1
ஒரு சொல்லுக்குள்
கடல் ததும்பி நிற்பதை
இன்று பார்த்தேன்.
பின்
கடலின் மேல்
ஒரு சொல் எழுதப்பட்டதையும்
நின்று பார்த்தேன்.
அப்புறம்
அது ஒரு கடற்காகமென எழும்பி
வானில் திரிந்து கொண்டிருந்தது.
சற்றே பொறு.
என் தோளில் வந்தமர்ந்தால்
சொல்லி அனுப்புகிறேன்.
உன் கைகளுக்கு மாற்றிக் கொள்கையில்
அது ‘கா’வெனக் கரைந்து
வெள்ளை நுரையென வழிந்து
மஜ்ஜை வரை நனைத்தோடும்
மாயம் காண்பாய்.
2
உனக்குத் தர
மிகவும் அபூர்வமான
ஒன்றைத் தேடுகிறேன்
விலைமதிப்பில்லாத ஒன்றை
உலகம் இதுவரை அறிந்திராத ஒன்றை
நீ முற்றிலும் எதிர்பாராத ஒன்றை.
ஆனால் – ஏதொன்றும்
கைக்கு வரப்பெற்றதும்
நீர்ப்பாதையின் கூழாங்கல்லெனக்
குளிர்ந்து விடுகிறது.
ஏழு மலைகளுக்கப்பால்…
ஏழு கடல்களுக்கப்பால்…
இருண்ட குகையின்
கதவற்ற கூண்டுக்குள் தத்தும்
தங்கக் கிளியே….
கூழாங்கற்களைச் சேகரித்தபடி
நடுகல்லெனச் சமைந்து போன யாரையேனும்
தெரியுமா உனக்கு…?!
3
இரவின் தோட்டத்தில்
கருங்கல் சில்லுகளுக்கிடையில்
ஆயிரம் கால்களுடன் ஊர்ந்து செல்லும்
கரிய மரவட்டையென
நகர்கிறது இந்தத் தனிமை.
Art : craftandcherish








Leave a Reply