கதைப்பாடல்களிலும் நினைவுகளிலும் ஆணவக் கொலைகள் குறித்த செய்திகள் உண்டு. அவை சாதியை மறுத்த காதல் திருமணங்களுக்காக நிகழ்த்தப்பட்டவை. வாழ்வில் ‘நவீனம்’ என்ற ஒன்று இருந்திராத காலத்தினுடையவை. வரையறுக்கப்பட்ட சிற்றளவு நிலப்பகுதிகளையே பெருந்தேசமாகக் கருதிக்கொண்டிருந்த சிந்தனைப் பரப்போடு தொடர்புடையவை. இந்தச் சூழல் எதுவும் இன்றில்லை. ‘நவீனம்’ வாழ்வின் அனைத்து நிலைகளிலும் வியாபித்துவிட்டது. சிந்தனைப் பரப்பு எல்லை தாண்டியதாக மாறிவிட்டது. பல பண்பாடுகளின் கலப்பாக வாழ்தலின் வெளி விரிந்துகொண்டே இருப்பதால் கடந்த நூற்றாண்டை விட தற்பொழுது தேர்ந்தெடுப்புச் சுய உணர்வு (Self-selection conscious) பெருகியிருக்கிறது. அதனால் மொழி, இனம், சாதி, நிறம் தாண்டிய காதல் திருமணங்கள் அதிகரிக்கத் தொடங்கி இருக்கின்றன.
உலகம் இப்படி இருக்க இந்தியாவில் ஆணவக் கொலைகள் பற்றிய புள்ளி விவரங்கள் அதிர்ச்சியளிக்கின்றன. இந்தச் சூழ்நிலையில் தற்போது சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், கல்வியாளர்கள், அரசியல் தலைவர்கள் எனப் பல தரப்பிலிருந்தும் ஆணவக்கொலையைத் தடுக்கத் தனிச்சட்டம் வேண்டும் என்கிற கோரிக்கை எழும்பியிருக்கிறது. கோரிக்கை பழையது என்றாலும் இப்போது அதன் தீவிரம் கூடியிருக்கிறது. ஆணவக் கொலைகளையும் குற்றங்களையும் சட்டத்தின் துணைகொண்டு கட்டுப்படுத்த முனையும் போது கூடுதலாகச் சில விஷயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.
புள்ளி விவரங்கள் தரும் தகவல்கள்
இந்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி தமிழ்நாட்டில் மட்டும் 2020 ஆம் ஆண்டில் 1011 வழக்குகளும், 2021 ஆம் ஆண்டில் 903 வழக்குகளும் 2022 ஆம் ஆண்டில் 1307 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. அட்டவணைச் சாதிகளுக்கான தேசிய ஆணையத்தின் (NCSC – National Commission for Scheduled Castes) 2020-2021, 2021-2022 ஆம் ஆண்டுகளுக்கான அறிக்கை இந்திய அளவில் 2019, 2020, 2021 ஆண்டுகள் முறையை அட்டவணைச் சாதியினர் மீதான குற்றங்கள் 23.1, 25.5, 25.7 சதவீதம் அதிகரித்திருப்பதாகச் சுட்டுகிறது. அதே அறிக்கை தமிழ்நாட்டில் 2021 ஆம் ஆண்டில் மட்டும் 9.5 சதவீதக் குற்றங்கள் அதிகரித்திருப்பதாகக் கூறுகிறது. ஆண்டுதோறும் குற்றங்கள் அதிகரிப்பதாகக் கூறும் இந்தப் புள்ளிவிவரங்கள் சிக்கலின் தீவிரத்தை உணர்த்துகின்றன.
சட்டமும் சூழலும்
ஆணவக் கொலைகள் ஊடகக் கவனம் பெற்று பேசுபொருளாக மாறும் அளவுக்கு ஆணவக் குற்றக் கொலைகள் கவனம் பெறுவதில்லை. பொதுவாக, ஆணவக் கொலைக்கு எந்தவிதத்திலும் குறைவானதல்ல என்ற போதிலும் சாதி மறுப்புக் காதலோடு தொடர்பில்லாத ஆணவக் குற்றக் கொலைகள் ஆணவக் கொலையாகக் கருதப்படுவதில்லை. அந்தவகையில் ஆணவக்கொலையோடு ஆணவக் குற்றத்தையும் உள்ளடக்கிய கவனக் குவியம் இன்று கட்டாயமாகி இருக்கிறது.
குற்றங்கள் என்றாலே அதைக் கட்டுப்படுத்துவதற்குச் சமரசமற்ற சட்ட நடவடிக்கைகளே நினைவுக்கு வரும். ஜனநாயக நடைமுறையில் அது முக்கியமான வழிமுறை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், குற்றங்கள் நவீனமடைந்திருக்கும் இன்றைய சூழலில் அவற்றைச் சட்டத்தின் துணைகொண்டு கட்டுப்படுத்துவது எவ்வளவு முக்கியமோ அதே அளவு குற்றங்கள் உருவாவதற்கான சூழல் இல்லாமல் பார்த்துக் கொள்வதும் முக்கியமானது. குற்றங்கள் நிகழ்வதற்கான சூழல் அதிகரித்துக் கொண்டிருக்கும் போது சட்டத்தின் வழி குற்றங்களைக் கட்டுப்படுத்த முற்படுவது எதிர்பார்க்கும் பலனைத் தராது. அதிலும் குறிப்பாக ஆணவக் கொலைகள் / குற்றங்கள் என்று வருகிறபோது சட்ட நடவடிக்கையோடு சூழல்சார் நடவடிக்கையும் அவசியம்.
ஆணவக் கொலை / குற்றங்களில் சூழல்சார் நடவடிக்கையின் வழி நிரந்தரத் தீர்வினை எட்டுவதற்கான வாய்ப்புகள் அதிகம். சான்றாக, ஐரோப்பிய நாடுகளில் 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் மேற்கொள்ளப்பட்ட மதுவிலக்கு சூழல்சார் நடவடிக்கைகளைக் கூறலாம். மது உள்ளிட்ட போதைப் பழக்கத்தால் மனிதவளம் கடும் சரிவைச் சந்தித்த போது மது / போதைப் பொருளுக்கு எதிரான சட்ட நடவடிக்கை ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, இன்னொரு புறம் மது / போதைப்பழக்கத்திற்கு ஆளாவதற்கான காரணங்கள் ஆராயப்பட்டன. வறுமை, குடும்பச் சிதைவால் நேரும் தனிமை உள்ளிட்ட பல காரணங்கள் கண்டு பிடிக்கப்பட்டு அதற்குப் புதிய வேலை வாய்ப்புகள், மறுதிருமணம் முதலியவை தீர்வுகளாக முன்மொழியப்பட்டன. இந்தச் சூழல்சார் நடவடிக்கை நல்ல பலனைத் தந்தது. இதைப் போல ஆணவக்கொலை / குற்றங்களை நிகழ்த்துவோருக்கான வாழ்வியல் தேவைகளைக் கண்டறிந்து அதற்கேற்பச் சூழல்சார் நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம்.
சூழல்சார் நடவடிக்கைகள் ஏன் தேவை?
சூழல்சார் நடவடிக்கையில் விழிப்புணர்வு முகாம்கள், தொடர் பிரச்சாரங்கள் முக்கியமானவை. தமிழ்நாட்டில் சூழல்சார் நடவடிக்கைகள் இல்லாமல் இல்லை. இந்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை வெளியிட்டுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான அறிக்கை, தமிழ்நாட்டில் 2022 ஆம் ஆண்டில் மட்டும் 988 விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டதாகக் குறிப்பிடுகிறது. தவிர, பொங்கல் பண்டிகையின் போது சமத்துவ விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. 1990களின் இறுதியில் சமத்துவபுரங்கள் உருவாக்கப்பட்டன. இவ்வளவுக்குப் பிறகும் குற்றங்களின் எண்ணிக்கை குறையாமல் இருப்பது சூழல்சார் நடவடிக்கைகளின் மேலதிகத் தேவையை வலியுறுத்துகிறது எனலாம்.
சூழல்சார் நடவடிக்கையின் மற்றோர் அம்சம் புலப்பெயர்வை ஊக்குவிப்பது. புலப்பெயர்வால் புதிய வாழ்வியல் கூறுகளோடு ஒருவர் இணையும் போது புதியதை ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு அவர் பழக்கப்படுகிறார். அதன் வழி அவருக்குப் புதிய உலகம் கிடைக்கிறது. மகிழ்ச்சியான வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார். இங்கு பல சிக்கல்களின் அடிப்படையே புதியதை ஏற்றுக் கொள்ளும் மனநிலை வாய்க்கப் பெறாமல் இருப்பதுதான். அந்த மனநிலை வாய்த்துவிட்டால் சாதி மறுப்புக் காதலை ஏற்றுக் கொள்வதில் மனத்தடை இருக்காது. எந்தச் சூழலிலும் அவர்களால் வாழ்ந்துவிட முடியும். சான்றாக, புலப்பெயர்வு மக்களிடம் அதிகரிக்கும் சுய சாதி / அடையாள மறுப்புக் காதல் திருமணங்களைக் கூறலாம். அவர்களிடையே காதல் திருமணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்குக் காரணம் அவர்கள் புதியதை ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்குப் பழக்கப்பட்டு விட்டதே ஆகும்.
சூழல்சார் நடவடிக்கையில் இன்னோர் அம்சம் படிப்பறிவு அதிகரிக்கும் விகிதத்திற்கு ஏற்ப குற்றங்கள் குறையும்படிச் சமூகத்தைத் தயார்செய்வது. அதாவது, படிப்பறிவு விகிதம் அதிகரிக்கின்ற அளவுக்குக் குற்றங்களின் எண்ணிக்கை குறைய வேண்டும். மாறாகக் குற்றங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்குமானால் படிப்பறிவின் அதிகரிப்பு அர்த்தமற்றதாக ஆகிவிடும். ஒருவர் சமூக ஒழுங்கிற்குத் தேவையான குணாம்சங்களைக் கல்வியின் வழி பெற்றாலும் அவர் அந்த ஒழுங்கைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதற்குத் தடையாக இருக்கும் காரணிகள் கணக்கில் கொள்ளப்பட வேண்டும். அந்தக் காரணிகளைச் சூழல்சார் நடவடிக்கையின் வழி சரி செய்யும் போது நல்ல பலனைப் பார்க்கலாம்.
அதிகார விற்பனைக்கு எதிரான விழிப்புணர்வு
குற்றங்களை முன்னிட்டு அதிகாரத்தை அனைத்து மட்டங்களிலும் விற்பனைப் பொருளைப் போல பாவிக்கும் போக்கு அதிகரித்திருக்கிறது. அதிகார விற்பனை என்பது வெளிப்படையான சந்தையைப் போன்ற நடவடிக்கையைக் கொண்டிருக்காவிட்டாலும் அதிகாரத்தை வாங்குவதும் விற்பதும் ஒருவகையில் ஆணவக் கொலை / குற்றங்களால் பாதிக்கப்படுகிறவர்களை நிரந்தப் பாதிப்புக்கு உரியவர்களாக மாற்றுகிறது. இந்தத் துயரம் பொதுவெளிக்கு வருவதேயில்லை. குறிப்பிட்ட ஆணவக் குற்றத்தில் சட்டத்திற்கு அப்பாற்பட்ட உள்ளூர் சமூக, அரசியல் அதிகாரத்தைப் பெற்ற ஒருவர் உள்ளே நுழையும் போது குற்றத்தின் தன்மை முற்றிலும் மாறிப்போகிறது. குற்றமிழைத்தவர் சமூக, பொருளாதாரத்தில் அதிகாரம் பெற்றவராக இருப்பாரேயானால் அவரால் கூடுதலாக மற்றோர் அதிகாரத்தை வாங்கித் தம்மை எல்லா வகையிலும் தற்காத்துக்கொள்ள முடிகிறது. இதில் பாதிக்கப்பட்டவருக்கான நியாயத்தின் அனைத்துக் கதவுகளும் அடைக்கப்பட்டு விடுகின்றன. இது ஆணவக் கொலை / குற்றங்களில் மட்டுமில்லை. பிற வகையான குற்றங்களிலும் நடக்கிறது. இதனால் ‘அதிகாரம்’ என்பது விரும்பத்தகாதது என்ற முடிவுக்கு வர வேண்டியதில்லை. அதிகாரம் தேவைதான். அது களத்தில் யாருக்காக நிற்கிறது என்பதே முக்கியமானது. அதிகாரம் வாய்க்கப்பெற்றவருக்குப் பாதிக்கப்பட்டவரின் பக்கம் நிற்க வேண்டும் என்கிற எண்ணம் உருவாகாத வரை அவரது இயங்கியல் அறத்திற்கு அப்பாற்பட்டே இருக்கும்.
சூழல்சார் நடவடிக்கை நல்ல பலனைத் தரும் என்பதால் ஆணவக்கொலைக்கு எதிரான தனிச் சட்டம் தேவையில்லை என்பது பொருளல்ல. சூழல்சார் நடவடிக்கை எதிர்காலத்திற்கானது; நிரந்தரத் தீர்வுக்கானது. தனிச்சட்டம் என்பது உடனடித் தேவைக்கானது. நிரந்தரத் தீர்வுக்குத் துணைநிற்பது. இரண்டும் ஏக காலத்தில் நிகழ வேண்டும்.
Art : Azadi Paints
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்புக்கு அருகில் உள்ள அக்கனாபுரத்தைச் சேர்ந்தவர். தற்போது மதுரை மாவட்டம், கருமாத்தூரில் உள்ள அருள் ஆனந்தர் கல்லூரியின் தமிழ்த்துறையில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். நானூறுக்கு மேற்பட்ட சமுதாயம், இலக்கியம், பொருளியல் சார்ந்த கட்டுரைகளை எழுதியுள்ளார். தொல்காப்பியத்தில் பொருளியல் பெறும் இடம், புறனடைக் கோட்பாடு – தொல்காப்பியர் மரபு, புறனடைக் கோட்பாடு – வீரசோழிய மரபு, தமிழ் இலக்கிய வரலாறு (பல புதிய குறிப்புகளுடன் 1970 முதல்…), அவதூறுகளும் புனிதப்படுத்தல்களும் நீர் – நிலம் – சாதி – சாஸ்திரம்’ முதலிய நூல்கள் எழுதியுள்ளார்.








Leave a Reply