சென்னப்பட்டணத்தில் ரயில் ஓடுவதற்கு முன்னரே 1852 வாக்கில் கிரேட் இந்தியன் பெனின்சுலர் ரயில்வேயின் முதல் பயணம் போர்பந்தருக்கும் தானேக்கும் இடையில் துவங்கிவிட்டதாகச் சொல்லப்பட்டு வருகிறது. ஆயின் இதற்கு ஓராண்டுக்கு முன்னரே ரூர்க்கியில் கட்டுமானப் பொருட்களை எடுத்துச் செல்லும் வகையில் சரக்கு ரயில் போக்குவரத்து ஒன்றும் துவங்கியிருக்கிறது.
1845ல்தான் கல்கத்தாவில் பயணிகள் போக்குவரத்திற்கான ஈஸ்ட் இந்தியன் ரயில்வே கம்பெனியும், பம்பாய்க்கான கிரேட் இந்தியன் பெனின்சுலர் ரயில்வேயும், மதராஸ் பிராந்தியத்திற்கான மதராஸ் ரயில்வேயும் பிரிட்டனில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
இவ்வகைச் செயல்பாடுகள் துவங்கிடவோ இன்னும் சொல்லப்போனால் கருத்தளவிலோ உருப்பெறாத கட்டத்திலேயே மதராஸில் தண்டவாளத்தில் ரயில் ஓடியிருக்கிறது என்பதுதான் வரலாறு. 1836வாக்கில் சென்னப்பட்டணத்தில் உருவான ரெட்ஹில்ஸ் ரெயில் ரோட் அல்லது ரெட்ஹில்ஸ் ரெயில்வே கிழக்கிந்திய கம்பெனியின் பொறியாளர் சர் ஆர்தர் காட்டனின் முன்முயற்சியின் பேரில் ஒரு வரையறை செய்யப்பட்ட எல்லைக்குள் சரக்குப் போக்குவரத்தையும், பயணிகள் போக்குவரத்தையும் மேற்கொண்டு வந்திருக்கிறது.
பட்டணத்தில் சாலைகளை அமைத்திடும் பொருட்டு பரங்கிமலையிலிருந்தும் ரெட்ஹில்ஸ் என்று ஆங்கிலேயர்களால் பெயர் சூட்டப்பட்ட கோயில் மாதவரத்திலிருந்தும் பாறைகளை எடுத்துவருவதற்குச் சாலைகளைக் காட்டிலும் நீர்வழியும் ரயில் வழியும் செலவு குறைவானதாக இருக்கும் என்ற கருத்தின் பேரில், ரெட்ஹில்ஸ் ரெயில் ரோட் உருப்பெற்றிருக்கிறது. ரெட்ஹில்ஸ் குவாரியிலிருந்து காட்டன் கால்வாய் வரையிலான ரயில் பாதையில் எடுத்துவரப்பட்ட கற்கள், பின்னாளில் பக்கிங்காம் கால்வாய் என்று பெயரிடப்பட்ட காட்டன் கால்வாய் மற்றும் கோச்சரன் கால்வாய் வழியே கொண்டுவரப்பட்டு சிந்தாதிரிப்பேட்டையில் எழும்பூர் அருகாமையில் பிரத்யேகமாக அமைக்கப்பட்ட தண்டவாளத்தின் வழியே கிட்டங்கிக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. ரெட்ஹில்ஸில் அமைந்த நான்கு மைலுக்கான ரயில் பாதைக்காக 1828லேயே போர்ட்நோவாவில் உற்பத்தியைத் துவக்கிய போர்ட் நோவா அயர்ன் கம்பெனியிடம் தண்டவாளங்களும் கேரேஜ்ஜுகளும் வாங்கப்பட்டிருக்கின்றன. இரண்டு அல்லது மூன்று அவேரி லோகோமோடிவ்கள் ரெட்ஹில்ஸிலும் சிந்தாதிரிப்பேட்டையிலும் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. கோச்சரன் கால்வாயில் நீரோட்டமின்றி வற்றிய காலங்களில் போக்குவரத்து நின்று போனதோடன்றி சர் காட்டனும் டாஸ்மேனியா மாறிச்சென்றமையால் 1840களிலேயே ரெட்ஹில்ஸ் ரெயில் ரோடின் செயல்பாடுகள் முடிவுக்கு வந்துவிட்டன. டாஸ்மேனியாவிலிருந்து மீண்டும் திரும்பிய காட்டன் கோதாவரி டேம் கன்ஸ்டிரக்ஷன் ரெயில்வேயை உருவாக்கி வெற்றிகரமாகச் செயல்படுத்தியிருக்கிறார். ஒரு வேளை சென்னப்பட்டிணத்திலேயே அவர் இருந்திருந்தால் சிந்தாதிரிப்பேட்டையில் போடப்பட்ட ரயில் பாதை விரிவடைந்து பட்டணத்தில் ரயில்போக்குவரத்து மார்க்கத்தை இந்தியாவிலேயே முதன் முதலாகத் துவக்கியிருக்கக்கூடும். 1850களில் வெளியிடப்பட்ட சென்னப்பட்டணத்தின் பல்வேறு நிலப்படங்களில் ரெட்ஹில்ஸ் ரெயில்ரோட் வழக்கொழிந்த நிலையிலும் ரெயில் ரோட் என்று குறிப்பிடப்பட்டு வந்திருப்பதைக் காண முடியும். செம்பியம் பறச்சேரிக்கும் எருக்கஞ்சேரி பறச்சேரிக்கும் இடையில் கேப்டன் காட்டன் கால்வாயை இணைக்கும் வகையிலான பாதை ரெயில் ரோட் என்றே அந்நிலப்படத்தில் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. காட்டன் கால்வாய் கிட்டத்தட்ட கொருக்குப்பேட்டை அருகில் கோச்சரன் கால்வாயுடன் இணைகிறது. பின்னாளில் யாவுமே கோச்சரன் கால்வாயாகவும் அடுத்த கட்டத்தில் பக்கிங்காம் கால்வாயாகவும் பெயர் மாற்றம் கண்டிருக்கிறது.
இதற்கு அடுத்த நிலையில் சென்னப்பட்டணத்தில் ரயில் போக்குவரத்தினைத் துவக்கும் விதத்தில் தன் சொந்த முயற்சியின் பேரில் ஜி.சி.கோலியர் திட்ட அறிக்கையினை 1850ல் முன்வைத்திருக்கிறார். அவரது திட்டப்படி ஸ்பர்டாங்க் சாலை அருகாமையிலிருந்து துவங்கும் ரயில்பாதை கோவூர், குன்றத்தூர், சிறுகளத்தூர், பொடப்பூர், மனுமேடு, வேற்காடு, பிலிப்பாகம், சித்தூர், ராஜாசத்திரம், ஏனாத்தூர், காஞ்சிபுரம், பஞ்சிப்பேட்டை, அம்சி, முசலவாக்கம், தாமல், ராமாபுரம், சுமைதாங்கி போன்ற கிராமங்களை மட்டுமின்றி எரும்பூர், பாண்டூர், செம்மேறி, பூலாறி, கோலார், மண்தாங்கல், ஒன்லூர், சித்தடி, காவேரிப்பாக்கம் ஆகிய ஏரிகளையும் கடந்து வாலாஜாநகர் சென்றடையும்.
இருந்தாலும் கோலியரின் திட்டம் எடுத்துக் கொள்ளப்படவில்லை. மதராஸ் ரயில்வே கம்பெனி ராயபுரத்திலிருந்து ஆற்காடு செல்லும் பாதையை ராணுவத் தேவைகளின் பேரில் தேர்வு செய்தது. 1856 ஜூலை முதல் நாளன்று ராயபுரத்திலிருந்து 36மைல் தொலைவில் உள்ள சின்னம்மாபேட்டைக்கு மேற்கொள்ளப்பட்ட வெள்ளோட்டத்தை அன்றைய மாகாண கவர்னர் ஹாரீஸ் கொடியசைத்துத் துவக்கி வைத்தார். இதன் பின்னரே இந்த மார்க்கம் வாணியம்பாடி, சேர்வராயன் ஹில்ஸ், சேலம், கோவை, பாலக்காடு என்று விரிவடைந்து பெய்ப்பூரில் முடிவடைந்தது.
வெள்ளோட்டத்தில் மதராஸ் (ராயபுரம்), பெரம்பூர், ஆவடி, திண்ணனூர், திருவெள்ளூர், சின்னம்மா பேட்டை ஆகிய ஆறு ரயில் நிலையங்களே இருந்திருக்கின்றன. 1856க்குப் பின்னரே அவற்றைக் கடந்து கம்பெனிபேட்டை, சோலிங்கர், ஆர்காட், திருவெள்ளம், வேலூர் ஆகிய ரயில் நிலையங்கள் கூடுதலாகியிருக்கின்றன. அசைலம் பிரஸ் 1850களில் வெளியிட்ட ஆண்டுப்புத்தகங்களில் கூட இந்த விவரங்கள் தரப்பட்டுள்ளன. ஆனால் அதே புத்தகங்களில் ரயில்வே கட்டணப் பட்டியலுடன் கால அட்டவணையும் தரப்பட்டுள்ளன. அதில் மதராஸுக்கும் ஆற்காட்டிற்கும் இடைப்பட்ட 65 ½ மைல்களுக்குள் பெரம்பூர், ரெட்ஹில்ஸ் ரோடு, ஆவடி, திண்ணனூர், திருவெள்ளூர், கடம்பத்தூர், சின்னம்மாபேட்டை, கம்பெனிபேட்டை, சோலிங்கர் ஆகிய ரயில் நிலையங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மதராஸில் மாலை 3.30க்குப் புறப்படக்கூடிய பயணிகள் ரயில் மாலை 6.47க்கும், அவ்வாறே மதராஸிலிருந்து காலை 9 மணிக்குப் புறப்படக்கூடிய சரக்கு ரயில் மாலை 3.30க்கும் ஆர்காடு சென்று சேரும் என்பதை அறிகிறோம். அவ்வாறே ஆற்காடிலிருந்து பயணிகள் ரயில் காலை 5.30க்கும் சரக்கு ரயில் காலை 8.00 மணிக்கும் புறப்பட்டு முறையே 8.47க்கும் மதியம் 2.30க்கும் மதராஸ் சென்றடையும் என்பதும் தெரியவருகிறது. மதராஸிலிருந்து பெரம்பூர் சென்றிட மூன்றாம் வகுப்புக் கட்டணம் ஒண்ணே காலணா, ஆற்காடு சென்றிட ஒரு ரூபா ஐந்தணா எட்டுப் பைசா எனக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இதுவே முதல் வகுப்பாயிருப்பின் முறையே ஆறு அணாவாகவும், ஆறு ரூபாய் ஓரணா ஆறு பைசாவாகவும் இருந்திருக்கிறது. மூன்று வயதுக்குட்பட்டோருக்குக் கட்டணமில்லை. அதே நேரத்தில் அதற்கு மேற்பட்ட வயதுடையோருக்கு முழுக்கட்டணம்தான். தவிர சரக்குகளுக்கும் தனியே கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டிருந்திருக்கிறது.
இப்பட்டியலில் வினோதம் என்னவெனில் பெரம்பூருக்கும் ஆவடிக்கும் இடையில் பெரம்பூரிலிருந்து மூணரை மைல் தொலைவில் இருக்கக்கூடியது வில்லிவாக்கம் ரயில் நிலையம் மட்டுமே. சென்னபுரி வியவஹாரதரங்கிணி அச்சுக்கூடத்தில் 1883ல் பதிப்பிக்கப்பட்ட கலி 4985 இங்கிலீஷ் 1883-84ம் ஆண்டு தமிழ் ஸ்வபானு வருஷத்துப் பெரிய பஞ்சாங்கத்தின்படி ராயபுரத்திற்கும் அரக்கோணத்திற்கும் இடையில் பிரம்பூர், அம்பத்தூர், ஆவடி, திண்ணனூர், செவ்வாப்பேட்டை, திருவள்ளூர், கடம்பத்தூர், சின்னம்மாபேட்டை ஆகிய ரயில் நிலையங்களே இருந்திருக்கின்றன. 1888-89க்குப் பின்னர் கொன்னூர் என்றொரு புதிய ரயில் நிலையம் பிரம்பூருக்கும் அம்பத்தூருக்கும் இடையில் வந்திருக்கிறது. ரயில் நிலையம் அமைந்திருக்கும் பகுதி கொன்னூர், மல்லிகைச்சேரி ஆகிய இரு கிராமங்களுக்குட்பட்ட பகுதியாகும். 1890ல்வெளியிடப்பட்ட மதராஸ் நிலப்படத்தில்கூட வடமேற்கு மூலையில் இந்த கொன்னூர் கிராமத்தைக் காணமுடியும். கொன்னூர் கிராமத்திலிருந்து கிழக்கு நோக்கி அயன்புரத்தையும் நம்மாழ்வார்பேட்டையையும் கடந்து ஓட்டேரி நல்லா அருகில் குக்ஸ் சாலை சந்திப்பில் இணையக்கூடிய சாலை கொன்னூர் சாலையாகவே இன்றும் இருந்து வருகிறது. இதையும் பழைய நிலப்படங்களில் காணமுடியும். 1850களில் ரெட் ஹில்ஸ் ரோடு என்ற பெயரிலும் 1890களில் கொன்னூர் என்ற பெயரிலும் இருந்த ரயில் நிலையமே அடுத்த கட்டத்தில் கொன்னூர் மல்லிகைச்சேரிக்கு மேற்கே இருக்கும் கிராமமான வில்லிவாக்கத்தின் பெயரில் மாற்றமடைந்திருக்கிறது.
இப்பகுதியில் போக்குவரத்து நடமாட்டம் மிக்க முக்கியமானதொரு சாலையாக ரெட்ஹில் ரோடு இன்றும் இருந்து வருகிறது. வில்லிவாக்கத்தின் மையப்பகுதியிலிருந்து ரயில் பாதையைக் கடந்து கொளத்தூர் வரையிலான இச்சாலை வடக்கு ரெட்ஹில்ஸ் சாலை என்று அழைக்கப்பட்டு வருகிறது. கொளத்தூரைக் கடந்து வடக்கே செல்கையில் அது ரெட்ஹில்ஸ் சாலையாகவே இருந்து வருகிறது. வில்லிவாக்கம் கிராமத்தில் ரெட்ஹில்ஸை இணைக்கக்கூடிய சாலையையொட்டி அமைந்திருப்பதனால் ரயில் நிலையமும் ரெட் ஹில்ஸ் ரோடு என்ற பெயரினைக் கொண்டிருந்திருக்கலாம். இப்படிப் பல்வேறு காலகட்டங்களில் பெயர்மாற்றத்திற்குட்பட்ட ரயில் நிலையம் எதுவும் சென்னப்பட்டணத்தையொட்டி இருந்ததாகத் தெரியவில்லை.
1856ல் ராயபுரத்திலிருந்து ரயில் புறப்பட்டவுடனேயே “தொட்டி வைத்து தண்ணிரொப்பி அனல் மூட்டி பொட்டி வண்டி சாமான் வண்டி பின்னாலே பூட்டி ராயபுரத்தில் ரயில் புறப்பட்டதை” மட்டுமின்றி, “பெங்களூர்க்குவண்டி போகாமல் சொன்னது பின்னால் கல்கெட்டா மெயில் பேசன் பிரிஷ் நின்றது” என்று ரயில்வேயில் நடைபெற்ற வேலை நிறுத்தம் போன்ற வேறு பல செய்திகளையும் 1900ன் துவக்கத்தில் வெளியான ஏராளமான குஜிலி பாடல்களில் அறிய முடிகிறது. அதே நேரத்தில் ஆயின் தென்திசையில் சென்னப்பட்டணத்திலிருந்து செங்கற்பட்டுவரையிலான ரயில்நிலையங்களை “பல்லாவரம் பாரு பக்கத்தில் வண்டலூரு எல்லார்தங்குங்கூடு வாஞ்சேரியிதுபாரு” என்று கர்நாடகப் புகைவண்டி சிந்து வரிசைப்படுத்தியுள்ளது. இதே போன்ற வரிசை மேற்கே போன ரயில் பற்றிய குஜிலி பாடல்களில் ஏதும் காணப்படவில்லை. எப்படியிருந்தாலும் மதராஸிலிருந்து திருவள்ளூர் மார்க்கத்தில் செல்லக்கூடிய ரயில்கள் கொன்னூர், ரெட்ஹில்ஸ் ரோட் ஆகிய பகுதிகளை மட்டுமின்றி வில்லிவாக்கம் ரயில் நிலையத்தையும் கடந்துதான் இன்றும் சென்று வருகின்றன.








Leave a Reply