தலைமுறைகள்
கி.மு 30000
அம்புக் குறியை வரைந்து
அதன் மீது புள்ளி வைத்து
எனது படம் என்று திளைக்கும் வேட்டைக் குடி நான்
யார் கை படாமலும் கட்டப்பட்ட என் வீடு
சில பாறைகளால் ஆனது.
கி.மு 1500
பூமி என்றாலும் வானம் என்றாலும்
தாகம் தணிக்கிற எதையும்
நீர் என்று பெயரிடுகிற குடி நான்
என்னிடம் வந்த ஒரு சூனியக்காரி
வார்த்தைகளை விஷயங்களுடன்
உண்மையில் இணைப்பது எது என்று கேட்டாள்
பயம் என்று சொன்னேன்
பாதி சமாதானம் அடைந்தவளாகச் சென்றாள்.
கி.மு 600
குடிக்கும் போது
தண்ணீர் சிந்திவிட்டால்
எனது தோளின் மீது
ஒன்றிரண்டு இலைகளைத் தூவிக் கொள்ளும்
உழுகுடி நான்
நேற்றிரவு நிலவுக்கு அடியில்
என் விதைத் தானியங்களோடு
பேசிக் கொண்டிருந்தேன்.
காணாமல் போன
எருமைக் கன்றுக்காக
தொம்பையில் இருந்த பனி வரகு மிகவும் வருந்தியது.
கி.பி 1800
முதுமையில் நெற்றிக் கோடு விழுவது போல
வரலாற்றில் கோடு விழுந்து விடுகிறது
காலத்தில் அந்தக் கோடு பிளவானது
பிணம் எரிக்கும் வெளிச்சத்தில் தெரியும்
கிழக்கில் எனது வீடு உள்ளது
இங்கு மான்கொம்புக்கு நிகராக மாட்டுக் கொம்பு இருக்கிறது.
கி.பி 1975
புத்தகங்களைக் கண்ணில் ஒத்திக்கொண்டு கற்கும்
முதல் குடி நான்
நடந்ததால் தொட்டதால் பார்த்ததால் தீட்டெனப்
பெற்ற சவுக்கடித் தழும்புகளே
வரலாறெனப் படிக்கிறேன்
ஒதுக்கமான தெருவில்
என் வீட்டில் ஒற்றைக் காகிதமும் புத்தகம்தான்
கி.பி 2002
தாமஸ் மன்றோ தந்த
வெங்கலக் கிண்ணியில் நெருப்பைக் கொட்டி
அண்ணன் தான் சட்டைச் சுருக்கம் போகத் தேய்த்துத் தந்தான்
அப்பாதான் எனது ஷூவைப் பளபளக்கச் செய்தார்
அலுவலகத்தில் என் முகத்தைப் பார்த்தால்
உடனே பேச்சை மாற்றுகிறார்கள்
கூடியவர்கள் களைந்து விடுகிறார்கள்
கி.பி 2020
பெரிய வீட்டுப் பெண்
ரொம்ப ஆசைப்பட்டாள்
என் குரலும் பாட்டும் மட்டும் திருமணத்திற்குப் போதாது என்றேன்
செங்கல் கருங்கல் ஆனது போல காத்திருந்தாள்
கேம்பிரிட்ஜ் வளாகத்தில் எங்கள் வீட்டுத் தொட்டிச் செடிக்குத்
தினமும் தண்ணீர் ஊற்றுகிறாள்
அவளது பெற்றோரை விமானம் ஏற்றிவிட்டுத் திரும்புகிறேன்
கி.பி 2025
ஒரு கையில் புத்தகத்தோடு
சுட்டு விரல் வானத்தைக் தொடும் சிலை
விஜயவாடாவில் உயர்ந்து நிற்கிறது
“இளம் காதலர்களை வெட்டிப் படுகொலை” என்று
தொலைக்காட்சியில் செய்தி ஓடுகிறது.
நவலையின் கோடைக்காலம்
என் வாழ்விலிருந்து எருமைகளையும்
கோழிகளையும் கழித்து விட்டால்
மணலில் தன்னைத் தேய்த்துக் கொண்டிருக்கும்
ஒரு கற்றாழை போன்று இருக்கும் என் உடல்
அடர்த்தியான சேறு போன்ற
என் இரத்தத்தில்
ஒரு குட்டையான எருமை சிக்கிக் கொண்டுள்ளது
அது முனகிக் கொண்டிருக்கிறது
புரண்டு உருள
கலங்கிய எட்டிக் குட்டை ஏரியைத் தேடும்
அதன் துன்பத்தைப் பார்த்து வருந்துகிறேன்.
என் நெற்றியில்
சிறகு கொண்ட ஒரு சேவல் வாழ்கிறது
புருவங்களுக்கு இடையில்
நாள் முழுவதும் கொத்துகிறது
அதற்கு எப்படி இரை போடுவது என்றும் தெரியவில்லை
அதனோடு எப்படிச் சண்டை போடுவது என்றும் தெரியவில்லை
இந்த வெட்டாப்பில்
எருமையும் சேவலும் அடிக்கடி பார்த்துக் கொள்கின்றன
எனக்கு டிராக்டரோ
பண்ணையோ வேண்டாம்
எவ்வளவு இருளாக இருந்தாலும்
பதற்றமடையாத விளக்கு போல இருப்பதற்கு
எனக்கு
எருமையைப் பிடித்துக் கட்ட ஒரு கயிறும்
சேவலை ஓட்டி அடைக்க ஒரு கூடையும் போதும்.
உயிர் கொளுத்திகள்
மகாபாரதத்தில் யாரும்
புகைபிடித்ததாகத் தெரியவில்லை
எதிரே நிற்கும் யாசகனிடம் பேசுவதற்கு முன்பு
கர்ணன் தனது காதுக்குப் பின்னால் இருந்து
ஒரு சுருட்டை எடுத்துப்
பற்றவைப்பதைக் கற்பனை செய்கிறேன்
அர்ஜுனன் விரலிடுக்கில் உள்ள
சுருட்டுச் சாம்பலைத் தட்டியபடி
புகை வளையங்கள் ஊதுவதைக்
கற்பனை செய்கிறேன்
நான் இயல்புக்குத் திரும்பியதும்
மகாபாரத கதாபாத்திரப் பெயர்களில் உள்ளவர்கள்
தொலைக்காட்சியிலும் பொதுவிலும்
நாள் முழுவதும்
புகைக்க நெருப்பெட்டி தேடுவதைப் பார்க்கிறேன்
புகைக்கக் கொளுத்துவது
அவ்வளவு நல்ல செயலில்லை என்று
வியாசர் மகாபாரதத்தில் தடைவிதித்தார்
நான் திருட்டு சிகரெட் கூடப் புகைத்ததில்லை
புகைக்க விரும்பியதும் இல்லை
ஆனால் அதை உறுதியாகத் தொடர முடியவில்லை
காதலித்ததால் மகளையே கொளுத்திய
வெறியர்கள் தெருவில் திரியும் போது
அவர்களை எரிக்க முடியாத இயலாமையில்
நாலைந்து சுருட்டுகளை ஒன்றாகப் பற்ற வைத்து ஊதுகிறேன்.
குரங்கு வாலில் எரியும் தீயின் நிறம்
எனக்குப் பேசத் தெரியாது
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு
அச்சிடப்பட்ட ஓலைக் காகிதத்தால் செய்யப்பட்டது எனது வாய்
அதில் இருக்கும் சொற்களைப் படிக்கிறேன் அல்லது
இதயப் பூர்வமாக ஒப்பிக்கிறேன்
ஒரு முப்பரிமாண இலையான
என் இதயத்தின் நிறமியை
நீங்கள் அன்பு என்று புரிந்து கொள்வதால்
ஒப்பிக்கும் எனது செயல்
உங்களுக்குப் பேசுவதாகத் தோன்றுகிறது
வாலில் தீயுள்ள குரங்கு மனிதர்கள்
உதட்டை அலங்காரம் செய்வதாகச் சொல்லி
காவி நிறத்தைக்
கட்டாயப்படுத்தி வாயில் பூச முயல்கிறார்கள்
மறைமுகமாக
அச்சிட்ட பழைய ஓலைக் காகிதத்தை அழிக்க வருகிறார்கள்
நான் அதைப் படிப்பதைக் கெடுக்க வருகிறார்கள்
கமுக்கமாக வரலாற்றை அழிக்கும்
அது யாரும் விரும்பாத காவி நிற உதட்டுச்சாயம்
அது முதலில் நான் பழகிய சொற்களை
எனது பழங்காலச் சொற்களை அழிக்கும்
குரலை அழிக்கும் இறுதியில்
தொண்டையை இறுக்கும்.
Art : saatchiart.com
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நவலை என்னும் சிற்றூரில் பிறந்த இவர் அரசு பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறார். சொற்களால் பொம்மை செய்பவன் என்று கூறிக்கொள்ளும் இவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் கவிதை எழுதுகிறார், தற்போது மொழிப்பெயர்ப்பிலும் ஈடுபட்டு வருகிறார்.
வெயில் ஒளிந்துகொள்ளும் அழகி, சதுரமான மூக்கு, துரிஞ்சி, தண்ணீரின் சிரிப்பு, மற்ற விலங்குகள் ஆகிய கவிதைத் தொகுப்புகளும் எழுத்தெனப்படுவது என்ற புதிய நோக்கில் இலக்கண நூலும் “a piece of moonshine at dinner” (Writersgram publication) என்ற ஆங்கிலக் கவிதைத் தொகுப்பு வெளிவந்துள்ளன.
சிறார் இலக்கியத்தில் தங்கக் குருவி, காடனும் வேடனும், ஊசி எலியும் ஆணி எலியும், லிமொ ஆகிய நான்கு நாவல்கள் உட்பட பத்துக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.








Leave a Reply