நீர்வாழ் பல்லாண்டுக் கொடித்தாவரமான தாமரையின் அறிவியல் பெயர் நெலும்போ நூசிஃபெரா (Nelumbo nucifera). இது நெலும்போனேசி குடும்பத்தைச் சேர்ந்தது. தாமரை மலர் பண்டைய இந்தியா மற்றும் எகிப்து நாடுகளில் புனிதமானதாகப் போற்றப்பட்டதுடன், வழிபாட்டுக்குரியதாகவும் இருந்தது. தாமரையின் வடிவங்கள் அக்கால வழிபாட்டுத்தலங்கள் மற்றும் கட்டிடக்கலை அலங்காரங்களில் அதிகமாக இடம்பெற்றிருந்தது. தாமரை ஓட்டமில்லாத நீர்நிலைகளிலும் நீர்த்தேக்கங்களிலும், சதுப்பு நிலங்களிலும் வளரும்.
இந்தியா மற்றும் வியட்நாமின் தேசிய மலரும் தாமரையே. (செந்தாமரை) இந்த நீர்வாழ் தாவரத்தில் தற்போது உலகில் இருப்பது இரண்டே இரண்டு சிற்றினங்கள்தான். ஆசியாவிற்குச் சொந்தமான இளஞ்சிவப்பில் இருக்கும் செந்தாமரை என்று பொதுவாக அழைக்கப்படும் நெலும்போ நூசிஃபெரா (Nelumbo nucifera) மற்றும் வட மற்றும் மத்திய அமெரிக்காவிற்குச் சொந்தமான இளமஞ்சள் மற்றும் வெண்ணிறத் தாமரையான நெலும்போ லூட்டியா (Nelumbo lutea.)
நெலும்போ என்னும் லத்தீன் சொல் ‘புனிதமான உணவு’ என்று தாமரையின் சத்துக்கள் நிறைந்த உண்ணக்கூடிய விதைகளையும் பல கலாச்சாரங்களில் இருக்கும் இம்மலரின் புனிதத் தன்மையையும் குறிக்கும் ‘நிலம்பா’ என்னும் சிங்கள மொழிச் சொல்லிலிருந்து பெறப்பட்டது. இரண்டு வகைத் தாமரைகளின் அறிவியல் பெயர்களின் சிற்றினப் பெயர்களில் இருக்கும் நியூசிஃபெரா விதைகளைக் கொண்டிருக்கிறது என்றும், லூட்டியா சேறு எனவும் பொருள்படும்.
தாமரை வேர்க்கிழங்கிலிருந்து நேராக வளரும். நீர் ஒட்டாத, மெழுகுப்பூச்சு கொண்ட, பெரிய இலைகளையும் காற்றுப்பைகள் கொண்டிருக்கும் தண்டுகளையும் கொண்டிருக்கும். தாமரை இதழ்களிலும் நுண்ணிய காற்றுப்பைகள் இருப்பதால் மலரிதழ்களும் நீரில் நனையாது.
இளஞ்சிவப்புத் தாமரையானது புனிதத் தாமரை, ஆசியத் தாமரை அல்லது இந்தியத் தாமரை என்றும் அழைக்கப்படுகிறது. இந்தத் தாமரை இந்தியா, சீனா, வியட்நாமில் மிக முக்கியமான சமயச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் மலர். 3000 வருடங்களுக்கு முன்பிருந்தே சீனாவில் சாகுபடி செய்யப்பட்டுவரும் தாமரை இந்து மதம் மற்றும் புத்த மதங்களின் மிக முக்கியமான குறியீடாகவும் உள்ளது. இந்தியத் தொன்மங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் முக்கியமான மலர்களில் தாமரையும் ஒன்று.
எகிப்திய, வியட்நாமிய மற்றும் இந்தியக் கோவில்களின் சுவர்களிலும் கூரைகளிலும் தாமரை மலர்கள் வரையப்பட்டிருக்கும். இந்தியாவில் கோலங்களும் பச்சைகுத்தும் மற்றும் மருதாணிச் சித்திரங்களும் தாமரை மலர் வடிவில் இருக்கும். உலகெங்கிலும் ஆபரணங்களில் தாமரை வடிவம் நூற்றாண்டுகளாக மக்களின் விருப்பத்துக்குகந்ததாக இருக்கிறது.
புராதனக் கட்டிடங்களின் முகப்புகள் தாமரை வடிவில் இருப்பதைக் காணலாம். புத்தர் உள்ளிட்ட பல கடவுள்களின் இருக்கையாக தாமரை மலர் இருக்கும். தாமரைத்தண்டுத் திரிகளில் விளக்கேற்றுவதும் தாமரை விதை மாலைகளைப் பூசையறையில் வைத்திருப்பதும் இந்துக்களின் வழக்கம்.
புத்த மதம் கூறும் 8 புனிதங்களில் தாமரையும் ஒன்று. எகிப்திலும் தாமரை புனிதமலரே. டுடன் காமன் கல்லறை திறக்கப்பட்டபோது அவரது உடலின் மீது தாமரை இதழ்கள் தூவப்பட்டிருந்ததைக் கண்டார்கள். தாமரை இறந்தவர்களை மீட்டெடுக்கும் என்றும், சில மந்திரங்கள் ஒரு நபரைத் தாமரையாக மாற்றிவிடும் என்றும் எகிப்தியர்கள் நம்பினார்கள். எகிப்திய நீலத் தாமரை எனப்படும் நீர் அல்லி, அங்கு பல்வேறு சடங்குகளில் பயன்படுத்தப்பட்டது.
பண்டைய பெர்சியா (ஈரானில்) தாமரை தூய்மை, பிரபுத்துவம், பரிபூரணம், ஆன்மீகம், பெண்மை மற்றும் வாழ்க்கைச் சுழலைக் குறிக்கிறது. சீன வரலாறு மற்றும் கலாச்சாரத்தில் மிக முக்கிய இடம்பெற்றுள்ள தாமரை சீன மொழியில் ‘லியான்ஹுவா ( Lianhua) என அழைக்கப்படுகிறது. சீன உணவுகள், சூப்புகள், தின்பண்டங்களில் தாமரைக்கொடியின் பாகங்கள் இருக்கும். சீனாவின் பிரபல மூன் கேக் தாமரை விதைகளின் விழுதில் தயாரிக்கப்படுவது.
தாய்லாந்தில், ‘புவா’ என்று அழைக்கப்படும் தாமரை புத்த மதம் சார்ந்த பல சடங்குகள் மற்றும் வழிபாடுகளின் ஒரு பகுதியாக இருக்கிறது. இங்கு பிரார்த்தனைகளின் போது மெழுகுவத்திகள் மற்றும் தூபக் குச்சிகளுடன் தாமரைகளையும் வைத்து வழிபடுகிறார்கள். தாய்லாந்தின் நோங் ஹான் ஏரியின் ஆழமற்ற நீரில் செழித்து வளரும் ஆயிரக்கணக்கான அழகிய இளஞ்சிவப்புத் தாமரைகள் சுற்றுலாப் பயணிகளைப் பல வருடங்களாகவே ஈர்த்து வருகிறது.
இந்து மதம் தாமரையைக் கொண்டாடுகிறது. தாமரை இல்லாத இந்துத் தொன்மங்களோ கலாச்சாரமோ இல்லை எனக் கொள்ளலாம். விஷ்ணுவின் தொப்புளில் இருந்து வளர்ந்த தாமரையிலிருந்து, படைப்பாளரான பிரம்மா தோன்றினார் என்கிறது இந்துமதம். தாமரைக் கண்கள், தாமரைப் பாதங்கள், தாமரைக் கைகள், இதயத்தாமரை என்று வர்ணனைகளும், தாமரைச்செல்வி, தாமரைக்கனி, தாமரைக்கண்ணன், செந்தாமரை என்ற பெயர்களும் தமிழகத்தில் பிரபலம். யோகாசனங்களிலும் தாமரை வடிவிலான பத்மாசனம் பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது.
இந்து மற்றும் புத்த மதங்களில் உள்ள சிக்கலான வடிவியல் வடிவமைப்புகளைக் கொண்ட பிரபஞ்சத்தின் காட்சிப் பிரதிநிதித்துவம் மண்டலம் எனப்படும் இதில் தாமரை மண்டலம் என்பதும் ஒன்று. ஆன்ம மண்டலமான இவை தியானத்தின் போது மனதைக் குவிக்கப் பயன்படுத்தப்படுகிறது. புத்த மதத்தின், அறிவொளிக்கான பாதையையும் வாழ்க்கைச் சுழற்சியையும் அடைய உதவிக் கொண்டிருக்கும் Unalome சின்னம் தாமரை வடிவத்தையும் கொண்டிருக்கும். உலகெங்கிலும் ஆற்றலுக்கான பச்சைகுத்துதலின் பிரபல வடிவமாக இந்தச் சின்னம் இருக்கிறது.
பகவத் கீதையிலும் கிருஷ்ணர் “எவனொருவன் செயல் புரிகையில் அச்செயல்களிடத்தில் பற்றுதல் கொள்ளாமல் அவற்றை இறைவனுக்கு அர்ப்பணித்து விடுகிறானோ அவன் நீரில் இருப்பினும் நீரினால் நனைக்கப்படாத தாமரை இதழ்களைப் போல் பாவங்களினால் பாதிக்கப்படாமல் இருப்பான்.” என்கிறார்.
மனித உடலில் “சக்ரா” என்னும் சக்தி மையங்கள் ஏழு உள்ளன என்று யோக சாஸ்திர நூல்கள் கூறுகின்றன. மூலாதார சக்ராவில் இருந்து சஹஸ்ரார சக்ரா வரை உள்ள அந்த ஒவ்வொரு சக்ராவும் குறிப்பிட்ட எண்ணிக்கையுடைய இதழ்கள் கொண்ட தாமரையாக உருவகப்படுத்தப்படுகிறது. உதாரணத்திற்கு மூலாதார சக்ரா என்னும் முதல் சக்ரா நான்கு இதழ் தாமரையான சக்ராவாகவும், ஏழாவது சக்ராவான சஹஸ்ரார சக்ரா ஆயிரம் இதழ் கொண்ட தாமரையின் வடிவாகவும் உருவகப்படுத்தப்படுகிறது
மூன்று நாட்களுக்குக் காலையில் மலர்ந்தும் இரவில் மூடியும் மீண்டும் காலை மலர்ந்தபடியும் இருக்கும் தாமரையை மலர்ந்த ஐந்து நாட்களுக்கு வழிபாட்டுக்குப் பயன்படுத்தலாம் என்கிறது புஷ்ப விதிகளைச் சொல்லும் நூல். சித்தரான உரோமரிஷி தாமிரபரணி ஆற்றங்கரையில் மிதந்து வந்த தாமரை மலர்களை வழிபட்ட ஒன்பது ஊர்களில் தான் நவ கைலாயங்களான சிவாலயங்கள் இருக்கின்றன. மகாலட்சுமி உறையும் இடமும் தாமரையே.
அமெரிக்கத் தாமரையான வெண்தாமரை அமெரிக்கப் பழங்குடியினரால் வடஅமெரிக்காவில் பரவலாக்கப்பட்டிருக்கும் எனக் கருதப்படுகிறது.
ஆசியத் தாமரையான Nelumbo nucifera ஆசியாவில் மட்டுமே இயற்கையாக நீர்நிலைகளில் தானாகவே வளரும். இவற்றை வேறெங்கும் இயற்கையாகக் காண முடியாது. பல நாடுகளில் இவற்றை நீர்நிலைகளில் வளர்க்கிறார்கள் இந்தத் தாமரையின் இணை அறிவியல் பெயர்கள்: தாமரை மலர்கள் மகரந்தச் சேர்க்கை செய்ய வரும் பூச்சி இனங்களுக்கேற்ப மலரின் வெப்பநிலையை மாற்றியமைத்துக்கொள்ளும் என்பதைப் பல ஆய்வுகள் காட்டுகின்றன.
வெண்தாமரையான Nelumbo lutea பெரும்பாலும் வட அமெரிக்காவிலும் சிலசமயம் மத்திய அமெரிக்கவிலும் காணப்படுகிறது. இவை தூய வெள்ளை நிறத்திலும் சிறிது மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்திலும் காணப்படும்.
தாமரைகளும் அல்லிகளும் ஒன்றெனவே நினைப்பவர்கள் பலருண்டு. பழைய தாவர வகைப்பாட்டியல் முறைகளில் தாமரை அல்லிக் குடும்பத்தில் வைக்கப்பட்டிருந்தது (Nelumbo as part of Nymphaeaceae). பின்னர் இவற்றை அடையாளம் காண்பதில் உண்டான பிழைகளால், இவையிரண்டும் தனித்தனியான குடும்பங்களில் வைக்கப்பட்டன.
அல்லி இரவில் மலர்ந்து காலையில் குவியும் (இதழ்கள் மூடும்). தாமரை காலையில் மலர்ந்து இரவில் குவியும். எகிப்தில் உள்ள நைல் நதியில் பூக்கும் நீல நிற அல்லி இரவில் மலர்ந்து காலையில் குவியும் என்றாலும், அதே ஆற்றில் பூக்கும் வெண்ணிற அல்லி காலையில் மலர்ந்து இரவில் குவியும். இவைகளும் எகிப்தியத் தாமரைகள் எனவே அழைக்கப்படுகின்றன.
மேலும் ஆங்கிலத்தில் தாமரை லோட்டஸ் எனப்படுகிறது. தாவரவியலில் லோட்டஸ் என்னும் பெயரில் முற்றிலும் தாமரையைக் காட்டிலும் வேறுபட்ட மலர்களைக் கொண்டிருக்கும் வேறு ஒரு பேரினமும் இருப்பதால் (a genus called Lotus) தாமரையை இனங்காண்பதில் குழப்பம் உண்டாகிறது.
அல்லி அல்லது ஆம்பல் என்பது நீரில் வளரும் ஒரு கொடித்தாவரத்தையும் அதன் மலரையும் குறிக்கிறது. அல்லிக்கொடி குளம், பொய்கை, நீர்ச்சுனைகளிலும், சிற்றாறுகளிலும் காணப்படும். அல்லி இனத்தில் சுமார் 50 வகையான கொடிகள் உள்ளன. சங்க காலத்து இலக்கியங்களில் ஆம்பல் மலரைப்பற்றிக் பல குறிப்புகள் உள்ளன.
அல்லிகள் நிம்ஃபயேசி (Nymphaeaceae) குடும்பத்தைச் சேர்ந்தவை. நிம்ஃபயேசி குடும்பத்தில் 5 பேரினங்களும், 70-க்கும் மேற்பட்ட சிற்றினங்களும் உள்ளன. அல்லி அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்டது. வெள்ளை அல்லியான Nymphaea alba ஐரோப்பா முழுவதும் காணப்படுகிறது.
பங்களாதேஷின் தேசிய மலர் அல்லி. ஆந்திரப்பிரதேசத்தின் மாநில மலரும் அல்லியே .(தெலுங்கானா பிரிவினைக்கு முன்பு வரை அல்லி இப்போது ஆந்திராவிற்கு மல்லிகையும், தெலுங்கானாவிற்கு ஆவாரையும் மாநில மலர்கள்.) இலங்கையின் தேசிய மலராக நீல அல்லி (Nymphaea stellata ) இருக்கிறது.
நீர்நிலைகளின் மலர்ந்திருப்பவற்றைப் பொதுவில் தாமரையென்றே பலரும் நினைப்பதுண்டு. அல்லிகளையும் தாமரைகளையும் பிரித்தறிய பலருக்குத் தெரிவதில்லை. தாமரையும் அல்லிகளும் தாவரவியல் ரீதியாக இரு வேறு பேரினத்தைச் சேர்ந்தது என்றாலும் இரண்டும் ஒன்றல்ல. இரண்டு தாவரங்களுக்கும், மலர்களுக்கும் இடையே அடிப்படையான மற்றும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன.
நீர் அல்லிகள் நிலத்தில் உறுதியாகப் பதிந்திருக்கும் வேர்களையும், நீர்ப்பரப்பில் மிதக்கும் வட்ட வடிவமான இலைகளையும் மலர்களையும் கொண்டிருப்பவை.
தாமரையின் வேர்களும் நீர்நிலைகளின் அடியில் மண்ணில் ஆழ ஊன்றியிருக்கும், இவற்றின் தட்டையான முட்டைவடிவ/ஏறக்குறைய வட்ட வடிவத்திலிருக்கும் இலைகள் அலையலையான விளிம்புகளைக் கொண்டிருக்கும். இலைக்காம்புகளும் மலர்த்தண்டுகளும் நீர்ப்பரப்பைக் காட்டிலும் சற்று உயர்ந்து இருப்பதால் தாமரை மலர்களும் இலைகளும் நீர்ப்பரப்பிற்கு மேலே காணப்படும். இலைக்காம்பு, இலையின் அடிப்பகுதியின் மத்தியில் காணப்படும் இவ்வமைப்பு பெல்டேட் எனப்படும்.(peltate)
அல்லி மலர்களும் கோடையில் நீர்மட்டத்தைக் காட்டிலும் உயர்ந்து காணப்படுவதுண்டு.
அல்லி இலைகளின் நடுவில் தெளிவாக முடிச்சு போன்ற ஒரு அமைப்பிருக்கும். வெளிவிளிம்பிலிருந்து உள்நோக்கிய ஒரு வெட்டினால் இலைகள் இரண்டாகப் பிளவுபட்டிருக்கும். அல்லி மலரிதழ்கள் அகலம் குறைவாகவும் நுனி கூராகவும் அடிப்பகுதி தடித்தும் இருக்கும். தாமரை இதழ்கள் அகலமாகவும், முனை மழுங்கியும் மெலிதாகவும் இருக்கும். ஒரு தாமரை மலரில் குறைந்தது 8 லிருந்து அதிகபட்சம் 20 இதழ்கள் வரை இருக்கும். அல்லிகளே உலகில் தாமரைகளைக் காட்டிலும் அதிகமாக பரவியிருக்கின்றன. தாமரை மலரின் மத்தியில் இருக்கும் விதைகள் நிறைந்திருக்கும் கூம்பு வடிவ மெத்தை போன்ற கனியும் அல்லிகளில் இருக்காது.
அல்லி மலர்களின் மத்தியில் இப்படிக் கனிகளைக் காணமுடியாது. அல்லிக்கனிகள் உருண்டையாகக் கடினமான தோலுடன் ஸ்பான்ஞ் போன்ற மென்மையான உட்பகுதியுடன் இருக்கும். வெள்ளையான கனியின் சதை ஆயிரக்கணக்கான நுண்விதைகளைக் கொண்டிருக்கும். விதைகள் பழுப்பு அல்லது கருப்பு நிறத்திலிருக்கும். இவ்விதைகள் பொறித்து உண்ணப்படுகின்றன. அல்லியின் அனைத்துப் பாகங்களுமே உண்ணத்தக்கவை.
பலநூற்றாண்டுகளாக மாவுச்சத்து உள்ளிட்ட பல சத்துக்களைக் கொண்ட சுவையான தாமரை வேர்க்கிழங்குகளும் விதைகளும் சீனாவில் உண்ணப்பட்டுவருகின்றன. தாமரை வேர்க்கிழங்கை (Rhizome) தூளாக்கி மாவாகவும் அங்கு உபயோகிப்பது உண்டு. சீனா கொரியா, ஜப்பான் மற்றும் வியட்நாமில் தாமரை இதழ்கள், வேர் மற்றும் இலைகளிலிருந்து தேநீர் தயாரிப்பதும் பிரபலம். தாமரைத்தண்டுகளும் உண்ணத்தக்கவை. இந்தியா முழுவதிலுமே தாமரைத்தண்டுகள் உண்ணப்படுகின்றன.
Nymphaea lotus என்னும் அறிவியல் பெயருடைய எகிப்திய தாமரை என்றழைக்கப்படுபவை வெள்ளிஅல்லிகளே. அவை தாமரைகள் அல்ல, நீலத்தாமரை என எகிப்தில் குறிப்பிடப்படுபவைகளும் தாமரைகள்அல்ல அவை, Nymphaea caerulea எனப்படும் நீல நீரல்லிகள். Nelumbo nucifera என்பது ஆசியாவின், இந்தியாவின் செந்தாமரை Nelumbo-lutea அமெரிக்காவின் வெள்ளை அல்லது இளம் மஞ்சள் தாமரை. இது முன்பு Nelumbium luteum & Nelumbo pentapetala போன்ற அறிவியல் பெயர்களால் அறியப்பட்டன. இப்போதும் இவை இணைப்பெயர்களாகப் பயன்பாட்டில் இருக்கின்றன.
தாமரைகள் செல்வம், வளமை மற்றும் மறுபிறப்பு, இறைமை ஆகிவற்றின் குறியீடாக உலகின் பல சமயங்களில் கருதப்படுகின்றது, ஜோதிடவியலில் உதிக்கும் சூரியனை குறிக்கத் தாமரை பயன்படுகிறது. அல்லிகளிலும் பல கலப்பின வகைகளுள்ளன. அவற்றில் மிக பிரபலமானது சிவப்பும் மஞ்சளும் கலந்த அல்லியான Nymphaea Wanvisa. பிரகாசமான நீல இதழ்களும் மஞ்சள் மத்தியப்பகுதியுமாக இருக்கும் Nymphaea Blue Aster அல்லியும் மிக அழகானது
இதுபோன்ற இரட்டை வண்ணங்கள் கொண்ட கலப்பினங்கள் தாமரைகளில் இல்லை. ஆயிரம் இதழ்கள் கொண்ட சகஸ்ர தாமரைகள் எனப்படும் கலப்பினத் தாமரைகள் கேரளத் தமிழகக் கோவில்களிலும் தனியார் வீடுகளிலும் வளர்க்கப்படுகின்றன.
கேரளா திருப்புனித்தராவைச் சேர்ந்த கணேஷ் தாமரைக்கொடிகளைக் கலப்பினம் செய்வதில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இவரது முயற்சியால் பல தாமரைக் கலப்பின வகைகள் உருவாகி இருக்கின்றன. கோவிட் பெருந்தொற்றின் முதல் அலைக்காலத்தில் இவர் வீட்டில் ஆயிரமிதழ் கொண்ட தாமரை மலர்ந்தது.
சீனாவின் ஷாங்காய் உயிரியல் ஆய்வு நிறுவனத்தின் பேராசிரியர் டாய்க்கே டியான் (Daike Tian) 2009-ல் சீனாவில் Zhinzun Qianban என்னும் அறிவியல் பெயர் கொண்ட இந்தத் தாமரைக்கொடியைக் கண்டறிந்தார். அவரிடமிருந்து கணேஷுக்குப் பரிசாக வழங்கப்பட்ட இந்தத் தாமரைதான் இப்போது வளர்ந்து மலர்ந்திருக்கிறது.
இவர் அமெரிக்காவிலிருக்கும் சர்வதேச நீரல்லி மற்றும் நீர்த்தோட்டக்கலை அமைப்பில் (International Waterlily and Water Gardening Society (IWGS)) உறுப்பினராக இருக்கிறார். 2015-ல் இவர் முதன்முதலாக உருவாகிய தாமரைக் கலப்பினத்துக்குத் தனது அன்னையின் பெயரையே Nelumbo ‘alamelu’ என்று வைத்திருக்கிறார்.
இந்தியாவில் ஒற்றை இதழ் வரிசை கொண்டவை பல அடுக்கு மலரிதழ்களைக் கொண்டவை என இளஞ்சிவப்பு மற்றும் வெண்தாமரைகள் மலர்கின்றன. அஸ்ஸாமில் வெண்தாமரை இதழ் நுனிகளில் சிறிது இளஞ்சிவப்பு நிறம் இருக்கும். மதுரை மீனாட்சி அம்மன் பொற்குளத்தில் வெண்மஞ்சள் தாமரை மலர்ந்திருக்கும்.
அல்லிகளின் அரசி எனப்படும் அமேசான் காடுகளின் மாபெரும் அல்லிகளான Victoria amazonica வைத் தவிர்த்து அனைத்து அல்லிகளும் தாமரைகளும் நீருக்கடியில் 2 அல்லது 3 மீட்டர் உயரமுள்ள தண்டுகளைக் கொண்டிருக்கும். நீருக்கு மேலே தாமரைகளின் தண்டுகள் 4 -6 அடிகளும், அல்லிகள் 2-3 அடிகளும் உயரம் கொண்டிருக்கும். அல்லி தாமரை இருமலர்களுமே மென் நறுமணம் கொண்டவை. அரச அல்லியின் இலைகளும் மலர்களும் மிகப்பெரியவை. அரச அல்லிகளின் இலைகள் 35 லிருந்து 40 கிலோ எடையைத் தாங்கும்.
பிங்டி அல்லது பிங்டோ தாமரைகள் எனப்படுபவை சீனாவில் மட்டும் காணப்படும் ஒற்றை மலர்த் தண்டில் ஒட்டியே மலரும் இரட்டைத் தாமரை மலர்கள். (Bingdi Bingtou lotus). கியான் பென் தாமரைகள் எனப்படும் இவை தாவர உலகின் அரிய மலர்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.(Qianban lotus)
தாமரை, ஆயுர்வேதத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. செந்தாமரை, வெண்தாமரை என இருவகைகளில், மருத்துவத்தில் வெண்தாமரையே அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. தாமரை மலர் இனிப்பு, துவர்ப்புச் சுவைகளும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. தாமரை விதை, உடலை பலமாக்கும். தாமரை கிழங்கு உள்ளுறுப்புகளின் புண்களை ஆற்றும்.
தாமரையின் பிற பெயர்கள்:
அரவிந்தம்,பங்கேருகம், கோகனகம், பதுமம், முளரி, வனசம், புண்டரீகம், அம்போருகம், கமலம், பங்கஜம், அம்புஜம்.
இணையத்தில் தாமரையையும் அல்லியையும் வேறுபடுத்திக்காண உதவும் காணொளிகள் இருக்கின்றன.
Art : dailypaintworks
வேட்டைக்காரன் புதூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். பொள்ளாச்சி கல்லூரியில் தாவரவியல் பேராசிரியராகப் பணி புரிந்துகொண்டிருக்கிறார். மேலும், அரிஸோனா பல்கலைக்கழக வலைத்தளத்தில் அறிவியல் தகவல்களைத் தமிழில் மொழிமாற்றம் செய்ய மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். தற்போது தமிழில் தாவரவியல் அகராதியை உருவாக்கும் முயற்சிலும், அந்தியூர் வனப்பகுதி பழங்குடியினரான சோளிகர்களின் தாவரவியல் தொடர்புகள் குறித்த ஆய்விலும் ஈடுபட்டு வருகிறார்.
தாவர உலகம், ஸாகே-போதையின் கதை, வானவில் மரம், விலக்கப்பட்ட கனி, தந்தைப்பெருமரம், நுண்ணுயிருலகு உட்பட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். மரங்களின் மறை வாழ்வு என்னும் நூலை மொழியாக்கம் செய்துள்ளார்.
தோழி விருது 2019, செங்கால் நாரை விருது 2022, இந்திய மருத்துவக் கழகம் வழங்கிய Women of Wonder விருது 2025, சிறந்த அறிவியல் நூலிற்கான முனைவர் உலோ.செந்தமிழ்க்கோதை நினைவு விருது 2025 ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.








Leave a Reply