கிறிஸ்துமஸ் பஜனை பாடும் பாடகர் குழுவினர் அந்த வீட்டில் மட்டும் பாடாமல் அடுத்த வீட்டை நோக்கி நடந்தார்கள். இருள் சூழ்ந்திருந்த வீட்டைத் திரும்பிக்கூட எவரும் பார்க்கவில்லை. கூடுமானவரை அங்கு எப்போதும் விளக்கு அணைக்கப்பட்டிருக்கும். சில நாட்கள் வெளிச்சம் குறைந்த ஒரு விளக்கு மட்டும் எரியும். பகலில் ஓரிரு முறை ஒரு கார் வெளியே வந்து உள்ளே செல்லும். யார் இருக்கிறார்கள் என்று பார்க்கமுடியாதபடி கருநிறத்தில் கார் கண்ணாடி மாற்றப்பட்டிருந்தது. பிற வீடுகளில் ஸ்டார்கள், சீரியல்கள், குடில்கள் எனக் காசை அள்ளி இறைத்திருந்தனர். முன்னால் ஆடிக்கொண்டிருந்த கிறிஸ்துமஸ் தாத்தா வயிற்றை வளைத்து நெளித்து ஆட்டிக்கொண்டிருந்தார். அனைவர் தலையிலும் செந்நிறத் தொப்பி. ஒரு கண் மட்டும் கதவிடுக்கு வழி வெளியே பார்த்துக்கொண்டிருந்தது.
நாளை மறுதினம் கிறிஸ்துமஸ் என்றாலும் ஒருவாரத்திற்கு முன்னரே ஜோராகக் கொண்டாட்டம் களைக்கட்ட தொடங்கியிருந்தது. வீடுகளில் கறிக்குழம்பு வாசனை. மாலையிலையே பன்றி உட்பட அனைத்தையும் வெட்டி மலர்த்தியிருந்தார்கள். நகரத்தில் கடைகளுக்குள் குனிந்து நுழையும் அளவிற்கு ஸ்டார்கள். பிளம் கேக் வழக்கத்தைவிடக் கூடுதல் விலைக்கு வைத்திருந்தார்கள். நகரம் முழுவதும் வாகன நெரிசல். புதிய துணிகளைக் கட்டப்பையில் அள்ளிக்கொண்டு கார் டிக்கியில் நிரப்பிக்கொண்டிருந்தது ஒரு குடும்பம்.
ஒருவர் உரக்கப் பேசினால் ஓரளவு புரிந்துகொள்ள முடியும் என்றளவிற்குக் கீர்த்தனைப் பாடல்கள். நேரம் ஆகிவிட்டது, “சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வருவதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; பரலோகராஜ்யம் அப்படிபட்டவர்களுடையது” என்று சொல்லி தேவாலய மணி எங்கோ அடித்துக்கொண்டிருந்தது. அந்த தேவாலயம் கடற்கரை ஓரம் அமைந்திருந்தது. கருங்கற்களால் கட்டப்பட்ட பழமையான ஆலயம். குருசடியில் ஆரம்போடப்பட்டு மெழுவத்தி ஏற்றிவைத்துப் பாடிக்கொண்டிருந்தார்கள். வண்ணவண்ணப் பலூன்களைப் பார்த்தவண்ணம் ஓரிரு பலூன்களை உடைத்து விளையாடிக்கொண்டிருந்த குழந்தையைத் தூக்கி எடுத்துக்கொண்டு ஆலயத்திற்குள் சென்றார் ஒரு புதுத் தந்தை.
கருமை என்னும் ஒரே நிறத்தைக் கண்டுகொண்டிருந்த அவன் கண்கள், சாலை கொஞ்சம் அமைதியாகிவிட்டதா என அவதானித்து வீட்டிலிருந்து வெளியே வந்தான். “நானும் வரட்டுமா?” என்று கேட்ட அவளைச் சமாதானப்படுத்திப் படுக்க வைத்தான். வாசல் வரை சென்றவன் அவள் கண்களில் இரத்தம் வருவதாக எண்ணி, முதலுதவிப் பெட்டியில் இருந்து பஞ்சை எடுத்துக் கண்களைத் துடைத்துவிட்டு வெளியே கிளம்பினான். தேவாலயத்திற்கு வெளியே காரை நிறுத்திவிட்டு உள்ளே வந்தவன் கிழிந்து கிடந்த பலூனை மிதிக்காமல் தேவாலயத்தின் பின்பக்கத்தை நோக்கி அவன் கால்கள் வேகமாக நடக்கத் தொடங்கின. நடந்துகொண்டிருந்தவனின் கால்கள் தேவாலயத்தின் பக்கவாட்டில் நின்றது. நேராக அங்கிருந்த கிணற்றைப் போய் எட்டிப் பார்த்தான்.
தேவாலயச் சுவர்களின் ஓரத்தில் அலங்கரிக்கப்பட்ட சீரியல் விளக்குகள் சீராகத் தெரிந்தன. காற்றில் விழுந்த இலை ஒன்று அதன் வடிவத்தை மாற்றியபோது கீழே விழுந்து நடுங்கத் தொடங்கினான். அதை இன்னொருமுறை காணும் சக்தி இல்லாதவனாக அவன் கால்கள் தட்டுத்தடுமாறிப் பின்பக்கத்தை நோக்கி நடந்தான். மூச்சு வாங்கியது. உடல் வியர்த்து ஊற்றியது. ஒருவழியாகக் கள்ளிச்செடி வெட்டிச் சாற்றி வைத்திருந்த கையாலையைக் கடந்து ஆலயத்தின் பின்பக்கத்தை அடைந்தான். உள்ளே நடந்து செல்வதற்குச் சிரமப்படும் அளவிற்கு நூற்றுக்கணக்கான கல்லறைகள். நல்ல நாள் என்பதால் நிறையக் கல்லறைகளில் பூவாரம் போடப்பட்டு மெழுகுவத்தி ஏற்றி, சாம்பிராணி கொளுத்தி வைக்கப்பட்டிருந்தது.
தோட்டத்தின் மையப்பகுதிக்கு வந்தவன் செருப்பைக் கழற்றி, முழங்காலிட்டுச் சருகுகளை அகற்றத் தொடங்கினான். கொண்டு வந்திருந்த சிறிய அளவிலான இரு பூ ஆரங்களைக் கல்லறைகளின் மீது போட்டான். பிறந்தநாள் கேக்களில் வைக்கப்படும் சின்ன கலர் மெழுகுவத்திகளைப் பற்றவைத்தான். ஆலயப் பிரசங்கத்தின் சப்தங்களைவிட, கொண்டாட்டங்களின் வெளிச்சங்களை விட அலையில் சப்தத்தையும், மௌனத்தையும் கேட்டவனாகக் கடற்கரையை நோக்கி நடக்கத் தொடங்கினான். போகும் வழியெங்கும் காற்று கண்ணீர்த்துளிகளைப் பின்னோக்கிப் போகச் செய்துகொண்டிருந்தது. தூரத்தில் ஒரு கப்பல் நிற்பது போன்று விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன.
பார்த்த அடுத்த நொடியே பத்து வருடங்கள் பழகியது போல் பேசும் அவள் முகம். எப்போதும் அருகில் தோழிகள் கூட்டம். காதலை எப்படிச் சொல்வது? இதே ஆலயத்தில் திருமணம் முடிந்து கைப்பிடித்து நடந்துசென்றபோது அலையோசையை உணர்ந்தேனா? என்று யோசித்தபடி அங்கேயே ஒரு நிமிடம் நின்றான்.
நகரத்தில் பணி. இரண்டு, மூன்று நாட்கள் வாடகைக்கு வீடு தேடியவன் சலிப்புற்று, ஊரில் இருந்த இருபது சென்ட் இடத்தை விற்று, நகரத்தின் மையத்தில் ஒன்றேகால் கோடிக்கு நான்கு வீடுகள் இருக்கும் அபார்ட்மென்டின் ஒன்றில் குடிபுகுந்தான். ஒருவருடம் எந்தக் குடைச்சலும் இல்லாமல் கடந்தது. பின்பு குழந்தை கேட்டு இரு தரப்பிடமிருந்தும் நச்சரிப்பு. நண்பர்கள், நலம்விரும்பிகள் குடும்பம் எங்கும் ஒரே கேள்வி. விந்துப் பரிசோதனைக்கு வரச் சொன்னார்கள். நாட்டுமருந்துக் கடையில் தண்ணீர்விட்டான் கிழங்கு, அஸ்வகந்தா லேகியம் வாங்கிவிட்டு வெளியே வந்தபோது ஜிம் ஒன்று இயங்கிக்கொண்டிருந்தது. உள்ளே போய் ஆறு மாதத்திற்கான பணத்தைக் கட்டினான்.
விந்துப் பரிசோதனை மையத்தில் பெண் ஒருத்தி பின்னால் வருமாறு அழைத்துச் சென்றாள். ஓர் அறைக்குள் இன்னொரு கதவு. திறந்தால் மற்றுமோர் அறை. அதற்குள் ரெஸ்ட் ரூம் என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. அறையின் நடுவில் வெண்ணிறக் கட்டிலின் நடுவில் பிளாஸ்டிக் டப்பா. அதன் அடியில் டிஸ்யூ பேப்பர் வைக்கப்பட்டிருந்தது. “முடித்துவிட்டு இங்கேயே வைத்துவிடுங்கள்” என்றாள். டப்பாவை எடுத்துக்கொண்டு கழிவறைக்குள் நுழைந்தவன் ஜெர்மனியில் பிரபலமான பார்ன் நடிகையின் படத்தை ஓடவிட்டு வேலையை ஆரம்பித்தான். குறி பெரிதாக ஆக வந்தவள் போனிற்குள் புகுந்து ஆடைகளைக் களையத் தொடங்கினாள். டப்பாவை மூடும் நேரம் வந்தது. அவள் சொன்னபடி வைத்துவிட்டு தலையைக் குனிந்தபடி வரவேற்பறையில் சொல்லிவிட்டு வேகமாக வெளியேறினான். பரிசோதித்த மருத்துவர் ஒரு தொற்றுக் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அது நவீன மருந்துகளினால் குணப்படுத்த தன்னால் முடியும் வாக்குறுதியளித்துச் சம்பளத்தில் பாதியை வாங்கிக் கொண்டார். முக்கியமாகக் கடவுள் மேல் பாரத்தைப் போட்டுவிட்டுச் சில மாதங்கள் பொறுமையாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மாடிப்படிகளில் யாரோ ஒருவரின் வியர்வைத் துளிகள் காயத் தொடங்கியிருந்தன. புதிதாகச் சேர்ந்த ஒருவனிடம் டவல், ஷூ கொண்டுவரவேண்டும் என்று மாஸ்டர் சொல்லிக்கொண்டிருந்தார். ஆரம்பகட்டப் பயிற்சிகளை முடித்து, கைகளின் முட்டிகளைப் பக்கவாட்டில் வைத்துக் கால்களைத் தொங்கவிட்டபோது வயிறு இழுக்கிறது என்று அவனால் அறியமுடியவில்லை. தினமும் ஒரு இரும்புக்கம்பியில் பற்றும்போது கால்கள் இடமும் வலமுமாகத் திரும்புகின்றன. குப்புறப் படுத்துக்கொண்டு தலையைத் தூக்கும்போது ஒரு குழந்தையின் பார்வைக்குக் கண்கள் மாறுகின்றன. கர்லாக் கட்டையில் முளைக்கும் குழந்தையின் கால்கள். அவள் முகம் சிரிப்பில் இருந்து வெளிச்சம் மங்கி இருளுக்குள் செல்கிறது. ஜிம்மில் அளவுக்கு அதிகமான வெளிச்சம் சுற்றி இருப்பவர்கள் அனைவரும் அவனைச் சுற்றிச் சுழல்கிறார்கள்.
மாஸ்டர் யாரிடமோ போனில் பேசிக்கொண்டிருந்தார். “வொய்ஃப் ஊருக்கு ட்ரீட்மென்ட் போயிருக்கா.. ஏழு வருசமா ட்ரை பண்றோம்.. பத்து லட்சம்மேலயே செலவாயிடுச்சு.. நம்ம கையில என்ன ஸார் இருக்கு? இதெல்லாம் ஒரு ப்ளசிங்தான்.. எல்லாருக்கும் அமையுறதில்ல இல்லையா..? பாப்போம்.. கல்பாக்கம்.. அதான் எங்க சொந்த ஊர்….” மாஸ்டரின் பேச்சு எங்கெங்கையோ சென்றது. அவனைச் சுற்றி நடந்துகொண்டிருக்கும் எதன்மீதும் ஒன்றமுடியவில்லை. ஐந்து வயது சிறுமியைத் திரெட் மில்லில் நடக்கப் பழக்கிக்கொண்டிருந்த தந்தை. சுவர்க் கண்ணாடியைப் பார்த்தபோது திரெட்மில்லில் நடந்துகொண்டிருந்த குழந்தையின் வாயில் மஞ்சள் நுரை வெளிவருவதுபோல் தெரிந்தது. உடனே மருத்துவமனை அழைத்துச் செல்ல உதவவேண்டும் எனத் திரும்பிப் பார்த்தபோது அப்படி எதுவுமில்லை. பதற்றமாக நின்றுகொண்டிருந்த அவனைப் பார்த்து லேசாகப் புன்னகைத்தாள் சிறுமி.
கல்லறைத் தோட்டத்தில் இதற்குமுன்பு நின்றுகொண்டிருந்த காட்சி மனதிற்குள் ஓடிக்கொண்டிருந்தது. தொடர்ந்து பல காட்சிகள். பதற்றமாக மருத்துவமனையை நோக்கி நடந்த நான்கு கால்கள். மருத்துவர்களின் குரல்கள் சிதறிய சப்தங்களாகப் பிளந்து பறந்து சென்றன. மொழியைக் கோக்க முடியவில்லை. முன்தினம் கொண்டாடப்பட்ட பிறந்தநாள் கேக்கில் இருந்து வானவில் நிறங்கள். அன்று பெய்த மென்மழை. பைக்கில் சென்றுகொண்டிருக்கும்போது பிரேக் பிடிக்காத சிமென்ட் லாரியில் இருந்து மயிரிழையில் தப்பியது. அதற்கும் சில தினங்கள் முன் கண்ட கனவிலேயே அசம்பாவிதம் ஏதோ நடக்கப்போகிறது என்பதை உள்ளுணர்ந்திருந்தான்.
உலோகத்தினால் ஆன ராட்சஷ உருளைகள் சுற்றி உருவாக்கப்பட்டிருந்தன. புனலைக் கவிழ்த்துப் போடப்பட்ட ஒன்றில் இருந்து வெண்புகைகள். அவள் கண்கள் மூடப்பட்ட நிலையில் முனகுதல் காதில் கேட்டுக்கொண்டிருந்தது. அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஸ்டீல் கம்பிகளில் வெப்பத்தினால் இடைவெளி உருவாதல். அதனிடையில் வெளிவரும் புகை. புகை நின்றபின் அவள் உடலில் வெளிவரும் வியர்வைத்துளிகள். முனகல் நின்றதும் குறி இறுகுதல். நெகிழ்வடைந்து விரியும் உலோகங்கள். வெப்பநிலை உயரும்போது அவன் குறியில் இருந்து வெடித்துக் காளான் வடிவில் தீப்பிளம்பாக வெளிவருதல். வானுயர வளர்ந்து சூரியனைத் தொட்டுக்கொண்டிருந்தபோது, வெப்பம் இமைகளுக்கடியில் உணர்ந்து கண்விழித்தான். உடல் சூடேறிக் காணப்பட்டது. அந்தக் கனவுக்குப் பின் ஒவ்வொன்றாக நடந்து அனைத்தும் முடிந்திருந்தன.
மணி பதினொன்றைக் கடந்திருந்தது. கிறிஸ்துமஸ் முந்தய ஆராதனை முடிந்து அனைவரும் கிளம்பியிருந்தனர். கடல் அலையின் வேகம் அதிகமும் இல்லாமல் குறைவும் இல்லாமல் பொதுவாக இருந்தது. ஆக்ரோஷமாக இருப்பதாக மனதில் நினைத்துக்கொண்டான். அதற்கேற்றார்போல் சப்தமும் அதிகமாகக் கேட்டது. அலையின் நுரை மஞ்சளாகத் தொடங்கியது. பள்ளியில் கடைசி நாளன்று படகில் அழைத்துச் செல்வதற்காக வகுப்பு மாணவ-மாணவிகளை அழைத்து வந்தான்.
வழியில் ஊர் மக்கள் வெயிலில் அமர்ந்து போராடிக்கொண்டிருந்தனர். இது நம் ஊரில் போர் வருவதைப் போன்றது எனப் போராட்டத்தைக் கலைக்க வந்தவர்களிடம் ஆவேசமாகக் கத்தினார்கள். அவர்கள் இளக்காரமாகப் புன்னகைத்தபடி “போர் வந்துவிடக் கூடாது என்றுதான் இதெல்லாம் நடக்கிறது. புரிந்துகொண்டு கலைந்து செல்லுங்கள்”. நீச்சல் தெரிந்தவர்களும், பயமில்லாத மாணவர்களும் அவனுடன் படகில் சென்றார்கள். ஆழமான பகுதிக்குச் சென்றவுடன் முதல் ஆளாகக் குதித்தான். அவனுக்குப் பின்னே ஒவ்வொருவராகக் குதிக்கத் தொடங்கினார்கள். நீச்சல் தெரியாதவர்கள் அதை ஒரு சாகசமாகக் கருதி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.
அங்கே ஒரு கப்பல் நின்றுகொண்டிருந்தது. அதில் எந்த நாட்டுக்கொடி யாருக்காவது தெரியுமா என்று ஒருவன் கேட்டான். பின்னால் போராட்டக் குழுவினரின் போராட்டக் குரல் யோசிக்க சிரமமாக இருந்தாலும், குடிமைப் பணியை லட்சியமாகக் கொண்ட மாணவி அது ரஷ்ய நாட்டுக்கொடி என்றாள். நடுக்கடலில் இருந்து கரையை நோக்கி நீந்தத் தொடங்கினார்கள். அலை சுழன்றபடி உயரும்போது வெண்ணுரையைக் கிழித்தபடி கரையை நோக்கி வந்தான். உள்நீச்சலில் கறைமடியப்போகும் மீன்கள் கொழுகொழுவென்று நீந்திக்கொண்டுத் திரிவதைக்காணும் அளவிற்குக் கண்ணாடி போல் நீர் இருந்தது. சூரிய வெளிச்சம் ஊடுருவும் நீரில் மணலைக் கண்டபடி கரையை அடைந்தான்.
கடற்கரை எங்கிலும் கழிவுகளினால் துர்நாற்றம் வீசியபடி காணப்பட்டது. அன்று கரையேறிய இடத்தில் முகத்தைக் கோணியபடி வைத்துக்கொண்டு அங்கிருந்த பாறை வரை நடந்து சென்றான். அதிகாலைவரை கடலைப் பார்த்தபடி இருந்தவனுக்குப் பல நினைவுகள் வந்து போயின. சுழலில் சிக்கிக் கடைசி வரை உடல் கிடைக்காதுபோன உயிர் நண்பன் கடலில் எங்காவது தென்படுகிறானா என்று வெகுநேரம் பார்த்துக்கொண்டு வெளியே வந்தான். மெழுகுவத்தி அணைந்து முடிந்திருந்தது. தூக்கம் வருவதற்காக மனநல மருத்துவர் கொடுத்த மாத்திரையைப் போட்டுவிட்டுப் படுத்தபோது, மண்டைக்குள் இருள் சுழலத் தொடங்கியது.
சுழன்றுக்கொண்டிருந்த மாத்திரை வேகமாகப் பொடியாக உடையத் தொடங்கியது. ஒருசில துகள்கள் அங்கிருந்து நீரில் விழ கரையத் தொடங்கியது. தொடங்கியதும் அதிலிருந்து புகையாகக் கிளம்பிய திரவம் எரியத் தொடங்கியது. அதன் முனையில் இரும்புக்கம்பி ஆரஞ்சு நிறத்தில் சூடேறியிருந்தது. அதில் ஓர் எறும்பு அமர்ந்து ஜீவசமாதி ஆனது. எரிந்த எறும்பு வட்டமடித்துச் சுழன்றுகொண்டே காணாமல் போனது.
பொட்டல் காட்டில் பழுதாகிச் சுற்றாமல் நிற்கும் காற்றாலை. சூரிய ஒளி பட்டுத் துள்ளிக்குதிக்கும் கடல் அலையில் மிதக்கும் சிறுநீரகம். அதனைக் கவ்வப் போட்டி போடும் கடல் மீன்கள். இரு சாக்கு நிறைய ஆரஞ்சுப்பழத்தோல் குப்பைத்தொட்டியில் கொட்டப்படுகிறது. ஒரு பெண்ணின் தொடையில் முத்தமிடும் இன்னொரு பெண். அதில் ஒரு செந்நிறத் தழும்பு. லென்ஸ் வைத்துப் பார்த்தால்தான் பார்க்கமுடியும் அந்த அளவிற்குச் சின்னது. இருந்தபோதிலும் வலி தாங்க முடியாமல் குளிர்பதனப்பெட்டியின் ஐஸ் இருக்கும் இடத்திற்குள் சென்றாள். கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கும் இறந்த மீன்களின் கண்கள் அவளைப் பார்க்கத்தொடங்கின.
நள்ளிரவு கேட்கும் போராட்டக்குரல் கேட்டு கண்விழித்த பொதுஜனம். விளக்குகள் அதிகமாக எரியத் தொடங்குகின்றன. இந்த வெளிச்சம் எங்கள் கண்களை கூசச் செய்கின்றது. எங்கள் தூக்கத்தைக் கெடுக்கின்றது என்று பிரேதங்கள் கல்லறையில் இருந்து எழும்புதல். அதிக விளக்குகள் வைத்திருக்கும் ஒருவனின் நெரிக்கப்படும் கழுத்து. சிறுநீரகத்தை உருவியெடுத்துச் சிறுநீரை அப்புறப்படுத்தும் பெண், உள்ளே வைக்கச் சிரமப்பட்டு ஆம்புலன்ஸிற்கு போன் செய்தாள். செல்போன் டவரில் நெருப்பு எரிந்துகொண்டிருந்தது. மேல்மாடி ஜன்னலில் இருந்து பொதுமக்கள் பதற்றமாக வாயடைத்துப் போய்ப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
போராட்டக்காரர்கள் தங்களின் முடியில் நெருப்பை எரியவிட்டுக் கடலை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார்கள். அவர்கள் அனைவரும் தங்கள் குரலை இழந்திருந்தனர். சிலர் தங்கள் குரல் எப்படி இருக்கும் என்பதனையே மறந்து போயினர். பெண் கிடைக்காத மனநோயாளி ஒருவன் இரவில் வந்துபோன வீட்டில் வளர்த்து வந்த ஆடு ஒன்று இறந்து போனது. அதைப் புதைப்பதற்காகத் தோண்டப்பட்ட குழியில் ஒரு சங்கு. அன்று பள்ளிக்கடைசி நாளின் கடல்காணும் நிகழ்வில், நடுக்கடலில் நீந்திக்கொண்டிருந்தபோது ஒரு சங்கு தென்பட்டது. அதை எடுப்பதற்காகச் சென்றபோது ஏதோ கண்ணிற்குள் புகுந்தது போல் ஓர் உணர்வு. தூசியாக இருக்கும் என்று நண்பர்கள் ஊதினார்கள். அப்போதைக்கு எரிச்சல் அடங்கியது.
ஓரிரு மாதங்கள் எரிச்சலும், கண்களின் நிறம் மாறிக்கொண்டும் இருந்தன. இயல்பான கண்கள் கடற்கரையின் முன் நின்றபோது மண்ணைத்தூவிச் சென்ற ஹெலிகாப்டர் ஒன்றைச் சிறுவர்கள் துரத்திச் சென்றார்கள். அங்கே நெருப்பு வளையம் ஒன்று உருவாகிப் பெரிதாகிக்கொண்டே வந்தது. “அன்னா போவுது.. அன்னா போவுது” என்றுக் கத்திக்கொண்டு தலையை மேல்நோக்கியபடிப் பக்கவாட்டில் கவனிக்காமல் ஓடிய சிறுவர்கள் எரிந்து கருநிறத் துகள்களாக ஆனார்கள். நகரத்தின் ஓரமாக ஓடிக்கொண்டிருந்த ஆற்றில் துகள்கள் கரைக்கப்பட்டுக் கடலில் சேர்ந்தன. அதில் ஒரு துகள் வேகமாக ஒரு மனிதக் கண்ணைத் தாக்குகிறது. அதன் நீர்மை பல கால்களை உருவாக்கிச் சிலகாலம் பிசுபிசுப்பான உப்புத்தன்மை நிறைந்த கண்களில் தங்கி, தக்க சமயம் பார்த்து உள்நுழையக் காத்திருக்கிறது. விடாமல் சொறிந்துகொண்டிருக்கும் கால்களினால் ஊரல் ஏற்பட்டுக் கண்கள் வீங்கி தோல் துவாரங்கள் வீக்கமடைகின்றன.
பொறுமையாகக் காத்திருந்ததற்கான பலன் வந்தடைந்துவிட்டதாக நினைத்த அது மெதுவாக உட்புகத் தொடங்கியது. நீரைவிட அடர்த்தியாக இருக்கும் இரத்தத்தில் நீந்திச் செல்லச் சிரமமாக இருந்தபோதினும், நேரம் எடுத்து ஒவ்வொரு பாகங்களாகச் சென்றுகொண்டிருந்தது. எந்தத் திசையில் நகர்ந்தாலும் தெரியும் செம்மை நிறம் அச்சத்தை ஏற்படுத்தியது. இதிலிருந்து விடுதலை அடைய முடியாதா என்று பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருந்தது. இப்படியொரு நிறத்தினுள் சிக்கவா விழியோரம் நாட்கணக்கில் காத்திருந்தேன் எனச் சலித்துக்கொண்ட அதற்கு ஒருநாள் விடுதலை கிடைத்தது.
வேகத்தில் பொங்கிவரும் கடலலை நுரையின் வண்ணம். மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தது. இடம் புதியதாக இருந்தாலும் அதற்கு ரொம்பப் பிடித்துப் போய்விட்டது. நீண்டநாள் தங்கியது போல் ஓர் உணர்வு. லேசாகப் புள்ளிகள் தெரியும் சதைப்பரப்பின் மீது தடிமனான உடலமைப்புக்கொண்ட, பிற பூச்சிகளை அதிகமாக உண்டு வீங்கிய சிலந்தி மிகவும் கஷ்டப்பட்டு நடப்பது போல் இருந்த ஒருநாளில் அவசர அவசரமாக வேறு வீட்டிற்குக் கட்டாயப்படுத்தி அனுப்பிவைத்தார்கள். என்னுடன் இருந்த நண்பர்கள், தாங்கள் வந்த வேலையை வேகமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்க, என்னை அவர்கள் தனிமைப்படுத்திவிட்டு அவர்கள் மட்டும் அறைக்குள் சென்று கதவை மூடிவிட முயன்றார்கள். உடனே அது அவர்களிடம் கெஞ்சி, போராடிக்கேட்டு, அந்த அறையில் தனக்கான இடத்தை வாங்கிக்கொண்டது.
எரிந்துகொண்டிருந்த நெருப்பு அணைந்து, வெண் துகள்கள் வேகமாகச் சுற்றி மாத்திரையாகச் சுழன்றுகொண்டு, மூளையில் இருந்து வயிற்றுக்குழாயை நோக்கிச் சென்றது. நல்லநாள் என்பதால் ஊரே மகிழ்ச்சி வெள்ளத்தில் பணத்தைத் தண்ணி போல் அள்ளி இறைத்துக்கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். ஜன்னல் இடுக்கின் வழியாகக் கொண்டாட்டங்களை கருவிழி படர்ந்திருந்த கண்களால் கவனித்துக்கொண்டிருந்தாள். பின்னால் இருந்து வந்து அவள் தோள்கள் மீது கைவைத்தபோது, சில ஆண்டுகளாகத் தனிமைப்படுத்திக்கொண்டு மனிதர்கள் சகவாசம் இல்லாமல் இருக்கும் அந்த வீட்டின் பின்பக்க வாசல் தட்டப்பட்டது. வாசலைத் திறப்பதற்காகக் கதவில் கையை வைத்தபோது, கடல் இருக்கும் திசையில் இருந்து ஒரு அபாய எச்சரிக்கை சத்தம் கேட்கத் தொடங்கியது.
Art : Dignovel Studios
ஐசக் பேசில் எமரால்ட் – கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர், முதுகலை மென்பொருள் பொறியியல் முடித்துவிட்டு ஊடகத்துறையில் பணிபுரிகிறார். “அபினி” (நாவல்), “பற்றி எரியும் நரம்புகள்” (சிறுகதைத் தொகுப்பு) ஆகிய நூல்களின் ஆசிரியர். இவரது படைப்புகள் நீலம், யாவரும்.காம், வனம், நகர்வு ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளது.








Leave a Reply