நல்லொளியின் மழை
மஞ்சள் நிலவொளியால் மெழுகிய
மென் தரையில் மௌனமாக நிற்கின்றன படகுகள்
கடிகார முள்ளின் கூரிய நிழல்
என்னை வதைக்கிறது
அடிவயிற்றில் முளைத்து வளர்ந்த
ஒரு முட்செடி இதயத்தை நோக்கிக்
கிளைக்கிறது
தன்னுடலைத் தானே சுமந்து செல்லும் புராதன வேதனை
என்னைச் சூழ்கிறது
என்னுடைய தனிமையை யாருக்கும் கையளிக்க முடியாத துயரை இரவின் மீது
விடிய விடிய தட்டச்சு செய்து கொண்டிருக்கிறேன்
துளித்துளியாக
பொழியத் தொடங்கி விட்டது
நல்லொளியின் மழை
காளிபூஜை
எழுத்துக்குள்
வெகு ஆழமாகச் சென்று விட்டேன்
நடக்க நடக்கக் கால்கள்
மகிழ்ச்சி அடையும் ஒரு பயணமது
எனக்கு அங்காரும் துணையில்லை
பலவித தனிமைகளிலிது விசேஷமானது
எழுத்துக்குள் ஏதோவொன்று நடக்கிறது
எழுத்தின் ரீங்காரம் படியும் மனதில் காளி குடியேறுவாள்
தூமைக்கோடு வழிய வழிய
அங்கே காளி நடமிடுவாள்
கண்ணாடி ஜாடி போல் மனம் தரையில் விழுந்து சில்லு சில்லாக இறகு முளைத்து பறக்கிறது
மூளைக்குள்
எழுத்துகளின் தூபம் புகைய
கபாலத்துக்குள் நடக்கிறது
காளி பூஜை
சீட்டுக்கட்டுகள்
மனிதர்களின் நீள் வரிசை
முன் நின்றவனைத் தள்ளி விட்டேன்
வரிசையாக ஒருவர் மீது ஒருவர் மந்திரித்து விட்ட சீட்டுக்கட்டு போல் சரிந்தனர்
பலே பாண்டியா என்று காற்று என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டது
பலே பாண்டியா என்று காற்று என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டது
சொற்களின் தனிமைக்குத் துணை இருந்தேன்
அவை சொன்னதை எழுதினேன் வேறென்ன செய்து விட்டேன்
எதற்கு எனக்கிந்த பாராட்டு
வேறென்ன செய்து விட்டேன்
எதற்கு எனக்கிந்த பாராட்டு
கருவறையில் வளர்ந்தவளை மணவறைக்குக் கூட்டி வந்து மனைவியாக்கிக்
கருப்பைக்குள் இளங்காளியை
வளரச் செய்தேன்
முத்தத்தாலவள் மணி வயிற்றில் உபதேசம் செய்ததற்குக்
கை மேல் பலன் கிடைத்தது
உபதேசம் செய்ததற்குக்
கை மேல் பலன் கிடைத்து
காய்ச்சல் போல இன்பம் பரவி
சுருண்டு கிடந்தவள் எழுந்து அமர்ந்தாள்
வரிசையாக நின்றிருந்த
நினைவுகளைத் தள்ளி விட்டாள்
ஒன்றின் மீது ஒன்று சரிந்தன நினைவுகள்
எழுத்துப்பசி
கவிதை எழுத அமர்ந்தேன்
எதுவும் தோன்றவில்லை
மனக் காகிதத்தைப் புள்ளிகளால் நிரப்பினேன்
புள்ளிகளின் உயிர்த்தலத்தில்
நொதித்துக் கிடந்தன
எழுத்துப்பசி கொண்ட நுண்ணுயிரிகள்
வார்த்தைகளை உரித்துக் கை நிறைய சுளைகளை எடுத்துக்கொண்டு
உள் நுழைந்தான் தூமகேது
பசித்த நுண்ணியிரிகள்
கைகளை நீட்டிக் கெஞ்சின
எல்லா நுண்ணுயிர்களின் கைகளையும் வாளால் கொய்து
தூளியை நிரப்பிக் கொண்டு
கண்களின் ஜன்னல் வழியே
குதித்து வெளியேறினான் தூமகேது
உதிரிப்பூக்கள்
அ) மூக்குத்தி போலொரு சொல்
ஜிமிக்கி போலொரு சொல்
வைர அட்டிகை போலொரு சொல்
ஒட்டியானம் போலொரு சொல்
கொலுசு போலவுமொரு சொல்
உனக்காகத்தான் எல்லாம்
எடுத்து அணிந்து கொள்
உனதழகில்
கண்கள் பனிக்கின்றன தாயே
உன் தகப்பன்தான் எத்தனை செல்வந்தன்
ஆ) யாருடைய மனதையும்
புண்படுத்த விரும்பாத நான்
என் மனதையே பலமுறை புண்படுத்தி இருக்கிறேன்
அதற்குப் பிராயச்சித்தமாகவே மனதை ஆகாயத்தில் பொருத்தி மேகங்களாக மிதக்க விடுகிறேன்
மலை உச்சியில் வைத்து மனதைத் தாலாட்டுகிறது காற்று
இ) எதையும் தெரியாது
என்று சொல்ல முடியாது
எல்லாமும் ஏதோ ஒரு வகையில் பழக்கப்பட்ட துக்கங்கள்
அடரிருளில் நான் சந்தித்த முகமறியாத் துக்கமொன்று
என் கைகளைப் பற்றிக் கொண்டு என்னை நினைவில்லையா என்றது
முகம் நினைவில்லா விட்டாலென்ன உன் தழுவல் நினைவில்லாமலா என்றேன்
ஈ) தட்டில் இருக்கும் மாமிசத் துண்டுகளுக்கு உயிர் இருக்கிறது என்று நம்புபவரைப் போல
முள் கரண்டியாலதைக்
குத்திச் சாப்பிட்டார்
காட்டுப்பன்றியை
ஈட்டியால் குத்தி மலர்த்தி
அதன் இருதயப்பூவை வாய்க்குழிக்குள் நிரப்பும் வேட்டைமுகத் தும்பனின்
சாயலவருக்கு
மௌனத்தின் விறுவிறுப்பு
நன்றாக உறங்கி விட்டேன்
ஒலி வடிவில்
என்னைத் தேடிவந்த நண்பன்
கதவு தட்டிய ஓசை
காதில் விழவில்லை
விழித்துக் கொண்ட கதவு
அவனிடம் பேசி இருக்கிறது
பேசிப் பேசி
சொல்லாக உறைந்து விட்ட கதவை
காலையில் திறந்ததும்
என்னைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தது காற்று
வழக்கமாக அமரும் நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து
நண்பா ஒரு கப் காப்பி என்றது
காற்றுக்குக் கரகரப்பான அவனது அதே குரல்
காபிக்குள் கலந்திருந்த சொற்களை நாவால்
துழாவி துழாவி சுவைத்த படி
மௌனமாக அமர்ந்திருந்தோம்
மௌனத்தின் விறுவிறுப்பு சுர்ரென்று மூளைக்கு ஏறியது
( லா.சா.ராவுக்கு )
art : Babebeeblue








Leave a Reply