நவீனத் தமிழ் நாவல் பரப்பானது, விளிம்புநிலை மக்களின் வாழ்வியலைப் பேசுகிறேன் என்ற பெயரில் பெரும்பாலும் அவர்களைப் பரிதாபத்திற்குரிய பண்டங்களாகவோ, வெறும் சமூக ஆவணங்களாகவோ சுருக்கிவிடும் போக்கினின்றும் தன்னைத் துண்டித்துக்கொள்ள வேண்டிய வரலாற்றுத் தருணத்தில் வந்து சேர்ந்திருக்கிறது. இந்தப் பின்புலத்தில் வைத்துப் பார்க்கும்போது, பாலைவன லாந்தரின் ‘பெழச்சான்’ பிரதியானது, அதிகாரத்தால் நிர்மூலமாக்கப்படும் உடல்கள் எங்ஙனம் அந்த அதிகாரத்தின் புனிதப் போர்வையைக் கிழித்தெறிந்து, தனக்கானதொரு மாற்றுத் தன்னாளுமையை நிறுவுகின்றன என்பதற்கான ஒரு வன்முறையான, தவிர்க்கவியலாத சாட்சியமாக முன்னிற்கிறது. இந்தப் பிரதியை வழமையான கதைசொல்லல் முறையிலிருந்தோ, தட்டையான மனிதாபிமானக் கோணத்திலிருந்தோ அணுகுவது அதன் வீரியத்தைக் குறைத்துவிடும் என்பதால், நாவலின் மையச் சரடாக விளங்கும் பசி, புனிதம் மற்றும் விலக்கப்பட்டவற்றின் அரசியல் ஆகியவற்றை ஊடுருவிச் செல்வது இன்றைய அறிவுலகச் சூழலில் அவசியமாகிறது.
தெற்குபுரம் எனும் கற்பிதக் கிராமத்தில் நிலவும் பஞ்சமும், அதைத் தொடர்ந்து வரும் அதிகார வர்க்கத்தின் ஒடுக்குமுறையும் வெறும் சமூக நிகழ்வுகள் என்பதைத் தாண்டி, யார் வாழலாம், யார் சாகலாம் என்பதைத் தீர்மானிக்கும் ‘இறப்பு அரசியல்’ செயல்படும் களமாக விரிவடைகிறது. இந்த அதிகாரக் கட்டமைப்பில்தான் பொக்கியும் பேச்சியும், அவர்களின் மகன் பெழச்சானும் வெறும் ‘உயிரியல் உடல்களாக’ மாற்றப்படுகிறார்கள். இங்குதான் நாவலின் அந்த மிக முக்கியமான, ஒரு நீள்தருணமாக விரியும் காளி கோவிலின் முன் படையல் சோறு வைக்கப்பட்டுள்ள காட்சி நிகழ்கிறது. பசி எனும் மிருகத்தால் பீடிக்கப்பட்ட சிறுவன் பெழச்சான், சமூகத்தால் கட்டமைக்கப்பட்ட புனிதம் மற்றும் தீட்டு எனும் இருமை எதிரீடுகளை முற்றாக நிராகரிக்கும் அந்த வினாடியில், பெழச்சானின் கை அந்தப் படையல் சோற்றை நோக்கி நீளும்போது, அதுவரை அந்த ஊர் காத்து வந்த சாதிய, மத ரீதியான அதிகார அடுக்கின் அஸ்திவாரம் ஆட்டம் காணத் தொடங்குகிறது. அவன் அந்தச் சோற்றை அள்ளி வாயில் வைக்கும்போது, அது வெறும் உணவை உட்கொள்ளும் செயல்திறனைக் கடந்து, கடவுளுக்கும் ஆண்டைகளுக்கும் மட்டுமே உரித்தான புனிதத்தைத் தீண்டத்தகாத உடல் தீண்டிச் சுவைப்பதன் மூலம் அந்தப் புனிதத்தின் மீதான அதிகாரத்தை அவன் அபகரிக்கிறான். அந்த ஒரு கவளம் சோறு அவனது தொண்டைக்குழிக்குள் இறங்கும் அந்த நீண்ட தருணத்தை ஒரு மெதுவான நகர்வு உத்தியில் மிக நுட்பமாகக் காட்சிப்படுத்தும்போது, ஊரின் ஒட்டுமொத்தப் பண்பாட்டுப் பெருமிதமும் சரிந்துவிழுந்து, அவனது வயிற்றுக்குள் செரிக்கப்படுவதுடன் பசிக்கு முன்னால் கடவுள் நிர்வாணமாக்கப்படுகிறார்.
பொதுவாக, ஒடுக்கப்பட்டவர்களின் பசி என்பது வாசகனிடம் கழிவிரக்கத்தைக் கோருவதாகவே படைக்கப்படும் மரபினை முழுமையாக மறுத்து, பாலைவன லாந்தர் அந்தப் பசியை ஒரு உருமாற்றக் கருவியாக மாற்றுகிறார். அவர்கள் ஊரை விட்டு விரட்டப்பட்டு, காட்டில் ஒரு குகைக்குள் தஞ்சம் புகுவதும், அங்கு வரும் கழுதையை அவர்கள் கொன்று உண்ணும் சம்பவமும் சமூகத்தால் ஒதுக்கப்பட்ட அருவருப்பு எனும் கருத்தாக்கத்தோடு ஆழமாக ஊடாடுகிறது. சமூகம் எதை அழுக்கு மற்றும் விலக்கப்பட்டது என்று ஒதுக்கி வைத்ததோ, அதையே உணவாக உட்கொள்வதன் மூலம் பெழச்சானின் குடும்பம் சமூகத்தின் அறவியல் எல்லைகளைக் கடந்து செல்கிறது. அந்தத் தடையைச் செய்த கணம் முதல் அவர்களின் தசைகள் இறுகுவதும், நரம்புகள் முறுக்கேறுவதும், கண்கள் ஒளிரத் தொடங்குவதும் ஒரு மந்திர யதார்த்தவாதச் சித்திரமாக விரிந்து, சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட மனிதக் கழிவுகள், விலக்கப்பட்ட விலங்கின் மாமிசத்தை உண்டு ஒரு மீநிகர் ஆற்றலைப் பெறுவதைக் காட்டுகிறது. கழுதையின் உடலிலிருந்து வெளியேறும் இரத்தம் அவர்களின் உடலுக்குள் பாயும் புதிய அதிகாரமாக மாறி, ஆண்டைகளின் அதிகாரத்திற்குப் பணிந்துபோன அந்த உடல்கள் இப்போது அசுர பலத்தைக் கொண்டு தமக்கானதொரு புதிய அறவியலையும், நீதிமுறையையும் கட்டமைக்கின்றன. மானுட மையவாதத்தின் சரிவு மற்றும் விலங்கியல் ஊடாட்டத்தின் புதிய அறவியலை முன்வைக்கும் இப்பிரதி, இயற்கையையும் விலங்குகளையும் மனித உணர்வுகளின் குறியீடுகளாகச் சுருக்கும் போக்கைக் கேள்விக்குள்ளாக்குகிறது. மனிதனைப் பிரபஞ்சத்தின் மையமாகக் கருதி, மற்ற உயிரினங்களை அவனுக்கான நுகர்பொருட்களாகப் பாவிக்கும் ஆதிக்க மனநிலையை இப்பிரதி நுட்பமாகச் சிதைக்கிறது. மனிதனுக்கும் விலங்குக்கும் இடையிலான அந்த இறுக்கமான எல்லைக்கோடு அழியும் புள்ளியில்தான் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் புதிய வாழ்வியல் அறம் உருவாகிறது என்பதை இப்பிரதி கவனத்திற்கொள்கிறது.
வறட்சியால் பீடிக்கப்பட்ட தெற்குபுரம், மனிதன் இயற்கையோடு நடத்திய தோல்வியுற்ற யுத்தத்தின் களமாகவும், இயற்கையின் குரூரமான விதிகளுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்துவிட்டு விலங்குகளின் நிலைக்குத் தன்னைத் தாழ்த்திக்கொள்வதன் மூலமே உயிர்வாழ முடியும் என்ற உண்மையையும் முன்னிறுத்துகிறது. இதில் வரும் கழுதை, யானையான மலையன், குதிரை ஆகியவை வெறும் மிருகங்களாக எஞ்சாது கதையின் போக்கைத் தீர்மானிக்கும் கதாபாத்திரங்களாகவும், மனிதர்களுக்கு இணையான, மேலானதொரு இருப்பைக் கொண்ட உயிரிகளாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக குருவி எனும் கதாபாத்திரம் காட்டுக்குள் மலையன் எனும் யானையோடு ஆழமான அகப்பிணைப்பை ஏற்படுத்துவது மொழியால் கட்டமைக்கப்பட்ட மனித மேலாதிக்கத்தை அர்த்தமற்றதாக்குகிறது. காட்டின் பேரமைதிக்குள் குருவியும் அந்த யானையும் நேருக்கு நேர் சந்திக்கும் வினாடியில் பல நூற்றாண்டுகளாக மனித இனம் விலங்குகளின் மீது செலுத்தி வந்த வன்முறை வரலாறு மௌனமாக்கப்பட்டு, ஒரு பரிவுணர்வும் ஆதித் தாய்மைக்கான தேடலும் மட்டுமே எஞ்சியிருக்கிறது. குருவி மனித சமூகத்தை விட்டு விலகி விலங்குகளின் உலகில் ஐக்கியமாவதென்பது தோல்வியின் அடையாளம் என்பதற்கு மாறாக, மனித மையவாதச் சிந்தனைக்கு எதிராக அவள் நிகழ்த்தும் ஒரு அமைதியான கலகமாக உருப்பெறுகிறது. அதேபோல், கழுதைக்கறியை உண்பதன் மூலம் அவர்கள் அடையும் மாற்றத்தை வெறும் பசி நீக்கும் செயலாகப் பார்ப்பதை விடுத்து, மனிதத் தன்மையிலிருந்து விலகி விலங்குத் தன்மையை நோக்கி நகரும் ஒரு நிலைமாற்றம் என வரையறுப்பதே பொருத்தமாகிறது. மேலைநாட்டுச் சிந்தனைகள் நாகரிகம் என்று வரையறுக்கும் எல்லைகளை உடைத்து, அந்த ‘மிருக இச்சையைத்’ தழுவிக்கொள்வதன் மூலமே ஒடுக்கப்பட்டவர்களால் அதிகாரத்தை எதிர்கொள்ள முடியும் என்கிற புதிய அறவியலை நாவல் பேசுகிறது. கழுதையின் ஆற்றல் அவர்கள் உடலுக்குள் புகுந்து அவர்களை ‘மனித-விலங்கு’ எனும் கலப்பு உயிரிகளாக மாற்றுவதே ஆண்டைகளின் அதிகாரத்தை எதிர்கொள்வதற்கான வல்லமையை வழங்குகிறது.
லூகாஸ் எனும் அந்நியன் இந்த நிலப்பரப்பிற்குள் நுழையும்போது அவன் வெறும் பயணியாக வரவில்லை. மாறாக அவன் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட சூழலியல் உறவுகளை உற்றுநோக்கும் ஒரு சாட்சியாக மாறுகிறான். அவனது பார்வையில் இந்த மக்கள் உருவாக்கும் தொன்மங்கள் வெறும் மூடநம்பிக்கைகளாகத் தோன்றாது, வரலாற்றால் துடைத்தெறியப்பட்ட ஒரு சமூகம் இயற்கையின் துணையோடு தனக்கானதொரு போட்டி வரலாற்றை எழுதிக்கொள்ளும் முயற்சியாகப் புலப்படுகிறது. வரலாறு என்பது நேர்க்கோட்டில் முன்னேறிச் செல்லும் ஒரு நிகழ்வுப் பெருக்கு என்ற நம்பிக்கையின் மீது ‘பெழச்சான்’ நாவல் ஒரு பெரும் பாறாங்கல்லைத் தூக்கி வீசுகிறது. காலம் என்பது கடந்து செல்வதை விடுத்து, தீர்க்கப்படாத பழைய கணக்குகளை மீண்டும் மீண்டும் நிகழ்காலத்தின் வாசலில் கொண்டுவந்து நிறுத்தும் ஒரு ‘பேய்மை’ கொண்டதாக இயங்குகிறது. இங்கு பேய்மை என்பது அமானுஷ்யமான ஆவிகளைக் குறிப்பதாக அமையாது, நிகழ்காலத்தைச் சதா அரித்துக்கொண்டிருக்கும் கடந்த காலத்தின் நிழல்களைக் குறிக்கிறது. பரியூர் நெருப்பும், கொள்ளை நோயால் அழிந்துபோன தெற்குபுரமும் வரலாற்றின் மீளாத நினைவிடங்களாகக் காட்சியளிக்கின்றன. ஒரு சமூகம் அதிகாரத்தால் ஒடுக்கப்படும்போது அதன் வரலாறு சிதைக்கப்பட்டு மௌனத்திற்குள் தள்ளப்பட்டாலும், அந்த மௌனம் ஒரு நடுக்கமாகத் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. வரலாற்றுப் பெருந்துயரத்தின் மையப்புள்ளியில், பிணங்கள் மலைபோல் குவிக்கப்பட்டிருக்கும் அந்த நிசப்தமான வெளியின் நடுவே மூட்டிய பரியூர் நெருப்பின் வெளிச்சத்தில், பொக்கி தனது கைகளை விரித்து “இந்தப் பொழுதுலருந்து தெக்குபுரத்துக்கு நாந்தான் ராசா” என்று பிரகடனப்படுத்துவது, வரலாற்றால் அங்கீகரிக்கப்படாத ஒரு புதிய அதிகாரத்தின் குரலாக எதிரொலிக்கிறது. இது ஒரு பைத்தியக்காரனின் உளறல் என்பதற்கு மாறாக, காலம் ஸ்தம்பித்து நிற்கும் ஒரு தருணமாகப் பதிவாகிறது. ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிர்காலம் என்பது புதிதாக உருவாவதை விடவும் கடந்த காலத்தின் இடிபாடுகளிலிருந்து மீட்டெடுக்கப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது. அந்தப் பிணங்களின் அரசனாக அவன் தன்னை அறிவித்துக்கொள்வது தோல்வியின் அடையாளம் என்பதைத் தாண்டி, அழிவின் மீது தனது தன்னாளுமையை நிறுவுவதன் மூலம் வரலாற்றைத் தனக்குச் சாதகமாகத் திருத்தி எழுதும் ஒரு தொடக்கமாக அமைகிறது. பெழச்சானின் கனவுகள் மற்றும் மீண்டும் மீண்டும் வரும் நெருப்பின் சித்திரம் காலம் ஒரு நேர்க்கோட்டில் செல்லாது என்பதை உறுதிப்படுத்துகின்றன. இறந்தகாலம் நிகழ்காலத்தைத் தொடர்ந்து பயமுறுத்திக்கொண்டே இருக்கும் என்ற தத்துவத்தை இந்நாவல் கரிசல் காட்டுத் தொன்மங்களோடும் நம்பிக்கைகளோடும் இணைத்துப் பேசுகிறது. வரலாற்றை ஒரு வெற்றிச் செய்தியாகப் பதிவு செய்யாது, அது விட்டுச் சென்ற ரத்தக் கறைகளை நம்மைச் சூழ வைப்பதன் மூலம் இப்பிரதி ஒரு ஆழமான அரசியல் தரிசனத்தை வழங்குகிறது.
பெண்ணியம் என்பதை ஆண்களுக்கு எதிரான வெற்று முழக்கங்களாகச் சுருக்காது, பால்மை என்பது அதிகாரத்தால் கட்டமைக்கப்பட்ட ஒரு சமூக வெளி என்பதையும், அந்த வெளியை எங்ஙனம் உடலையும் மனதையும் கொண்டு தகர்த்தெறிய முடியும் என்பதையும் நாவல் தீவிரமாகப் பரிசீலிக்கிறது. வழக்கமான தமிழ் நாவல்களில் வரும் பெண்கள் குடும்பத்தைக் காக்கும் தெய்வங்களாகவோ, பலியாடுகளாகவோ சித்தரிக்கப்படும் போக்கிற்கு மாறாக, பேச்சி, பட்டுக்கனி, குருவி ஆகிய மூவரும் நிலம், கடல், காடு என மூன்று வெவ்வேறான பௌதிக வெளிகளைத் தமக்கான அதிகார மையங்களாக மாற்றிக்கொள்கிறார்கள். பேச்சி வறண்ட கரிசல் நிலத்தின் குறியீடாக நிற்க, பட்டுக்கனியின் பாத்திரம் சென்னைக்கு இடம்பெயர்ந்து மீன் விற்கும் பெண்ணாக மாறும்போது அவளது களம் வீதிக்கு வருகிறது. தனது கணவனின் வீழ்ச்சிக்குக் காரணமான சுப்ரமணியனைக் கொல்லும் தருணத்தில் பட்டுக்கனி கையில் இருக்கும் அந்த மீன்வெட்டும் கத்தி, அதுவரை அவளது உழைப்பின் கருவியாக இயங்கி, பின் நூற்றாண்டு கால ஆதிக்கத்திற்கு எதிரான வரலாற்றுச் சீற்றமாக மாறுகிறது. செயல்வழிப்பட்ட விமர்சனப் பார்வையில், அவள் கையில் இருக்கும் அந்த மீன் வெட்டும் கத்தி அதிகாரத்தின் கழுத்தை நோக்கி இறங்கும்போது அவள் ஒரு சாதாரணப் பெண்ணாக இருந்த அடையாளங்களைத் துறந்து ஒரு ஆக்ரோஷமான சக்தியாக உருவெடுக்கிறாள். ரத்தம் தெறிக்கும் அந்தச் செயல் அவளது உடலின் மீது இனி எவரும் அதிகாரம் செலுத்த இயலாது என்பதைப் பறைசாற்றும் ஒரு அரசியல் பிரகடனமாக மிளிர்கிறது. மறுபுறம் குருவி மனிதர்களோடு பேசுவதைத் தவிர்த்து, காட்டுக்குள் மலையன் எனும் யானையோடு ஆழமான அகப்பிணைப்பை ஏற்படுத்துவது ஆணாதிக்கச் சமூகம் வகுத்து வைத்துள்ள நிறுவனங்களை முழுமையாக நிராகரிக்கும் செயலாகும். அவளது மௌனம் ஒரு பலவீனம் என்பதை விடுத்து, ஆண்களின் மொழிக்குக் கட்டுப்பட மறுக்கும் ஒரு எதிர்ப்பு வடிவமாக மலர்கிறது. காடு எனும் அந்த மர்மமான வெளியை அவள் தேர்ந்தெடுப்பது அங்கே அவளைக் கட்டுப்படுத்த எந்த ஆணும் அற்ற வெளியென்பதால் நிகழ்கிறது. பெழச்சான் ஊரை விட்டு ஓடியபோதும் திரும்பி வந்தபோதும் இந்தப் பெண்கள் தங்கள் இருப்பைத் தாங்களே தக்கவைத்துக்கொள்கிறார்கள். பெண் உடல் ஒரு போர்க்களம் என்றால் அந்தப் போர்க்களத்தில் வெற்றியடைவது எப்படி என்பதை பட்டுக்கனியின் கத்தியும் குருவியின் மௌனமும் நமக்குக் கற்றுத் தருகின்றன. ‘பெழச்சான்’ பிரதியானது பெண்ணை ஒரு மென்மையான உயிரினமாகச் சித்தரிக்கும் கற்பிதங்களை உடைத்தெறிந்து, அவள் நிலத்தைப் போலப் பொறுமையானவள்; அத்துடன் கடலைப் போலச் சீற்றம்கொண்டவள் என்பதை நிறுவுகிறது. இது பால்மை சமத்துவத்தைக் கடந்தும் பெண்ணின் சுய அதிகாரம் பற்றிய ஆழமான விசாரணையாகவும் அமைகிறது.
இருப்பினும், ஒரு இலக்கியப் பிரதியை அதன் அரசியல் சரிதன்மைக்காக மட்டுமே கொண்டாடுவது அதன் வடிவச் சிக்கல்களைக் கண்டுகொள்ளாது விடுவதற்கு இட்டுச் சென்றுவிடும். தமிழின் நவீனத்துவ எழுத்துமுறைக்குச் சவால் விடும் புதிய சாத்தியங்களைத் திறந்திருந்தாலும், அது தனக்குள் சுமந்து நிற்கும் சில முரண்களைச் சுட்டிக்காட்டுவது அவசியமாகிறது. எதார்த்தவாதத்திற்கும் மீயதார்த்தவாதத்திற்கும் இடையில் ஊசலாடும் இதன் புனைவு மொழியானது சில இடங்களில் வாசகனுக்கும் பிரதிக்கும் இடையிலான நம்பகத்தன்மையைக் குலைத்துப் போடுகிறது. நாவலின் முதல் பகுதி உடலரசியல் மொழியில் செறிவாக எழுதப்பட்டிருந்தாலும், கதை பல கிளைகளாகப் பிரியும்போது மையச் சரடு சற்றுத் தளர்வடைவதைப் போன்ற உணர்வு ஏற்படுகிறது. ஆசிரியர் தனது அரசியல் கருத்துக்களைப் பாத்திரங்களின் வழியாகப் பேச வைக்கத் துடிக்கும் இடங்களில் புனைவின் மாயம் கலைந்து ஒரு வகையான பிரச்சாரத் தொனி மேலோங்குவதைத் தவிர்க்க இயலாது. பாத்திரங்கள் தன்னிச்சையாக இயங்குவதற்குப் பதிலாக ஆசிரியரின் விருப்பத்திற்கு ஏற்ப நகர்வது போன்ற இடறல்களை ஆங்காங்கே காண முடிகிறது. குறிப்பாக நாவலின் இறுதிப் பகுதியில் பெழச்சான் தனது தங்கை குருவியின் குழந்தையை, தன் மருமகனைத் தூக்கி உச்சிமுகர்ந்து முத்தமிட்டு, அவனுக்கு ‘கந்தன்’ எனப் பெயரிட்டுத் தன் தங்கையிடம் வாக்குக் கேட்கும் தருணம், அதுவரை நாவல் கட்டி எழுப்பியிருந்த அந்த அசுரத்தன்மை திடீரென ஒரு நெகிழ்ச்சியான முடிவை நோக்கித் திருப்பப்படுவதைக் காட்டுகிறது. பசியின் குரூர முகத்தைக் காட்டிய அதே எழுத்து இறுதியில் ஒரு மரபான குடும்பப் பாசப் பிணைப்பிற்குள் தன்னைச் சுருக்கிக்கொள்கிறதோ என்ற ஐயம் எழுவதைத் தவிர்க்க முடியாது போகிறது. மேலும் நாவலில் கையாளப்பட்டுள்ள மாந்திரீக யதார்த்தவாதம் எல்லா இடங்களிலும் இயல்பாக அமையாது, சில இடங்களில் வாசகனின் ஆழ்மனதில் ஓர் உண்மையாகப் பதிய மறுப்பதையும் அவதானிக்க முடிகிறது. வட்டார வழக்கு மொழியைக் கையாள்வதில் ஆசிரியர் காட்டியிருக்கும் சிரத்தை பாராட்டுக்குரியது என்றாலும், வெவ்வேறு வழக்குகள் ஒன்றோடொன்று கலந்து ஒலிப்பது ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பின் துல்லியத்தைச் சிதைப்பதாக அமைகிறது. அதே நேரம் ஒரு நிலப்பரப்பின் பன்மையான வட்டார வழக்கை வெளிப்படுத்துவதாகவும் எடுத்துக்கொள்ள வாய்ப்புண்டு. இது வாசகர்களின் வாசிப்பு முறைமைகளின் தேர்வாக அமைந்து கருத்துருவாக்கமாக ஆகும்போது, இந்த இரண்டு நிலைப்பாடுகளும் மாறி மாறி முன்வைக்கப்பட சாத்தியமுள்ளது. இந்நாவலின் கட்டமைப்பு குறித்தும் இங்கு ஆழமாக விவாதிக்கப்பட வேண்டியுள்ளது. இது வெறுமனே ஒரு கதையைத் தொடக்கம், வளர்ச்சி, முடிவு என நேர்க்கோட்டில் நகர்த்தும் மரபான வடிவத்தைக் கொண்டிருக்காது. மாறாக, பல கிளைக்கதைகளும், வெவ்வேறு காலவெளிகளும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து ஒரு பன்முகப் பிரதியாக இது தன்னை விரித்துக்கொள்கிறது. நாவலானது தெற்குபுரம், சென்னை, கடல் வெளி, வனாந்தரம் என பல்வேறு புவியியல் பரப்புகளை ஒரு சேரக் கையாள்கிறது. ஒவ்வொரு நிலப்பரப்புக்கும் ஏற்றவாறு அதன் மொழி, பாத்திரங்களின் உளவியல், மற்றும் அரசியல் ஆகியவற்றை ஆசிரியர் மிக நுணுக்கமாகக் கட்டமைத்துள்ளார். நிகழ்வுகளின் தொகுப்பாக அமையாது, ஒவ்வொரு நிகழ்வும் மற்றொரு நிகழ்விற்கான குறியீடாகவோ, எதிர்வினையாகவோ அமையும் வகையில் இதன் பின்னல் அமைந்துள்ளது. காலத்தை முன்னும் பின்னுமாக நகர்த்தும் உத்தி, வாசகனை வெறும் பார்வையாளனாக மாத்திரமன்றி, பிரதியின் மர்மங்களை விடுவிக்கும் பங்கேற்பாளனாகவும் மாற்றுகிறது. நாவலின் கட்டமைப்பு ஒரு சிக்கலான சிலந்தி வலையைப் போலத் தோற்றமளித்தாலும், அதன் ஒவ்வொரு சரடும் அதிகாரத்தின் வேர்களை அசைத்துப் பார்க்கும் ஒரு மாபெரும் வலைப்பின்னலாக நேர்த்தியாகச் செதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பன்முகக் கட்டமைப்பே பிரதியின் வாசிப்பு அனுபவத்தை அடுத்த தளத்திற்கு நகர்த்துகிறது.
மேலும், ‘பெழச்சான்’ நாவலை வாசிக்கும்போது அது ஒரு சிறந்த திரைப்படத்திற்கான காட்சித் தன்மைகளைத் தன்னுள் இயல்பாகவே கொண்டிருப்பதைக் கவனிக்க முடிகிறது. திரைக்கதைக்கு அவசியமான முரண்கள், எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் காட்சியமைப்புகளின் வீரியம் ஆகியவை இந்நாவலில் நிரம்பிக் கிடக்கின்றன. குறிப்பாக, பஞ்சத்தின் கோரப்பிடியில் சிக்கிய மக்கள் காளியின் முன் பலியிடும் காட்சிகள், குகைக்குள் கழுதையை வேட்டையாடும் தருணங்கள், மற்றும் சென்னையில் பட்டுக்கனியின் ஆக்ரோஷமான வெளிப்பாடுகள் யாவும் திரையில் விரியும் ஒரு படத்திற்குரிய செறிவைக் கொண்டுள்ளன. இருள் சூழ்ந்த காடும், கொந்தளிக்கும் கடலும் வெறும் பின்னணியாக அமையாது, திரைக்கதையின் முக்கியக் கதாபாத்திரங்களைப் போலவே உணர்வுகளைக் கடத்துகின்றன. காட்சி மொழியும், அதிரடியான வசனங்களும் வாசகனின் மனத்திரையில் ஒரு சிறந்த திரைப்படத்தைப் பார்த்த பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. இவற்றையெல்லாம் தாண்டி, நாவலின் மற்றொரு மிக நுணுக்கமான மற்றும் நேர்மறையான அம்சம், அது நம்பிக்கையை முன்வைக்கும் விதமாகும். மரணத்தின் விளிம்பிற்குத் தள்ளப்பட்டாலும், மனித உயிர் தன்னைக் காத்துக்கொள்ளவும், மீளெழுந்து வரவும் செய்யும் போராட்டத்தை இது மகத்தான ஒன்றாகக் கொண்டாடுகிறது. அழிவிலிருந்து துளிர்க்கும் ஆதி ஆற்றலையும், எந்தவொரு அதிகாரக் கட்டமைப்பாலும் முற்றிலுமாக நசுக்கிவிட முடியாத அடித்தட்டு மக்களின் தற்காப்புத் திறனையும் பிரதி மிகச் சிறப்பாகப் பதிவு செய்கிறது. ஒவ்வொரு வீழ்ச்சிக்குப் பிறகும் ஒரு புதிய தொடக்கம் காத்திருக்கிறது என்ற தத்துவத்தை, துயரங்கள் நிறைந்த வாழ்வியலுக்கு நடுவிலும் ஒரு கவித்துவமான மொழியில் ஆசிரியர் வெளிப்படுத்தியுள்ளார். கதாபாத்திரங்கள் சந்திக்கும் துயரங்கள் அவர்களை முடக்கிப்போடாமல், மேலும் வலுவானவர்களாக, இயற்கையோடும் பிரபஞ்சத்தோடும் நேரடித் தொடர்புகொண்டவர்களாக அவர்களை உருமாற்றுவது இந்நாவலின் ஆகச்சிறந்த வெற்றி எனலாம். இத்தகைய வாழ்வாதாரத் தேடலும், மீட்சியும் ‘பெழச்சான்’ நாவலை ஒரு இருண்ட காலத்தின் சாட்சியாக விளங்குவதோடு, மனிதகுலத்தின் மீளாத நம்பிக்கையின் வெளிச்சமாகவும் நிலைநிறுத்துகின்றன. ஆயினும் சில சறுக்கல்களையும் தாண்டி ‘பெழச்சான்’ ஒரு முக்கியமான பிரதியாக எஞ்சி நிற்பதற்குக் காரணம் அது எழுப்பும் தீவிரமான கேள்விகள்தான். ஒரு நாவல் என்பது முழுமையானதாக இருக்க வேண்டிய அவசியத்தை விடுத்து, அது தனக்குள் உடைபடுவதற்கான வெளிகளையும் கொண்டிருக்கலாம். அந்த வகையில் இந்நாவலில் உள்ள குறைகள் ஒரு மாபெரும் லட்சியத்தை எட்ட முயலும்போது ஏற்படும் தவிர்க்கவியலாத களைப்புகளே அன்றி முழுமையான தோல்விகள் என்று கருதுவதற்கில்லை. தமிழின் தற்கால நாவல் போக்கில் வடிவ ரீதியாகவும் உள்ளடக்க ரீதியாகவும் இது ஒரு தைரியமான முயற்சி என்றே மதிப்பிட வேண்டும். ஆக, ‘பெழச்சான்’ நாவலானது பசியால் ஒடுங்கிப்போன ஒரு உடல் எப்படித் தன்னைத் தானே தின்று செரித்து, புனிதங்களையும் விலக்கங்களையும் மீறி ஒரு அதிகார மையமாக உருவெடுக்கிறது என்பதைப் பேசும் தீவிர அரசியல் பிரதியாக எஞ்சுகிறது. இது தமிழ்ச் சூழலில் இதுவரை பேசப்பட்ட இரக்கத்தை யாசிக்கும் விளிம்புநிலை இலக்கிய மரபை உடைத்து, அதிகாரத்தைக் கோரும் ஒரு புதிய திசையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
றியாஸ் குரானா – இலங்கையின் அக்கரைப்பற்றைச் சேர்ந்த இலக்கியச் செயற்பாட்டாளர், கவிதை சொல்லி. ஈழத்துத் தமிழ் இலக்கிய வெளியில் பின்நவீனத்துவ எழுத்துக்களுக்கான களத்தினைக் கட்டமைத்த முன்னோடி என இவரைக் குறிப்பிடலாம். பின்நவீனத்துவக் கருத்தியல் சார்ந்து ஈழத்தில் வெளிவந்த “பெருவெளி” சிற்றிதழின் நிறுவனர்களில் ஒருவர். பரந்துபட்ட வாசிப்பும் காய்தல் உவத்தல் அற்ற விமர்சனமும் இவரது அடையாளங்கள். இவரது கவிதைகள் யாவுமே குறிப்பான ஒரு பாடுபொருளை மையமாகக்கொள்ளும் பொதுவான போக்கிலிருந்து விலகிப் பல்முனைத் தளங்களை அக்கறைகொள்பவை. நவீனம் கடந்த கவிதைகளை அக்கறை கொண்டு செயற்படுபவர். ஆதி நதியிலிருந்து கிழக்குப் பக்கம் பிரிகிறது ஒரு கிளை (நுண்காவியம், முதற்பதிப்பு 2003, இரண்டாம்பதிப்பு 2006), வண்ணத்துப்பூச்சியாகிப் பறந்த கதைக்குரிய காலம் (நுண்காவியம் 2006), நாவல் ஒன்றின் மூன்றாம் பதிப்பு (கவிதைத் தொகுதி 2011), மிகுதியை எங்கு வாசிக்கலாம் (கவிதைத்தொகுதி 2013), மாற்றுப்பிரதி (கவிதைத்தொகுதி 2016) என்று இதுவரை ஐந்து படைப்புக்களைத் தமிழ் இலக்கியப் பரப்புக்கு இவர் தந்துள்ளார். வாசகர்களைத் தன்பால் ஈர்க்கும் தன்மை கொண்ட இவரது கவிதைகள் ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.








Leave a Reply