‘தடாரி’ இணைய இதழ் தொடங்க உள்ளேன். ‘கலை – அரசியல் – அறிவியல்’ என்னும் பொருண்மையில். முதல் இதழைத் தவிர்த்து பல்துறை சார்ந்த உரையாடல்களை நிகழ்த்துவதே முதன்மைச் செயல்பாடு.

நண்பனுடன் சேர்ந்து விளம்பர நிறுவனம் நடத்திக்கொண்டிருந்த என்னை ஊடகத் துறையின் பக்கம் மடைமாற்றிய கணையாழி ஆசிரியர் ம.ராசேந்திரனுக்கு முதன்மையான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதன் பின் திக்கு தெரியா வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த போது, திருவண்ணாமலைக்கு அழைத்துத் தங்கள் வீட்டில் தங்க வைத்து வம்சி பதிப்பகத்தில் வேலை கொடுத்ததோடு மட்டுமல்லாமல் விகடனில் வேலைக்குச் சேர்த்து விட்ட கே.வி.ஷைலஜா, பவா இருவருக்கும் நன்றி மட்டுமல்ல வாழ்நாள் முழுவதும் நினைத்துப் பார்க்கக் கூடியவர்கள். ஆனந்த விகடனில் பணிக்குச் சேர்த்த ரா.கண்ணன், என்னை ஆற்றுப்படுத்தித் தந்தையைப் போல் வழிகாட்டிய ரவி பிரகாஷ். மிக முக்கியமாக தடம் இதழுக்காக அதன் பொறுப்பாசிரியர் வெய்யிலுடன் பணியாற்றிய நாட்கள் இதழியல் துறை மட்டுமல்லாது, இலக்கியத் துறைக்குமான என் பொற்காலம் என்பேன். நீலம் இதழில் பணிக்குச் சேர்த்த அதன் ஆசிரியர் பா.இரஞ்சித் அதற்குக் காரணமாக இருந்த எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம் இருவருக்கும் நன்றி. வெறுமனே படைப்புகள் வாங்கித் தருவதோடு மட்டுமல்லாமல் சுதந்திரமாக இயங்க வைத்து, என்னிடம் ஆசிரியர் அளவுக்கு ஸ்கில் இருப்பதை எனக்கே அடையாளம் காட்டிய நீலம் பொறுப்பாசிரியர் வாசுகி பாஸ்கருக்கு நன்றி. ஜனசக்தியில் என்னைப் பத்திரப்படுத்தியிருக்கும் வயிரவன் மணிமாறன் ஷைலஜாவைப் போல் வாழ்நாளெல்லாம் நினைத்துப் பார்க்கக் கூடியவர். இது தனிப் பாதையல்ல; என் முன்னும் பின்னும் சுற்றியும் ஏராளமானவர்கள் உண்டு. எல்லோரும் கூடி தடாரியை இசைத்தாடுவோம். அரிய பல செயல்கள் செய்வோம்.


பச்சோந்தி

தடாரி – ஆசிரியர்

Share :