Home

About Us

Contact Us

  • Facebook
  • X
  • Instagram
  • WhatsApp
  • RSS Feed
தடாரி
  • முகப்பு
  • கவிதை
  • கதை
    • சிறுகதை
    • நுண்கதை
    • குறுங்கதை
  • கட்டுரை
    • இலக்கியம்
    • கலை
    • அரசியல்
    • சூழலியல்
    • சினிமா
    • ஆய்வு
  • அறிவியல்
  • மொழிபெயர்ப்பு
    • கவிதை
    • கதை
    • கட்டுரை
  • தொடர்
  • வாழ்வியல்
Search

அலெக்சாண்டரும் ரோசியும்

கு.கு. விக்டர் பிரின்ஸ்
கு.கு. விக்டர் பிரின்ஸ்
March 1, 2026
அலெக்சாண்டரும் ரோசியும்

அம்புறோஸ் அறுபது வயதில் இறந்தான். ஆண்டாண்டு காலமாக உடலுக்குள் தேங்கிய மதுவின் வெப்பம் ஈரலை மெதுவாகச் சிதைத்தது. ஆனால் ஊரார் அந்தப் பட்டவர்த்தமான உண்மைநிலையை மானசிகமாக ஏற்க மறுத்து நிராகரித்தனர். “எவனுக்கோ கத்தி பள்ளயில ஏறும் அவசானமாட்டு” என நாற்பது ஆண்டுகள் உச்சரிக்கப்பட்ட சாபம் நிறைவேறாமல் போனதே சிலருக்கு ஏமாற்றமாக இருந்திருக்கலாம். ஆயினும் கடைசி வாரங்களில் படுக்கையிலே நசுங்கிய உடல், சுவாசம் ஒவ்வொன்றாகத் தளர்ந்து சிதறிய அந்த வேதனை, அவனை வெறுத்தவர்களுக்குப் பரம சாந்தியாக மாறியது.

அவன் முன்னோர்களின் இறுதிகள் இன்னும் அந்தப் பகுதியின் காற்றில் கசந்திருந்தன. தாத்தா ஆரோக்கிய நாடார் சாலையோரக் கற்களில் இரத்தம் பரவியபடி வீழ்ந்தவர்; தந்தை தேவதாசன் நாடார் குத்தின் ஆழத்தில் உயிர் கரைந்தவர். அந்த மரணங்கள் குடும்ப வரலாற்றின் குருதிக் குறியீடுகளாக மாறியிருந்தன. அவற்றை நினைத்தபோதெல்லாம் அம்புறோஸின் உள்ளத்தில் ஒரு வினோதமான பெருமிதம் எழுந்தது; காயத்தின் வழியே நிறைவடையும் ஆண்மையை அவன் மனம் கற்பனை செய்தது. “மூன்றாவது தலைமுறை” என்று ஊர் கிசுகிசுக்க முன்னரே அவன் தானே அறிவித்தவன்; அரிவாளின் ஒலி தன் நரம்புகளில் ஓடுகிறது என நம்பியவன்.

மூன்று மகன்களுக்கும் அவன் கொடுத்த முதல் பாடங்கள் அகரவரிசையில் இல்லாதவை. அடிக்கவும், விரட்டவும், முகத்தில் குத்தவும் கற்றுக் கொள்ளச் சொன்னது அவனது தாலாட்டு. பள்ளி வளாகங்களில் அவர்களுக்குப் பயபக்தி கலந்த அடைமொழிகள் ஒட்டப்பட்டபோதும், ஒருநாள் தெருக்களில் தன் நிழலைத் தொடரும் வாரிசுகள் தேவை என அவன் உள்ளம் ஏங்கியது. சிறுவயதிலேயே பிராண்டியின் சுவையை உதடுகளில் தொட்டு வைத்துக் கத்தியைப் பரிசளிக்க வேண்டும் என்ற மாயக் கனவு அவன் நினைவில் பிழிந்தது. ஆனால் அந்த இல்லத்தில் மற்றொரு குரலும் இருந்தது. லீலாம்மா ஒவ்வொரு மாலையும் பிள்ளைகளின் நெற்றியில் சிலுவை வரைய, அமைதியின் மொழியில் நெறியை விதைத்தாள். அவள் சொற்களில் இரும்பின் சிணுங்கல் இல்லை; தாழ்மையின் தெளிவு மட்டுமே. அந்த மென்மையான எதிர்ப்பு அம்புறோஸின் பேராசையை உள்ளிருந்து மெதுவாகத் தின்றது.

காலம் நகர்ந்தது. இரு மகன்கள் அரசுப் பள்ளி ஆசிரியர்களாகி, தந்தையின் நீண்ட நிழல் படாத தூர மாவட்டங்களுக்கு இடம்பெயர்ந்தனர். மூன்றாவது மகன் அலெக்சாண்டர் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர் பணிக்குத் தேர்வானான்; சாலையின் நீளம் அவனுக்குப் புதிய வழித்தடமாகத் திறந்தது. மகள் நாகர்கோவிலின் மழை மணம் வீசும் வீட்டில் திருமணம் செய்து போனாள். அரிவாள் மரபு வீட்டின் வாசலில் முளைக்கவில்லை. புதைகுழி அருகே மண் விழுந்த ஒலி, அம்புறோஸின் குரலை விடக் கனமாக ஒலித்தது; பாதிரியாரின் இறுதி ஜெபம் அந்த மண்ணுக்குள் புதைந்த வன்முறைக்கு ஒரு அமைதிப் போர்வை போல் பரவியது. அனைவரும் திரும்பிச் சென்றபோது, அந்த ரத்த வேரானது முற்றிலும் அழிந்துவிட்டதாக நம்பினர். ஆனால் சில விதைகள் முழுமையாகச் சாகுவதில்லை; அவை நிலத்தின் அடியில் அமைதியாகக் காத்திருக்கின்றன.

அம்புறோசின் மரக்கட்டிலும் அதனுடன் ஆண்டாண்டு காலம் சுவரோரம் நீண்டு கிடந்த இருக்கையும் வெயிலில் கழுவி வைக்குமாறு லீலாம்மா மகன்களிடம் சொன்னபோது, அந்த மரப்பொருட்கள் ஒருவித நீண்ட மூச்சை விடுகின்றனவெனத் தோன்றியது. அவற்றின் மேல் ஒருகாலத்தில் இளைஞரான உடலின் வன்மம் சாய்ந்திருந்தது; பின்னர் காவல் துறையினரின் காலணிச்சுவடுகள், திடீர்ச் சோதனைகளின் குரல் அதிர்வுகள், சிறை வாசலில் இருந்து திரும்பிய சிறுவர்களின் நிசப்தமான அழுகை—இவை அனைத்தும் அந்த மரத்தோலில் ஒட்டியிருந்த நினைவுக் கறைகளாகவே இருந்தன. வெயிலில் சாய்ந்தபடி அவை தங்கள் சுமையை வெளிப்படுத்தின; மழை நனைத்த மண்வாசனை போல, கடந்த காலத்தின் பயம் அவற்றின் கீறல்களில் இருந்து எழுந்தது. ஒருகாலத்தில் ஆணவத்தின் சாய்வைத் தாங்கிய அந்தக் கட்டில், கடைசி நாட்களில் உடல் சுருங்கிய மனிதனின் மெலிந்த சுவாசத்தையும் சாட்சியமாய் எடுத்துக்கொண்டது. அங்கே உறங்கியது வலிமையல்ல, மெதுவாக உடைந்து கொண்டிருந்த அகம்பாவமே. நீண்ட இருக்கை பல முறை காவல் நிலையத்திற்கும் நீதிமன்றத்திற்கும் இடையே ஓடிய பாதையின் கதைகளை அமைதியாகப் பொதிந்து வைத்திருந்தது; அதன் மேல் அமர்ந்த சிறுவர்கள் தங்கள் தந்தையைப் பார்க்கச் செல்லும் முன் காலணிகளை அணிந்துகொண்ட தருணங்கள், இளமையின் குழப்பம், வெட்கம், சொல்லமுடியாத அச்சம் அனைத்தையும் அது சுமந்திருந்தது. இப்போது வெயிலின் வெப்பத்தில் அவை காய்ந்தபோது, பழைய மரச்சீவிகளில் இருந்து ஒரு காலத்தின் கருங்குரல் வெளியேறியதுபோல் மகன்களின் உள்ளம் கலங்கியது; கட்டிலின் நிழல் சுருங்கியபடி, அந்த மரபு இங்கேயே முடிந்துவிடுமோ என்ற நம்பிக்கையும் அச்சமும் ஒன்றோடொன்று பின்னிக்கொண்டன.

சாவுக்கிடக்கையில் கூட தன் அரிவாள்களையும் வெட்டுக்கத்திகளையும் யாரும் தொடக்கூடாது எனக் கத்தி காத்திருந்த அம்புறோஸின் இரும்புச் சேமிப்புகள் வீட்டின் ஓரத்தில் குவிந்திருந்தன. அவற்றின் பளிங்குச் சுருள்களில் மங்கிய கறைகள் இருந்தன; அவை வெறும் குருதி அல்ல, காலத்தின் காயங்களின் மிச்சம். சுவரோடு சாய்ந்தபடி அவை தங்கள் முன்னாள் உரிமையாளரின் நிழலைத் தேடின; ஒருகாலத்தில் விரல்கள் பற்றிய வெப்பம் இப்போது குளிர்ந்த உலோகமாக மட்டுமே மீந்தது. லீலாம்மா அவற்றை அருகிலுள்ள கொல்லனிடம் இலவசமாகக் கொடுத்து விடுமாறு மகன்களிடம் வேண்டியபோது, அந்த ஆயுதங்கள் தங்கள் அடையாளம் கலைந்து வேறு வடிவம் எடுக்கத் தயாராகும் விதியின் வாசலில் நின்றன; கொல்லனின் உலைக்குள் உருகி உழவுக்கருவியாக மாறினால், ஒருகாலம் கிழித்த கைப்பிடிகள் மண்ணை உழவும் கருவிகளாகிப் போகலாம் என்ற ஒரு மெதுவான மாற்றத்தின் சாத்தியம் அவளது மனதில் உதித்தது. கணவனை மண்ணில் இறக்கும்போது அவள் நினைத்தது மரித்தவனைப் பழிவாங்கல் அல்ல, விடுதலையே; வீட்டின் சுவரில் ஒட்டியிருந்த இரும்பு நிழல்கள் நீங்க வேண்டும் என்ற ஏக்கம். அவை அப்படியே தங்கினால் மீண்டும் ஒரு தலைமுறையின் நரம்பில் கருமை ஓடிவிடுமோ என்ற அச்சம் அவளைச் சுரண்டியது. இரும்புப் பொருட்கள் அமைதியாகக் கிடந்தன; அவற்றின் பளபளப்பு குறைந்திருந்தாலும், கதை முடிந்துவிடவில்லை என மெல்ல ஒலித்தது.

மூத்த மகன் ரிச்சர்ட் கிழிந்த சாக்கை திறந்து, இரும்பின் நிறைச்சுவையை உள்ளே அடக்க முயல்பவனைப் போல ஆயுதங்களை ஒன்று ஒன்றாகக் காரின் பின்இருக்கையில் அடுக்கியபோது, மற்றொரு சகோதரன் அமைதியாகத் துணைநின்றான்; அவர்களின் விரல்கள் தந்தையின் கடந்தகாலத்தைத் தொடும் போது, அதில் வெறும் உலோகத்தின் குளிர் மட்டுமல்ல, சொல்லப்படாத வரலாறுகளின் ஈரப்பதமும் ஒட்டியிருந்தது. அந்தக் குவியலின் நடுவே சிறிய பேனாக்கத்தி ஒன்று சாக்கின் மடிப்பில் ஒளிந்திருந்தது. அலெக்சாண்டரின் கண்களுக்கு அது திடீரெனப் பட்டன. மான்கொம்பால் செதுக்கப்பட்ட கைப்பிடி, வயதின் அழுத்தத்தால் மிருதுவான மஞ்சள் மெருகைப் பெற்றிருந்தது; கைப்பிடியையும் இரும்பையும் இணைக்கும் செம்பு வளையம் ஒருகாலத்தில் உறுதியாக இருந்திருக்கலாம் போலிருந்தது; விரலளவு நீளமுடைய இரும்புத் தாள் மங்கிய வெளிச்சத்தில் பளபளப்பைத் தழுவியபடி அமைதியாக இருந்தாலும், அதன் நரம்புகளில் எதையோ எதிர்பார்த்துக் கொதிக்கும் வெப்பம் இருந்தது. அது பெரிய வெட்டுகளுக்கான கருவியல்ல; ஆனால் ஒருவித அடையாளம், ஒருவிதச் சின்னம்; வீட்டை விட்டு வெளியே செல்லும் இளைஞன் மடியில் வைத்துச் செல்லும் அன்றாடத் துணைபோல தோன்றினாலும், தன் உலோகத் தோலில் வேறு நினைவுகளின் உச்சரிப்பை மறைத்திருந்தது. குமரி மேற்கு மாவட்டத்துத் திருமண வீடுகளில் மறுநாளைய விருந்துக்காக இரவு நேரம் காய்கறி நறுக்கச் செல்பவர்கள் கைகளில் இத்தகைய கருவிகள் பெருமிதத்தின் சிறு பதக்கமாக மிளிரும்; “நான் தேர்ந்தவன்” என்று சொல்வதற்கான அமைதியான அறிகுறி. அந்தச் சின்னப் பொருளின் மீது விழுந்த அலெக்சாண்டரின் பார்வையில் குற்றவுணர்வு இல்லை; ஒரு அப்பாவித் தேவையே இருந்தது—மரக்கறி வெட்ட உதவும் துணை என்று அவன் மனம் தன்னையே நம்பச் செய்தது.

“அந்தக் கொச்சுப் பேனா கத்தி தா அண்ணா… மரக்கறி வெட்டக் கொள்ளாம்…” என்ற அவனது மென்மையான கோரிக்கை காற்றில் விழுந்ததும், அந்த இடத்தில் ஒரு சிறிய மௌனம் பதிந்தது; ரிச்சர்டும் மற்ற சகோதரனும் தாயின் முகத்தை நோக்கிப் பார்த்தனர். லீலாம்மாவின் உள்ளத்தில் ஓர் அசைவுப் புலம்பல் எழுந்தது. குவிந்திருந்த இரும்புகளின் நடுவே இன்னும் எரியாத ஒரு தீப்பொறி மறைந்திருக்கலாம் என்ற அச்சம் அவளைத் திடுக்கிட்டது. ஆனால் அந்தப் பதற்றத்தின் முகம் வெளியில் தெரியக்கூடாது; மகனின் கண்களில் குற்றத்தின் நிழல் தோன்றக் கூடாது. “எதுக்கு மக்கா அது? எளவு போட்டு… வீட்டில இல்லாத கத்தியா?” என்று அவள் இயல்பான குரலில் கேட்டபோது, அவள் சொற்கள் மென்மையாக இருந்தாலும், அவளது உள்ளம் அந்தச் சிறிய மான்கொம்புக் கைப்பிடியின் உள் கொதிப்பை உணர்ந்திருந்தது. சாக்கின் மடிப்பில் அமைதியாக இருந்த பேனாக்கத்தி, தன்னை மீண்டும் ஒருவரின் மடியில் அடைக்கச் செல்லும் வாய்ப்பை உணர்ந்ததுபோல், மங்கிய வெளிச்சத்தில் ஒரு மெல்லிய ஒளிர்வை விட்டது; அது வெறும் காய்கறி நறுக்கும் கருவியா அல்லது மறைந்த மரபின் மெல்லிய முனையா என்பதை அந்தக் கணத்தில் யாரும் தெளிவாகச் சொல்ல முடியவில்லை.

மகள் ரோசிக்குத் தந்தையின் பெயர் ஒரு அச்சமல்ல; சில வேளைகளில் அது அவளுக்குள் ஒரு மறைமுகப் பெருமிதத்தின் நிழலை உண்டாக்கும். அந்தப் பெயர் வீதியில் ஒலிக்கும்போது மக்கள் சற்றே வழிவிடுவதை அவள் கவனித்திருந்தாள்; அந்தச் சற்றே ஒதுங்கும் இடைவெளியில் தன்னை உயர்த்திக் காணும் பழக்கம் அவளுக்குத் தோன்றியிருந்தது. தாயின் பிடிவாதத்தின் அடியில் எத்தனை ஆண்டுகளின் பயமும், எத்தனை இரவுகளின் அச்சமும் புதைந்திருக்கிறது என்பதை அவள் உணரவில்லை. “அம்மா, அந்தச் செறிய புளிகுத்தி கத்தி இருக்கட்டு, அப்பாக்க ஓர்மையாட்டு…” என்று அவள் சொன்ன தருணத்தில், வீட்டுக்குள் இருந்த காற்று மெல்ல கடினமடைந்தது. லீலாம்மாவின் கண்களில் திடீரென ஒரு பழைய சுடர் மின்னியது; அது கோபத்தின் வெளிச்சம் அல்ல, மரபு மீண்டும் முளைக்குமோ என்ற பயத்தின் அலை.

“ஒனக்கு தேகத்தில அல்லங்கிலும் கொப்பனுக்க சோர ஓடுதோன்னு ஒரு சம்சியம் எனக்குண்டு; புளி குத்துதோ ஆனாலும், புல்லு அறுக்குதோ ஆனாலும் இரும்பு இரும்புதான்… நீ ஒனக்க வேலைய பாத்தோட்டு போ,” என்ற அவளது சொற்கள் மென்மையாக ஒலித்தாலும், அவற்றின் உட்புறம் எரிந்துகொண்டிருந்தது. அந்தச் சிறு கருவியை ‘நினைவு’ எனக் காக்க விரும்பிய ரோசியின் எண்ணம், அவளுக்குள் பதிந்திருந்த அப்பாவின் உருவத்தைக் காப்பாற்றும் ஒரு முயற்சிதான்; ஆனால் லீலாம்மாவுக்கு அது இரும்பின் மணத்தை மீண்டும் வீட்டுக்குள் வரவழைக்கும் அழைப்பாகத் தோன்றியது.

ரோசி தந்தையின் பெயரைச் சொல்லி புகுந்த வீட்டில் கிடைக்கும் பயச் சலுகைகளைச் சிறு வெற்றிகளாக எடுத்துக்கொண்டு நடந்தபோது, அந்தப் பெருமிதம் அவளுக்குள் எப்போது வேரூன்றியது என்பதை அவள் ஆராயவில்லை; அச்சம் ஒதுங்கிய இடைவெளியில் தன்னை உயர்த்திக் காணும் பழக்கம் அவளுக்குள் அமைதியாக வளர்ந்தது. ஆனால் லீலாம்மா அவளைப் பற்றி அத்தனை கவலைப்படவில்லை. பெண்ணாகப் பிறந்ததால், அந்த இரும்பு மரபு அவளின் நரம்புகளில் ஆழமாகப் பதியாது, தந்தையின் பாதையில் முழுமையாகச் செல்லமாட்டாள் என்ற ஒரு தாய்மையான நிம்மதி அவளுக்குள் இருந்தது. மரபு என்பது பெரும்பாலும் மகன்களின் தோள்களில்தான் தங்கி நிற்கும் என அவள் நம்பினாள்; அதனால் ரோசியின் சொற்களில் ஒளிந்திருந்த சிறு பெருமிதத்தை அவள் கடிந்து கொண்டாலும், அதை விதை எனக் கருதவில்லை. ஆனால் அவள் கவனிக்காதது ஒன்று இருந்தது—நிழல்கள் பாலினம் பார்த்து விழுவதில்லை; அவை வெளிச்சம் கிடைக்கும் திசையில் மட்டும் நீள்கின்றன.

“அண்ணன் இஷ்டப்பட்டத வைச்சுக்கோ… இந்த அம்ம இப்பிடிதான்…” என்று சின்னப் புன்னகையோடு கோபம் கலந்த நெகிழ்ச்சியில் சொல்லிவிட்டு ரோசி விலகியபோது, வீட்டின் நடுவே சொல்லப்படாத ஏதோ ஒன்று நின்றது. அலெக்சாண்டர் சாக்கின் மடிப்பிலிருந்து அதை எடுத்து மடக்கி உள்ளங்கையின் உள்வெப்பத்தில் மறைத்தான்; அது வெறும் உலோகத் துண்டு அல்ல, மறைக்கப்பட்ட நினைவின் சின்னமென அவனுக்கே தெளிவில்லாத உணர்வு. லீலாம்மா அந்தச் சைகையைப் பார்த்தபோது, அவள் உதடுகள் அசையவில்லை; ஆனால் மனதுக்குள் ஒரு வேண்டுதல் உயர்ந்தது—இந்த இரும்பின் தொப்புள்கொடி இங்கேயே துண்டிக்கப்படட்டும்; மரபு எனும் நரம்பு மீண்டும் இணைக்கப்படாதிருக்கட்டும்.

அம்புறோஸ் உடல் நலிந்து எலும்பும் தோலாகச் சுருங்கி கட்டிலில் நிழலாய்க் கிடந்தாலும், அவன் பெயர் இன்னும் சில கதவுகளைத் திறந்தது; அந்த நிழலைத் தாங்கியபடி ரோசி புகுந்த வீட்டில் ஒரு வகை உயர்வோடு நடந்தாள். ஆனால் மாமனாரின் மறைவு அந்த வீட்டின் உள்ளமைப்பை மாற்றியது. இதுவரை அடக்கமாக இருந்த அவளது கணவன், அம்புறோசின் இல்லாமையில் திடீரென மையத்துக்கு வந்தான்; அவன் குரல் திடீரெனத் திணிவு பெற்றது; மௌனமாக இருந்த தீர்மானங்கள் ஆணையாய் ஒலித்தன. அந்த வீட்டில் உருவான புதிய சிம்மாசனம் ரோசிக்கல்ல; அவனுக்கே. முன்பு அவள் கடிந்து கொண்ட சொற்கள் இப்போது எதிரொலியாய்த் திரும்பின. பணிய வைத்த கைகள் தன்னிடமே சுமையைத் தள்ளின. தாயிடம் புலம்பினால் “அமைதியாக இரு” என்ற பழக்கமான அறிவுரை மட்டும், அண்ணன்கள் தங்கள் வாழ்வு நெறியில் தொலைந்து போயினர். தந்தையின் சட்டம்பித்தனத்தை வீட்டில் சூதாட்டமாக்கி ஆட்டம் போட்டவள் என்ற கதையை இப்போது அவளது கணவன் உள் கணக்காய் வைத்திருந்தான்; ஒவ்வொரு தினமும் அந்தக் கணக்கு திருப்பிச் செலுத்தப்பட்டது. முதல்முறையாக அவன் கையை உயர்த்திய தருணம், அது ஒரு அடியாக மட்டும் இல்லை; அதிகாரம் எதன் மீது விழுகிறது என்பதை அறிவித்த முத்திரை. இரு சிறு குழந்தைகள் இருந்தும், அவள் உள்ளத்தில் உருவான தனிமை அந்தச் சுவர்களைத் தாண்டி ஓடியது. அவள் எடுத்த முடிவு வெட்கத்திலோ சினத்திலோ இல்லை; சோர்வின் நிழலில், தன் இருப்பு எவ்வளவு எளிதில் அழிக்கப்படுகிறது என்பதை உணர்ந்த மனநிலையில்தான். இறுதிக் கடிதத்தைத் தபாலில் விட்டபின், அவள் கயிற்றைத் தேர்ந்தெடுத்தாள்; இரும்பின் சின்னங்கள் ஒருகாலத்தில் பெருமை கொண்டுவந்திருந்தால், இப்போது கயிறு மரபின் முடிச்சாய் மாறியது.

“அப்பா கட்டிலில் கருவாடாய்க் கிடந்திருந்தாலும் இவன் என்னை அடித்திருக்க மாட்டான், எனக்கு மூன்று அண்ணன்கள் இருந்தும் அநாதையாகச் சாகிறேன். சாக்கோடு விளை ஆண்கள் சேலை கட்டி நடங்கள்…” என்று அவள் எழுதிய நான்கு வரிகள், மூன்று தலைமுறையாகக் கருங்கல் பாலபள்ளம் பகுதியை நடுங்கவைத்த குடும்பப்பெயரையே சாபமிட்டன. அந்த எழுத்துகள் வெறும் மை அல்ல, குற்ற மரபின் மீது இறுதியாய் வீசப்பட்ட சாம்பல். கைமாறிக் கொண்டிருந்த இரும்புத் துண்டு ஒருகாலத்தில் மரபின் சின்னமாக இருந்தது என்றால், இப்போது தூக்குக் கயிறே தொப்புள்கொடியாய் அந்த வரலாற்றுடன் இணைந்தது, வெட்டுக்கருவி முடிக்காததைக் கயிறு முடித்தது போல.

மகளின் வீட்டுக்குச் சென்ற லீலாம்மா, அலமாரிகளில் மடிக்கப்பட்டிருந்த துணிமணிகளை ஒன்றொன்றாக எடுத்தாள். அவற்றில் இன்னும் மகளின் வாசனை இருந்தது—சாம்பிராணி, குழந்தை பால், கண்ணீரின் உப்பு. அந்தச் சுவர்களுக்குள் ஓடிய அவளது வாழ்வின் மெல்லிய ஒலிகள் இப்போது வெறுமையாய் எதிரொலித்தன. ஒரு மூலையில் கட்டியிருந்த சிறிய பெண்நாய்க் குட்டி, “விஜயசாந்தி” என்று அவள் அழைத்த உயிர், யாரோ திரும்ப வருவார்களோ என்ற நம்பிக்கையில் கதவின் பக்கம் பார்த்துக் கொண்டிருந்தது. அந்த நாயையும் துணிகளோடு சேர்த்து லீலாம்மா வீட்டிற்குக் கொண்டுவந்தாள்; சாக்கோடு விளை வீடு அன்றிலிருந்து அவளது புலம்பலின் நீண்ட நெடுங்குரலால் நிரம்பியது. தாயின் விலாபம் வெறும் துக்கமல்ல, கடிதத்தின் இறுதிவரிகள் அதில் மீண்டும் மீண்டும் ஒலித்தன. அவமதிக்கப்பட்ட மகளின் குரல் மண்ணுக்குள் புதையாமல் சுவரோரம் மோதியது. அந்தச் சொற்கள் அலெக்சாண்டரின் உள்ளத்தில் ஓர் அறியாமை கலந்த காயத்தைத் திறந்தன. அவன் கேள்வி கேட்கவில்லை, ஆனால் அவன் நரம்புகளில் ஒரு பழைய இரும்பின் இசை மீண்டும் எழுந்தது. மரபு முடிந்துவிட்டதாக நினைத்த வீடு, இப்போது அவனை நோக்கி அழைத்தது; சாக்கோடு விளை பெயர் அவனது தோள்களில் கனத்தது. தந்தை விட்டுச் சென்ற கிரீடம் மண்ணுக்குள் புதையவில்லை, அது மெல்ல அவனது நெற்றியைத் தேடியது.

மதுவின் சூடு தலைக்கேறிய இரவு, அவன் எடுத்த முடிவு சிந்தனைக்குப் பிறகல்ல; காயத்தின் திடீர் வெடிப்பாய் இருந்தது. ரோசியின் கணவனை அவன் கொன்றான்; அது வீரச் செயல் அல்ல, சிதைந்த மனத்தின் குருட்டுத் தாக்கு. மூன்று மாதங்கள் சிறையின் சுவர் அவனைச் சுற்றின. வெளியே வந்தபோது அரசு வேலை கையில் இல்லை, வாழ்க்கை வழித்தடம் மாறியிருந்தது. ஆனால் வேலை இழப்பு அவனை வீழ்த்தவில்லை; மாறாக, அவன் உள்ளத்தில் இருந்த வெற்றிடத்தை வேறு ஒன்றால் நிரப்பியது. தந்தை இறக்கி வைத்திருந்த அந்த மறைமுகக் கிரீடம் இப்போது தெளிவான வடிவம் பெற்றது; அதை யாரும் தடுக்கவில்லை; அது அவன் தலையில் தானாக அமர்ந்தது போலிருந்தது.

சிறையிலிருந்து வெளியே வந்த நாளில் லீலாம்மா மகனின் கால்களைத் தழுவி அழுதாள்; அவள் கண்ணீரில் இருந்தது துக்கம் மட்டுமல்ல, ரோசி வாய்விட்டுச் சபித்த வரியின் நிழல் நிஜமாகிப் போகக் கூடாது என்ற அச்சமும்தான். “சாக்கோடு விளை ஆண்கள்…” என்று மகள் எழுதிய அந்த இறுதி வரி இப்போது அவளது மனத்தில் முளைத்துக் கொண்டே இருந்தது. அந்த வார்த்தை விதையாக மாறி மகனின் வாழ்வில் வேரூன்றிவிடுமோ என்ற பரிதவிப்பில் அவள் உடைந்தாள். வெளிநாட்டுக்கு அனுப்பி இந்த நிலத்திலிருந்து வேரோடு பிடுங்கி எறியலாமா என்று யோசித்தாள்; ஆனால் கொலை வழக்கின் விசாரணை அவனை இங்கிருந்தே கட்டிப் பிடித்தது; பாஸ்போர்ட் என்பது அவனுக்குப் புறநகரக் கனவு போல தொலைந்தது. தலைக்கு மேல் வளர்ந்து உயர்ந்து நிற்கும் மரத்தை எப்படி மறைப்பது என்று அறியாதவள் போல அவள் தவித்தாள். அவன் சிறையில் இருந்த நாட்களில் அவள் செய்த முதல் காரியம் கணவனிடமிருந்து கைமாறி, மகனின் உள்ளங்கையில் ஒரு முறை வெப்பமடைந்த அந்தச் சிறிய பேனாக்கத்தியைத் தூக்கி எறிந்ததே; இரும்பை நீக்கினால் தொடர்சாபம் முடியும் என அவள் நினைத்தாள்; ஆனால் அது ஏற்கெனவே அவனது ரத்தநாளங்களில் தகரத் துகள்களாய்க் கலந்துவிட்டதை அவள் உணரவில்லை. “மோனே, நடந்தது நடந்து போச்சு… இனி இதுக்கப் பெறக்கே போவாத…” என்று அவள் கண்ணீரோடு கூறிய ஒப்பாரி ஒரு வாரம் அவனை வீட்டின் சுவர்களுக்குள் அடைத்தது. அந்த ஏழு நாட்கள் அவன் மௌனமாக இருந்தான்; ஆனால் மௌனம் குணமாக்கவில்லை, அது உள்வெப்பத்தை மட்டும் குவித்தது.

எட்டாவது நாள், அருகிலிருந்த திருமணத்திற்குத் தானாகச் செல்ல முடியாததால் மகனை அனுப்ப வேண்டியிருந்தது; குளிர்கால வாதம் அவளது முதுகை உறைய வைத்திருந்தது; அவன் சென்றான். திரண்டிருந்த மக்கள் அவனைப் புதிதாய் நோக்கினார்கள். பழைய ஓட்டுநரைக் காணவில்லை, பதிலாகச் சிறையிலிருந்து வந்த பெயரைக் கண்டனர்; உணவுப் பந்தியில் இடம் காலியாக இருந்தபோதும், அவனைத் தேடிக் கைகள் நீண்டன; கரத்தைப் பிடித்து அமர்த்தினர்; மரியாதை என்பது அச்சத்தின் மற்றொரு முகமென்பதை அவன் அப்போது தெளிவாக உணர்ந்தான். பல கண்கள் ஒரே நேரத்தில் அவனை நோக்கி எழுந்தன, அவன் உள்ளத்தில் தெரியாத ஒரு மேடை உருவானது. யாரும் காணாத சிம்மாசனம் அவனுக்கு மட்டும் தென்பட்டது, கிரீடம் எடையோடு நெற்றியில் தொட்டது.

“அலெக்சே, நாள வேலிகெட்டு வச்சிருக்கேன், சும்மா ஒண்ணு வந்தோண்டு போவியா?” என்று சித்தப்பா அதே திருமண மண்டபத்திலேயே குரல் கொடுத்தார். வேலி கட்டுதல், மதில் எழுப்புதல்—இவை நிலத்திற்காக அல்ல, பெருமைக்காக நடைபெறும் மோதல்களின் முன்சட்டை என்பதை ஊர்க்குழந்தைகளுக்கே தெரியும்; அவனுக்கும் புரிந்தது அந்த அழைப்பின் அடர்த்தி. நூற்றுக்கணக்கான மகுடங்கள் மின்னிய அந்த விழாவில் அவனால் மறுக்க முடியவில்லை; போர் தொடங்குவதற்கு முன் வீரரை வரவேற்கும் அமைதியைப் போல சில இளைஞர்கள் அங்கிருந்தனர். அவனைப் பார்த்த கணம் கைலிகளைத் தளர்த்தி, புன்னகை என்ற சமாதானக் கவசத்தை அணிந்து விலகினர். அந்தச் சின்ன தருணத்தில், அவன் இன்னும் எதையும் செய்யவில்லை; ஆனால் அவன் பெயரே வேலியை எழுப்பத் தொடங்கியது.

‘அலெக்சாண்டர் இல்லம்’ என்று கருநிற எழுத்தில் பொறிக்கப்பட்ட பலகை வீட்டின் முன்பாகத் தொங்கிய நாள், அது வெறும் பெயர் மாற்றமல்ல; ஒரு காலத்தின் அதிகார மாற்றம். சாக்கோடு விளை வீட்டின் ஹால் மெதுவாக வடிவம் மாறியது. ஒருகாலத்தில் குடும்ப உணவு வாசனை நிரம்பியிருந்த அந்த இடம் இப்போது தீர்ப்புகளின் காற்றால் கனத்தது. தெருவோரங்களிலும், சாயைக்கடைகளின் மேசைகளிலும், கள்ளக்காதலிகளின் வீடுகளில் பாய்விரித்துப் பேசப்பட்ட அம்புறோசின் கட்டப்பஞ்சாயத்துகள் புதுவடிவம் பெற்றன. சுவரோர நாற்காலிகள் அரங்கத் தளபாடங்களாய் அடுக்கப்பட்டன. நடுவில் ஒரு நீள நாற்காலி மேடையாக உயர்ந்தது; அதில் அமர்ந்தவன் பேசும்போது மற்றவர்கள் எழுந்து நின்றனர். இது நீதிமன்றமல்ல, ஆனால் தீர்ப்புகள் இங்கே பிறந்தன; காகிதங்களில் அல்ல, பயத்தில் எழுதப்பட்ட உத்தரவுகள். மிரட்டல்கள் வெளியில் கத்தவில்லை; அவை உள்ளங்களின் உள்ளே முணுமுணுத்து மனிதர்களைச் சுருக்கியன; பழிச்சொற்கள் உதடுகளின் விளிம்பில் தங்கியபடி விழுங்கப்பட்டன. சாபங்கள் கதவுக்குப் புறம்பே சொல்லப்பட்டாலும், அதன் அதிர்வு அந்த அறைக்குள் தங்கியது. அலெக்சாண்டர் பேசும்போது அவன் குரல் உயர்ந்திருக்கவில்லை; ஆனால் அவன் அமைதி கூட கட்டளைபோல் ஒலித்தது. அவன் முகம் தீர்ப்பின் கல்லெழுத்தாய் மாறியது. கிரீடம் யாரும் பார்க்கவில்லை; ஆனாலும் அந்த அறைக்குள் நுழைந்த ஒவ்வொருவரும் அதை உணர்ந்தார்கள்.

லீலாம்மா நடக்கும் எல்லாவற்றையும் அமைதியாகக் கவனித்தாள். ஒருகாலத்தில் பிள்ளைகளின் பாடப்புத்தகங்கள் குவிந்திருந்த மூலையில் இப்போது கணக்குகள் பேசப்பட்டன; அவள் மனத்தில் நிழலாய் எழுந்த கேள்வி — இந்த அறை எப்போது இவ்வளவு குளிர்ந்தது? மகனின் முகத்தில் தந்தையின் வடிவம் மெதுவாகப் பதியத் தொடங்கியதை அவள் கவனித்தாள்; கண்களில் ஏதோ புதிய கறார்மயம்; குரலில் மெதுவான எடை. அவன் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் அவளுக்குள் ஒரு துடிப்பை உண்டாக்கியது. ஒருநாள் கத்தியைத் தூக்கி வீசிய கைகள் இப்போது காற்றில் ஆணை வரைந்து கொண்டிருப்பதை அவள் கண்டாள். அவள் விரும்பியது அவன் வாழ்வைச் சீராக்க, ஆனால் அவன் பெற்ற மரியாதை அவளுக்குச் சாந்தியல்ல, எரிச்சலான முன்னறிவிப்பு. வீட்டின் மையத்தில் நடக்கும் ஒவ்வொரு பஞ்சாயத்தும் அவளது இதயத்தில் ஒரு சிறு முறிவு; “நடந்தது நடந்து போச்சு” என்று சொன்ன அவளது சொற்கள் இப்போது திரும்பி வந்து அவளைத் துன்புறுத்தின. மகன் உயர்ந்திருக்கிறான் என்று ஊர் சொன்னாலும், அவள் பார்க்கிறதே வேறு. உயரம் என்பது எப்போதும் விழுவதற்கான தூரத்தையும் அதிகரிக்கிறது என்பதை அவள் அறிந்திருந்தாள்.

வீட்டின் முற்றத்தில் படுத்திருந்த விஜயசாந்தி எல்லாவற்றையும் வேறொரு உணர்வால் அளந்தது. அதன் மூக்குக் காற்றை நுகர்ந்தது; பயத்தின் வியர்வை மணம் வேறுபட்டது; பெருமையின் வாசனை வேறுபட்டது. பஞ்சாயத்துக்குப் பின் தலைகுனிந்து வெளியேறும் மனிதர்களின் அடிச்சுவட்டில் அது குறுகிய குரல் எழுப்பியது; அவர்களின் நடையின் சீர்கேடு அதற்குப் புரிந்தது. ஆனால் அதே கதவிலிருந்து முகம் பிரகாசமாகப் புகழ்ச்சிச் சொற்களை வீசிக்கொண்டு வெளியேறும் சிலரைப் பார்த்தால் அதன் வால் மெதுவாக அசைந்தது; அது மனிதர்களின் மொழியை அறியவில்லை; ஆனால் குரலின் அதிர்வை உணர்ந்தது. ஒருவரின் அருகே சென்றால் அவன் உடலில் இருந்த சோர்வை அது வாசித்தது; மற்றொருவரின் அருகே நின்றால் அகங்காரத்தின் சூடு தெரிந்தது. அலெக்சாண்டர் முற்றத்தைத் தாண்டி வரும்போது அது எழுந்து நின்றது; குரைக்கவில்லை; ஆனால் கண்களை நிலைநிறுத்தியது; அவனுள் என்ன மாறுகிறது என்பதை அது சொல்லாமல் பார்த்துக் கொண்டது. இன்னும் முழுமையாக வெளிப்படாத ஓர் இணைப்பு அந்த உயிருக்கும் இந்த மனிதனுக்கும் இடையே நெடுகப் பரவிக் கொண்டிருந்தது; பெயர் வேறு, ஆனால் நிழல் பழையதாய் இருந்தது.

முற்றத்தின் மண்வாசனையில் தன் எல்லையை அறிந்து கிடந்த விஜயசாந்திக்கு மனிதர்களின் மொழி புரியாது; ஆனால் குரல்களின் திசை, பாதங்களின் எடை, உடலில் உலா வரும் கோபத்தின் வாசனை எல்லாம் தெரியும். வீட்டின் வாசலருகே அவள் தங்குவதற்குக் காரணம் காவலல்ல; அந்த இடத்தில்தான் அவள் ஒரு முகத்தை எதிர்பார்த்தாள்—ஒரு காலத்தில் அவளைத் தழுவிய கையின் நினைவோ அல்லது அந்த நினைவைத் தாங்கி நடமாடும் இன்னொருவரோ. அலெக்சாண்டர் வீட்டுக்குள் நுழையும் போது அவள் எழுந்து நின்றது உரிமையால் அல்ல; அறியாத ஒரு இணைப்பின் இழுப்பால். ஆனால் அவனது கண்களில் அவளுக்கு இடமில்லை; அவன் பார்வை அவளைத் தாண்டிச் செல்லும்; அவன் உடலில் மதுச் சூடு உயர்ந்திருந்த இரவுகளில் அவள் வாலாட்டி நெருங்கினால், காலை ஓங்கி வீசுவான், ஆனால் அவள் குரைக்கவில்லை; அவள் எதிர்த்துக் கடிக்கவில்லை; அவள் பின்வாங்கி மீண்டும் வாசலருகே வந்து கிடந்தாள். அவன் கையில் இரும்பு இல்லாததால் அவள் உயிரோடு இருந்தாள்; “ரோசி வளர்த்தது” என்ற லீலாம்மாவின் ஒரே வார்த்தை நினைவு அவனை முழுமையான கொடூரத்திலிருந்து தடுத்து நின்ற மெல்லிய நூல். அவன் வீட்டில் இருந்தால் அவள் அசையாது; அவன் இல்லாத நேரங்களில் லீலாம்மாவின் காலடிச் சத்தத்தைக் கண்டு அவள் சுற்றி வந்தாள். அந்த வயதான பெண்மையின் மூச்சில் அவளுக்குப் பாதுகாப்பின் மணம் இருந்தது.

ஒரு நாள் பஞ்சாயத்துக்காக வந்தவன் அலெக்சாண்டரின் அருகில் சாய்ந்து, “பெட்ட பட்டி உங்க வீட்டுக்கு அழகா? ஜெர்மன் ஷெப்பர்டு ஒண்ணு நம்ம வீட்ல குட்டியிட்டிருக்கு; நாளைக்கே கொண்டுவாரேன்,” என்றான்; அது வெறும் பரிசளிப்பு அல்ல, அந்த வீட்டின் அந்தஸ்தை உயர்த்தும் வெளிப்புற அடையாளம். அலெக்சாண்டரின் மனதில் ஏற்கெனவே இருந்த அருவருப்பு இப்போது உருப்பெற்றது; சாதாரணத் தெருநாய் வகை முற்றத்தில் கிடப்பது அவனது உயர்வோடு பொருந்தவில்லை; தாய் லீலாம்மாவிடம் அவன் உறுதியாகச் சொன்னான்—விஜயசாந்தி பின்புறத்தில் மட்டும் கட்டி வளர்க்கப்பட வேண்டும்; வாசலருகே வரக்கூடாது; அவமானம் முன்னால் நிற்கக் கூடாது. இரண்டாம் நாளே புதிய ஜெர்மன் ஷெப்பர்டு வீட்டில் நுழைந்தது; அதன் தோலில் பிரகாசம்; அதன் கண்களில் பயிற்சியின் கட்டுப்பாடு. அது முன்னிலையைப் பிடிக்க முயன்றது. ஆனால் மண்வாசனையை அறிந்த விஜயசாந்தி அமைதியாக நெருங்கி, திடீரென வெடித்த குரலில் அதனைத் தாக்கியது. காதின் ஓரம் இரத்தம் சொட்டியது, அது ஆதிக்கத்தின் அறிவிப்பு அல்ல, இடம் காக்கும் உடனடி எதிர்வினை. அலெக்சாண்டரின் கோபம் திடீரென ஆழிக்கத்தியது, அதன் தலையை சீவியெறிய துடித்தான். ஆனால் லீலாம்மாவின் கெஞ்சலால் அவள் கைகால்கள் கட்டப்பட்டன; காரில் சென்னைக்குச் செல்லும் நண்பர்களின் டிக்கியினுள் தள்ளப்பட்டாள்; விழுப்புரம் தாண்டி விடச் சொல்லப்பட்டது. லீலாம்மா கெஞ்சினாள்; கொல்லக்கூடாது என்று சத்தியம் வாங்கினாள்; உயிர் தப்பியது; ஆனால் வீடு அவளுக்குப் புறம்பானது. அந்த இரவில் முற்றத்தில் புதிய நாய் உறங்கியது; பழைய உயிரின் மணம் மெதுவாகக் குறைந்தது. ஆனால் சில மணங்களை மண் முழுவதுமாக விழுங்குவதில்லை.

ஒரு மாதம் கூட ஆகவில்லை; ஒருநாள் மாலையில் மண் தூசி படிந்த கால்களுடன் விஜயசாந்தி மீண்டும் அந்த வீட்டின் முற்றத்தில் வந்து நின்றது. தூரம் தள்ளப்பட்ட உயிர் தன் பாதையை மண்வாசனையால் கண்டுபிடித்தது போல; அது குரைக்கவில்லை; தலையைத் தாழ்த்தி வாசலருகே நின்றது. லீலாம்மா முதலில் அதனைப் பார்த்தபோது அவளது கண்கள் ஈரமாயின. வாரியணைத்துக் கொண்டாள்; “இனி இத வெரட்டருது; வீட்டுக்குப் பெறக்க இட்டு நான் வளக்கிலாம்,” என்று மகனிடம் உரிமையோடு சொன்னாள், அலெக்சாண்டர் எதிர்க்கவில்லை; வெறுப்பும் சோர்வும் கலந்த ஒரு மௌனம் மட்டுமே அவனிடமிருந்தது. அன்றிலிருந்து விஜயசாந்தி பின்வாசலில் லீலாம்மாவின் கண்காணிப்பில் வாழ்ந்தது; முன்னிலையிலிருந்து அகற்றப்பட்டாலும், முழுமையாக அழிக்கப்படாத நினைவு போல அது வீட்டின் நிழலில் தங்கியது.

காலம் தாழாது அது ஐந்து குட்டிகளை ஈன்றது; ஈரமான மண்ணின் மணத்தில் புதிதாய்ப் பிறந்த உயிர்களின் வெப்பம் கலந்தது; அவை கண்கள் திறக்குமுன் பத்து நாட்கள் கூட ஆகவில்லை, ஒரு மாலை சாலையில் ஓடிய வாகனத்தின் சத்தம் அதன் வாழ்வை நிறுத்தியது. விபத்து என்ற ஒரு வார்த்தை எல்லாவற்றையும் மூடி விட்டது; உடல் சாலையோரத்தில் அமைதியாய்க் கிடந்தது; அலெக்சாண்டரின் உள்ளத்தில் அந்தச் செய்தி விசித்திரமான நிம்மதியை உண்டாக்கியது. குட்டியிட்டு பெருக்குதே என்ற கோபத்தில் இருந்த அவன் மனம், இப்போது ஒரு சுமை குறைந்ததுபோல் இருந்தது. அவன் அதை வெளிப்படுத்தவில்லை; ஆனால் அவன் நடையில் சற்றே இலகுவான ஒலி இருந்தது. ஐந்து குட்டிகளில் நான்கு ஆண்கள்; அவற்றைத் தேர்ந்தெடுத்து ஆட்கள் எடுத்துச் சென்றனர். பெண் குட்டி மட்டும் யாருக்கும் தேவையில்லை; அது தாயின் வெப்பத்தை இழந்த நிலையில், ஈரமான மூச்சுடன் நிழலில் கிடந்தது. லீலாம்மா அதைத் தூக்கி அணைத்தாள்; “ரோசி” என்று மெதுவாக அழைத்தாள்; பெயர் ஒரு நினைவல்ல, மீண்டும் எழுதும் முயற்சி. பாலூட்டி வளர்க்கத் தொடங்கிய அவள் கைகள் இந்த முறை வெறும் பராமரிப்பு அல்ல; துண்டிக்கப்பட்ட தொப்புள்கொடியை வேறு வடிவில் இணைக்கும் முயற்சி. வீட்டின் பின்வாசலில் புதிய உயிர் கண் திறந்தது; முன்னோர் இரும்புக் கதையின் இடையில், பால் மணம் வீசும் ஒரு சிறு தொடக்கம் அமைதியாக வளரத் தொடங்கியது.

மிருகங்கள் வளர்வதைப் போலவே பகைகளும் அவனைச் சுற்றி முளைத்தன; ஒவ்வொன்றும் தனித்த குரல் கொண்டிருந்தாலும், அனைத்தும் ஒரே இரத்தத்தின் வாசனையைத் தேடியது. இரவு ஒன்றில் அவன் காரைச் சூழ்ந்த தாக்குதல் மின்னல் போல நிகழ்ந்தது; கண்ணாடி நொறுங்கிய சத்தம், இரும்பு இரும்பைத் தட்டிய ஒலி, திடீர் அலறல்கள்—அவை அனைத்தும் சில நொடிகளில் முடிந்தன. அவனுடன் இருந்த ஒருவன் அங்கேயே உயிரிழந்தான்; அலெக்சாண்டர் பல வெட்டுக்காயங்களுடன் உயிரோடு மீதமிருந்தான்; அவன் உடலில் திறந்திருந்த காயங்கள் வெறும் உடல் சேதமல்ல, மரபு மீண்டும் தன் உரிமையை நினைவூட்டிய குறியீடுகள். மருத்துவமனை படுக்கையில் அவன் கண்களைத் திறந்தபோது, சுவரின் வெண்மை அவனது உள்ளத்தின் கருமையுடன் எதிரெதிராக நின்றது; அவன் பேசவில்லை; ஆனால் அவன் சுவாசத்தில் தோல்வியின் உப்பு இருந்தது.

“நான்காவது தலைமுறை” என்று லீலாம்மாவின் மனம் உருகியது; ரத்தசாபம் தன் முலைப்பால் குடித்த மகனை இப்போது வாட்டுகிறதே என்ற எண்ணம் அவளைப் படுக்கையிலே தள்ளியது. அவள் உடல் மெதுவாகச் சோர்ந்தது; இரு மருத்துவமனைகளில் தாய் மகன் படுத்திருந்தனர்; இடைவெளியில் காற்று மட்டுமே நகர்ந்தது. ஒருபுறம் காயங்களின் தையல், மறுபுறம் மனஅழுத்தத்தின் நரம்பிழுத்தல்; இரண்டிலும் ஒரே கதையின் வேறு அத்தியாயம். அவள் கண்களை மூடியபோது அவள் பார்த்தது மகனின் குழந்தைப் பருவம் அல்ல; அரிவாள் நிழல் நீளும் எதிர்காலம். அவன் உயிர்த் தப்பியது அவளுக்கு நிம்மதியல்ல; மீண்டும் தொடங்கும் வட்டத்தின் அச்சம்.

வீட்டில் ஒரு மாதம் வயதான ரோசி கிடைத்ததை உண்டு, கிடைக்காதபோது பட்டினியோடு முற்றத்தைச் சுற்றி வந்தது, கதவுகள் மூடியிருந்தன, மனிதக் குரல்கள் இல்லை, சுவரில் ஒலித்திருந்த பஞ்சாயத்துச் சத்தம் இப்போது வெறுமை. பின்வாசலில் ஒருகாலம் கட்டப்பட்டிருந்த இடம் காலியாக இருந்தது; ஜெர்மன் ஷெப்பர்டு நாயைக் கவனிப்பவர் இல்லாததால் நண்பனிடம் எடுத்துச் செல்லச் சொல்லி மருத்துவமனை படுக்கையிலிருந்தே அலெக்சாண்டர் ஏற்பாடு செய்திருந்தான். வெளிப்புற அந்தஸ்த்தின் சின்னம் பாதுகாக்கப்பட்டது; ஆனால் சிறிய பெண் குட்டி தன் இடத்தைத் தானே தேடிக் கொண்டிருந்தது. அது குரைத்தது இல்லை; அது கதவின் அடியில் மணத்தைத் தேடியது; மனிதர்கள் திரும்புவார்களோ என்ற எதிர்பார்ப்பு இன்னும் கைவிடப்படவில்லை. அந்த வீடு இப்போது இரண்டு உயிர்களின் காயங்களையும் ஒரு சிறு உயிரின் அமைதியையும் தாங்கியிருந்தது; இரும்புக் கதையின் நடுவே பால் மணம் வீசும் ஒரு நிழல் மட்டும் அங்கே உயிரோடு இருந்தது.

லீலாம்மா அந்த வீட்டின் வாசலை மீண்டும் உயிரோடு கடக்கவில்லை; மருத்துவமனையின் குளிர்ந்த வழித்தடங்களில் இருந்து பிணமாக வெளியேறிய அவளது உடல் வீட்டின் நடுவில் வைக்கப்பட்டபோது, ஒருகாலத்தில் அவள் வரைந்த சிலுவை நிழல் சுவரில் இன்னும் மங்கலாய்த் தெரிந்தது. சக்கர நாற்காலியில் இருவரின் தோள்சாய்வுடன் கொண்டுவரப்பட்ட அலெக்சாண்டர், தன் தாயின் உறைந்த முகத்தை நோக்கிப் பார்த்தான்; ஒருநாள் தன் நெற்றியில் முத்தமிட்ட அந்த உதடுகள் இப்போது அமைதியின் கல்லாயிருந்தன. அவளது மார்பில் தன் சிறு வயதின் வெப்பம் இருந்த நினைவு அவனைத் துளைத்தது; தன் முலைப்பால் குடித்த மகன் இப்போது இரத்தத்தில் நனைந்த வாழ்க்கையோடு அவள்முன் நின்றான். எலும்பும் தோலுமாய்ச் சுருங்கிய சிறு ரோசி அந்த உடலைச் சுற்றி மணம் நுகர்ந்து அலைந்தது; உயிரிழந்ததின் மணம் அதற்குப் புதிதல்ல; ஆனால் இந்த மணம் வேறுபட்டது—அன்பின் வாசனை குளிர்ந்திருந்தது. அங்கே இருந்தவர்கள் கால்களை உயர்த்தி அதனை விரட்டினர்; “அழுக்கு” என்ற வெறுப்பு அவர்களின் முகத்தில் தெரிந்தது; ஆனால் அந்தச் சிறு உயிருக்கு அது புரியவில்லை; அது மீண்டும் வட்டமிட்டு வந்தது; ஒரு முறை கூட அந்த உடல் எழுந்து தன்னைத் தழுவுமோ என்ற அறியாமை.

சில நாட்களில் அலெக்சாண்டர் வீடு திரும்பினான்; காயங்கள் ஆறியிருந்தன; ஆனால் வலிமை திரும்பவில்லை; நடையை நிலைநிறுத்த அவன் கெந்தி கெந்தி நகர வேண்டியிருந்தது; இருக்கையில் அமருவதற்கே ஏதோ ஒன்றைத் தாங்கிக் கொள்ள வேண்டும். படுக்கையிலிருந்து எழும்புவதற்குக் கைகளும் கால்களும் இணைந்து முயன்றன. அவன் ஒருகாலம் அழைத்திருந்த மனிதர்களை இப்போது கடவுள்களாகவே உள்ளுக்குள் அழைத்தான். அவன் சுற்றத்தில் நின்றிருந்த கூட்டாளிகள் மறைந்தனர்; அவனது கண்பார்வையின் நிழலில் பலன் அடைந்தவர்கள் புதிய நிழலைத் தேடி நகர்ந்தனர்; அதிகாரம் குறைந்தபோது மரியாதையும் சுருங்கியது. வீட்டு முன் வந்து அமர்ந்து ஆகாயத்தை நோக்கிக் கிடந்தான்; வானத்தின் வெற்றிடம் அவன் உள்ளத்தின் வெற்றியோடு ஒத்திருந்தது. சற்றுத் தூரத்தில், கண் எட்டும் இடைவெளியில் சிறு ரோசி படுத்திருந்து அவனை நோக்கி வாலாட்டியது; அது அருகே வரவில்லை; அவன் அழைக்கவில்லை; அந்த இடைவெளி அமைதியான உடன்படிக்கையாக மாறியது. மனிதர்களின் உறவுகள் தன்னை ஏமாற்றியதாக நினைத்த அவனுக்கு அந்தச் சிறு உயிரிடம் பகையுமில்லை; வெறுப்பும் இல்லை; அது இருப்பதையே அவன் அனுமதித்தான். அதன் பெயர் அவனுக்கு நினைவில் இல்லை; ஆனால் அது அவனை நினைவில் வைத்திருந்தது.
வீட்டின் வெறுமை இப்போது இரண்டு உயிர்களின் சுவாசத்தால் மட்டுமே நிரம்பியது; ஒருவன் உடல் முறிந்த மனிதன், மற்றொன்று மெதுவாகச் சதைப் பிடித்து வளரும் பெண் நாய். அலெக்சாண்டர் உண்ணும் தட்டில் மீந்திருந்த அரிசி, குழம்பின் ஓரச்சாறு, எலும்புக் கட்டையின் சிறு துண்டுகள்—அவற்றை அவன் பார்த்துக் கொண்டே ஜன்னல் வழியாக அல்லது முற்றத்துக்கு எறிந்தான்; அழைப்பில்லாப் பகிர்வு. அது நன்றி சொல்லாத தருணம்; உரையாடாத உடன்படிக்கை. மனிதனும் மிருகமும் ஒரே கூண்டில் அடைக்கப்பட்ட இரு அமைதிகள் போல, ஒருவரை ஒருவர் தவிர்க்க முடியாத ஊமைச் சம்பாஷணையில் வாழ்ந்தனர். அவன் பேசவில்லை; அது அணுகவில்லை; ஆனால் அவன் இருப்பதைக் கவனித்துக் கொண்டு சற்றுத் தூரத்தில் படுத்திருந்து வாலின் மெதுவான அசைவால் உயிர் இருப்பதை அறிவித்தது. ரோசியின் எலும்புகளில் மெதுவாகச் சதைப் பிடித்தது; தோலில் ஒளி திரும்பியது; அவளது கண்கள் கூர்மையடைந்தன; பசி மட்டுமல்ல, ஏதோ ஒன்றைக் காக்கும் உட்புலனும் வளர்ந்தது.

ஒரு மாலை முன்பகை நேரம் பார்த்து வந்தது; மூன்று இளைஞர்கள் பைக்கின் கரகரச் சத்தத்தோடு வீட்டு முன் நின்றனர். அவர்கள் பஞ்சாயத்துக்காகவோ, பாதுகாப்புக்காகவோ வருபவர்கள் அல்ல; தீர்ப்பளித்த வீடு இப்போது பலியெடுக்கத் தகுந்த இடமென்று நினைத்துக் கொண்டவர்கள். ஹாலின் உள்ளிருந்து கம்பியிட்ட ஜன்னல் வழியே அவர்களின் நடையின் திசை அலெக்சாண்டருக்குப் புரிந்தது; குரல்கள் குறுகியவை; கண்கள் சுழலும்; கைலியில் மறைந்திருந்த உள்நோக்கம். கதவு திறந்தே இருந்தது; அது ஒருகாலத்தில் அதிகாரத்தின் அடையாளம்; இப்போது அழைப்பின்றி நுழையலாம் என்ற சவால். அந்த வாசலுக்கு வெளியே ரோசி படுத்திருந்தாள்; சூரியன் சாய்ந்த ஒளியில் அவளது உடல் சாயலாய் இருந்தது; ஆனால் அவள் உறங்கவில்லை.

அவள் முதலில் மணத்தைப் பிடித்தாள்; காற்றில் அச்சத்தின் உப்பு, தாக்குதலின் கசப்பு, மனிதத் தோலில் பதிந்த பழைய பகையின் வாசனை. அவளது தோள்கள் மெதுவாக விரிந்தன; முதுகெலும்பு வளைந்து இரும்புக் குண்டு போல் உடல் உறைந்தது; வால் தரையில் பதிந்தது; பற்கள் உதடுகளின் விளிம்பில் வெளிச்சம் கண்டன; அது வெறும் குரல் அல்ல, தொண்டையின் ஆழத்திலிருந்து எழுந்த கர்ஜனை—மரணத்தை அறிவிக்கும் சத்தமல்ல; “இது என் எல்லை” என்று மண் பேசும் மொழி. அவளது கண்கள் தீப்பொறி போல மின்னின; நரம்புகள் இழுக்கப்பட்ட வில்லாய் நின்றன; திடீரென எழுந்த அந்த மிருகத் தீர்மானத்தில் அவள் தாய் இல்லை, குட்டி இல்லை, பெயர் இல்லை—முழுக்கக் காவல். மூன்று இளைஞர்கள் அந்த நொடியில் திகைத்தனர்; மனிதன் திட்டமிடும் போது மிருகம் தயங்காது என்பதை அவர்கள் உணர்ந்தனர்; “நாயைக் கண்டால் படையே ஓடும்” என்ற பழமொழி அவர்கள் கால்களில் நினைவாய் மாறியது; அவர்கள் பின்வாங்கினர்; பைக் மீண்டும் கரகரத்தது; தூசி எழுந்தது; வாசல் முன் மீண்டும் அமைதி. ஹாலுக்குள் அமர்ந்திருந்த அலெக்சாண்டர் அந்தச் சத்தத்தைக் கேட்டான்; வெளியே வரவில்லை; ஆனால் அவன் கண்களில் முதன்முறையாக ஒரு மாற்றம் ஒளிந்தது—அவன் காக்க முடியாததை, ஒருபோதும் மதிக்காத அந்தச் சிறு உயிர் காக்கிறது என்ற மௌன உண்மை.

அந்த மாலைக்குப் பிறகு விரைவாகச் செய்தி பரவியது; விவரமறிந்து அலெக்சாண்டரின் நண்பர்கள் இருவர் பின்னால் வந்து சேர்ந்தனர். வாசல் வரைக்கும் வந்தவர்கள் யார் !! என்ன நோக்கத்திற்காக அவர்கள் வந்தார்கள் என அவர்கள் சொற்களால் அவனிடம் உருக்கமாகச் சொன்னபோது, அவன் முகத்தில் மாற்றமில்லை; ஆனால் கண்கள் திடீரென ஈரமாயின; வெளியில் வழியவில்லை; உள்ளே விழுங்கப்பட்டது. “அந்த நாய்தான் காப்பாத்திச்சு,” என்ற ஒரு வாக்கியம் அவன் நெஞ்சில் ஒலித்தது; தன்னைத் தானே காக்க முடியாத மனிதனுக்கு, தள்ளி வைத்த உயிர் காவலனாய் நின்றது என்ற உண்மை அவனை மெதுவாகத் தாழ்த்தியது. சற்றுத் தொலைவில் கண் திறந்து அவனைப் பார்த்துக் கிடந்த ரோசியை அவன் நீண்ட நேரம் நோக்கினான்; அந்தப் பார்வையில் முதல் முறையாக அருவருப்பு இல்லை; வெறுப்பு இல்லை; நன்றியுணர்வு ஒரு மெல்லிய வெப்பமாக இருந்தது. அன்றிலிருந்து அவன் உணவளிக்கும் பாங்கு மாறியது; தட்டிலிருந்து எறிவது அல்ல, அருகே அழைத்து அமர்த்தி வைக்கும் செயல்; கையால் கொடுத்து, அது உண்ணும் வரை காத்திருக்கும் அமைதி. லீலாம்மா வைத்த பெயர் அவனுக்கு நினைவில் வரவில்லை; ஆனால் பெயரற்ற அன்பு சில சமயங்களில் சொல்லுக்கு முன்பே உருவாகிறது.

சில மாதங்கள் கழித்து அவன் பாலபள்ளம் ஜங்சன் நோக்கி மெதுவாக நடக்கத் தொடங்கினான்; நூறு மீட்டர் தொலைவை அடைய இருபது நிமிடங்கள்; காலடியில் சோர்வு; மூச்சில் தடை; இருந்தும் வீட்டைத் தாண்டி வெளிச்சத்தைப் பார்க்கும் தாபம். ஒருகாலத்தில் அவனைப் பார்த்துத் தலைகுனிந்து நின்றவர்கள் இப்போது வேறு பொருளைப் பார்த்தது போல கண்களைத் திருப்பினர்; சாலையோரம் பலநாட்களாய்க் கவனிப்பாரற்று நிற்கும் பாழடைந்த வாகனத்தைப் பார்ப்பதாய் நின்றனர்; மரியாதை அற்ற இடைவெளி அவனைச் சுற்றி உருவானது. அவன் அந்த அவமான ஊர்வலத்தைத் தவிர்க்கவில்லை; வெளி உலகின் காற்று அவனுக்குத் தேவை; கிரீடம் இப்போது கனமில்லை, வெறுமை மட்டுமே. அந்நேரத்தில் கடந்த காலம் மீண்டும் வந்து நின்றது. பல வருடங்களுக்கு முன்பு தங்களது தந்தையை அவன் தாக்கியதாக இரு இளைஞர்கள், இப்போது பாலபள்ளம் ஜங்சனில் அவனை எதிர்கொண்டனர். பழி காலம் கடந்து மெதுவாகப் பழுத்து விழும் கனியைப் போல அவர்களது கை உயர்ந்தது. எதிர்த்து நிற்கும் வலிமை அவனுக்கு இல்லை; முதல் அடியிலேயே அவன் கீழே விழுந்தான்; தரையில் பட்ட உடல் ஒரு காலத்தின் வீழ்ச்சியை ஒலியில்லாமல் அறிவித்தது. மீண்டும் மருத்துவமனை; ஆனால் இம்முறை அவன் தனியாகச் செல்லவில்லை; ரோசியைத் தன்னோடு கொண்டு சென்றான். கட்டிலின் கீழ் அது அமைதியாகப் படுத்திருந்தது; மனிதர்கள் வரும்போது அதன் கண்கள் சுருங்கிக் கூர்மையாயின; மணத்தைப் பிடித்து எடை பார்த்தது; யார் கருணை கொண்டு வருகிறார்கள், யார் கணக்குடன் வருகிறார்கள் என்பதைக் கணித்தது. அலெக்சாண்டர் மேலே படுத்திருந்தான்; கீழே மௌனக் காவலர்; இருவருக்கிடையில் பேசப்படாத ஒரு உடன்படிக்கை மெதுவாக நிலைபெற்றது.

குணம்பெற்று வீடு திரும்பியபின் அலெக்சாண்டர் எங்கு சென்றாலும் ரோசி அவனோடு நடந்தது; அது அவனைத் தொடர்ந்து வரவில்லை, அவனுடைய நடைதாளத்தையே அளந்து இணைந்தது. அவளது நடையில் ஒரு வனப்பின் ஒழுக்கு இருந்தது; புலி பாய்வதற்கு முன் நிலத்தை அளப்பது போல நிதானம்; உடல் மெலிதாயிருந்தாலும் தசைகள் ஒவ்வொன்றும் விழிப்புடன். அவனை முன்னோக்கி விட்டபடி சிறு இடைவெளியில் பின்தொடரும் அந்த உயிரைக் கண்டவர்கள், இது ஒரு சாதாரணப் பெண் நாய் என எண்ணவில்லை; அணிவகுக்கும் படையின் முன்தூதர் போல அதன் அசைவில் எச்சரிக்கை இருந்தது. தொங்கிய முலைகள் அது ஈன்ற தாயின் சின்னமாக இருந்தாலும், அதன் தோள்களின் விரிப்பு காவலின் வடிவம்; கண்கள் எப்போதும் கணக்கிடும் நிலை. யாராவது அலெக்சாண்டரை நோக்கி முகம் கறுத்தால், அவள் முகமும் உடனே கடினமடைந்தது; தாடை இறுகி, உதடுகள் சற்றே பிரிந்து, பற்கள் ஒளிந்து தெரியும்; கண்ணோட்டம் கூர்முனையுள்ள ஈட்டிபோல் நேராகச் சென்று நின்றது. குரல் தேவையில்லை; அந்த அமைதியே போதுமான எச்சரிக்கை. அவனது பழைய கம்பீரம் முழுவதுமாகத் திரும்பவில்லை; ஆனால் அதன் ஓரச்சாயல் மீண்டும் அவனுடைய தோள்களில் அமரத் தொடங்கியது. வன்முறை மீண்டும் வேண்டாம் என்ற அவனது உள்ளுணர்வு, அவமானமின்றி வாழவேண்டும் என்ற துடிப்பு, இந்த மௌனக் காவலின் நிழலில் சாத்தியமாயிற்று; ஒருகாலத்தில் இரும்பு காத்த வாழ்க்கை இப்போது ஒரு உயிரின் விழிப்பால் தாங்கப்பட்டது. மனிதன் தனது பலத்தை இழந்தபின்தான் நிழலின் அர்த்தத்தை உணருகிறான்; அலெக்சாண்டருக்கு அந்த நிழல் ரோசி.

“இந்தப் பட்டி என்ன இனம்? உன்ன தொடணும்னா இதுக்க தலைய துண்டாக்கணும் போல இருக்கே… என்ன பேரு இதுக்கு?” என்று அவனை நன்கு அறிந்திருந்த முதியவர் அந்நியமற்றச் சிரிப்போடு கேட்டார்; சிரிப்பில் கிண்டலும் இல்லை, அச்சமும் இல்லை—ஆனால் அந்த உயிரின் கண்களில் இருந்த எச்சரிக்கையைப் பார்த்துப் பிறந்த வியப்பே இருந்தது. ரோசி அப்போது அலெக்சாண்டரின் அருகில் நின்று கொண்டிருந்தது; அதன் உடல் தளர்ந்திருந்தாலும் விழிப்பு குறையவில்லை; காற்றின் திசையைப் பார்த்து நின்ற காவலன் போல அமைதி. அலெக்சாண்டர் ஒரு நொடி அதனை நோக்கிப் பார்த்தான்; அந்தப் பார்வையில் கடந்த ஆண்டுகளின் சிதைவுகள், தாயின் நிழல், மருத்துவமனை வாசனைகள், வெறுமையான வீடு—எல்லாம் மின்னியது.

“அம்மா வளத்தின பட்டி… அம்மா என்னவோ சொல்லிக் கூப்பிட்டாங்க,” என்று மெதுவாகத் தொடங்கியவன் சற்றே இடைநிறுத்தி, “நான் ‘ரோசி’ன்னு கூப்பிடுறேன்,” என்றான். பெயர் வாயில் வந்தபோது அது வெறும் அழைப்பாக இல்லை; மறைந்த இரு உயிர்களின் நினைவுகளை இணைக்கும் மெல்லிய நூலாய் ஒலித்தது. ரோசி அவன் குரலைக் கேட்டதும் தலையைச் சற்றே உயர்த்தியது; பெயர் அதன் செவியில் பழக்கமான இசை; அலெக்சாண்டரின் குரலில் முதல் முறையாக மென்மை கலந்து இருந்தது. அந்தச் சிறு உரையாடலில் இரும்பின் கதை ஒதுங்கி, மண்ணின் வாசனை திரும்பி வந்தது.


Art : markcolemanufc

கு.கு. விக்டர் பிரின்ஸ்
கு.கு. விக்டர் பிரின்ஸ்
Share :

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Featured Articles

  • முதலைகளின் தீப்பாடல்

    முதலைகளின் தீப்பாடல்

    March 1, 2026
  • தயவும் பாவமும் :19 ஆம் நூற்றாண்டு இறுதியிலும், 20 ஆம் நூற்றாண்டு ஆரம்பத்திலும் நவீன இலக்கியத்தில் தலித்துகள் பற்றிய பதிவுகள்

    தயவும் பாவமும் :19 ஆம் நூற்றாண்டு இறுதியிலும், 20 ஆம் நூற்றாண்டு ஆரம்பத்திலும் நவீன இலக்கியத்தில் தலித்துகள் பற்றிய பதிவுகள்

    March 1, 2026
  • இன்கா நாடோடிக்கதைகள் – 8 : கோனிராயாவும் காவியாக்காவும்

    இன்கா நாடோடிக்கதைகள் – 8 : கோனிராயாவும் காவியாக்காவும்

    March 1, 2026
  • ஆன் செக்ஸ்டன் கவிதைகள் – 06

    ஆன் செக்ஸ்டன் கவிதைகள் – 06

    March 1, 2026
  • இலங்கையின் இருண்ட யுகம் – ஊடகச் சுதந்திரமும் பாலியல் துஷ்பிரயோகங்களும்

    இலங்கையின் இருண்ட யுகம் – ஊடகச் சுதந்திரமும் பாலியல் துஷ்பிரயோகங்களும்

    March 1, 2026

Search

About thadari

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

ஆசிரியர் : பச்சோந்தி

  • X
  • Instagram
  • TikTok
  • Facebook

Follow Us on

  • Facebook
  • X
  • Instagram
  • VK
  • Pinterest
  • Last.fm
  • TikTok
  • Telegram
  • WhatsApp
  • RSS Feed

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (16)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இலக்கியம் (18)
  • உரையாடல் (9)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (95)
  • கட்டுரை (4)
  • கதை (6)
  • கதை (4)
  • கவிதை (76)
  • கவிதை (13)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (13)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (42)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (8)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (11)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (5)
  • மொழிபெயர்ப்பு (33)
  • வாழ்வியல் (2)

Archives

  • March 2026 (21)
  • February 2026 (30)
  • January 2026 (44)
  • December 2025 (42)
  • November 2025 (33)
  • October 2025 (34)
  • September 2025 (42)
  • August 2025 (35)
  • July 2025 (24)
  • June 2025 (20)

Tags

2003-ல் அரசு ஊழியர் anamikaa-poems embodiment knowledge empirical observation epistemology-of-thinai ezhil-chinnathambi Issac Basil Emarald Literature meeluru Modern Tamil Poem murugabhoopathy pamayan selvasankaran-poems அனாமிகா ஆர்.பாண்டியக் கண்ணன் இலக்கியம் எலிப்பூனை ஐசக் பேசில் எமரால்ட் கவிஞர் அன்னா அக்மதோவா கவிஞர் சபரிநாதன் கவிஞர் சமயவேல் கவிஞர் முஹம்மத் தர்வீஷ் கவிதைகள் கீதா கார்த்திக் நேத்தா சின்னக் குளம் சிறார் கதைகள் சிறுகதை சூலிசைக்கடுங்கூத்து செல்வசங்கரன் செல்வசங்கரன் கவிதைகள் தி.ப.சித்தலிங்கையா திணை அறிவின் அறிவியல் ந நாவல் நீதிமணி பாமயன் மகிமையின் நிலவிளக்கு மணல் மகுடி மணல் மகுடி நாடகக் குழு மண்ணும் மனிதரும் மத்திய சிறை மரளி மண்ணிகே மோனோகாக் ராமச்சந்திர குஹா றியாஸ் குரானா

About Us

Thadari.com

கலை – அரசியல் – அறிவியல் இணைய இதழ்.

Latest Articles

  • முதலைகளின் தீப்பாடல்

    முதலைகளின் தீப்பாடல்

    March 1, 2026
  • தயவும் பாவமும் :19 ஆம் நூற்றாண்டு இறுதியிலும், 20 ஆம் நூற்றாண்டு ஆரம்பத்திலும் நவீன இலக்கியத்தில் தலித்துகள் பற்றிய பதிவுகள்

    தயவும் பாவமும் :19 ஆம் நூற்றாண்டு இறுதியிலும், 20 ஆம் நூற்றாண்டு ஆரம்பத்திலும் நவீன இலக்கியத்தில் தலித்துகள் பற்றிய பதிவுகள்

    March 1, 2026
  • இன்கா நாடோடிக்கதைகள் – 8 : கோனிராயாவும் காவியாக்காவும்

    இன்கா நாடோடிக்கதைகள் – 8 : கோனிராயாவும் காவியாக்காவும்

    March 1, 2026

Categories

  • அஞ்சலி (1)
  • அரசியல் (10)
  • அறிக்கை (1)
  • அறிவியல் (16)
  • ஆய்வு (1)
  • இசை (1)
  • இதழ் 01 (20)
  • இதழ் 02 (24)
  • இதழ் 03 (31)
  • இதழ் 04 (41)
  • இதழ் 05 (34)
  • இதழ் 06 (33)
  • இதழ் 07 (42)
  • இதழ் 08 (44)
  • இதழ் 09 (30)
  • இதழ் 10 (21)
  • இலக்கியம் (18)
  • உரையாடல் (9)
  • ஓவியர் அறிமுகம் (12)
  • கடிதங்கள் (1)
  • கட்டுரை (95)
  • கட்டுரை (4)
  • கதை (6)
  • கதை (4)
  • கவிதை (76)
  • கவிதை (13)
  • குறுங்கதை (7)
  • சிறார் (5)
  • சிறார் கதை (13)
  • சிறார் பாடல்கள் (1)
  • சிறுகதை (2)
  • சிறுகதை (42)
  • சினிமா (3)
  • சூழலியல் (1)
  • செத்த குரல் (1)
  • தலித் இலக்கியம் (1)
  • தொகுப்பு (1)
  • தொடர் (8)
  • தொல்லியல் (1)
  • நாடகம் (9)
  • நாட்குறிப்பு (11)
  • நாவலின் ஒரு பகுதி (9)
  • நினைவேடு (3)
  • நுண்கதை (4)
  • நூல் அறிமுகம் (14)
  • நேர்காணல் (5)
  • மொழிபெயர்ப்பு (33)
  • வாழ்வியல் (2)
  • Instagram
  • Facebook
  • LinkedIn
  • X
  • VK
  • TikTok

Thadari.com

Scroll to Top