எர்ரன்ன
கலாவந்துலு துல்யபாகா.
1.
துல்யபாகா
நானொரு பஞ்சவர்ணக்கிளி.
உன்வீட்டின்
பின்வாசலில் அமர்ந்தபடி
நீ தலை வாரிக்கொண்டிருக்கும்போது
அதோ அந்த மரத்திற்கும்
உன் வீட்டிற்குமிடையில்
சப்தமிட்டவாறே பறந்துகொண்டிருப்பேன்
நீ லேசாகத் தலைசாய்த்து
மேலே
லயித்துப் பார்ப்பதை
இந்தக் கின்னரர்கள் வந்து
வியந்து வியந்து
சொல்லி மாய்வார்கள்.
2.
துல்யபாகா இங்கு
நீயே நிறை நீயே இறை
நானொரு சம்பூரணவாதி.
யுகயுகங்களாய்
இங்கிருக்கும் மலையை
கரைதொட்டோடும் நதியை
கிடுகிடுவென வளர்ந்த
நெடுமரத்தை
சதா நள்ளிரவில் அசையும்
அதன் கிளைகளை
சில்வண்டுச் சப்தங்களை
எப்போதும் கிளைக்கும்
தனித்த நிலத்தின்
அமானுஷ்யங்களை
பூடகங்களை பெருநிகழ்வுகளை
எல்லாம் என்அற்புதமே
உன்னோடு
பொருத்தமுடியுமா என்றுதான்
ஜென்மா ஜென்மாந்திரமாகக்
கண்காணித்துக்கொண்டிருக்கிறேன்.
3.
துல்யபாகா இன்று
நானொரு மீன்கொத்தி
ஆற்றின் மேலிருந்து
நின்றவாறே பறக்கிறேன்.
தெளிந்த ஆற்றில் மீன்கள்
இங்குமங்கும் நீந்துவது தெரிகிறது
அதில் மினுங்கும்
ஒரேயொரு மீனைக்கண்டதும்
இறக்கையின் படபடப்பு அடங்கியது
துல்யபாகா
பிரத்யட்சமே ஆதாரம்.
அற்புதச்சரீரத்தின் மீதூறும்
சிலநூறு கண்களுக்கு மத்தியில்
சிற்பத்தேர் போல மின்னும்
பொன்னிற நதிக்கரையில் நடக்கிறாய்
அந்திச் சூரியன் மங்கிச்சாயும் வேளையில்
நதி மேலும் ஜொலிக்கிறது
செந்நாரைக் கூட்டம் ஒரு கரையிலிருந்து
மறுகரைக்கு மாறுகிறபோது
முற்றத்தில் விளக்கேற்ற விழைகிற
பெண்ணின் கண்கள்
இளநிலா வந்துள்ளதாவென
வானைப் பார்க்க வளர்நிலா வந்திருந்தது.
நடுமுற்றத்தில் விழுந்த அப்பேரெழிலின் நிழல்
எளிய இம்மனதை உன்னதமாக்குகிறது.
இளங்குளிரில் வெளிவந்த செந்திரு
இரவை, நிலவை, வானத்தை, குளிர் பருவத்தை
தன் அழகிய முகத்தில் சுமந்தபடி
உன் வீட்டிற்குக் கொண்டு வருகிறாள்.
உன் வீதியிலுள்ள வீடுகளில் ஒளிரும்
மெல்லிய விளக்கொளிகள் மலைமீதிருந்து பார்ப்பவர்களுக்கு
ஒரே நேரத்தில் பொறாமையையும் பரவசத்தையும் பரிசளிக்க
வளர்நிலா இருளில் காதலர்கள் இழையும்
தருணத்தைப் போல மிளிர்கிறது
நதியோசைக்கு ஏற்றபடி நடைபழகும் நீயும்,
உன் நடையோசைக்கு இசைந்தபடியோடும் நதியும்
ஒன்றுசேர்ந்தே இக்கிழமையை
இவ்வுலகிற்கு வழங்கினீர்கள்.
மெனக்கிடாத அழகையும் அற்புதத்தையும்
வழங்கும் இச்செவ்வாய்க்கிழமையை உன்னைமீறிய
துணிபில் பணிந்து வழிபடுவேன்.
பதிலுக்கு செவ்வாய் வழங்கிய தருணத்தைச்
செந்திரு தன் கூந்தலில்
சூட வைத்திருப்பேன்.
அவளதைக் கடைக்கண்ணால் கண்டதும்
நான் பஸ்பமானேன் நீயில்லாத மகாபஸ்பம்.
4.
துல்யபாகா இன்று
நானொறு மணிப்புறா
திராட்சாராம கிராமத்தின் அழகின் மீதும்
உன் சதிரொலிக்கும் மாளிகையின் மீதும்
என் குருகுச் சப்தத்தால் நிறைந்திருப்பேன்
நீயே என் நிர்மலம்.
திரண்ட தோளில்
சுருள் சுருளாய் விழும்
ஈர முடிக்கற்றையை லேசாக
சிலுப்பிக்கொண்டே
நதிக்கரைக்குச் சற்றுத் தள்ளி
தனியாகயிருக்கும்
உன் வீட்டைப் பார்க்கிறேன்
அது தபோலோகத்திற்கும்
பாதாளலோகத்திற்கும்
இடையேயான சொர்க்கமென
மிதக்கிறது
எனது ஆவல்
அதன் கிடைமட்டத்திலிருந்து
லோகாயதப் பறவையைப்போல
நின்திசை நோக்கிப் பறந்தது,
பிறகு அக்கணமே உறைந்து
உன் பேரழகை
என் கடந்த காலச் சயனத்தின்
மீது சொட்ட
அது மிகுந்த ஒளிதரும் பகல்களின் மீதும்
நெகிழ்ந்த துயர் தரும் இரவுகளின் மீதும்
வழிந்தோடுகிறது.
தரிசனத்திற்கும் தளைக்கும் இடையில்
அறுபட்ட இக்காதலை
இவ்வாறு படையலிடுகிறேன்.
5.
துல்யபாகா இன்று
நானொரு ஏகாந்தவாதி
கோதாவரி சில்லிட்டக்காற்றை
உங்களுக்கு வழங்கியுள்ளது
நீங்கள் பீமேஸ்வரசுவாமியை
வழிபடப்போகிறீர்கள்
பிரகாரங்களில் தம்பூரா
இசை நிறைவதை
இங்கிருந்தே
நான் கேட்கிறேன்.
மண்டபம் முழுதும் பனி படர்ந்திருக்கிறது
ஆற்றின் கரையோரப் புங்கை தளர்ந்தசைகிறது
எனது ரணம் தன் ஜீவிதத்தைக் கேள்விகேட்கிறது
தங்கள் நினைவு
பகலும் இரவுமாகப் பாகுபாடற்ற துன்பத்தை வழங்கியுள்ளது
ஜாதிமுல்லையும் ஜடாபில்லையுமணிந்த
உங்கள் கூந்தல் இந்நதிக்கரையைச் செழுமைபடுத்துகிறது
தளர்ந்த உங்கள் முலையை, சரிந்த இடையை
அகன்ற தோளைப்பற்றித் தழுவி மனதார
உச்சிமுகர்கிறேன் துல்யபாகா
நாடோடிகளுக்குப் பெருவாழ்வில்லை என்கிறது அசரீரி
நான் விடைபெற்றுக்கொள்ளட்டுமா?
6.
என்றும்
நானொரு
ரகசிய ஆராதனை
எர்ரன்ன
என் சீலைமணம் மிகுந்த செல்வமுடையது.
என் கை முத்திரைக்கு ஒரு சமஸ்தானம்
கட்டுப்பட்டுள்ளது
என் தம்பூராவும் வீணையும்
இந்நதியின் கரைகளுக்குச் சொந்தமானது.
என் உடலை இம்மணிற்கே பங்களிக்கிறேன்.
சென்று வருங்கள்
திராட்சாராமத்தையும் பீமேஸ்வரரையும்
நீர்காகத்தையும், நதிக்கரையையும்
தம்பூராவையும் நான் பிரியமுடியாது.
இக்கோவிலின் மூலவரிடம் எப்போதும்
ஒரு ஒளியைப் பார்ப்பேன்
இனி நீங்கள் அங்கு இருப்பீர்கள்
எர்ரன்ன.
குறிப்பு :
எர்ரன்ன :
1960 களில் ஆந்திராவின் கோதாவரி மாவட்டத்தில் திராட்சாராம என்னும் கிராமத்தில் அமைந்த பீமேஸ்வர சுவாமிகள் கோவில் உள்ள ஆற்றங்கரையில் வசித்த நாடோடி.
இவர் இப்பகுதியில் தல்லாபிரகடா என்ற பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்தவரிடம் தஞ்சமடைந்திருந்த, தேவதாசிக் குடும்பத்தைச் சேர்ந்த கலாவந்துலு துல்யபாகா என்பவரை அவரின் கலைக்காகவும் அழகிற்காகவும் காதலித்தவர். துல்யபாகா கலையையும் தன் சூழ்நிலையும் காரணமாகச் சொல்லி எர்ரன்னவின் காதலை நிராகரித்தார்.
தல்லாபிரகடா சிவசோமலு (58) ;
எர்ரன்ன – துல்யபாகாவின் காதல் கதை குறித்து எழுதியவர். 1990 களின் மத்தியில் நவீனகவிதைக்கு எழுத வந்தவர். பண்பாட்டு மானுடவியல் மற்றும் நாட்டுப்புறவியல் பேராசியராகப் பணிபுரிகிறார்.
Art : Chevman
இளங்கோ என்னும் இயற்பெயர் கொண்ட கவிஞர் கண்டராதித்தன் விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தில் பிறந்தவர். சீதமண்டலம், திருச்சாழல், பாடிகூடாரம் ஆகிய கவிதை நூல்கள் வெளிவந்துள்ளன. ஆனந்த விகடன் விருது, குமரகுருமரன்-விஷ்ணுபுரம் விருது, எழுத்துக்களம்(சேலம்) வாழ்நாள் சாதனையாளர் விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.








Leave a Reply