எதுவும் அப்படியே எப்போதும் இருப்பதில்லை. சதாகாலமும் இங்கு வளர்ந்தோ, தளர்ந்தோ, சிறந்தோ, சிதைந்தோ ஒரு நடவடிக்கை நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. அந்த உண்மைக்கு அறிவியல், ஆன்மிகம், தத்துவம், இலக்கியம் சார்ந்து ஏராளமான விளக்கங்கள் இன்றும் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அந்த விளக்கங்கள் யாவும் நிகழ்ந்துகொண்டே இருப்பவையைப் பற்றிய முடிவான முடிவாக இல்லை. இருக்கவும் முடியாது. ஏனெனில் உலகில் மாற்றங்களின் நேர, கால, விளைவுகளை முன்கணிப்புச் செய்வதற்காக இருக்கும் எந்த ஏற்பாடும் போதுமனவையாக இல்லை. அதனாலேயே மாற்றங்களின் விளக்கங்கள் பல நிலைகளில் விரிந்துகொண்டிருக்கின்றன. அவற்றைக் கவிதையாக வாசிக்கும்போது ஏற்படுகின்ற உள்ளுணர் தரிசனங்கள் ஒவ்வொன்றும் தம்முடைய கைகளை நீட்டி தமக்கேற்றவாறு மனங்களை ஏந்திக் கொள்கின்றன. அப்படியான கைகள் பச்சோந்தியின் கவிதைகளிலும் உண்டு.
இதழாளரான பச்சோந்தி, ‘வேர் முளைத்த உலக்கை’ (2015), ‘கூடுகளில் தொங்கும் அங்காடி’ (2016), ‘அம்பட்டன் கலயம்’ (2018), ‘பீஃப் கவிதைகள்’ (2019) ‘கபால நகரம்’ (2022) முதலிய கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார். பொதுவாக, நிறைய புதிய அவதானிப்புகளைக் கவிதைக்குள் கொண்டுவந்திருக்கும் பச்சோந்தி, தனது ஒவ்வொரு இருப்பையும் இருப்புக்கு வெளியில் இருந்து பார்த்திருக்கிறார். பயணங்கள், கை நழுவல்கள், முதிர் நினைவுகள், பெண்டுல மனங்கள், வேர்கொண்டு விடாத ஆசுவாசம் ஆகியவற்றை விவரித்திருப்பதில் பச்சோந்தியிடம் வேறுபாடு இருக்கிறது. அந்த வேறுபாட்டில்தான் அவரது கவிதைக்குள் வதியும் மனித குலத்தின் முகங்கள் துலங்குகின்றன.
பயணங்களின் ஞானம்
உண்மையிலேயே போதிக்குப் பிறகு ஞானம் வழங்குவது பயணங்கள்தான். ஒருவேளை புத்தருக்குக் கூட ஞானத்தில் பாதியைப் போதியும் மீதியைப் பயணங்களும் வழங்கியிருக்கலாம். அந்த அளவுக்கு அவர் பயணங்களைச் செய்துகொண்டே இருந்தார். இயேசுவும் நபியும் கூட அவர்களது வாழ்நாளில் ஓரிடத்தில் நிலையாக இருந்தார்களில்லை. அந்த வகையில் நீண்ட பயணங்களைச் செய்தவர்களே வரலாற்றில் நினைக்கப்படுகிறார்கள். அவர்களின் அறிவுச் சுரப்பைச் சமூகம் பருகிக் கொள்ளத் தயங்கியதில்லை. ஆத்மார்த்தமான பயணம் என்பது ஒருவிதக் கலவையான வாசிப்பு முறையாகும். பயணங்களுக்கும் அறிவு உற்பத்திக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சொல்லப் போனால் இந்தியாவின் நவீன வரலாற்றை எழுதுவதற்கான முக்கியத் தரவாக அமைந்தது இந்தியாவிற்கு வந்து சென்ற / நிருவாகம் செய்த ஐரோப்பியர்களின் பயணக் குறிப்புகளே என்றால் மிகையல்ல.
பச்சோந்தி தம்முடைய வாழ்தலின் பொருட்டு நிகழ்த்திய பயணங்களின் தரிசனங்களைக் கவிதைமொழி சிதையாமல் வெளிப்படுத்தியிருக்கிறார். அலைவுறும் பயணங்களைப் போலவே கவிதைக்குள்ளும் அலைவுறுதல் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. கவிதையின் கண்கள் மிரட்சியோடு சாலையோர மரம், பயணிகள் நிழற்குடை, பேருந்து நிலையம், மருத்துவமனை, சவப்பெட்டி, ரயில் பெட்டி என்று மாறி மாறிப் பார்த்துக் கொண்டே இருக்கின்றன. எல்லோருக்குமான உலகம் தானே இது. அதில் எனக்கான இடம் எங்கே? என்று தேடுகிறது. மொத்தத்தில் அலையுறும் மிரட்சியோடு தனக்கான இடத்தைத் தேடும் கவிதைகள்தாம் பச்சோந்தியினுடையவை என்பது என்னுடைய அவதானிப்பு. இதற்குச் சான்றாக, ‘சட்டைப் பையில் கிடக்கும் சில்லறைகளில் / ஒற்றை ரூபாயைத் தேடியெடுப்பதற்குள் / கடந்து சென்றது பிச்சைப் பாத்திரம்’ (கூடுகளில் தொங்கும் அங்காடி) என்னும் கவிதையைச் சொல்லலாம். இதில் சட்டைப் பைக்குள் சில்லறையைத் தேடி கை ஒரு பயணத்தை நிகழ்த்துகிறது. அதே சில்லறையைச் சட்டைப் பைக்கு வெளியே தேடி ஒரு பயணத்தை நிகழ்த்துகிறது பிச்சைப் பாத்திரம். ஆக, தேடுதலின் பொருட்டுப் பயணங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. எல்லோரும் சதாகாலமும் பயணப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள் என்பதைச் சொல்லும் இக்கவிதையில், தாமதிக்காமல் கடந்து செல்லும் பிச்சைப் பாத்திரத்திடமும் பிச்சைப் பாத்திரத்திற்காகவும் மிரட்சிகள் இருக்கின்றன. இந்த இடத்தில் இரண்டு பயணங்களை இரண்டு மிரட்சியில் இணைந்து கவிதையைப் பூரணமாக்கும் விதம் அலாதியானது. தமிழில் இப்படியான கவிதைகள் மிகக் குறைவு. பயணங்களில் ஞானம் பெறும் முயற்சிகள் உள்ளவரை பச்சோந்தியிடம் இத்தகைய கவிதைகளை நிறைய எதிர்பார்க்கலாம்.
தொலைத்து வாழ்தலில் இருப்பு
பச்சோந்திக்கு எப்போதும் பழையவற்றின் மீதான ஈர்ப்பு அதிகமாக இருக்கிறது. அவருக்குள் முகிழ்த்துக்கொண்டே இருக்கும் ‘பழையவை மீண்டும் வேண்டும்’ என்பதான நினைவு, இல்லாது போன பழைமையின் மீதான தகிப்பை அவருக்குள் அதிகப்படுத்தி விடுகிறது. அது கவிதையாக வெளிப்படும் போது, அது எல்லோருக்கும் இருக்கின்ற ‘பழைமையைத் தொலைத்து வாழ்தல்’ என்னும் கடந்த காலத்தின் நினைவுகளை மீள்வரைதலாகச் செய்து விடுகிறது. வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் அவரை அவருடைய பழைமைகளோடு உரையாட வைத்து விடுகிறது. கூன் விழுந்த கிழவியாக (கூடுகளில் தொங்கும் அங்காடி) வரும் ‘பழைமை’, செழித்து வளர்ந்து செல்வம் கொழித்த தனது நிலத்தின் மரணமாக இருக்கும் மாமரத்தின் விறகில் கர்நாடகப் பொன்னியையும் ஆந்திரப் பொன்னியையும் சமைத்துப் போடுகிறது. தனது அந்நியமான வாழ்வை கர்நாடகா, ஆந்திரா என்னும் குறிச்சொல்லால் உணர்த்தும் பச்சோந்தி, ‘கிழவி’ என்னும் தனது பழையமையிலிருந்து எடுக்கும் விறகின் வழி வெறுமை மட்டுமே சூழ்ந்திருக்கும் தொலைத்து வாழ்தலின் இருப்பை வெளிப்படுத்துகிறார். இந்த வெளிப்பாட்டு முறை தமிழ்க் கவிதைகளில் நிறைய உண்டு என்றபோதிலும் ஒவ்வொரு வெளிப்பாட்டிலும் உள்ளுறைகின்ற வேறுபாட்டுப் பார்வையும் நுவல்பொருளும் கவிதைகளைப் புதிதாக வைத்திருக்கின்றன. இத்தகைய வெளிப்பாட்டுக் கவிதைகளில் பச்சோந்தி வைத்திருக்கும் புதுமை தனித்துவமானது. ‘’கூடுகளில் தொங்கும் அங்காடி தொகுப்பில் இருக்கும் ‘சோப்பு டப்பா’, ‘மேய்ச்சல் நிலத்தில் டிஷ் ஆண்டனா’, ‘அரூபச் சுவர்’, ‘விசிலடிக்கும் பசி’, ‘பேக்பேக் கோழிகள்’, ‘வீடற்றவர்களின் வீடுகள்’, ‘காலடிகளில்’, அம்பட்டன் கலயம் தொகுப்பில் ‘மூங்கில் கஞ்சி’, ‘அம்மாவின் மீது’, ‘இரண்டாவது வாய்’, ‘மாமிசப் படுக்கை’, ‘மொச்சை வாசனை’, கபால நகரம் தொகுப்பில் ‘நடனமற்ற ஆகாயம்’ முதலிய கவிதைகள் தொலைத்து வாழ்தலின் இருப்பைத் துலக்கமாக்கி இருக்கின்றன.
வீழ்தலின் கூட்டு
வீழ்தல் துயரமானது. வாழ்தலின் நிதர்சனத்தைப் போதிக்கும் பாடசாலையே வீழ்தல்தான். துயரங்களில் இருந்து சமூகம் கற்றுக் கொண்டது அதிகம். துயரமற்ற நிலையில் வதியும் தேடுதலற்ற உறைநிலை சமூகத்தைச் சோம்பலாக்கி விடும். துயரம் மட்டும்தான் துயரத்திலிருந்து விடுபடலுக்காகத் துரத்தும். ஓட வைக்கும். உள்ளுக்குள்ளாகத் தேடுதலை நிகழ்த்தும். சுயசோதனைக்கு ஆட்படுத்தும். சமூகத்தின் நாகரீகமாகவும் வசதிகளாகவும் சொல்லப்படும் யாவும் துயரத்தால் பெற்ற அனுபவ விளைச்சல்களே ஆகும். ஆண்டாண்டு காலமாகச் சமூகத்திற்கு இருத்தலின் ஆசுவாசத்தைத் தந்துகொண்டிருக்கும் வீழ்தல் என்னும் துயரம் ஒற்றையானதல்ல. கூட்டுத் தன்மையிலானது. ஒன்றின் வீழ்தலுக்குள் ஓராயிரம் வீழ்தல்கள் இருக்கும். இதை நுட்பமாகப் பேசியிருக்கும் கவிதை ‘கூடறுத்தல்’ (கூடுகளில் தொங்கும் அங்காடி). ஒரு மரம் கொலை செய்யப்படுவதைப் பேசும் அக்கவிதையில் காக்கையின் கூடு சிதைக்கப்படுகிறது. காக்கையின் குஞ்சைக் கழுகு கொத்துகிறது. மரத்தின் துயரமான வீழ்ச்சி அது சார்ந்திருக்கும் அனைத்துக்குமான துயராக, கூட்டு வீழ்தலின் அடையாளமாக அமைக்கப்பட்டிருக்கிறது. துயரத்தைத் துலக்கமாக்கிக் கொள்வதற்கு இது ஒரு சாதாரண கைவிளக்கு மட்டுமே தவிர ஒருபோதும் சொல்லித் தீராதது துயரம். ஆதலால்தான் உலக இலக்கியங்கள் பலநூறு ஆண்டுகளாகச் சொல்லிய பிறகும் இன்னும் சொல்வதற்குத் துயரங்கள் மிச்சமிருக்கின்றன.
சுவர், கூரை, பாட்டி, மாமரம், மாடு
கவிதைகளில் பெரும்பாலும் சுவர், கூரை, பாட்டி, மாமரம், மாடு ஆகியன திரும்பத் திரும்ப வருகின்றன. அவற்றிலிருந்து பற்றிப் படரும் இளங்கொடிகளாக பச்சோந்தியின் கவிதைகள் இருக்கின்றன. சுவரும் கூரையும் மானுட வாழ்வில் தடுப்புகளாகவும் எல்லைகளாவும் விரித்துக்கொள்ள உதவியிருக்கின்றன. ‘மாமரம்’ வளமை, வறுமை ஆகிய இரண்டின் குறியீடாக வருகிறது. ‘மாடு’ வாழ்வாக, உணவாக, பெருமிதமாக, எதிர்ப்புக் குணமாக, போராட்ட ஆயுதமாக வார்க்கப்பட்டிருக்கிறது. பிடுங்கிக் கொள்ளப்பட்ட எல்லைகள், மறுக்கப்பட்ட எல்லைகள் பற்றிய நினைவுச் சித்திரங்களாக வரும் சுவரும் கூரையும் வாசகனுக்குள் தீராத உரையாடலை நிகழ்த்திக்கொண்டிருக்கின்றன. அவை எந்தப் பதிலையும் சொல்லி திருப்திப்பட்டுக்கொள்ள முடியாத, பதில்களே அற்ற கேள்விகளைக் கேட்டுக் கொண்டே இருக்கின்றன.
சான்றுக்காக, இவ்விடத்து ‘பாட்டி’ என்ற சொல்லை மட்டும் சற்று விரிவாகப் பார்க்கலாம். கவிதைகளில் ‘பாட்டி’ பழைமையின் பிரதிபலிப்பாக வருகிறாள். காலமாக, நிலமாக, நினைவுகளின் தேக்கமாக, தொல்லெச்சமாக அவளின் இடம் விரவிக் கிடக்கிறது. ‘பாட்டி கூடையிலிருந்து வாங்கிய சக்கரவள்ளி கிழங்கு’ (வேர் முளைத்த உலக்கை), ‘ஸ்டவ் அடுப்பில் காய்ச்சுகிறாள் அப்பாயி’, ‘அக்காவைத் தூக்கிச் சுமக்கிறாள் அம்மாச்சி’, ‘பாட்டியின் பாதத்தில் ஊன்றின முறிந்த முட்கள்’, (கூடுகளில் தொங்கும் அங்காடி), ‘இப்போது மூங்கிலுக்கு என் பாட்டி வயதாகிறது’, ‘காய்ந்த மா மரத்தை வெறித்துப் பார்க்கிறாள் பாட்டி’, ‘மாட்டுக் கொம்புகளால் நெல்குத்திய என் பாட்டி’, (அம்பட்டன் கலயம்), ‘பால் கொடுக்கும் மாட்டுக்குக் கஞ்சி வாளியை வைத்து நிற்கிறாள் பாட்டி’, முதுகெலும்பில் முழங்கையால் குத்தி விரட்டுபவளை ஆசீர்வதிக்கிறாள் மூதாட்டி’ (பீஃப் கவிதைகள்) என்று வருகின்ற வரிகளில் ‘பாட்டி’ அழகிய, பழைய நினைவுகளின் சொல் வடிவமாக இருக்கிறாள். ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் பாட்டியை உசுப்பி விடுகிறாள்.
பீஃப் கவிதைகள்
தமிழில் சமீபத்தில் வெளியான ஆகச் சிறந்த கவிதைத் தொகுப்பென பீஃப் கவிதைகளைச் சொல்ல முடியும். ‘மாட்டிறைச்சி’ என்னும் பொருண்மையை வெவ்வேறு கோணங்களில் எழுதிப்பார்த்த முதல் தொகுப்பு இதுதான். உணவு சார்ந்த விசயங்களில் பாசிசச் சித்தாந்தங்களை நுழைத்து, உணவின் அடிப்படையில் பாகுபாட்டு வெறுப்பை உண்டாக்கிக் குறிப்பிட்ட மக்கள் பிரிவினரைப் பெரும்பான்மைக்கு எதிராக நிறுவுகின்ற வேலைத் திட்டங்கள் வேகமாக நடந்துகொண்டிருக்கும் சூழலில், ‘பீஃப் கவிதைகள்’ வெளிவந்திருப்பதைக் காலத் தேவையாகச் சொல்ல முடியும்.
கலாச்சாரம் ஆயுதமாக்கப்படும் போது எதிர்க்கலாச்சாரத்தையும் ஆயுதமாக எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க முடியாது என்பதற்கு ‘பீஃப் கவிதைகள்’ மிகச் சரியான சான்றாகும். மாட்டை நிஜமாகவே தரிசித்தவர்கள் அதை உண்பவர்கள்தான் என்பதை பச்சோந்தி அழுத்தமாகவே வெளிப்படுத்துகிறார். மாட்டின் எந்த நோவுக்கு என்ன மருந்து என்பதைக் கோசாலை வல்லுநர்களை விட மாட்டிறைச்சி விரும்பிகளே தெரிந்து வைத்திருந்தார்கள் என்பது நிதர்சனம். ‘செரிமானக் கோளாறுக்கு நாட்டு வாழைப்பழத் தோலில் / மிளகு சீரகத்தைத் திணித்து / ஊட்டுகிறாள் கிழவி’ என்னும் வரிகளில் ‘கிழவி’ என்பதன் வழி மரபான ஒரு மருத்துவ முறை தம்மிடம் செழுமையாக இருந்தது எனச் சொல்லும் பச்சோந்தி, மாட்டுக்கும் தமக்குமான பிணைப்பின் நெருக்கத்தைப் புலப்படுத்துகிறார்.
அரைச் சுயசரிதை
தன் அனுபவங்களின் தொகுப்பாக வந்திருக்கும் ‘பணிநீக்கம் செய்யப்பட்டவனின் நாட்குறிப்புகள்’ (2023), துயர் நிரம்பி வழியும் கண்களைக் கொண்டவனின் பார்வையில் உலகத்தை உணர்த்துகிறது. மானுடங்களின் விரிசல், உணவுக்கான தூரம், இயலாமைகளின் படையெடுப்பு, நிராதரவைப் பயன்படுத்திக்கொள்ளும் பழைய முரண்முகங்கள், வசப்பட்டும் பயன்கொள்ளாத காலங்கள் என்பதாக அனுபங்களைப் பரத்தியிருக்கும் பச்சோந்தி, உள்ளுணர்வைத் தழும்பிச் சிந்தாமல் வாசகனுக்குக் கடத்திவிடும் மொழியை இதில் பயன்கொண்டுள்ளார். கவிதைகளில் நிரப்பப்பட்டிருக்கும் தரிசனங்களை விடப் பணிநீக்கம் செய்யப்பட்டவனின் நாட்குறிப்புகளின் தரிசனங்கள் அதீத எதார்த்தங்களைக் கொண்டிருக்கின்றன. மேலெழுந்து வரும் முதல் தலைமுறைக்கு எதிராக உருவாகும் / உருவாக்கப்படும் சிக்கல்கள் எவ்வளவு அபத்தக் கொடூரமானவை என்பதை நுணுக்கமாக விவரித்திருக்கின்றன. வாசித்த புத்தகங்களையும் மனிதர்களையும் நன்றியோடு நினைத்துப் பார்த்துக்கொள்வதற்கான இடமாகவும் இந்நூலை பச்சோந்தி பயன்கொண்டிருக்கிறார். ஆங்காங்கே அரைச் சுயசரிதையாகவும் (Semi Autobiography) குணங்கொண்டிருக்கிறது.
முதல் நூலான வேர் முளைத்த உலக்கையிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டவனின் நாட்குறிப்புகள் வரை பச்சோந்தியின் மொழிப் பிரயோகத்தின் வளர்நிலையைப் பார்க்க முடிகிறது. ஒரு படைப்பாளனுக்கு அவசியமான அடிப்படைப் பண்பு இது. தனது மொழிப் பிரயோகத்தை வளர்நிலையில் வைத்துக் கொள்ளாத எந்தவொரு படைப்பாளியும் ஜீவநாடி பின்னியோடும் படைப்புகளைத் தந்துவிட முடியாது என்பதை பச்சோந்தி சரியாகப் புரிந்து வைத்திருக்கிறார் என்றே சொல்லலாம். அதை அடுத்தடுத்த படைப்புகளிலும் அவர் உறுதிப்படுத்த வேண்டும்.
ஞா.குருசாமி
தொடர்புக்கு : jeyaseelanphd@yahoo.in
…………
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்புக்கு அருகில் உள்ள அக்கனாபுரத்தைச் சேர்ந்தவர். தற்போது மதுரை மாவட்டம், கருமாத்தூரில் உள்ள அருள் ஆனந்தர் கல்லூரியின் தமிழ்த்துறையில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். நானூறுக்கு மேற்பட்ட சமுதாயம், இலக்கியம், பொருளியல் சார்ந்த கட்டுரைகளை எழுதியுள்ளார். தொல்காப்பியத்தில் பொருளியல் பெறும் இடம், புறனடைக் கோட்பாடு – தொல்காப்பியர் மரபு, புறனடைக் கோட்பாடு – வீரசோழிய மரபு, தமிழ் இலக்கிய வரலாறு (பல புதிய குறிப்புகளுடன் 1970 முதல்…), அவதூறுகளும் புனிதப்படுத்தல்களும் நீர் – நிலம் – சாதி – சாஸ்திரம்’ முதலிய நூல்கள் எழுதியுள்ளார்.








Leave a Reply