“வாழு அல்லது செத்துமடி, ஆனால் எல்லாவற்றையும் நஞ்சாக்காதே” வெல்லஸ்லியின் ஆன் செக்ஸ்டன்
பெத் ஹின்ச்லிஃப்
தொலைபேசி ஒலித்தபோது நான் எனது வெல்லெஸ்லி கல்லூரி விடுதியில் எனது டெஸ்க் முன் அமர்ந்திருந்தேன். கவிஞர் ஆன் செக்ஸ்டனுடன் நடத்திய நேர்காணலைப் படியெடுத்துக் கொண்டிருந்ததால் நான் உற்சாகமடைந்திருந்தேன் – ஆங்கில மொழி இலக்கியத்தைப் பிரதானமாகக் கற்பவர்களுக்கு அவர் ஒரு வகையான தெய்வம், மேலும் சந்திப்பதற்கு எனது கூச்சமுடன் கூடிய வேண்டுகோளை அவர் ஏற்றுக்கொண்டபோது நான் சிலிர்த்துப் போனேன்.
இப்போதுதான் ஆன் தற்கொலை செய்து கொண்டார் என்று சொல்வதற்காக என் அம்மா போன் செய்தாள்.
நான் டேப் ரிக்கார்டரை அணைத்தேன். ஆனாலும் அவரது குரல் அறையில் எதிரொலிப்பதை என்னால் கேட்க முடிந்தது. தற்கொலைக்கான தடயங்களை என் குறிப்புகளில் தேடினேன். ஆம், ஒரு கட்டத்தில், “நான் இறக்கவில்லை. இன்னும் இல்லை,” என்று கூறியிருந்தார். ஆனால் அன்றைய பிற்பகலை அவருடன் கழித்த பிறகு, அவர் வெறுமனே வாழ்க்கையால் நிறைந்திருக்கவில்லை, வாழ்க்கையை விடவும் பெரிய மகா மனுஷி என்னும் உணர்வால் திகைத்துப் போய் நான் வெளியே வந்தேன்.
வெஸ்டனில் 14 பிளாக் ஓக் சாலையில் உள்ள அவரது நீண்டகால வீட்டின் இரைச்சலான, இருண்ட, மரப் பலகைகள் கொண்ட படிப்பறையில், அவருடைய சூரிய வெளிச்சம் நிரம்பிய சமையலறைக்குச் சற்று அருகில், பொருத்தமற்ற வகையில் திரைச்சீலைகளில் மகிழ்ச்சியாக இருக்கும் ஜிஞ்சர்பிரெட் ஆண்களுடன், நாங்கள் சந்தித்துக்கொண்டோம். அறைக்கு அவர் மின்னேற்றம் வழங்கினார். என் நினைவில் மற்ற அனைத்தும் கறுப்பு, வெள்ளையாக (முரண்பாடாக, குறிப்பாக அவரது டால்மேஷியன்ஸ்) இருந்தன. அதேசமயம் அவர் நனைந்த வண்ணங்களில் வெடித்தார்.
அவருடைய குரல், சராசரியை விட மூன்று மடங்கு சத்தமாகவும், மூன்று மடங்கு ஆழமாகவும் கரகரப்பாகவும் விஸ்கி வாசனையுடனும் இருந்தது. அவரது அசைவுகள் குறுகலான அறைக்குரியதாக இல்லாமல், ஒரு மேடைக்குப் பொருத்தமானதாக இருந்தன. அவர் அசையாமல் ஒருபோதும் இருக்கவில்லை. இயல்பாகவும், முன்பு மாடலாக இருந்தபோது கொண்டிருந்த திட்டமிட்ட புலனுணர்வுக்கு ஆட்படும் அதே தன்மையுடனும் அவர் அசைந்து கொண்டிருந்தார். அவருக்குச் சமமான வனப்புடன், ஆனால் அமைதியாக இருந்த டால்மேஷன் நாய்கள் அவரைப் பிரதிபலித்துக் கொண்டிருக்க, அவரது கால்கள் இடைவிடாமல் பின்னிக் கொண்டிருந்தன.
45 வயதில், அவரது ஜேன் ரஸ்ஸல் முகம் ஒரு கணத்திலிருந்தது போல அடுத்த கணத்தில் இல்லை, உணர்ச்சிகள் பாய்ந்து தெளிவான வரிசையில் மாறிக்கொண்டிருந்தன, நான் எப்போதும் ஒரு படி பின்னால் இருப்பதாக உணர்ந்தேன். அவளது பெரிய கைகளில், பளபளப்பாக்கப்படாத, மை தெறித்த நீண்ட விரல்களில், அடுத்தடுத்து சிகரெட் பிடித்தார். அவர் பேசிக்கொண்டிருந்தது போலவே அதே கவனமான முறையில் புகைத்துக் கொண்டிருந்தார். கன்னங்கள் குழிவிழும் அளவுக்கு ஆழமாக மூச்சுடன் புகையை உள்ளிழுத்தார். ஒவ்வொரு மூலக்கூறையும் வெளியேற்ற விரும்புபவள் போல புகையை நெஞ்சுக்குள் பிடித்து வைத்தார். புகைமூச்சை அவருடைய முகத்தை மறைக்கும்படியாக, இரைச்சலான மேகமாக வெளியே ஊதினார்.
ஆனால், உண்மையில் அவரது வார்த்தைகள்தான் கவனத்தைக் கவர்ந்தன, அவற்றின் தீவிரம் களைப்படைய வைத்தன. நாட்டின் மிகவும் பிரபலமான கவிஞர்களில் ஒருவரான இவர், புலிட்சர் பரிசு முதல் ஃபோர்டு, குக்கன்ஹைம், கலை இலக்கியத்துக்கான அமெரிக்கக் கலைக்கழகம் ஆகியவை வழங்கும் அனைத்து விருதுகளையும் பெற்றிருந்தார். ராபர்ட் லோவெல், சில்வியா பிளாத் ஆகியோருடன் சேர்ந்து, “ஒப்புதல் வாக்குமூலம்” கவிதைப் பள்ளியை உருவாக்கி அதற்குக் கருத்துருவம் தந்தார். கவிகளின் மன நோய்கள், மருத்துவமனையில் அனுமதித்தல், தற்கொலை முயற்சிகள் பற்றி கடுமையாகவும் சமரசமின்றியும் எழுதினார். அவரது எழுத்து போலவே பேச்சும் இருந்தது. கடுமையான, அப்பட்டமான, தயக்கமில்லாத வார்த்தைகளுடன் பேசினார்.
நாங்கள் விவாதித்துக் கொண்டிருந்த எதற்கும் தொடர்பில்லாமல், திடீரென்று அவர், “நான் மனச்சோர்வடையவில்லை,” என்று கூறினார். “நான் மனக்கசப்புடன் இருக்கிறேன்.” எங்கள் பேச்சின் தொனியைச் சுருக்கமாக வெளிப்படுத்திய வார்த்தைகள் அவை. “வாழ்க்கை, என்னைப் பொறுத்தவரை, மனக்கசப்பே.”
வெல்லெஸ்லியில் தனது குழந்தைப் பருவம், தற்போதைய வெஸ்டன் வாழ்க்கை ஆகியவை பற்றி அவர் பேசினார். “என் கவிதை என் அண்டை வீட்டாரை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது” என்றும் அவர் கூறினார். “இது சீர்மையற்றும் குரூரமாகவும் இருக்கிறது. அது நான் இல்லை என்கிறார்கள். ஆனால் அதுதான் உண்மையான நான்.” வெல்லெஸ்லியில் (81 கார்டன் சாலையில், பிரவுன் பள்ளிக்கும் வெல்லெஸ்லி குன்றுகளின் திருச்சபை தேவாலயத்திற்கும் அருகில் கொஞ்ச தூரத்தில்தான் அவருடைய ஞாயிற்றுக்கிழமை இருந்தது) தானொரு பெண்ணாக வளர்ந்து வந்ததைப் பற்றி பேசினார். விளையாட்டு மைதானங்களைவிட தேவதைக் கதைகளும் அச்சங்களும் நிறைந்த உலகத்தைச் சேர்ந்தவர் அவர். (மூன்றாம் தலைமுறை வெல்லெஸ்லியின் குழந்தை, அவருடைய தாத்தா வெல்லெஸ்லி தேசிய வங்கியின் தலைவராக இருந்தார்.)
வெல்லெஸ்லியில் தனது ஆண்டுகளைத் திரும்பிப் பார்க்கும்போது, தனது பதின்ம வயது சுயத்தை ஒரு “பருக்கள் நிறைந்த சிறுமி – பைத்தியக்காரத்தனமான விஷயம்” என்று அவர் நிராகரித்தார். ஊர்சுற்றுவதில் வெறித்தனமாக இருந்தார்; அவரது 10 ஆம் வகுப்பு அமெரிக்க இலக்கிய வகுப்பில் “சி” கிரேடு பெற்றார் (முயற்சிக்கு “F” உடன்). (அவர் 1947 ஆம் ஆண்டு வகுப்பில் வெஸ்லி உயர்நிலைப் பள்ளியிலிருந்து பட்டம் பெறவில்லை, அதற்குப் பதிலாக உறைவிடப் பள்ளிக்குச் சென்றார்.)
19 வயதில் ஓடிப்போன அவர், ஹாத்வே ஹவுஸ் புத்தகக் கடையில் (வெல்லெஸ்லி சதுக்கத்தில் வெஸ்டன் சாலையும் மத்திய தெருவும் இணையும் மூலையில், ஒரு சமயம் பண்ணை வீடாக இருந்து இப்போது அலுவலகங்களைக் கொண்டதாக மஞ்சள் நிறத்தில் இருந்தது) எழுத்தராக சிறிது காலம் பணியாற்றினார், அவருக்கு இரண்டு குழந்தைகள். ஒரு தற்கொலை முயற்சி. அதுவரை அவர் கவிதை எழுதவில்லை. மனநல மருத்துவமனையில் நீண்ட காலம் அனுமதிக்கப்பட்ட போது, தனது 27 வயதில் அவர் கவிதை எழுதத் தொடங்கினார். “[தன்னுடைய] சாரத்தைக் கண்டார்”.
ஆன் செக்ஸ்டனும் சில்வியா பிளாத்தும் வெல்லெஸ்லியில் குழந்தைகளாக இருந்தபோது ஒன்று போலவே வளர்ந்தனர். ஆனால் 1959 ஆம் ஆண்டில் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் ராபர்ட் லோவலின் கவிதை கருத்தரங்கை தணிக்கை செய்யும் பெரியவர்களாக சந்திக்கும் வரை ஒருவருக்கொருவர் தெரியாது. இது ஒரு புகழ்பெற்ற, பற்றி எரியக்கூடிய கலவையாகும். “நாங்கள் தற்கொலை சகோதரிகள், எங்கள் முயற்சிகளின் ஒவ்வொரு விவரத்தையும் பரிமாறிக்கொள்வதில் நாங்கள் ஒருவருக்கொருவர் வடிகாலாக இருந்தோம்” என்று அவர்களுக்கிடையில் உருவாகியிருந்த தீவிர பிணைப்பைப் பற்றி ஆன் கூறினார். “நாங்கள் அதன் மீது மோகம் கொண்டோம்.”
நான்கு குறுகிய ஆண்டுகளுக்குப் பிறகு வந்த ஆண்டுகளில், திடீரென அவர்கள் சர்வதேச இலக்கிய உலகில் வெடித்தபோது, அவர்கள் இருவருக்கும் பிரசுரங்களும் கௌரவங்களும் நிறைந்தன. சில்வியா தற்கொலை செய்து கொண்டார். இந்தச் செய்தியைக் கேட்டவுடனேயே ஆன் செக்ஸ்டன் துயரமும் பொறாமையும் கலந்த ஆவேசமான, ‘சில்வியாவின் மரணம்’ என்னும் கவிதையை எழுதினார்: “திருடி, நீ எப்படி தவழ்ந்து நுழைந்தாய், / தனியாக ஊர்ந்து சென்றாய்/ மரணத்திற்குள் – அதை நான் மிக நெடுங்காலமாக மிக மோசமாக விரும்பியிருந்தேன்”
“என் நேரம் வரும்,” ஆன் என்னிடம் கூறினார். “சில்வியாவின் உட்புறத்தில் தற்கொலை இருந்தது. நானும் அப்படித்தான்.”
எனினும் அவரை வாழ்க்கையோடு பிணைத்திருப்பதாகத் தோன்றும் விஷயங்களைப் பற்றியும் அவர் பேசினார்: அவருடைய மகள்கள், என் வயதை ஒட்டி இருப்பார்கள், பள்ளிக்குப் போயிருந்தனர்; அவரது பல கவிதை வாசிப்புகள், சில அவரது சொந்த ஜாஸ் குழுவால் இசையமைக்கப்பட்டன; அவருடைய வீட்டைச் சூழ்ந்திருந்த சதுப்பு நில மேப்பிள்களின் அழகு; முன் முற்றத்தில் நிற்கும், பூமியிலிருந்து வெளியே எழுந்தது போல் காணப்படும் பிரம்மாண்டமான பாறாங்கல்லைப் பார்த்து அவர் அடைந்த குறும்புத்தனமான மகிழ்ச்சி, “ஒரு குலக்குறி, என்னைக் காக்கிறது;” அவர் பெற்ற கௌரவப் பட்டம், அது அவருடைய தந்தையைக் கவர்ந்திருக்கும்; அண்மையில் வெளியான அவரது ‘மரணக் குறிப்பேடுகள்’ என்ற நூல்; மற்றும் புதியதாக எழுதப்பட்ட கவிதைகள் – அவை ஆனின் மரணத்திற்குப் பிறகு, ‘கடவுளை நோக்கி படகோட்டுதல்’ என்ற பெயரில் வெளியிடப்பட்டது.
நாங்கள் பிரிந்தபோது, அவர் அப்போதுதான் எழுதி முடித்திருந்த “மரணம் வரையிலும் நோய்மை” என்னும் வெளியிடப்படாத கவிதையின் கையொப்பமிட்ட பிரதியை என்னிடம் கொடுத்தார். மேலும் தனது எழுத்துக்களின் பிரதிகளைப் பார்க்குமாறு ஆன் அன்புடன் கேட்டுக்கொண்டார்.
பின்னர், கண் இமைக்கும் நேரத்திற்குப் பிறகு, அந்த அற்புதமான இலையுதிர்கால நாளில், மூடிய கராஜில் ஓடும் காரில், ஆன் சில்வியாவைப் பின்தொடர்ந்து, “நாங்கள் இருவரும் ஏங்கிய இனிய மரணத்திற்குள்” சென்றார்.
(வெஸ்லிவெஸ்டன் இதழில் இருந்து)
1. முத்தம்
என் வாய் ஒரு வெட்டுக்காயம் போல மலர்கிறது.
ஆண்டு முழுவதும் நான் தவறிழைத்து வந்தேன், அலுப்பூட்டும்
இரவுகள், அவற்றில் கரடுமுரடான முழங்கைகளைத் தவிர வேறொன்றுமில்லை
மென்மையான க்ளீனெக்ஸ் பெட்டிகள் அழைக்கின்றன அழுமூஞ்சிக் குழந்தையே,
அழுமூஞ்சிக் குழந்தையே, முட்டாள் நீ !
இன்று வரை என் உடல் பயனற்றதாக இருந்தது.
அது இப்போது சதுர மூலைகளில் கிழிகிறது.
மேரியின் பழைய ஆடைகளை கிழித்தெடுக்கிறது,
ஒவ்வொரு முடிச்சாக
மேலும் பாருங்கள் — இப்போது அது இடி மின்னல்களால் நிரம்பியுள்ளது.
ஸிங்! ஒரு உயிர்த்தெழுதல்!
ஒரு காலத்தில் அதுவொரு படகு, வெறும் மரத்தாலானது
ஒரு வேலையும் இல்லை, அதன் அடிப்பகுதியில் உப்புநீர் இல்லை
கொஞ்சம் வண்ணம் பூச வேண்டியிருந்தது. மரப் பலகைகளின் கூட்டம்
என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை. ஆனால் நீ அவளை உயரே பறக்கவிட்டாய்
அவளது பாய்மரக் கயிறுகளை அவிழ்த்துவிட்டாய்.
அவளைத் தேர்ந்துவிட்டாய்.
என் நரம்புகள் முடுக்கப்பட்டுவிட்டன. அவற்றை இசைக்கருவிகள் போல்
செவிமடுக்கிறேன். மௌனம் நிலவும் இடங்களில்
முரசுகள், தந்திகள் தீராமல் இசைக்கின்றன. நீ இதைச் செய்தாய்.
வேலையில் தூய மேதை. அன்பே, இசையமைப்பாளர் தீக்குள்
இறங்குகிறார்.
2. படகோட்டுதல்
ஒரு கதை, கதை!
(அது போகட்டும், வரட்டும்)
இந்த உலகுக்குள்
ப்ளைமவுத் காரின் தடுப்பான் போல வலிந்து நசுக்கப்பட்டேன்
முதலில் சிறிய அறை வந்தது
அதன் பனிப்பாளங்களுடன்
பின்னர் பொம்மைகள்
மேலும் அவற்றின் நெகிழி வாய்கள் மீதான பக்தி.
பிறகு அங்கே பள்ளிக்கூடம் இருந்தது,
குட்டி நாற்காலிகளின் நேர் வரிசைகள்,
என் பெயரை திரும்பத் திரும்ப துடைத்தழித்தார்கள்,
ஆனால் எந்நேரமும் கடலுக்கடியில்,
முழங்கைகள் வேலை செய்யாத ஒரு அந்நியன்.
பிறகு அங்கே வாழ்க்கை இருந்தது
அதன் குரூரமான வீடுகளுடன்
அரிதாகத் தொட்டுக்கொண்ட மக்களுடன் –
தொடுதல் தான் எல்லாமும் எனினும் –
ஆனால் நான் வளர்ந்தேன்,
மழைக்கோட்டு அணிந்த பன்றியைப் போல நான் வளர்ந்தேன்.
பிறகு அங்கே பல விசித்திரமான மாயத்தோற்றங்கள் இருந்தன,
விடாமல் பெய்யும் மழை, நஞ்சாக மாறும் சூரியன்
அவ்வளவுதான், என் இதயத்திற்குள் அறுக்கும் ரம்பங்கள்,
ஆனால் நான் வளர்ந்தேன், நான் வளர்ந்தேன்,
நான் படகோட்டிச் செல்லாத ஒரு தீவு போல கடவுள் அங்கே இருந்தார்,
இன்னும் அவரை அறியாததால், என் கைகளும் கால்களும் வேலை செய்தன,
நான் வளர்ந்தேன், நான் வளர்ந்தேன்,
நான் மாணிக்கம் அணிந்தேன், தக்காளி வாங்கினேன்
இப்போது நான் நடுத்தர வயதில்,
நான் சொல்வேன் என் தலைக்கு சுமார் பத்தொன்பது வயது என்று,
நான் படகோட்டுகிறேன், படகோட்டுகிறேன்
துடுப்புகள் துருப்பிடித்து வளையங்களில் ஒட்டிக்கொண்டுள்ள போதிலும்
மேலும் கடல் கண் சிமிட்டுகிறது, உருள்கிறது
கவலை தோய்ந்த விழிக்கோளம் போல,
ஆனால் காற்று என்னைப் பின்னுக்குத் தள்ளியபோதும்
நான் படகோட்டுகிறேன், படகோட்டுகிறேன்,
மேலும் அந்தத் தீவு முழுமையானதல்ல என்பதை நான் அறிவேன்,
அது வாழ்க்கையின் பழுதுகளைக் கொண்டிருந்தன,
சாப்பாட்டு மேஜையின் அபத்தங்கள்,
ஆனால் அங்கொரு கதவு இருக்கும்
நான் அதைத் திறப்பேன்
மேலும் எனக்குள் இருக்கும் எலியிடமிருந்து விடுபடுவேன்.
சதா கொறித்துக்கொண்டே கொள்ளை நோய் பரப்பும் எலி அது
இறைவன் தன் இரு கைகளாலும் அதைப் பிடித்துக்கொள்வான்
மேலும் அதைத் தழுவிக் கொள்வான்.
ஆஃப்ரிக்கர் சொல்வது போல்:
நான் சொல்லிய இது என் கதை தான்,
இது இனிப்பாக இருந்தால், இனிப்பில்லாமல் இருந்தால்,
வேறு எங்காவது எடுத்துச் செல்லுங்கள், கொஞ்சம் என்னிடம் திரும்பி வரட்டும்.
நான் இன்னும் படகோட்டுவதோடு இந்தக் கதை முடிகிறது.
3. உள்நாட்டுப் போர்
நான் இரண்டாகக் கிழிந்திருக்கிறேன்
ஆனால் என்னை நானே வெல்வேன்.
பெருமையை நானே தேடிக் கொள்வேன்.
கத்தரிக்கோல் எடுத்து நான்
பிச்சைக்காரியை வெட்டியெடுப்பேன்
ஒரு கடப்பாரையை எடுத்து
எனக்குள் இருக்கும் கடவுளின்
உடைந்த துண்டுகளைத் தோண்டி எடுப்பேன்.
ஒரு திருகுவெட்டுப் புதிர் போல
ஒரு செஸ் விளையாட்டுக்காரியின் பொறுமையுடன்
மீண்டும் ‘அவனை’ ஒன்று சேர்ப்பேன்.
எத்தனை துண்டுகள்?
ஆயிரங்கள் போல உணர்கிறேன்,
கடவுள் ஒரு வேசியைப்போல கடல் பாசியின்
பச்சைக் குழைசேற்றை உடுத்தியிருக்கிறார்.
ஒரு முதியவரைப்போல கடவுள் உடையணிந்திருக்கிறார்
அவரது காலணிகளிலிருந்து தள்ளாடி வருகிறார்
கடவுள் ஒரு குழந்தையைப் போல உடையணிந்து,
முழு நிர்வாணமாய்
தோல் கூட இல்லாமல்,
உரித்த வெண்ணெய் பழம் போல மென்மையாய் இருக்கிறார்
மேலும் மற்றவர்கள், மற்றவர்கள், மற்றவர்கள்.
ஆனால் நான் அவர்கள் அனைவரையும் வெல்வேன்
கடவுளின் முழு தேசத்தையும் கட்டியெழுப்புவேன்
என்னில் – ஆனால் ஒன்றுபட்டவர்,
ஒரு புதிய ஆன்மாவைக் கட்டுவேன்,
தோல் கொண்டு உடை உடுத்துவேன்
பிறகு என் சட்டையை அணிவிப்பேன்
ஒரு புகழ்வணக்கப் பாடலைப் பாடுவேன்,
என்னைப் பற்றிய ஒரு பாடல்.
4. குழந்தைகள்
குழந்தைகள் அனைவரும் தங்களுடைய தடுப்புவேலிக்குள் அழுகிறார்கள்
அவர்களின் கூக்குரலை அலை தூக்கிச் செல்கிறது.
மிக அதிகம் பார்த்துவிட்ட முதியவர்கள் அவர்கள்.
அவர்களுடைய வாய் அழுக்குத் துணிகளால் நிறைந்திருக்கிறது.
நாக்குகள் உலர்ந்துவிட்டன, கண்ணீர் போன்ற சீழ்
அலை அவர்களின் கூக்குரலை பின்னுக்குத் தள்ளுகிறது.
கவனி. அவர்கள் மயக்கமடைகிறார்கள்.
அவர்கள் தங்கள் வாழ்க்கையை ஒரு குட்டிச்சாத்தானுடைய சிறகுகளில் எழுதுகிறார்கள், பின்னர் அது கரைந்துவிடுகிறது.
அழிவதற்கென்றே வீழ்ந்த ஒரு நூற்றாண்டின் மேல் அவர்கள்
தங்கள் வாழ்க்கையை எழுதுகிறார்கள்.
ஒரு அந்நிய தெய்வத்தின் வெடிகுண்டின் மேல் அவர்கள்
தங்கள் வாழ்க்கையை எழுதுகிறார்கள்.
நானும்தான்.
நாம் உதவி பெற வேண்டும்.
குழந்தைகள் தங்களுடைய தடுப்புவேலிக்குள் இறந்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுடைய உடல்கள் சிதைந்து கொண்டிருக்கின்றன.
அவர்களின் நாக்குகள் பின்னோக்கி திருகியிருக்கின்றன.
அதற்கென ஒரு குறிப்பிட்ட சடங்கு இருக்கிறது.
அவர்கள் தடுப்புவேலிக்குள் தங்களுடைய நடனத்தை ஆடுகின்றனர்.
அவர்களின் வாய்கள் மிகப் பெரியவை.
அவை அரக்க இதயங்களை விழுங்குகின்றன.
அப்படித்தான் இருக்கிறது என் வாயும்.
■
தமிழில்: சமயவேல்
1980 களில் கவிதைகள் எழுதத் தொடங்கிய சமயவேல் இதுவரை ஒன்பது கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டு இருக்கிறார். மொழிபெயர்ப்பிலும் ஈடுபட்டுள்ள இவர் இதுவரை எட்டு மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டு இருக்கிறார். கவிதைக்காக விளக்கு விருதையும் மொழிபெயரப்புக்காக விகடனின் நம்பிக்கை விருது, நல்லி திசையெட்டும் விருது ஆகியவற்றைப் பெற்றிருக்கிறார். தொலைதொடர்பு நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்று மதுரையில் வசித்து வருகிறார்.








Leave a Reply