து வந்து இராமநாதபுரம் வைதேகி ஆதிக்க ஜாதியைச் சேர்ந்த தனது பெற்றோர் மற்றும் உறவினர்களால் அடித்துக் கொல்லப்பட்டார். பட்டம் பெற்றும் வேலை கிடைக்காத நிலையில் சொந்தமாக சலூன் கடை வைத்துப் பிழைத்து வந்த இளைஞன் கரூர் அரிஹரனைத் திருமணம் பற்றிப் பேச அழைத்து அவர் காதலித்த ஆதிக்க ஜாதியைச் சேர்ந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்களால் பட்டப் பகலில் கரூர் பசுபதி கோயில் அருகில் குத்திக் கொல்லப்பட்டார்.
இராமநாதபுரம், கரூர், திருப்பூர் மாவட்டங்களில் தொடர்ந்து ஆணவக் கொலைகள் நடப்பதால் அது பற்றி பேச்சு தொடர்கிறது. தொலைக்காட்சியில் காட்டப்பட்டதால் பலரையும் அங்கு கண் குவிக்கச் செய்தது. ஆணவக் கொலைகள் பரவலாக வெளித்தெரிகிற போதெல்லாம் ஜாதிய ஒடுக்கு முறைக்கும் பாரபட்சங்களுக்கும் முடிவு கட்டி விட்டுத்தான் மறுவேலை என்பதுபோல் கொந்தளிக்கிறவர்கள் பின்பு தணிந்து அடங்கிக் காணாமல் போய்விடுகிற வழக்கம் என்பது பலருக்கும் தெரிந்து இருக்கிறது. தொடர்ந்து களத்தில் இருந்தே ஆக வேண்டிய கட்டாயத்துக்குள் தாங்கள் தள்ளப்பட்டிருப்பதை ஜாதி மறுப்பாளர்களும் சமத்துவ விரும்பிகளும் மனித உரிமைச் செயல்பாட்டாளர்களும் மெதுவாகவேனும் உணரத் தலைப்பட்டிருக்கிறார்கள். அப்படியொரு கட்டாயத்திற்குள் நெட்டித்தள்ளி அவர்களது நிகழ்ச்சி நிரலை முடிவு செய்கிறவர்களாக ஜாதியவாதிகள் மாறியிருக்கிறார்கள்.
ஆணவக் கொலைகளை நியாயப்படுத்த வெளிப்படையாகச் சொல்லும் காரணங்களை விடவும் வலுவான காரணங்கள் ஆதிக்க ஜாதியினர் ஆழ்மனதிலும் இயல்புணர்ச்சியிலும் படிந்திருக்கின்றன. அவற்றை நிறுவ முடியாது. ஆனால் யூகிக்கலாம் அல்லது உணரலாம். அவர்களது ஜாதிப் பற்றானது குலத்தொழில் ஜாதியினர் மீதான விரோதத்தை ஆதாரமாகக் கொண்டுதான் கட்டமைக்கப்பட்டுள்ளது. வண்ணார் மருத்துவர் எனப்படும் குலத்தொழில் ஜாதியினர் தம்மை விடக் கீழானவர்கள் என்ற கற்பிதத்தின் வழியே தக்க வைக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் உருவகித்து வைத்திருக்கிற இந்தக் கற்பிதமான சித்திரம் உருக்குலையும் போது யாருடைய தூண்டுதலும் இன்றி தன்னியல்பாகவே பதற்றமடைகிறார்கள். அஸ்திவாரக் கல் உருவி எடுக்கப்பட்ட ஒரு கட்டிடத்தைப் போல ஆட்டம் கண்டு போகிறார்கள். தங்களுக்குக் கீழாக அழுத்தி வைக்கப்பட்டிருந்த குலத்தொழில் ஜாதியினர் அந்த நிலையை மறுத்து வெளியேறி விட்டால் தம்மை மேல் ஜாதி என்று கருதிக் கொள்வதற்கான அடிப்படையே தகர்ந்து விடும் என்று அஞ்சுகிறார்கள். சமத்துவச் சிந்தனைக்கும் கூடி வாழும் இணக்க மனப்பான்மைக்கும் எதிரான மனநிலையில் இருந்து உருவாகிற இந்த அச்சத்தில் இருந்து தம்மைத்தாமே விடுவித்துக் கொள்ளவே குலத்தொழில் ஜாதியினர் மீது வன்கொடுமைகளை நிகழ்த்துகிறார்கள்.
குலத்தொழில் ஜாதியினர் மற்றவர்களால் தமக்கு ஒதுக்கப்பட்ட பாத்திரங்களை மறுத்து சுயேச்சையாக வாழ்வதற்காக முயற்சி மேற்கொள்ளும் போதெல்லாம் ‘’இப்படியே விட்டா நாளைக்கு நம்ம கிட்டயே வந்து சம்பந்தம் பேசுற அளவுக்கு வளர்ந்திடுவானுங்க போலிருக்கே…’’ என்ற தொனியில் பேசப்படும், வெளிப்படும் அச்சம் வளர விடக்கூடாது என்பதன் பொருள் நடை, உடை, பாவனை, உணவு, பழக்க வழக்கம், ரசனை, தொழில், கருத்து வெளிப்பாடு, அரசியல் நடவடிக்கை என எதுவொன்றிலும் குலத்தொழில் ஜாதியினர் தேர்வுகளைத் தடுப்பதுதான்.
குலத்தொழில் ஜாதியினரின் இந்த வளர்ச்சி அல்லது சுயத்தேர்வினை அவர்கள் பல முனைகளிலும் தளங்களிலும் தங்களுக்குப் போட்டியாளர்களாக வரப் போகிறார்கள் என்பதற்கான முன்னறிவிப்பாக மிகச் சரியாகவே ஜாதி இந்துக்கள் புரிந்து கொள்கின்றனர். எனவே முளையிலேயே கிள்ளுவது என்கிற நிலையையும் தாண்டி முளைக்கவே விடாமல் அழிப்பதற்குத் துணை நின்றனர். கக்கரைக் கோட்டை, வெங்கடாஜலபுரம், ஜருகு, ஒட்டை, தானம் ஆகிய ஊர்களில் வீடுகள் அழித்து ஒழிக்கப்பட்டதை இந்தப் பின்புலத்தில் வைத்தே புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
தங்கள் ஜாதிப் பெண்கள் குலத்தொழில் ஜாதியின ஆண்களோடு கூடிவிடக் கூடாது என்பதுதான் மேல்நிலை சூத்திரர்களது கவலையாக இருக்கிறது. மேல் வர்ணத்து ஆண், கீழ் வர்ணத்துப் பெண் தொடத்தக்கது (அனுலோமா). மேல் வர்ணத்துப் பெண் கீழ் வர்ணத்து ஆண் தொடத்தகாதது (பிரதிலோமா) என்கிற மநுவின் விதிகளுக்கு இவ்வளவு விசுவாசமாக இப்போது பார்ப்பனர்கள் கூட இல்லை என்று சந்தடிச் சாக்கில் சிலர் சொல்லத் துணிந்தார்கள். ஆனால் பிராமணர் சங்கமான தாம்பிராஸ் ஜாதிக் கலப்பு திருமணத்திற்கு எதிராக நீண்ட காலமாகப் பேசி வருகிறது என்பதை மறந்து விட வேண்டியது இல்லை என்ன இருந்தாலும் மேல்நிலை சூத்திரர்களுக்கும் அவர்கள் தானே குருக்கள். எனவே அவர்களுக்கு முன்பாகவே (வரலாற்று ரீதியாகவும் கூட) 16.1.2012 அன்றைக்கு ஜாதி மறுப்புத் திருமணத்திற்கு எதிராக சத்யப் பிரமாணம் எடுத்து இருக்கிறார்கள். ‘‘பிறவியிலேயே மிகச்சிறந்த பிறவியான மனிதப் பிறவியில் அதிலும் புண்ணிய பாரத தேசத்தில் மேலும் குறிப்பாக ரிஷி வர்க்கமாக பிராமணத் தாயார் தகப்பனாருக்குப் பெண்ணாக / பிள்ளையாகப் பிறந்த நான் எனது வாழ்நாள் முழுவதும் பிராமணப் பாரம்பரியத்தைக் கடைப்பிடிப்பேன். எதிர்காலத்தில் என்னுடைய கணவர்/ மனைவி பிராமணச் சமூகத்தினராகவே இருந்திடுவார். அதாவது வேறு ஜாதியினரை, மதத்தினரைக் கலப்புத் திருமணம் செய்துகொள்ள மாட்டேன். எனது குடும்பப் பெரியவர்கள் மத்தியில் / சுவாமி சந்நிதியில் / தாம்பிராஸ் நடத்துகின்ற சத்யப் பிரமாண நிகழ்ச்சியில் நான் சத்யப் பிரமாணத்தை எடுத்துக் கொள்கின்றேன்.’’ (திருமண விஷயத்தில் மட்டும் கடைப்பிடிப்பதாகச் சொல்லும் பிராமணப் பாரம்பரியத்தைத் தொழிலிலும் கடைப்பிடித்துப் பிழைக்க வேண்டியதானே! ஐஐடிக்கும் ஐஐ எம்முக்கும் எதற்குப் படிக்கப் போகிறார்கள்?)
தேசத்தைப் பிளவுபடுத்துவதாய் ஜாதி இருக்கையில் ஒருங்கிணைக்கும் காரணியாக இருக்கும் ஜாதி மறுப்புத் திருமணமோ, தேச நலன் சார்ந்த நடவடிக்கை எனப் புகழ்ந்து உரைத்திருக்கிறது. உச்சநீதிமன்றம் (இந்தியன் எக்ஸ்பிரஸ் புதுடெல்லி 20.4.2011) ஜாதி மறுப்பு மணங்களுக்குச் சட்டரீதியான ஒப்புதலும் இருக்கிறது. ஜாதி மறுப்பு மணம் செய்து கொள்கிறவர்களுக்கு ஒன்றிய மாநில அரசுகள் பல்வேறு நிதியுதவி உள்ளிட்ட சிறப்புரிமைகளை வழங்கி ஊக்குவிக்கின்றன. இவ்வளவு ஆதரவு இருந்தும் மிக மிகக் குறைவான அளவில்தான் ஜாதி மறுப்பு மணங்கள் நடைபெற்று இருக்கின்றன. இந்தியாவில் நடைபெற்ற ஜாதி மறுப்பு மணங்களைப் பற்றி ஆய்வு செய்யக் கிளம்பிய ஒரு குழுவினர் தமிழ்நாட்டில்தான் மிக அதிக அளவில் நடைபெற்றிருக்கும் என்கிற முன் அனுமானத்தோடு இருந்திருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டின் மொத்தத் திருமணங்களில் வெறும் 2.96 விழுக்காடு மட்டுமே ஜாதி மறுப்பு மணங்கள் என்று களத்தில் அறிந்த உண்மை அவர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. தேசிய சராசரியான 11 விழுக்காட்டுடன் ஒப்பிடும் போது தமிழ்நாடு கீழிருந்து இரண்டாவது இடத்தில் தேங்கி நிற்கிறது. இதில் 2.96 விழுக்காடு என்பதும் கூட எல்லா ஜாதிகளுக்குள்ளும் ஏற்பட்ட கலப்பின் அளவு இதில் 1.66 விழுக்காடு திருமணங்களில்தான் பெண் தன்னைவிடத் தாழ்ந்த ஜாதியிலிருந்து கணவனைத் தேர்ந்தெடுக்கிறார். இதே ஆய்வு தெரிவிக்கும் மற்றொரு உண்மை தமிழ்நாட்டில் 15 – 19 வயதுக்குள் திருமணமாகும் பெண்களில் 98.68 விழுக்காடு சொந்த ஜாதியிலும் 1.32 விழுக்காடு தம்மை விட உயர்ந்த ஜாதியிலும் கணவனைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இவை குழந்தைத் திருமணங்கள் 20-24 வயதில் திருமணம் செய்து கொள்ளும் பெண்களில்தான் 2 விழுக்காடு பேர் தம்மை விடத் தாழ்ந்த ஜாதி ஆணைத் தெரிவு செய்து ஜாதி மறுப்பைத் தொடங்கி வைக்கிறார்கள். இந்தப் புள்ளி விவரத்தைப் பார்த்துவிட்டு பிராமணர் சங்கத்தைப் போலவே கொங்கு மகிமையும் குழந்தைத் திருமணம் நடத்தவும் கிளம்பக் கூடும். உண்மை நிலை இவ்வாறு இருக்க முன்னேறிய ஜாதிகளின் பெண்களைக் குலத்தொழில் ஜாதியினரான வண்ணார் மருத்துவர் சாதி இளைஞர்கள் காதல் நாடகமாடி கல்யாணம் முடிந்து விட்டதாகச் சிலர் கதை விடுகிறார்கள். அப்படி ஒரு பட்டியல் இருக்குமானால் அதை வெளியிட வேண்டியதுதானே? தர்மபுரி பிக்கம்பட்டி வகையறா பீதியடையும் அளவுக்கு இங்கு ஜாதி மறுப்பு மணங்கள் நடந்திருக்குமானால் அதற்காகப் பெரு மகிழ்ச்சி அடைபவர்கள் நாமாகவே இருப்போம். ஆனால் அப்படி ஒரு மாற்றம் நடக்கவே இல்லை என்பதுதான் துயரம்.
‘‘உன் மகனை ஒரு நாவிதர் ஜாதிக்காரனுக்குக் கட்டி வச்சிருக்கியா’’ என்று கள்ளக்குறிச்சி கொளத்தூர் வகையறா ஒரு கேள்வியைத் தூக்கிப் போட்டதும் பல பேரின் தலை தொங்கிப் போய் விடுகிறது. மகளை நாவிதனுக்குக் கட்டிக் கொடுத்த பெற்றோர்கள்தான் கொளத்தூர் வகையறா அட்டூழியங்களைக் கண்டிக்க முடியும் என்று தர்க்கப்படி வாதிட்டால், தன் மகனையோ மகளையோ மருத்துவர் ஜாதிக்காரனுக்குக் கட்டிக் கொடுக்காத கொளத்தூர் வகையறா வாயை மூடிக்கொண்டிருக்க வேண்டும் என்றாகிறது. இன்னாரைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று மகளையோ மகனையோ வற்புறுத்துகிற அதிகாரம் பெற்றோர்களுக்கே கூட கிடையாது என்கிற போது இந்த கொளத்தூர் வகையறா யார் நாட்டாமை செய்ய பெற்றோர் பார்த்து கழுதையைக் காட்டினாலும் கழுத்தை நீட்டுகிற அளவுக்குக் கீழ்ப்படிந்துள்ள மகளோ கிழித்த கோட்டை தாண்டாத மகளோ நமக்குத் தேவையில்லை. அன்றாட வாழ்வில் ஜாதியைத் துறந்த ஒரு குடும்பச் சூழலில் அவர்களை வளர்ப்போமானால், தன் இணையை ஜாதிக்கு வெளியிலும் தேர்வு செய்வதற்கு உரிய அறிவையும் நம்பிக்கையையும் சுதந்திரத்தையும் அவர்கள் இயல்பாகப் பெற்று விடுவார்கள். ஜாதி மறுப்பு மணம் பற்றிக் கிளப்பிவிட்டுள்ள விவாதத்தை நாம் நமது குடும்பங்களுக்குள் கொண்டு செல்ல வேண்டி இருக்கிறது.
மநு (அ) தர்ம சாஸ்திரம் கூறுவதைக் கேளுங்கள் :
‘‘புனிதமான திருமணப் பந்தத்திற்குச் சொந்த வருணப் பெண்ணே ஒரு பிராமணருக்குப் பரிந்துரைக்கப்படுகிறாள். ஆசைக்காக இதர மூன்று வர்ணங்களில் இருந்து மனைவியைக் கொள்ளலாம். அவனின் மதிப்பு மரியாதை என்பது அவனது வர்ணத்தைப் பொறுத்திருக்கும்.’’ ஆக சத்திரிய, வைசிய, சூத்திரப் பெண்ணை ஒரு பிராமணர் மணக்கலாம். ஆனால் அவள் ‘தர்மபத்தினி’ ஆக மாட்டாள். அவளுக்கான மரியாதை வர்ண அடுக்கைப் பொறுத்திருக்கும். பளிச்சென்று சொன்னால் அவள் வைப்பாட்டியே, ஆனாலும் மணக்கலாம்.
இந்த அனுமதி இதர வர்ணத்தாருக்கு இல்லை. அதாவது கீழ் வர்ணத்தவர் உயர் வர்ணத்துப் பெண்ணை மணக்க முடியாது. தர்மபத்தினியாகவே மணக்க முடியாது என்றால், வைப்பாட்டியாக எப்படி வைத்துக்கொள்ள முடியும். அப்படிச் செய்தால் கொடூரமான தண்டனை காத்திருந்தது. மநு கண்டிப்புடன் கூறினார்: ‘‘ஓர் இரு பிறப்பாளர் வருணப் பெண்ணோடு உடலுறவு கொண்ட ஒரு சூத்திரனின் ஆண்குறியைச் சிதைத்து விட வேண்டும். அவனது பொருட்கள் மற்றும் நிலத்தைக் கைப்பற்றிட வேண்டும். இரு பிறப்பாளர் என்பது பிராமண, சத்திரிய, வைசிய வருணத்தவரைக் குறிக்கும். சூத்திரத்துக்கே இந்தக் கதி என்றால் பஞ்சமரை என்ன செய்திருப்பார்கள் என்பதை எளிதில் ஊகித்துக் கொள்ளலாம்.
வர்ணக் கலப்பைத் தடுக்க கறாரான அகமண முறையை, சுய ஜாதி திருமணத்தைக் கொண்டு வந்து, அதை சாஸ்திரவிதியாக, சட்ட சரத்தாகக் கறார்படுத்தியதுதான் சுமார் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மநு செய்த தனித்துவமான வேலையாகும். அதற்கு முன்பு இந்த விஷயத்தில் இவ்வளவு கண்டிப்பு இருந்ததில்லை. மநுவும் இதர அல்லது தர்ம சாஸ்திரக்காரர்களும் செய்த இந்த வேலைதான் இந்தத் துணைக் கண்டத்தில் பின்னர் நடைமுறை சமுதாய வாழ்வாக ஆனது.
இதைவிடக் கொடுமை என்னவென்றால் அதன் மிச்ச சொச்சம் இன்னும் தொடர்வது, தொடர வேண்டும் என்று கொளத்தூர் வகையறா போன்றவர்கள் ஆசைப்படுவது, அதனால் தானே வன்னியர் ஜாதிப் பெண்ணை மருத்துவர் மகன் ஒருவன் காதலித்து மணம் செய்து கொண்டான் என்பதற்காக தர்மபுரி பிக்கம்பட்டியிலும், கள்ளக்குறிச்சி எஸ்.கொளத்தூரிலும் அந்த வன்கொடுமைகள் நடந்தன.
வன்னியர் ஜாதிப் பெண்ணை மருத்துவர் மகன் காதலித்து மணக்கக் கூடாது என்கிறீர்களே, வன்னியர் சாதி ஆண்மகன் அவர்களிலும் மேலான உயர்ஜாதிகளைச் சேர்ந்த பெண் மகளைக் காதலித்து மணந்தால் அதை ஏற்பார்களா? நீங்கள் மருத்துவர் மகன் பால் காட்டுகிற அதே அருவருப்பை அவர்கள் உங்கள் ஆண்களிடம் காட்டுவதை நீங்கள் அறிய மாட்டீர்களா? அல்லது அறிந்தும் குலத்தொழில் ஜாதியினர் எதிர்ப்புக்காக அந்த அவமானத்தைத் தாங்கிக் கொள்கிறீர்களா?
பிராமணியம் எனும் படு பிற்போக்கான சமூகக் கட்டமைப்பு இடைநிலை ஜாதியினரையும் அசிங்கப்படுத்தி வருகிறது. அந்த ஜாதியக் கட்டமைப்பையே தகர்த்து எறியாதவரை அல்லது குறைந்தபட்சம் பழங்குடியினர், பட்டியல் வகுப்பினருக்கு மட்டுமல்ல மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களுக்கும் விடுதலை கிடையாது. சொல்லப்போனால், முற்படுத்தப்பட்ட ஜாதியினர் எனப்படுபவருக்கும் கூட நல்ல எதிர்காலம் கிடைக்காது. பிறரது சுதந்திரத்தைப் பறிக்கும் எவரும் மெய்யான சுதந்திரத்தோடு வாழ முடியாது என்பதே வாழ்க்கை யதார்த்தம் வரலாற்று உண்மை. ஆகவே அந்த ஜாதிய ஆணாதிக்கக் கட்டமைப்பை ஒழித்துக்கட்ட பழங்குடியினர் தலித் மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் இணைந்து போராட வேண்டும். அதில் இணைய வருகிற முன்னேறிய ஜாதிகளின் ஜனநாயக உள்ளங்களையும் வரவேற்க வேண்டும். அப்படி ஒரு பரந்த அணி அமைத்துப் பிராமணியத்தை எதிர்த்துப் போராட வேண்டும். இதுவே காலம் நமக்கிட்டுள்ள கட்டளை.
எல்லாக் காதலும் மெய்க் காதல் இல்லைதான். ஒரு சில போலியாக இருக்கலாம். ஆனால் அது மெய்யா பொய்யா என்பதை யார் தீர்மானிப்பது? சம்பந்தப்பட்ட ஆணும் பெண்ணும்தான் தீர்மானிக்க வேண்டும். அதற்குத்தான் 21, 18 என்று வயது வரம்பு தீர்மானிக்கப்பட்டுள்ளது. புத்திசாலி இளம் யுவன் யுவதிகளால் அதைக் கண்டறிய முடியும். நிச்சயம் இந்த விஷயத்தை ஜாதியத் தலைவர்களிடம் விட முடியாது. அவர்கள் ‘நாடகக் காதல்’ என்ற பெயரில் சகல காதலையும் நிராகரிப்பார்கள். ‘காதலாவது கத்திரிக்காயாவது’ என்று அவர்கள் பேட்டி கொடுத்ததிலிருந்தே அவர்கள் போலிக் காதலுக்கு அல்ல, காதலுக்கே எதிரி என்பது உறுதியாகிப் போனது.
காதல் மீது ஏன் இவ்வளவு வெறுப்பு இவர்களுக்கு? காரணம் அதுதான். மநு அல்லது தர்மசாஸ்திரம் நிர்ணயித்த அகமன முறைக்கு – சுயசாதி மணதிற்கு வேட்டு வைக்கிறது. ஜாதிக்குள் மட்டுமே திருமணம் என்பது வர்ணாசிரமவாதிகள் வகுத்த விதிமுறை காதல் என்பதோ வாலிப வயது வகுத்த இயற்கையான விதிமுறை. இது நன்கு உணர்ந்திருப்பவர்கள் காதலர்கள் என்பதைவிட அவர்களது எதிரிகள். அதனால்தான் காதலை எதிர்த்து அவர்கள் கர்ண கொடூரமாகக் கிளம்பி இருக்கிறார்கள். சங்க மாநாட்டில் அவர்கள் ‘‘கை கால் வெட்டியாக’’ மாறி முழங்கியதன் அர்த்தம் இப்போதுதான் புரிகிறது.
உற்பத்திச் சாதனங்கள், மனித உழைப்புச் சக்தி, அறிவியல் தொழில்நுட்பம் போன்றவை உற்பத்திச் சக்திகள் என வழங்கப்படுகின்றன. இந்த உற்பத்திச் சக்திகள் தற்போது பிரமாண்டமாக வளர்ந்துள்ளன. அதாவது தொழில், சேவைத் துறைகளின் வளர்ச்சி, அறிவியல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், கல்வி நிறுவனங்கள் போன்றவை பெருகி உள்ளன. வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. ஜாதி அமைப்பால் ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு இப்பிரிவினரில் கணிசமானவருக்குக் கல்வி வேலை வாய்ப்புகளில் பலன் அளித்துள்ளது. இது உற்பத்தி சார் உறவுகளில் மாற்றங்களை உருவாக்குகிறது. பிற்படுத்தப்பட்ட ஜாதியினரிடையே பெரும் முதலாளிகள் கூடத் தோன்றியுள்ளனர். மத்திய, உயர் மத்திய தர வர்க்கங்கள் அனைத்து ஒடுக்கப்பட்ட ஜாதிகளிலும் உருவாகியுள்ளன. அதாவது ஜாதகத்துக்குக் காரணமாக நிலப்பிரப்புத்துவ உற்பத்தி சார் உறவுகளில், மாற்றங்கள் ஏற்படுகின்றன. இது ஜாதிக் கட்டமைப்பை மெதுவாகத் தகர்த்து வருகிறது.
ஒரே ஜாதிக்குள்ளேயே பல்வேறு தொழில் பிரிவினரும் ஒரே தொழில் புரிவிற்குள் பல்வேறு ஜாதியினரும் பணிபுரியும் நிலை உருவாகியுள்ளது. இது பல்வேறு ஜாதிகளின் ஆண்களும் பெண்களும் ஒன்றாகப் பழக வாய்ப்பு அளித்துள்ளது. அதேவேளை ஜாதிய உணர்வு நீடிக்கத்தான் செய்கிறது. என்றாலும் ஜாதியை வர்க்கமாக அல்லது வர்க்கமே ஜாதியாகச் சில நூற்றாண்டுகளுக்கு முன் பிறந்த இறுக்கமான நிலையை மெதுவாகத் தகர்த்து வருகிறது. உழைக்கும் மக்களின் ஒன்றுபட்ட செயல்பாடுகள், ஜாதி உணர்வுக்கு மாற்றாக வர்க்க உணர்வை அதிகரித்து வருகின்றன என்றாலும் இது போதாது எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கக்கூடிய, ஒரு பொதுவுடமைச் சமூக அமைப்பில்தான் தங்கு தடையற்ற ஜாதி மறுப்பு மணங்கள் பெருகும். அதுவே ஜாதி ஒழிப்பை முழுமைப்படுத்தும்.
இந்து மதம், கடவுள் ஆகியவற்றின் மீது நம்பிக்கையான ஏராளமானோர் ஜாதி கடந்த காதல், ஜாதி மறுப்பு மனம் புரிந்து கொள்கின்றனர். திரைப்படங்கள், சமூக ஊடகங்கள், ஜாதியத்திற்கு எதிரான கருத்தியல் பரப்புரை, போராட்டங்கள், முற்போக்கு கலை இலக்கியப் படைப்புகள் ஜாதி மறுப்பு மணங்களை ஊக்கப்படுத்தியுள்ளன. பொருளாதாரத் தற்சார்பும் காதல் – ஜாதி மறுப்பு மணங்களை அதிகரிக்கச் செய்துள்ளன. இருப்பினும் நமது ஜனநாயகமற்ற, ஆணாதிக்கக் குடும்பங்கள் ஜாதியைப் பாதுகாக்கும் நிறுவனங்களாக நீடிக்கின்றன. சொத்துடமை, ஜாதி மறுப்புத் திருமணங்களுக்கு எதிராக உள்ளது. மதமாற்றம் ஜாதி ஒழிப்புக்குப் பயனளிக்கவில்லை.
அரசு செய்ய வேண்டியவை :
ஜாதி ஆணவக் கொலைகளைத் தடுக்கத் தனிச்சட்டம் கொண்டுவர வேண்டும். ஜாதி மறுப்பு மணங்களை அரசு இலவசமாக நடத்தி வைக்க வேண்டும். இணையரில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதுடன் அவர்களுக்கான நிதி உதவியை அதிகரிக்க வேண்டும். பெரியார் சமத்துவப் புரங்களில் மூன்றில் ஒரு பங்கு வீடுகளை இவர்களுக்கு ஒதுக்க வேண்டும்.
ஜாதி மறுப்பு மணங்களுக்கு எதிராகச் செயல்படும் அதிகாரிகள் காவல் துறையினர், திருமணப் பதிவாளர்கள், ஜாதிச் சங்கங்கள், அரசியல் தலைவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஜாதி மறுப்பு மணங்கள் மிக மிகக் குறைவாக நடைபெறுவதற்கான காரணங்களைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,
தனி இடஒதுக்கீட்டின் அவசியம் :
நீதிபதி வெங்கடாச்சலய்யா குழு பரிந்துரையின் அடிப்படையில், ஜாதி மறுப்பு மணத் தம்பதியரில் ஒருவர் பட்டியல் சாதியைச் சேர்ந்தவராக அல்லது பட்டியல் பழங்குடியாக இருந்தால், அந்தத் தம்பதியின் குழந்தைகளை ‘ஜாதியற்றோர்’ என வகைப்படுத்தி, அரை விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இதை அவர்களின் விழுக்காட்டிற்கு ஏற்ப அதிகரிக்க வேண்டும். இதர பிரிவு ஜாதி மறுப்பு மணங்களுக்கும் இடஒதுக்கீட்டை விரிவுபடுத்த வேண்டும். ஜாதி மறுப்பு மண இடஒதுக்கீடு குறித்த சட்டமன்ற விவாதத்தின் போது, அதற்கு உரிய சட்டத் திருத்தம் அவசியம் என்று மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி கூறியிருந்தார்.
ஜாதியை ஒழித்திட உற்பத்தி சார் உறவுகளில், உற்பத்திச் சாதனங்களின் உடமைகளில் மாற்றங்களை உருவாக்குவதோடு, மக்களின் மனங்களிலும் மாற்றத்தை உருவாக்க வேண்டிய தேவை இருக்கிறது. தற்போது முன்னேறிய பிரிவினரின் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் சாதகமான சூழல் உருவாகியுள்ளது.
‘‘ஜாதி மறுப்புத் திருமணமே ஜாதி ஒழிப்பதற்கான உண்மையான வழி என நம்புகிறேன். ரத்தக் கலப்பு மட்டுமே எல்லாரும் நம்மவரே என்கிற உணர்வை உருவாக்கும்.’’
- புரட்சியாளர் அம்பேத்கர்
Art : Splaxy Lawes
பெருமாள் குமாரசாமி – காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் வாழும் சமூகநீதிச் சமூகச் செயற்பாட்டாளர். அவரது கட்டுரைகள் குலத்தொழில் வகுப்பினரான வண்ணார், காவாரா மற்றும் மருத்துவர் வகுப்பு மக்கள் வாழ்க்கையை நம் கண் முன்னே படம் பிடிப்பதன் முக்கியத்துவத்தை நாம் உணரலாம். ஜாதிய வாதிகள் உருவகித்து வைத்திருக்கிற குலத்தொழில் வகுப்பினர் தம்மை விடக் கீழானவர்கள் என்ற கற்பிதத்தின் வழியே தக்கவைத்து வைக்கப்பட்டுள்ளது என்றும் குலத்தொழில் வகுப்பினர் தமக்கு ஒதுக்கப்பட்ட பாத்திரத்தை மறுத்து வெளியேறிவிட்டால் தம்மை மேல்ஜாதி என்று கருதிக்கொள்வதற்கான அடிப்படையே தகர்ந்து விடுமே என்றும் ஜாதியவாதிகள் அஞ்சுகிறார்கள் என்றும் குறித்து உரைக்கிறார் பெருமாள் குமாரசாமி. அவரது நூலான சமூகநீதியின் குரல்கள் சுரண்டப்பட்ட மக்களின் விடுதலை என்ற நோக்கில் அமைந்துள்ளன. விவாதத்திற்கும் உட்படுத்த வேண்டியவை. அவரது கருத்துகள் மிக நுட்பமானவை. தரம் கொண்டவை.








Leave a Reply