தலித் வரலாற்று மாதத்தை முன்னிட்டு நீலம் பண்பாட்டு மையம் ஆண்டுதோறும் ‘வானம்’ கலைத் திருவிழாவினை மிகச் சிறப்பாக நடத்தி வருகிறது. இலக்கியம், திரைப்படம், நாடகம், புகைப்படம், ஓவியம், சிற்பம் வகைமைகளில் நடக்கும் இத்திருவிழாவின் ஒரு அங்கமான ‘வேர்கோடுகள்’ கலைக் கண்காட்சியில் ‘தூண்டாமணி விளக்கு’ (2024) ‘என் வீடு’ (2025) படைப்புகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.



தூண்டாமணி விளக்கு
நிறுமானக்கலை (ART INSTALLATION)
கல் விளக்கு, சுடுமண் & ஒப்பாரி பாடல்
(STONE LAMP, TERRACOTTA & LAMENTING SONG)
காதலித்த ஒரே காரணத்திற்காகச் சாதியின் பெயரால் இதுவரைக் கொல்லப்பட்ட இதயங்களின் ஆன்மாக்களின் நினைவுகூறல்.
இயற்கையின் இயல்பான உணர்ச்சிகளில் ஒன்று காதல். அந்தக் “காதல்” இந்தியச் சாதியச் சமூகத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு இயல்பானதாக இல்லை. வேறு வேறு சமூகத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் நேசித்ததற்காக, காதலித்ததற்காகக் காலங்காலமாக இங்கே பல உயிர்கள் மிகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருக்கின்றன. அப்படிக் கொலை செய்யப்பட்டவர்களைப் பறிகொடுத்தவர்கள், இறுதியாகச் சவக்குழியில் கை பிடிமண் போடும்போது அவர்களுக்கு இருந்த வலியை, தவிப்பை, கையறு நிலையை, அந்த அழுகையை, அந்தக் கனத்த இதயத்தை, அவர்களின் ஒப்பாரியைக் கடத்த முயற்சிக்கிறது இந்தக் கலைப் படைப்பு.
படைப்பு : ஓவியர் வ.சரண்ராஜ்
பாடியவர்: ஒப்பாரி கலைஞர் பாண்டியம்மாள்
ஒப்பாரி வரிகள்: கவிஞர் முத்துராசா குமார்
ஒப்பாரி தலைப்பு: நம்ம சனுச்சு வருவோமே
நம்ம சனுச்சு வருவோமே
சனுச்சு வருவோமே
அத்தாத்தென்டி ஆகாசமா
ஆழமான சமுத்திரமா
நம்ம காதலிச்சமே
நம்ம காதலிச்சமே
கத்தாழ வளவளப்பா
கள்ளிப்பூவு சொலிசொலிப்பா
நம்ம ஒன்னுக்கொன்னு ஆச வச்சோமே
உருத்தாதான் காதல் செஞ்சோமே
அந்தக் கம்மா தாண்டும் பட்சிக
கருமேகக் கூட்டங்க
நம்ம காதலுக்குச் சாட்சிக
கொண்டு கொடுத்த நேசத்துக்குத் தொணைக
மண்விளக்கும் மண்டியிடும்
நம்ம காதலோட வெளிச்சத்துக்கு
கண்ட கனாவோட கனத்துக்கு
மாடக்குழி இடிஞ்சுருச்சே
மரமொன்னு முறிஞ்சுருச்சே
கோவுரந்தான் சரிஞ்சுருச்சே
கரும்புந்தான் கசந்துருச்சே
வெலமெடுத்து வந்தாக
வெறியேறி வந்தாக
நெஞ்சம் பொடைக்கப் பார்த்தோமே
பிரியாம நின்னோமே
அந்தப் பொல்லாத சாதிவெசம்
பொட்டல்ல போற சாதிப்பாசம்
நம்ம காதலத்தான் பொசுக்கிருச்சே
துள்ளத்துடிக்கக் கொன்னுருச்சே
மூச்சடச்சுக் கொன்னாக
நம்ப வச்சுக் கொன்னாக
கத்தக் கத்தக் கொன்னாக
நஞ்சூத்திக் கொன்னாக
நாடி அடங்கக் கொன்னாக
குந்தாக்கூரா கொன்னாக
கூட்டம் சேர்ந்து கொன்னாக
கூடப்பெறந்தவுக கொன்னாக
பெத்தவுக கொன்னாக
வம்மம் வச்சு கொன்னாக
அந்த அழகருமல தீர்த்தமா
அடமழச் சத்தமா
ஆறா ஓடுச்சே நம்ம ரத்தம்
அநாதையா நின்னுச்சே நம்ம முத்தம்
வாய்க்கரிசி போட்ட சனம் வங்கொலையா அழுகுதம்மா
மண்ணள்ளி போட்ட சனம் மாரடிச்சு தேம்புதம்மா
கொள்ளியள்ளி போட்ட சனம்
உக்கி உக்கி மருகுதம்மா
நம்ம சனுச்சு வருவோமே
நம்ம சனுச்சு வருவோமே
இந்தப் பாவி பரப்பா ஊருல
சாதியால செத்த நம்ம
மறுபடியும் பெறந்து வருவோமே
நம்ம தழஞ்சு வருவோமே
நல்லா தழஞ்சு வருவோமே
வெதநெல்லா வருவோமே
வெள்ளி மின்னலா வருவோமே
இந்தத் தீட்டு பார்க்கும் ஊருல
சலிக்கச் சலிக்கக் காதலிக்க
திண்ணக்கமா வருவோமே…




என் வீடு
நிறுமானக் கலை
மரக்கதவு மற்றும் கவிதை
5.5×3.5 அடி
படைப்பு: ஓவியர் வ.சரண்ராஜ்
கவிதை வரிகள்: எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா
My House
Art Installation
Wooden Door and Text (poem)
5.5 x 3.5 Feet
Art Work by Artist V SARANRAJ
Text (Poem) Writer AADHAVAN DHEETCHANYA
கவிதைத் தலைப்பு : அழுவதற்கு நேரமற்றவன்
தினந்தோறும் இழவு விழுவதாயிருக்கிறது என் வீடு
கண்ணீரில் ஊறவைத்து உப்பேற்றி ஒன்றைப் புதைத்து முடிப்பதற்குள்
நாலாப்பக்கமுமிருந்து வந்து விழுகின்ற அடுத்தடுத்த பிணங்களை
என்ன செய்வதென்றறியாது விக்கித்து
அப்படியப்படியே விட்டுவிட்டதில் இண்டுஇடுக்கெல்லாம் நிறைந்து
பிணக்கிடங்காகியிருக்கிறது என் வீடு
அப்போதே பிறந்த சிசுவைப்போல புத்தம்புதிதாய் வந்து விழும் பிணங்களை
பேட்டி காணவும் ஆளுயர மாலை சார்த்தி அஞ்சலி செலுத்தவும்
உண்மையை மீண்டும் மீண்டும் அறியவும்
முன்பின் அறிந்திராத யாரோவெல்லாம்
முற்றுகையிட்டிருக்கிறார்கள் என் வீட்டை
பிணங்களைத் தாண்டித்தாண்டிப் போய்
இன்னபிற அலுவல்களைப் பார்த்து வருவதும்
பிணங்களுக்கிடையிலேயே அமர்ந்துண்பதும்
சிலவேளைகளில் ஏதேனுமொரு பிணத்தை அணைத்துப் படுத்தபடியே
தொலைக்காட்சி விவாதங்களைப் பார்ப்பதுமாகிவிட்டது
மரத்துப்போன எனது அன்றாடம்
நொடிப்பொழுதும் ஓய்வற்று
இந்த நாட்டின் ஒவ்வொரு அங்குலத்திலும்
போர் / வன்கொடுமை ஒன்று நிகழ்ந்து வரும்போது
பிணங்களின் வரத்துப் பெருகத்தானே செய்யும் என்று
என்னை நானே ஆற்றுப்படுத்தியவாறு
எல்லாப் பிணங்களுக்கும் இடத்தை ஒழுங்கு செய்வதிலேயே
கழிந்துவிடுகிறது என் நேரம்
எவ்வாறேனும் பிணங்கள் இல்லாத நாளொன்று வருமானால்
இதுவரை செத்தவர்களுக்கென
நெஞ்சே வெடித்துச் சிதறும் படியாய்
கதறியழக் காத்திருக்கிறது எனது துக்கம்
பெருகியோடும் என் கண்ணீரில்
உனக்கான துளிகளைக் கண்டுகொள்வீர்கள்தானே…
வ.சரண்ராஜ்
ஓவியர் மற்றும் சிற்பக் கலைஞர்
மதுரை மாவட்டத்திலுள்ள கரடிப்பட்டியில் பிறந்தவர். 2017 ஆம் ஆண்டு அரசு கவின் கலைக் கல்லூரியில் சிற்பக் கலையில் பட்டம் பெற்றவர். தற்போது 2024-2026 முதுகலைப் பட்டதாரி மாணவராக உள்ளார். கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னையை மையமாகக் கொண்டு தனது கலைப் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். சிற்பக் கலையில் நிபுணத்துவம் பெற்றவராக இருந்தாலும், அவரது படைப்புகளுக்குப் பின்னால் உள்ள கருத்துகளைச் சிறப்பாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிற ஊடகங்களுடனும் அவர் பயிற்சாத்தை வெளிப்படுத்தி வருகிறார். சரண் தன் படைப்புகள் மூலம், குரலற்றவர்களுக்குக் குரல் கொடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளார். அவரது படைப்புகள் என்பது சமூகத்தில் நிலவும் சாதிய ரீதியிலான சிக்கல்களை முரண்களைப் பேசுகின்றன. அதன் வழியாக ஓர் உரையாடலை நிகழ்த்த முயல்கிறார். மேலும் அவரது கலைப் படைப்புகள் தமிழ்ப் பாரம்பரிய மற்றும் நாட்டுப்புறக் கலை வடிவங்களுக்குப் பின்னால் உள்ள கோட்பாடுகள் மற்றும் கருத்துகளைச் சமகால நடைமுறைகள் மூலம் தொடர்ந்து ஆராய்கின்றார்.








Leave a Reply