1
நடுநிசி துயிலெடை தூரிகையில்
பேரருவியின் இரைச்சலெனச் சொட்டுகிறது
தேநீர்த் துளிச் சுவை
கள்ளமற்றுப் புணர்ந்த பூனைகளின்
பின்பொரு முறைமையில்
யன்னலுக்கு அப்பால் குறுகுறு கண்களைத்
தூக்கிச் செல்லுமவளை
எத்தனை விரல்கொண்டு அள்ளியெடுக்க
எத்தனை வரிகொண்டு வரைகலையாக்க
அடி தொடங்கி மிடறுவரை மேலேறிய
என் மஞ்சள்நிற மென்வன் கீறல்களை
தூரப் பச்சை நில நினைவில்
இடைவழி நழுவவிட்டுத் துடைத்தெறியுமவள்
கணுக்கால் தடத்தில் புதைந்தயென்
பாங்குகளை எவ்விரவுகொண்டு
எவ்மறைவிட வாசனையில்
எதைக் கொண்டகழ்ந்து எரிப்பாளோ
ரோமப் புள்ளிகளில் பதிந்தயென்
சிவப்புத் தடங்கள் ஒருபோதும்
நீங்க இயலாதவை என்றறியாமல்
நீண்டநெடும் எத்தனத்தின் அத்தனை
கூறுகளும் நீர்த்து நுரையாகியதும்
அவளது கருநிறப் புடவையின்
அறுதியிட்டுக் கூறமுடியாத இறுதி நூலிழையின்
வாயிலாய்த் திறந்தவிழி கனவில்
என்னை எத்தனை புணர்வாளோ
அத்தனை முறையும் மதன நீரூற்றி
மலரச் செய்வாளாக
மறுபடியும் மறுபடியுமாகத் தன்னில்.
2
இரகசியமாய்
நுழைப்பதற்காகவோ அல்லது
நுழைக்கப்படுவதற்காகவோ ஆன
குறியொன்றைப் பெற்றெடுக்க
இரகசியமாய் ஒன்றுக்குள் மற்றொன்றாய்
நுழைந்து கொள்கின்றன குறிகள்
இரகசியமாய்ப் பார்க்கப்பட்டு
இரகசியமாய் ஆக்கப்பட்டு
இரகசியமாய் வளர்க்கப்பட்டு
இரகசியமாய்ப் பருவமடைகின்ற குறிகள்
இரகசியப் பாலுணர்வின் அதீதத்தால்
இரகசியக் குறிகளை
இரகசியமாய் வன்புணர்வு கொள்கின்றன
பின்பு சிதைந்த குறியின் நீதிக்காய்
இரகசியம் உடைபடும்வேளை
இரகசியமான குறிகள் இரகசியமற்று
முச்சந்தியில் தொய்ந்திருக்கும்படி ஆகின்றன
எதிரெதிர் இரகசியக் குறிகளின்
இரகசியத்தை உடைக்காத
சட்டங்களும் தண்டனைகளும்
மற்றுமோர் இரகசிய வன்புணர்வுக்கு
இரகசியக் குறிகளோடே
இரகசியமாய்க் காத்திருக்கின்றன.
3
தன்மீதாகவே பொழியும்
தனது நிழலின் பொழுதொன்றில்
ஆகாயத்தின் நடு உச்சியில்
உறைந்திருக்கும்படி வைக்கப்பட்டிருக்கின்றன கண்கள்
தன்னுடையதென்று அறிய முடியாதபடியான வாழ்வில்
சதைகளைப் பரிசளித்திருந்த வற்றிய புட்டங்கள்
முள்வேலியின் பைஞ்சுதைக் கம்பங்களில்
அணைந்தபடி இருக்கின்றன
ஒடுங்கிப்போன இடையின் நடுப்புறத்திலிருந்து
விடைக்குறிகளை நோக்கிச் செல்லுமொரு
தலைமுறைக்காய் வெண்திரவங்கள் மெல்லமெல்ல
சொட்டிக் கொண்டிருக்கின்றன
எவ்வித உறுதுணையுமற்றுத் தொங்கிக் கொண்டிருக்கும்
கைகளில் மீதமிருக்கும் இலாபங்களை நக்குவதற்காக
17வது கிலோமீட்டரிலிருந்து ஓடிவரும் நாய்கள்
எரிந்துபோன அடவியின் மையமரத்தில்
புகைந்தபடியிருக்கும் பொந்துகளைப் போன்றதான
நவதுவாரங்களை எச்சில் செய்யாமல் திரும்பினால்
திகைப்பில் நொருங்கிப் போக நெஞ்செலும்புகள்
ஆவலோடு காத்திருக்கின்றன
எல்லாவற்றிற்கும் ‘எல்லாம் வல்ல இறைவா’வென்ற
மேல்நோக்கிய மனதைத் தூக்கியெறிந்து
இன்னொன்றாகப் பிறப்பிக்கப்பட்ட நேர்நோக்கும் மனதில்
இப்போது ஓடுவதெல்லாம்
வெங்காற்றின் மடியில் அறுந்து கொண்டிருக்கும்
இந்நரவுடலைக் கொத்தப்போகும் கழுகுகளிடம்
யாவரேனும் புரட்சிக்கான அர்த்தத்தைக்
கேட்டுவிடக் கூடாது என்பதே.
4
அடித்துப் பிடித்தேனும்
மேன்மேலும் கூறுகளாக்கிட
ஒருங்கிணையாத சகதிக் குளங்களிலெல்லாம்
நீந்திக் களிக்கிறது
நம் சுயங்களையும் சுயாதீனங்களையும்
நொடிதோறும் புதைத்தபடியிருக்கும்
மதக் கலாச்சாரம்
பலர்பால் மீன்களை நீருக்குள்ளாகவே
கொன்றிடும் வேலையைப் பகுதி நேரமாய்
ஆக்கிக் கொண்டபடியே.
5
நெடுவட்ட நிழலைச் செய்திருக்கும்
புளிய மரத்தினடியில்
அமர்ந்திருக்கிறாய் நீ
என்னோடும்
ஏழு நான்கு என இரு கூட்டங்களாய்
உலவும் கறுப்பாடுகளோடும்
ஒரு புளி உன்மீது விழுகிறது
ஒரு இலை என்மீது விழுகிறது
பிறகு
ஒரு இலை உன்மீது விழுகிறது
ஒரு புளி என்மீது விழுகிறது
அடுத்தும் இவ்வாறே நிகழ்ந்துகொண்டிருக்க
ஏழில் ஒரு கிடாவும்
நான்கில் ஒரு ஆடும்
மேய்ந்த புற்களின்வழி எழுந்த காதல்
முப்போதும் நம்மீது விழுகிறது.
6
பேரண்டத்தின் பெரும்
மனனச் சுவடுகளில்
ஈக்கால்களின் அளவினதாய்ச் சொட்டுகின்றன
மௌனப் பொழுதுகள்
ஒரு ஈ தொடும் மறு ஈ
தொடும் வேறொரு ஈ
தொடும் அடுத்தடுத்த ஈக்களெனக்
கூடும் பிரம்மாண்டத்தில்
மிதமிஞ்சிடுகிறது நிசப்தம்
எந்நேரமும்
தொங்கியபடியே இருப்பதற்கா
நடு வாசலில் கற்றாழை கட்டப்பட்டது
வானொலிக்கு மின்கலம் இரண்டு தேவையாய் இருக்கிறது
ஆடு கடித்ததில் குச்சியாய் நிற்கிறது முருங்கை
பெட்டையும் குஞ்சுகளும் கூடைக்குத் திரும்பிவிட்டன
கருப்பன் பக்கத்துத் தெருவிற்கு ஓடிவிட்டான்
அடுப்பங்கரையில் மிஞ்சியதெதுவோ
அதையே ஆகாரமாய்ச் சமைத்துண்ட பிறகு
பாட்டாளி தம்பதிகள் தாழிடும் கதவின்
சேதிக்கான மணி 08:00 க்குப் பிறகெல்லாம்
பாலை மரங்கள் நிறைந்த
ஆற்றின் மறுகரையில் ஒருசேரயெழும்
நரிக்கூட்டத்தின் ஊளைகள்
குலைத்திடப்போவது எதனை?
நம்மில் எதனை??
7
பேசினோம்
எழுதினோம்
வரைந்தோம்
வடித்தோம்
இசைத்தோம்
படமாக்கினோம்
இன்னும் எப்படியெல்லாமோ வோம்
செய்தோம் நிர்வாணத்தை
இருந்தும்கூட
அதன் காலடித் தடத்திற்குள்ளேயே
சிக்குண்டு கிடக்கிறோம்.
8
நெடுஞ்சாண்கிடையாகத் துகிலற்றுறங்கும்
பனிக்காலமொன்றில்
இரண்டாம் வெள்ளியின் அந்திம மாலைபோல்
தசைச் சதைகள் புடைத்துக் கிளம்பி
வானடையும் கனவில் நுரைத்துக்
கொண்டிருக்கிறான்
ஒரு முனகலோடும்
ஒரு பிதற்றலோடும்
நிரம்பக் குடித்த சுயத்தினோடும்
ஊசிப் பாறைகளின் கொண்டை வளைவுகளின்வழி
ததும்பிக் கொண்டிருக்கும்
தம்தன தம்தன தாளலயங்களோ
தலையூடாய்ப் பயணித்திடும் தார்மீக நெளிவுகளில்
மையம் கொண்டிருக்கின்றன
நட்சத்திர மீன்களின் ஐம்முனைகளோடு
குடிகொண்டிருக்கும் பௌவம்
இயல்புடைத்து சாந்த சொரூபமாக
சாதனங்களைத் தேடுகிறது சதா வன்முறையின்
சப்தக் குரைச்சல்களில்
இவை யாவற்றிற்கும் இடையிலேதான்
ஆகாயத்தின் அதியரூப நித்திரைக்கு
சிணுங்கிப் புலரும் ஒளியிரவில்
அவன் ஆதி உறுப்பிலமர்ந்து
ஓய்வெடுக்கத் திரும்புகின்றன
எங்கிருந்தோ வரும் ஓரிணைப் பறவைகள்.
9
மிகவும் எளிய திறப்பே
வீச்சமோ வெளி கடந்தது
காலங்கொள்ளாது பரபரத்து
பணிப்பதிவேடு பார்த்துயென் சாதியறிந்த
உன் வர்ணக் குணத்தின் பின்னான
அலுவலக நாள்களில்
நீ ஊடுருவும் என் விளி வழி!
10
தலைநகரில் தலைமை அலுவலகத்தில்
மிகமிக எளிமையாக
நீங்கள் திரட்டுகிறீர்
உம் சாதியாட்களை
அதற்கு நேரெதிராக
மிகமிகக் கடினமென்றாலும்
நான் ஏந்தி வருகிறேன்
நம் பாபாசாகேப்பை!
Art : BanánoŽrout
இயற்பெயர் ப.ஏகாம்பரம். மணப்பாறைக்கு அருகிலுள்ள பாலப்பட்டி எனும் குக்கிராமத்தில் பிறந்தவர். அரசியல் அறிவியலில் பட்டப்படிப்பை முடித்துவிட்டுத் தற்போது சென்னையில் வணிகவரித் துறையில் பணியாற்றுகிறார். இவரது கவிதைகள் கொலுசு, படைப்பு, வல்லினம், வாசகசாலை ஆகிய மின்னிதழ்களில் வந்துள்ளன.








Leave a Reply