அந்தக் கொலையை யார் செய்தார்கள் என்று கண்டுபிடிக்கவே முடியவில்லை. ஆஸ்திரியக் காவல்துறை எவ்வளவு முயன்றும் கொலையானவரின் உடலும், கொலை குறித்த எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. எனினும் டான்யூப் (Danube) ஆற்றில் ஒரு படகுச் சவாரிக்குச் சென்ற அந்தச் சுற்றுலாப் பயணி பின்னர் ஒருபோதும் வீடு திரும்பவில்லை, யாரும் அவரைத் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. எனவே அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாமென நம்பப்பட்டது. அவரது நண்பரும் தொழில் பங்குதாரருமான ஒருவரைக் குடும்பமும் காவல்துறையும் சந்தேக வளையத்துக்குள் கொண்டு வந்திருந்தது. எனினும் இறந்தவரின் உடல் கிடைக்காததால் அவரை, குற்றம் சாட்டவும் முடியவில்லை. அவரைச் சந்தேகத்தின் பேரில் கைது செய்து வைத்திருந்த காவல்துறை கொலை நடந்ததாகச் சந்தேகப்படும் அந்த மோட்டார் படகில் மீண்டும் சோதனையிட்டபோது குற்றவாளியெனச் சந்தேகப்படுபவரின் சேறு படிந்த காலணிகள் மட்டும் கிடைத்தன. அப்போதுதான் முதன்முறையாக வியன்னா பல்கலைக்கழகத்தின் தொல்தாவரவியல் துறையின் விஞ்ஞானி வில்ஹெம் (Wilhelm Klaus) குற்றப்புலனாய்வில் இணைந்தார். அந்தக் காலணியின் சேற்று மண்ணில் இருந்த பலவகையான மகரந்தத் துகள்களை ஆராய்ந்த துகளியலாளரான வில்ஹெம் அவை ஸ்ப்ரூஸ், வில்லோ, ஆல்டர் மரங்களின் மகரந்தங்கள் என்பதையும் அவற்றுடன் ஹிக்கரி மரமொன்றின் புதைபடிம மகரந்தங்களும் (Fossil pollen) இருந்ததைத் தெரிவித்தார்.
அந்த ஹிக்கரி மரச் சிற்றினம் அழிந்து போய்ப் பலகாலம் ஆகியிருந்தது. அவற்றின் மகரந்தத் தொல்படிமங்கள் டான்யூப் ஆற்றங்கரையின் ஒரு பகுதியில் 5-33 மில்லியன் வருடங்களுக்கு முன்பான படிவப் பாறைகளில் மட்டுமே இருந்தன. இந்தத் தடயம் காவல்துறைக்குப் போதுமானதாக இருந்தது. குற்றவாளியிடம் ‘அந்தப் படிவப் பாறைகள் இருக்குமிடத்தில் தானே உடலைப் புதைத்தாய்’ என்று கேட்டபோது குற்றம் ஒப்புக் கொள்ளப்பட்டு அந்த வழக்கு முடிக்கப்பட்டது.
1959-ல் ஆஸ்திரியாவின் இந்தக் கொலைவழக்கிற்குப் பிறகு துகளியல் எனப்படும் palynology பல குற்றப்புலனாய்வுகளில் உலகெங்கும் பெரும் பங்கு வகித்துக் கொண்டிருக்கிறது. மற்றுமோர் உதாரணமாக 2002 ஆகஸ்டில் இங்கிலாந்தில் நடந்த பத்து வயதுப் பெண்குழந்தைகளின் இரட்டைக் கொலை குற்றப் புலனாய்வைக் குறிப்பிடலாம்.
பெண் குழந்தைகள் இரண்டும் காணாமல் போன இவ்வழக்கு விசாரணையில் 400க்கும் மேற்பட்ட காவலதிகாரிகள், நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள், இரண்டு குழந்தைகளின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், தொலைக்காட்சி, செய்தித்தாள், சுவரொட்டி விளம்பரங்கள் எனப் பலவகை முயற்சிகளும் தோல்வியடைந்தன. பிரிட்டிஷ் குற்றப்புலனாய்வுகளிலேயே மிகக் கடினமானதும் மிக அதிகம் பேர் விசாரிக்கப்பட்டதும் இவ்வழக்கில்தான்.
13 நாட்கள் கழித்து எதேச்சையாக அழுகிய நிலையிலிருந்த இரு பெண் குழந்தைகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. உடல்கள் கிடைத்த இடத்தில் இருந்த தாவர உயிரியல் தடயங்களைக் கொண்டு தாவரவியலாளர் பெட்ரிசியா (Patricia Wiltshire) அந்தக் கொலையைப் புலனாய்வு செய்து கொலையாளியை அடையாளம் காட்டினார். உடல்கள் கிடைத்த இடத்தில் முளைவிட்டிருந்த stinging nettles என்னும் சொறிச்செடிகள் உறுதியாக 13 நாட்களுக்கு முன்னர் வேறெங்கிருந்தோ அங்கு விதைகளாக விழுந்து முளைத்தவை என்பதன் மூலம் குழந்தைகள் வேறிடத்தில் கொலை செய்யப்பட்டு அங்கு சடலம் கொண்டு வரப்பட்டது என்பதையும், உடல் கிடந்த இடத்தில் மண்ணிலிருந்த மகரந்தத் துகள்கள் கொலையாளியின் வீட்டருகில் இருக்கும் மரங்களிலிருந்து வந்தவை என்பதையும் கொண்டு ஹோலி, ஜெசிகா ஆகிய இரு அப்பாவிக் குழந்தைகளையும் கொலை செய்தது ஹண்ட்லி (Tan Huntley) என்பவர்தான் எனச் சந்தேகத்துக்கு இடம் இல்லாமல் பெட்ரிஷியா தெளிவுபடுத்தினார்.
40 வருடச் சிறை தண்டனையில் இருக்கும் ஹண்ட்லி 2042ல் விடுதலை ஆகலாம். இந்தக் கொலை வழக்கைக் கனத்த மனதுடன்தான் வாசிக்க முடியும். நியூஸிலாந்தில் 2005ல் நடந்த ஒரு திருட்டு வழக்கில் கொலையாளிகளின் உடையில் இருந்த ஹைப்பீரியம் செடியின் மகரந்தத் துகள்களே புலனாய்வில் அவர்களைக் கைது செய்ய உதவியது. மற்றொரு பெண் குழந்தையின் கொலை வழக்கிலும் சடலத்தின் உடையில் இருந்த மகரந்தம் அந்த மரம் இருக்கும் பூங்காவிற்கு வழிகாட்டி, பூங்காவின் அருகிலிருந்த கொலையாளியைக் கைது செய்ய உதவியது. கொலை வழக்குகள் மட்டுமல்ல குடிமையியல் வழக்குகளிலும் இந்தத் துகளியல் தடயங்கள் உதவுகின்றன. முதல் உதாரணமாக 1970-ல் அமெரிக்காவில் நடந்த தேன் வழக்குகளைக் குறிப்பிடலாம்.
அமெரிக்க விவசாய அமைச்சகம் தேனி வளர்ப்போரிடம் அமெரிக்க எல்லைக்குள் தேனீக்கள் வளர்க்கப்பட வேண்டும் என்னும் நிபந்தனையின் பேரில் அவர்களது தேனுக்கு உலகின் அப்போதைய சந்தை மதிப்பை அளிப்பதாக வாக்குறுதி அளித்துத் தேனி வளர்க்க ஊக்குவித்திருந்தது. அப்படிச் சட்டத்துக்குட்பட்ட வகையில் தேன் சேகரிக்காமல் பிற பகுதிகளிலிருந்து இறக்குமதி செய்து தேனைக் கொடுத்த விவசாயிகளை அந்தத் தேனில் இருந்த மகரந்தத்துகள்கள் எந்தப் பிரதேசத்தில் வளரும் தாவரங்களைச் சேர்ந்தவை என்னும் துகளியல் தடயச் சோதனைகளைக் கொண்டு கண்டறிந்த வழக்குகளும் நடந்தன. கடந்த 50 ஆண்டுகளாக forensic palynology எனப்படும் இந்தத் துகள் தடயவியல் துறை பல சட்டபூர்வமான விசாரணைகளில் ஈடுபடுத்தப்படுகிறது.
பாலினலஜி எனப்படும் இந்தத் துறையில் அதிகம் மகரந்தங்களைக் குறித்த ஆய்வுகள் நடைபெறுவதால் இத்துறைக்கு மகரந்தத்துகளியல் என்னும் இணைப்பெயரும் உண்டு. எனினும் இந்தத் துறை மகரந்தங்களை மட்டுமல்ல, 5 லிருந்து 500 மைக்ரோமீட்டர் (ஒரு மீட்டரின் பத்து லட்சத்தில் ஒரு பங்கு ஒரு மைக்ரோமீட்டர்) அளவுகளுக்குள் இருக்கும் பாக்டீரியாக்கள் உள்ளிட்ட பிறநுண்ணுயிர்கள், மகரந்தத் துகள்கள், பெரணி, பூஞ்சைகளின் ஸ்போர்கள், தாவர உடல்பாகங்கள், நுண்கட்டிகள், பாசிகள், ஈஸ்ட் போன்ற ஒரு செல் பூஞ்சைகள், மண் குருணைகள், பேருயிர்களின் நுண் துண்டுகள் ஆகிய பலவற்றைக் குறித்தான துறையும்தான் இது. இந்தத் துறை நுண்ணோக்கி கண்டுபிடிக்கப்பட்டு, நுண்ணுயிரியல் என்னும் துறை அதிலிருந்து உருவான காலத்தில் தொடங்கியது. குறிப்பாக 1640களில் ஆங்கிலேயத் தாவரவியலாளர் நீஹாமியா (Nehemiah Grew) நுண்ணோக்கியில் கண்ட மகரந்தத் துகள் மற்றும் மகரந்தங்களின் வடிவங்களை விவரித்து மகரந்தத் துகள்களே தாவரங்களின் பால் இனப்பெருக்கத்துக்கு முதற்காரணம் என்று தெரிவித்தபோது உருவானது இத்துறை.
1870களில் நுண்ணோக்கிகள் மேம்படுத்தப்பட்டபோது தொல் படிமங்களாகக் கிடைத்த மகரந்தங்களும் ஸ்போர்களும் ஆராயப்பட்டு அவற்றின் காலமும் கணிக்கப்பட்டது. பாலினாலஜி, Palynology, என்னும் சொல்லால் இத்துறை குறிக்கப்பட்டது 1940ல் தான். இங்கிலாந்தைச் சேர்ந்த ஹெரோல்ட் மற்றும் டேவிட் (Harold Hyde மற்றும் David Williams) ஆகிய இருவரும் தூவுதல் என்பதைக் குறிக்கும் கிரேக்கச் சொல்லான paluno (to sprinkle) மற்றும் தூசி /துகள் என்பதைக் குறிக்கும் சொல்லான pale (dust ஆகிய சொற்களிலிருந்து Palynology என்னும் சொல்லை உருவாக்கி மகரந்தங்கள் குறித்த ஆய்வுகளுக்கான புகழ்பெற்ற அறிவியல் சஞ்சிகையான Pollen Analysis Circular-ல் முதன் முதலில் குறிப்பிட்டார்கள்.
அதன் பிறகு துகளியல் அறிவியலில் மிக முக்கியமான ஒரு துறையாகியது. இத்துறை தாவரவியல், புவியியல், தொல்லியல், அடுக்கு வரைவியல் ஆகிய துறைகளின் வேர்களைக் கொண்டது. ஜெர்மானியத் தாவரவியலாளரும் 1921ல் ‘An Introduction to Swedish Pollen Analysis’ எனும் மிக முக்கியமான நூலை எழுதியவருமான பிரெடிரிக் (Friedrich Hermann Hugo Pfeffer -1845-1920) இத்துறையில் அவர் செய்த மிக முக்கியமான ஆய்வுகளால் இத்துறையை நிறுவியவர் எனக் கருதப்படுகிறார். இந்தியத் துகளியல் துறையை நிறுவியவராகப் பரமேஸ்வரன் கிருஷ்ணன் நாயர் என்கிற பி.கே.கே நாயர் (1930-2017) கருதப்படுகிறார். இவர் மகரந்தங்களின் வெளிப்புறத் தோற்றம் குறித்த முக்கியமான ஆய்வுகளையும் மகரந்தங்களைக் கொண்டு தாவரங்களை வகைப்படுத்துவதைக் குறித்தும் பல முக்கியமான ஆய்வுகளைச் செய்தார். 20,000 மகரந்தத் துகள் ஸ்லைடுகளை உருவாக்கியவரும் மகரந்தத்துகளியலில் பல முக்கிய ஆய்வுகளைச் செய்தவரும் இந்தியாவின் ஆகச் சிறந்த மகரந்தத் துகளியலாளரும், ‘மகரந்தத் துகள் உருவமைப்பியல்’ என்னும் நூலின் ஆசிரியருமானவர் திரு.கணபதி தணிகைமணி.
1986-ல் அவர் கடல் தாவரங்களின் மகரந்தங்கள் குறித்த உரையாற்றும் பொருட்டு அமெரிக்காவுக்கு அறிவியல் மாநாட்டிற்குப் பயணம் செய்த விமானம் பாதி வழியில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டுக் கராச்சியில் தரையிறக்கப்பட்டபோது நடந்த துப்பாகிச் சண்டையில் குண்டடிபட்டு அங்கேயே திரு.கணபதி தணிகைமணி பலியானார். மகரந்தத்துகளியலின் மாபெரும் இழப்பு அவர் மரணம். தணிகைமணியைச் சிறப்பிக்கும் பொருட்டுப் புதிதாகக் கண்டுபிடிக்கப் பட்ட மூன்று புதைபடிவ மகரந்தத்துகள்களுக்கு Retimonocolpites thanikaimonii, Spinizonocolpites thanikaimonii, Warkallopollenites than- ikaimonii எனப் பெயரிடப்பட்டிருக்கின்றன.
மகரந்த ஆய்வுகள் குற்றப்புலனாய்வில் மட்டுமல்லாது மருந்துகளில் கலப்படங்களைக் கண்டுபிடிக்க, அருங்காட்சியங்களில் இருக்கும் மிகப்பழைய ஓவியங்களின் காலத்தை நிர்ணயிக்க, தொல்படிம மகரந்தத் தாவரத் துகள்களைக் கொண்டு ஹைட்ரோ கார்பன் படிமங்கள் இருக்குமிடத்தை எண்ணெய் நிறுவனங்கள் கண்டறிய என்று பல துறைகளில் பயன்படுத்தப்படுகின்றன. அகழ்வாய்வுகளில் கிடைக்கும் படிம மகரந்தத் துகள்கள் அவை எந்தக் காலத்தைச் சேர்ந்தவை என்பதையும் அக்காலத்துத் தாவர வகைகள், காலநிலை, அக்காலத்து மனிதர்கள் தாவரங்களைப் பயன்படுத்திய விதம் எனப் பலவற்றை அறிய உதவுகிறது.
தொல் தாவரவியலாளர்கள் இந்தத் துகளியல் பரிசோதனைகளின் மூலம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பான சூழலை மறுகட்டமைப்பு செய்கிறார்கள். இப்படியான ஆய்வுகளில் மகரந்தங்களின் பயன்பாடும் முக்கியத்துவமும் அவற்றின் ஏராளமான உற்பத்தியையும் மிகப் பரந்த இடங்களுக்கு அவை பரவுவதையும் அடிப்படையாகக் கொண்டது. அனைத்துத் தாவரங்களும் மலர்களின் கருவுறுதலை உறுதி செய்யும் பொருட்டு மிக மிக அதிக அளவில் மகரந்தங்களை உற்பத்தி செய்கின்றன.
அதீத மகரந்தப் பொழிவு தாவரவியலில் மகரந்த மழை என்று குறிப்பிடப்படுகிறது. ஒரு நடுத்தர உயரமுள்ள பைன் மரம் சுமார் 10 பில்லியன் மகரந்தங்களை ஒவ்வொரு வருடமும் ஒரே வாரத்தில் உற்பத்தி செய்யும். அதீத உற்பத்தி மட்டுமல்லாது அழிவுக்கெதிரான தாங்கும் தன்மையும் மகரந்தங்களுக்கு மிக அதிகமென்பதால் இவை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்குச் சேதமின்றி இருக்கின்றன. நுண்ணோக்கியில் காணப்படும் மகரந்தங்கள் பந்துகளைப் போல, மெத்தைகளைப் போல மிக அழகிய நுண் செதுக்கு வேலைப் பாடுகளுடன் இருக்கும்.
வவ்வாலொன்றின் மூக்கு நுனியிலோ, தேனியின் சிறு கால் ஓரங்களிலோ ஒட்டிக் கொண்டு இவை வெகுதூரம் பயணித்துப் பெண் மலர்களைக் கருவுறச்செய்யும் ஆண் விந்தணுக்களைச் சுமந்துசெல்லவேண்டி இருப்பதால் இவற்றின் பாதுகாப்பை இரண்டடுக்கு உறையினால் இயற்கை உறுதி செய்திருக்கிறது. மகரந்தங்கள் அழகிய நுண்வேலைப்பாடுகள் அமைந்த கடினமான எக்ஸன் எனும் வெளியுறையும் மெல்லிய சவ்வு போன்ற உள்ளுறையும் கொண்டிருக்கும். சில மகரந்தங்கள் காற்றில் பறந்து செல்ல ஏதுவாக இறகு கொண்டிருக்கும். மேலும் சில நீர் உட்புகாத வண்ணம் பிரத்யேக வெளியுறையுடன் நீர்வழிப் பயணித்துப் பெண் மலர்களை அடையும்.
அபரிமிதமான உற்பத்தி மற்றும் நீடித்திருக்கும் தன்மை ஆகியவற்றால் மகரந்தங்கள் நெடுங்காலம் தாவரங்களில் ஏற்படும் மாற்றங்களைக் கணிக்க, ஆராய உதவும் முக்கியமான காரணிகளாக இருக்கின்றன. ஆவணப்போலிகள், பாலியல் குற்றங்கள், வாகன விபத்துக்குற்றங்கள், கள்ளச்சந்தை வணிகம், பயங்கரவாதம் ஆகிய பல குற்றவியல் விசாரணைகளில் துகளியலாளர்கள் தற்போது பங்களிக்கிறார்கள்.
தடயச் சூழியல் என்னும் forensic ecology தற்போது உருவாகிக் கொண்டிருக்கும் முக்கியமான அறிவியல் துறைகளில் ஒன்று. உலகநாடுகளின் மகரந்தத்துகள்கள் சேகரிக்கப்பட்டுச் சேமிக்கப்படுவது துரிதமாக்கப்பட்டு, உலகளாவிய மகரந்த வங்கி அனைவரும் அணுகும் வகையில் இருக்குமானால் தடயவியல் ஒப்புநோக்கு ஆய்வுகள் மிக எளிதில் நடைபெறும். PalDat போன்ற மகரந்தச் சேமிப்புத் தளங்கள் மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டும்.
நன்றி : தன்னறம்
மறுபிரசுரம்
Image : www.nhm.ac.uk
வேட்டைக்காரன் புதூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். பொள்ளாச்சி கல்லூரியில் தாவரவியல் பேராசிரியராகப் பணி புரிந்துகொண்டிருக்கிறார். மேலும், அரிஸோனா பல்கலைக்கழக வலைத்தளத்தில் அறிவியல் தகவல்களைத் தமிழில் மொழிமாற்றம் செய்ய மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். தற்போது தமிழில் தாவரவியல் அகராதியை உருவாக்கும் முயற்சிலும், அந்தியூர் வனப்பகுதி பழங்குடியினரான சோளிகர்களின் தாவரவியல் தொடர்புகள் குறித்த ஆய்விலும் ஈடுபட்டு வருகிறார்.
தாவர உலகம், ஸாகே-போதையின் கதை, வானவில் மரம், விலக்கப்பட்ட கனி, தந்தைப்பெருமரம், நுண்ணுயிருலகு உட்பட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். மரங்களின் மறை வாழ்வு என்னும் நூலை மொழியாக்கம் செய்துள்ளார்.
தோழி விருது 2019, செங்கால் நாரை விருது 2022, இந்திய மருத்துவக் கழகம் வழங்கிய Women of Wonder விருது 2025, சிறந்த அறிவியல் நூலிற்கான முனைவர் உலோ.செந்தமிழ்க்கோதை நினைவு விருது 2025 ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.








Leave a Reply